என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நடத்தை நலமாகட்டும்!
- உயர்ந்த சிந்தனைகள் வழிச் செயல்நடை போடுபவர்களே நன்னடை போடுபவர்களாகப் போற்றப்படுகிறார்கள்.
- ஒரு குருநாதரைச் சந்திக்க ஓர் இளைஞர் சென்றிருந்தார்.
நடத்தையில் நலம் விரும்பும் நல்லவர்களே! வணக்கம்.
'மனிதர்' என்கிற சொல்லுக்கு அழகான ஆழமான அர்த்தங்கள் உண்டு. தலை, முகம், கை, கால்கள் கொண்டு மனித உருவத்தோடு உலவுகிற அனைவருமே மனிதர்கள்தாம் என்றாலும், மிக எளிதாக,"நீயெல்லாம் மனிதன் தானா?" என்று கேட்டுவிடுகிற ஒரு சொல்லில் மிகப்பெரிய சந்தேகம் புறப்பட்டு விடுகிறது.
மனிதனாகப் பிறந்து தெய்வமாக உயர்ந்தவனாகக் கருதப்படுகிற ராமபிரானைப் பார்த்து, 'நடையில் நின்று உயர் நாயகன்' என்று கம்பர் பாராட்டுகிறார். சாதாரணமாக, இரண்டு கால்களைக் கொண்டு நடப்பது 'நடை' என்று கருதப்பட்டாலும், வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள்களையும், லட்சியங்களையும் வகுத்துக் கொண்டு உயர்ந்த சிந்தனைகள் வழிச் செயல்நடை போடுபவர்களே நன்னடை போடுபவர்களாகப் போற்றப்படுகிறார்கள்.
'நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே' எனும் சங்க இலக்கியச் சிந்தனை, வாழுகிற ஒவ்வொரு மனிதரையும் நடையிற் சிறந்தவராக உயர்த்தி நன்னடத்தை வழங்க வேண்டிய பெரும்பொறுப்பு அரசாங்கத்திற்கும் இருக்கிறது என்கிறது. ஆக, ஒரு தனி மனிதனின் குணநலச் சிறப்பு, அவன் வாழுகிற சமுதாயச் சூழல் கடந்து, அவனை ஆட்சி நெறிப்படுத்துகிற அரசுகளைப் பொறுத்து அமைவு பெறுகிறது.
'நெறி' என்றால் பாதை என்று பொருள்; ஒருவன் நல்ல பாதையில் செல்லப் போகிறானா? இல்லை தீய பாதையில் போகப் போகிறானா? என்பதை வெறுமனே அவனது கால்கள் மட்டும் தீர்மானிப்பதில்லை; அவனது எண்ணங்களே முதலில் தீர்மானிக்கின்றன. அவனது எண்ணங்களை அவன் கற்கின்ற கல்வியும், பெறுகின்ற அனுபவங்களும் செம்மைப்படுத்துகின்றன.
கொண்டிருக்கும் எண்ணங்களும் சிந்தனைகளும், லட்சியங்களும் செயல்களும் செல்கின்ற நெறிகளும் நல்லவையாக இருந்தால் நம்மை நன்னடத்தை உடையவராக உலகம் சான்றிதழ் வழங்கிப் பெருமைப்படுத்துகிறது. அல்லாத பட்சத்தில் பொய் மனிதராக்கிப் புறந்தள்ளி விடுகிறது.
ஒரு குருநாதரைச் சந்திக்க ஓர் இளைஞர் சென்றிருந்தார். அவர் திருமணமானவர்; வயது முப்பத்து ஐந்துக்குள் இருக்கும். அவரைப் பார்த்துக் குருநாதர் சில கேள்விகளைக் கேட்டார்.
"நீ உன் மனைவியோடு மெரினா கடற்கரைக்குச் சென்று, இருவரும் கடலைப் பார்த்துக் காற்று வாங்கிக் கொண்டு நின்றிருக்கிறீர்கள். அப்போது ஓர் அழகான இளம்பெண் உங்கள் இருவரையும் நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கிறாள்; நீ அந்தப் பெண்ணைப் பார்ப்பாயா?"
"கட்டாயம் பார்ப்பேன்!"
"சரி! உங்களை நோக்கி வந்த அந்த அழகான இளம்பெண், தற்போது உன்னைக் கடந்து உனக்குப் பின்புறமாகச் சென்றுகொண்டிருக்கிறாள்!. இப்போது அந்தப் பெண்ணைத் திரும்பிப் பார்ப்பாயா?"
"என் மனைவி என்னைப் பார்க்கவில்லையென்றால் நான் திரும்பிப் பார்ப்பேன்!".
" நல்லது. அந்த அழகான இளம்பெண்ணின் நினைவு உன் மனத்தில் எவ்வளவு நாட்களுக்குத் தங்கியிருக்கும்?"
குருநாதரின் இந்தக் கேள்விக்குச் சற்றும் யோசிக்காமல் இளைஞன் பதில் சொன்னான், "அடுத்த அழகான பெண்ணைப் பார்க்கும் வரை!."
