என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

வாழ்வை மேம்படுத்தும் பணவரவுக்கான பரிகாரங்கள்
- சிலருக்கு தன் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பணம் இருக்கும்.
- செல்வம் வேண்டாம் என்று பணத்தை விரும்பாத மனிதர்கள் இவ்வுலகில் யாருமே கிடையாது.
மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் நிறைந்த செல்வம், பூரண ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். சிலருக்கு தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு தொடாதது கூட பொன்னாகும். சிலருக்கு நினைத்தது அப்படியே நடக்கும்.
நிரந்தரமற்ற காரணியான பணம் சிலரிடம் தேவைக்கு அதிகமாக குவிகிறது. சிலருக்கு தன் தேவைகளை நிறைவு செய்யும் வகையில் பணம் இருக்கும். அதன் மூலம் பொன், பொருள், அசையும், அசையா சொத்துகள் அமைகிறது. ஒரு பகுதியினருக்கு பற்றாக்குறை என்பது எப்பொழுதும் உள்ளது. கடன் வாங்கி செலவு செய்வது என்பது சிலருக்கு மாதாமாதம் ஏற்படும் அனுபவமாகும். சிலர் அன்றாடம் வேலைக்குச் சென்று வாழ்க்கை நடத்த வேண்டியுள்ளது. பலர் பண விஷயங்களுக்காக ஏதாவது உருட்டல், மிரட்டல் செய்தே காலத்தை தள்ள வேண்டியுள்ளது.
சிலருக்கு அடிப்படைத் தேவையைக் கூட சமாளிப்பதில் சிரமம் இருக்கும். இன்னும் ஒரு சிலருக்கு பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கம் சற்று மிகைப்படுத்தலாக இருக்கும். கையில் காசு பணம் தங்காத நிலை, வட்டி, வட்டிக்கு வட்டி, கடன், நகைக் கடன், வங்கிக் கடன் வாகனக் கடன், வீடு, நிலம் வாங்கியதில் கடன் என்று பணம் பல்வேறு வகைகளில் கையில் இருப்பு இல்லாத அமைப்பு பலருக்கு உள்ளது. நினைத்து அனைத்தும் எதிர்மறையாக நடந்து நிம்மதியில்லாத நிலையை ஏற்படுத்தும். பணமே பிரதான காரணியாக இருக்கும் இந்த காலத்தில் பணம் படைத்தவர்கள் ஏதேனும் ஒரு வகையில் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர்களாகவே வாழ்கிறார்கள்.
இது போன்ற அனைத்து நிகழ்வுகளுக்கும் பணமே காரணம். தனம் எனும் பணமே மனித வாழ்வை மகழ்ச்சிகரமாக மாற்றும் கருவியாக திகழ்கிறது. இன்றைய நவநாகரீக உலகில் பணம் வைத்திருப்பவர்கள் பணக்காரர்கள் அல்ல, செலவு செய்பவர்களே பணக்காரர்கள்' என்கிறார்கள். பணம் மனிதனை படைத்ததா? அல்லது மனிதன் பணத்தை படைத்தானா என்று வியக்கும் வகையில் நுகர்வுக் கலாசாரம் பெருகியிருக்கிறது. குடும்ப நபர்களின் அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை நிறைவு செய்ய பணம் மிக மிக அவசியமான காரணியாக திகழ்கிறது. பணம் படைத்தவர்கள் எந்த தவறு செய்தாலும் மன்னிப்பு கிடைக்கிறது. பணம் இல்லாதவன் செய்யும் குற்றம் மன்னிக்க முடியாத குற்றமாக காலப் பதிவேட்டில் பதிவாகுகிறது. உதாரணமாக சட்டைப் பையில் பணம் வைத்து இருப்பவனுக்கு மட்டுமே கடவுள் கூட காட்சி தருகிறார். அதனால் தான் திருவள்ளுவர்
'பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்'
என்று கூறியுள்ளார். இதன் பொருள் தகுதி அற்றவரையும் கூடத் தகுதி உடையவராக ஆக்கிவிடும் தகுதி உடையது, பணமே அன்றி வேறொன்றும் இல்லை என்பதாகும். அதாவது மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதாகும்.
செல்வம் வேண்டாம் என்று பணத்தை விரும்பாத மனிதர்கள் இவ்வுலகில் யாருமே கிடையாது. வளமான வாழ்விற்கு அடிப்படையான தேவை செல்வம் என்பதால் செல்வத்தின் மதிப்பை உணர்ந்தே மனிதர்களாய் பிறந்த அனைவரும் பொருளாதாரத்தில் தங்கள் வாழ்வினை வளப்படுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர்.
ராசிகளின் தன்மை, வேகம் மற்றும் செயல்படும் விதத்தின் அடிப்படையில் நிரந்தர பொருளாதாரத்தை சமன் செய்யும் சில எளிய பரிகாரங்களைப் பார்க்கலாம். காலபுருஷ தத்துவத்தின்படி மேஷத்தில் தொடங்கி மீனம் வரை உள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் பல்வேறு தத்துவங்கள் ரகசியங்கள் அடங்கியுள்ளன. கிரகங்களின் நகர்வின் அடிப்படையில் பன்னிரு லக்னங்களையும் சரம், ஸ்திரம், உபயம் என மூன்று பிரிவுகளாக நமது ஜோதிட முன்னோடிகள் பிரித்து இருக்கிறார்கள்.
சரம்
மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு லக்னங்களும் சரத்தில் அடங்கும். சரம் என்றால் வெகு சலனமுடையது. தடையற்ற இயக்கம் கொண்ட அமைப்பாகும். சர லக்னத்திற்கு சுபமோ அசுபமோ எளிதில் வந்தடையும்.
ஒருவருடைய வாழ்நாளில் சில குறிப்பிட்ட காலத்தை மட்டும் வழி நடத்தும். வந்த தடமும் இருக்காது. போன சுவடும் தெரியாது. சர லக்னம் படைத்தல் தத்துவத்தை தன்னுள் அடக்கியது. சர ராசிகள் வலிமை பெற்று அதில் நின்று ஒரு கிரகம் தசா புத்திகள் நடத்தினால் ஜாதகருக்கு நன்மைகள் வேகமாக நடக்கும். இவர்கள் சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருப்பார்கள். கிடைத்த சந்தர்பத்தை சரியாக பயன்படுத்து பவர்கள். எதிலும் வேகம், விவேகம் என எல்லா விசயத்திலும் அனுபவம் உடையவர்கள். ஆதாயம் இல்லாத விசயத்தை செய்ய மாட்டார்கள்.
குறுகிய காலத்தித்தில் பல நன்மைகளை அனுபவிப்பார்கள். அடிப்படை வாழ்வாதாரத்திற்கு சிரமப்பட்ட சிலர் மிக குறுகிய காலத்தில் தேவைக்கு அதிகமாக சம்பாதித்து வீடு, வாசல் என செட்டிலாகி விடுவார்கள்.மேலும் இந்த சர ராசிகளான மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய ராசிகளில் ஒரு கிரகம் அசுப வலிமையுடன் தசை நடத்தினால் கோடி கோடியாக சம்பாதித்தவர்கள் கூட தெருக்கோடிக்கு வந்து விடுவார்கள். சர ராசியில் நின்று ஒரு கிரகம் தசை நடத்தி கடுமையான பொருளாதார பிரச்சினைகளில் இருப்பவர்கள் ஆதிசங்கரர் அருளிய கனகதார ஸ்தோத்திரத்தை பிரம்ம முகூர்த்த வேளைகளில் ஸ்ரீ மகாலட்சுமி முன்பு நெய் தீபம் ஏற்றி தொடர்ச்சியாக வணங்கி வருவது நல்லதாகும்.