சிரித்த குருநாதர், அடுத்த ஒரு நிகழ்வுக்குத் தாவினார்.
"நமது அன்பர் ஒருவர் வசதியான பணக்காரர், விழுப்புரத்தில் இருக்கிறார். நான் சில புத்தகங்களைப் பையிலிட்டு, விழுப்புரத்தில் அவரது வீட்டில் பார்த்துக் கொடுத்துவிட்டுத் திரும்புமாறு கூறுகிறேன்.
நீயும் சென்னையில் இருந்து கிளம்பிச் சென்று, விழுப்புரத்தில் அவரது வீட்டை அடைகிறாய். மிகப்பெரிய பங்களா அவரது வீடு; நுழைவு வாயிலைத் திறந்தால் பத்துக் கார்கள் வரிசையிட்டு நிறுத்திவைக்கப் பட்டிருக்கின்றன்றன. நீ அழைப்புமணியை அழுத்தியதும், வாசல் கதவைத் திறந்து கொண்டு, அந்த அன்பரே வந்து வரவேற்கிறார்.
நான் அனுப்பியதாகச் சொல்லி, நான் தந்தனுப்பிய புத்தகப் பையை நீ கொடுத்ததும் பெரும் மகிழ்வோடும் மரியாதையோடும் பெற்றுக்கொள்கிறார். உன்னை வரவேற்பறையிலுள்ள சோபாவில் அமர வைத்து அவரே தண்ணீர், காபி முதலியவற்றைத் தருகிறார். குருநாதர் நலமா? என ஆழ்ந்த மன உணர்வுடன் விசாரிக்கிறார். உன்னைப் பற்றியும் விசாரித்துத் தெரிந்துகொள்கிறார். இரவு உணவு முடித்துவிட்டுத்தான் ஊருக்குக் கிளம்ப வேண்டும் என அன்புக் கட்டளை பிறப்பிக்கிறார். இரவு உணவு தயாரானதும் அவரே தமது சொந்தக் கரங்களால் அன்பொழுகப் பரிமாறுகிறார்.
சாப்பிட்டு முடித்ததும், சென்னையில் இருந்து விழுப்புரத்திற்கு எப்படி வந்தாய்! என விசாரிக்கிறார். நீயும் பேருந்தில் வந்ததாய்ச் சொல்கிறாய். அடடே! இந்த வெய்யிலில் பேருந்திலா வந்தீர்கள்? திரும்பிப் போகும்போது நமது காரில் செல்லுங்கள்! என்று கூறி ஒரு ஓட்டுநரை அழைக்கிறார்,'நமது ஏசி காரை எடுத்துக்கொண்டு சென்னைக்குச் செல்! அங்கே இந்தத் தம்பியை அவரது வீட்டு வாசலில் இறக்கிவிட்டு, அங்கிருந்து உனது மொபைலில் என்னை அழைத்துத், தம்பியிடம் கொடுத்து என்னிடம் பேசச் சொல்!' என்கிறார்.அதே போல நீயும் இரவில் அவரது காரில் சென்னை வந்து வீட்டில் இறங்கியதும், அவரிடம் பேசி நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொள்கிறாய்!.
இப்போது சொல்! அந்த மனிதரை நீ எத்தனை நாட்களுக்கு உன் நினைவில் வைத்திருப்பாய்?".
இளைஞன் பதிலளித்தான், "என்னங்க குருநாதரே இப்படிக் கேட்டுவிட்டீர்கள்?. அவ்வளவு பெரிய நல்ல மனமும் குணமும் உள்ள அந்தப் பெரியமனிதரை எப்படி எளிதில் மறந்துவிட முடியும்?; என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்!".
ஆம்! வாழ்வியலில் அழகான அங்கங்களால் மனிதர்கள் நினைவில் வைத்துக்கொள்ளப் படுவதில்லை; அழகான நடத்தைகளாலேயே அவர்கள் சக மனிதர்களால் நினைவில் வைத்துப் போற்றப் பெறுகிறார்கள்.
நாம் நம்மை அழகாக்கிக் கொள்வதிலேயே பெரும்பான்மை நேரத்தைச் செலவழித்துக் கொண்டிருக்கிறோம். உடுத்துவது, உண்பது, பூசுவது, பூணுவது என எல்லாவற்றிற்கும் சம்பாதிக்கும் அத்தனையையும் நாம் செலவழிப்பது நம்மை அழகு படுத்திக்கொள்ளும் நோக்கத்தில் மட்டுமே!. அழகு அழகானது தான். ஆனால் உண்மையழகு என்பது இயல்பாக வருவது; செயற்கையால் அது செழுமை பெறாது.
அங்கங்களை அழகுபடுத்தச் செலவழிக்கும் முயற்சியில் பத்தில் ஒருபங்காவது நாம் நமது நடத்தைகளை அழகாக்கச் செலவழித்தால் நம்மைவிட நிலைத்த அழகுடையவர்கள் உலகத்திலேயே இருக்க முடியாது.