ஸ்திரம்
ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கும் ஸ்திர லக்னத்தில் அடங்கும். ஸ்திரம் என்பது சலனமற்றது. அசைவற்ற நிலையைக் கொண்ட தன்மையாகும். சுபமோ, அசுபமோ எதிர்பாராத விதத்தில் வந்தடையும். வந்தால் நீண்ட காலத்திற்கு நிலையாக இருக்கும். ஏன், வாழ்நாள் முழுவதும் கூட வழி நடத்தும். ஸ்திர லக்னம் காத்தால் தத்துவத்தை அடக்கியது. கொள்கை மற்றும் லட்சிய பிடிப்பு உள்ளவர்கள். இவர்கள் ஒரு தடவை எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது.
அதாவது இவர்கள் பேச்சை இவர்களே கேட்க மாட்டார்கள். அது சரியாக இருந்தாலும், தவறாக இருந்தாலும் அதிலிருந்து மாற மாட்டார்கள். எங்கும் எதிலும் நிலைத்து நிற்பார்கள். தாம் எடுத்த முடிவில் பிடிவாதமாக இருப்பார்கள். நிலையான வெற்றியை பெறுவார்கள். வாழ்க்கையில் ஜெயிக்காமல் ஓய மாட்டார்கள்.
ஸ்திர ராசியில் நின்று ஒரு கிரகம் சுபவலிமை பெற்று தசை புக்திகள் நடந்தால் நிலையான பல யோகங்கள் ஜாதகரின் வாழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கும்.
பொருளாதார வளர்ச்சி தங்கு தடையின்றி இருக்கும். அதே நேரத்தில் அசுபத் தன்மையுடன் தசை புக்திகள் நடத்தினால் ஜாதகருக்கு நிலையான பல இன்னல்களை, தீராத தீர்க்க முடியாத மன பாரம் இருக்கும்.
பொருளாதார குறைபாடு அதிகரிக்கும்.
ஸ்திர ராசிகளான ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பத்தில் இருந்து ஒரு கிரகம் தசை நடத்தும் பொழுது எதிர் விளைவுகள் மிகைப்படுத்தலாக இருந்தால் மகாலட்சுமிக்கு உரிய நாளான வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவிற்கு உரிய காயத்திரி மந்திரங்கள் மற்றும் லலிதா சகஸ்ஹர நாமம் படித்து வர நன்மைகள் அதிகரிக்கும்.
உபயம்
மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய நான்கும் உபய லக்னத்தில் அடங்கும். உபய லக்னம் சர, ஸ்திர லக்னங்களின் தன்மையையும் உள்ளடக்கியது. அதாவது ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு நகரும் போது கிரக தன்மை சரம். மாறிய பிறகு ஸ்திரம். அதிசார கதியில் அல்லது வக்கிர நிலையில் சஞ்சாரம் செய்து விட்டு இயல்பு நிலைக்கு திரும்புவது உபயம்.
இந்த லக்னம் அழித்தல் தத்துவத்தையும் தனக்குள் கொண்டுள்ளது. ஒருவருடைய சுய ஜாதகத்தில் உபய ராசிகளான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ராசிகள் வலிமை பெற்ற கிரகத்தின் தசை புத்திகள்
நடைபெற்றால் ஜாதகருக்கு தொடர்ந்து பல நன்மைகள் நடைபெறும். கடல் அலை போல் மீண்டும் மீண்டும் அவருக்கு தொடர்ந்து பல நன்மைகள் உற்பத்தியாகிக்கொண்டே இருக்கும். செல்வாக்கில் மிதப்பார்கள்.
இந்த ராசியில் அசுப தன்மை பெற்ற கிரகம் தசை புத்திகள் நடத்தினால் ஜாதகர் ஒரு பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்குள் மீண்டும் ஒரு பிரச்சனை அவர் வீட்டின் கதவை தட்டும். ஒரு இழப்பை சமாளித்து மீளும் முன்பு மீண்டும் அடுத்த இழப்பு தயாராகி விடும்.
மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதில் வல்லவரான இவர்கள் தங்கள் சொந்த பிரச்சினைக்கு அப்படி செய்யலாமா இப்படி செய்யலாமா என யோசித்து கொண்டே சொதப்பி தமக்கு தாமே சொந்த செலவில் சூன்யம் வைக்கும் புத்திசாலிகள். எதிலும் இரட்டை நிலைதான். சொல்லாலும் செயலாலும் ஒன்றுபட மாட்டார்கள். ஒவ்வொரு நிமிடமும் சிந்தனைகளையும் எண்ணங்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். மனசு மாறிக்கிட்டே இருக்கும். ஏமாற்றம் தொடர்ந்து கொண்டே இருக்கும். உபய ராசியில் நின்று அசுபத் தன்மையுடன் ஒரு கிரகம் தசை நடத்தினால் கோ பூஜை, கோதானம் செய்தால் எளிதில் நிலைமை சீராகும். மிகக் கடுமையான நிதி நெருக்கடி நிலையில் இருக்கக்கூடியவர்கள் ஒவ்வொரு புதன்கிழமை தோறும் பசுவிற்கு பச்சைப்புல் வழங்கினால் நெருக்கடி நிலை நீங்கும்.
எனவே ராசிக்கட்டத்தில் உள்ள நவகிரகங்களை வைத்து பரிகாரம் செய்யாமல் தசாபுத்திக்குரிய கிரகங்களுக்கு தகுந்த வழிபாட்டு முறையை கடைபிடிக்க நிம்மதியாக சகல ஐஸ்வர்யத்துடன் வாழ முடியும். பணம் இருந்தால் அந்த நபருக்கு வீடு, புகழ், கவுரவம், அதிகாரம் எல்லாம் தேடி வரும். யாருடைய வங்கி இருப்பு அதிகமாக உள்ளதோ அவர்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள். பணம் இல்லாதவனிடம் எதுவும் இல்லை. இன்றைய காலகட்டத்தில் பணத்தை விட முக்கியமானது எதுவுமில்லை ஏனெனில் பொருள் உள்ளவனையே சக்தி வாய்ந்தவன் என்று உலகம் நம்புகிறது. பணம் உள்ளவர்களுக்கு சமூகம் அதிக மரியாதை கொடுப்பதை அடிக்கடி பார்க்க முடிகிறது. ஒருவன் தன் வாழ்நாளில் எண்ணற்ற துறைகளில் வெற்றி பெற்றிருந்தாலும், அவனிடம் பணம் இல்லை என்றால் சமூகம் அவருக்கு சிறப்பு மரியாதை கொடுப்பதில்லை. வெற்றியுடன் பணம் இருந்தால், சமூகத்தில் அவருக்கு மரியாதை பல மடங்கு அதிகரிக்கிறது. பல வீடுகளில் பணப் பற்றாக்குறையால்தான் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படுகிறது. போதுமான பணம் இல்லாததால், உறவுகள் மதிப்பதில்லை. பணம் சம்பாதிக்கும் பிள்ளையிடம் பாசம் பொழியும் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்காத பிள்ளையை கண்டு கொள்வதில்லை. பணம் இல்லாதவர் கடன் கேட்டு விடுவானோ என பயந்து உறவுகள் அவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பெற்ற பிள்ளைகள், கட்டிய மனைவி உதாசீனம் செய்கிறார்கள். பிரபஞ்ச சக்திக்கு அடுத்தபடியாக உலகை இயக்கும் சக்தியாக பணம் விளங்குகிறது. அந்த பணத்தை விடாமுயற்சியும், சலியாத உழைப்பும் உள்ளவர்கள் எப்படியும் அடைந்து முன்னேறி விடுவார்கள்.
எந்த ஒருசெயலிலும் கட்டுப்பாடும், ஒழுங்கும் இருக்க வேண்டும் அடுத்தவர்களை விட மேலே இருக்க வேண்டும் என்ற ஆவலில் தங்களுடைய இயல்புக்கும், தகுதிக்கும் அப்பாற்பட்ட பணியில் ஈடுபட்டால் பணம் அவர்களை வீழ்த்தும்.