ஒருவரை நல்லவர் என்றும் தீயவர் என்றும் கூறுவதற்கு அவரது நடத்தைகளே அளவுகோல்களாக அமைகின்றன. நல்ல விதமான சிந்தனைகள், நல்லவிதமான சொற் பயன்பாடுகள், எதையுமே நல்லவிதமாகப் பார்க்கும் நேர்முறைக் குணம், அதற்கேற்ற நம்பிக்கைச் செயற்பாடுகள், ஆசை, கோபம் களவு, பொறாமை முதலியவை இல்லாமை, அன்பு, கருணை, இரக்கம், நடுநிலைமை முதலியவை நிறைந்திருத்தல்… இவையே நன்னடத்தையின் அடையாளங்கள். இவற்றிற்கு மாறுபட்ட தன்மையுள்ளோர் தீய நடத்தைகள் கொண்ட எதிர்மறைக் குணம் உடையவர்கள்.
எல்லா மனிதருக்குள்ளும் நன்மைக் குணங்களும் உண்டு; தீமைக் குணங்களும் உண்டு. நாளில் இருட்டும் ஒளியும் கலந்திருப்பதுபோல..பூமியில் மேடுகளும் பள்ளங்களும் நிறைந்திருப்பது போல.ஒவ்வொரு மனிதனும் தன்னை நல்லவனாக்கிக் கொள்ள எளிய வழி எப்போதும் நல்லவை விளையக் கூடி இனிய சொற்களைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தால் போதும் என்கிறார் திருவள்ளுவர்.
"அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்" எனவே நமக்குள்ளிருக்கும் அனைத்துத் தீமைகளும் நம்மைவிட்டு வெளியேறி அறமாகிய நன்மை நமக்குள் நிறைய வேண்டுமென்றால் நல்லதையே சிந்திக்க வேண்டும்; நல்லதையே பேச வேண்டும்; நல்லதையே செய்யவேண்டும்.
ஓர் ஊரில் ஒரு கஞ்சன் இருந்தார். நல்ல வசதியான செல்வந்தர்; ஆனால் மனமுவந்து யாருக்கும் எந்த உதவியும் செய்து விடக்கூடாது என்பதில் வெகு கவனமாக இருப்பவர். அவரது இந்த எதிர்மறை நடத்தை நேர்முறையான நன்னடத்தையாக மாறிய கதை சுவையானது.
அந்த ஊரில் திருவிழா வந்தது. ஊர்ப் பெரியவர்கள் சேர்ந்து வசதியானவர்களிடம் நன்கொடைகள் வசூல்பண்ணித் திருவிழா நடத்துவது வழக்கம்.
இந்த முறை, நன்கொடை வசூலுக்குப் புதுமையான உத்தியைக் கையாண்டனர். நன்கொடைப் புத்தகத்தை எடுத்துக்கொண்டு ஊர்ப் பெரியவர்கள் நேராக அந்தக் கஞ்ச மகாப்பிரபு வீட்டுக்கு முதல் வசூலாகச் சென்றனர். வரவேற்ற கஞ்சன், "என்னைப்பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டே என்னிடத்தில் வசூலுக்கு வந்திருக்கிறீர்களே!.நான்தான் எதுவுமே கொடுக்க மாட்டேனே!" என்று இழுத்தார்.
"ஐயா நீங்கள் தரமாட்டீர்கள் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்! ஆனாலும் ஒரு புதிய வசூல்முறையை ஆலோசித்து இங்கே வந்திருக்கிறோம். நீங்கள் உங்கள் நன்கொடைப் பங்காக ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலை ஒன்றைத் தந்து விடுங்கள்.அதனை வங்கியில் செலுத்திக் காசாக்காமல் வைத்திருந்து ஒருமாதம் கழித்து உங்களுக்கே திரும்பித் தந்துவிடுகிறோம். இதில் உங்களுக்கு எந்தவிதமான பண நட்டமும் வராது.
ஊரில் மற்றவர்களிடம், நீங்கள் நன்கொடை தந்ததாக இந்தக் காசோலையைக் காட்டினால் அவர்கள் கூடுதலாக நன்கொடைகள் வழங்க வாய்ப்பாக அமையும்; அதற்காகத் தான் இந்த ஏற்பாடு" என்ற ஊர்ப் பெரியவர்கள், "இதை வேறு யாரிடமும் கூறிவிடாதீர்கள்! நாங்களும் கூற மாட்டோம்!" என்றனர்.
சரி! சரி! என்று கூறிக்கொண்டே வீட்டுக்குள் போய் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையை எழுதிக் கையொப்பமிட்டுக் கொண்டுவந்து கொடுத்தார் கஞ்சன். 'எதற்கும் எதுவும் தராத கஞ்சனே ஒரு லட்ச ரூபாய் கொடுத்திருக்கிறார்!' என்று ஊர்முழுவதும் பேச்சாகிப் போனது.
ஊரிலுள்ள மற்ற பணக்காரர்களெல்லாம் கஞ்சனை விட அதிகமாகவே நன்கொடையை எழுதித் தள்ளினர். எந்த ஆண்டும் இல்லாத வருமானமாக இந்த ஆண்டு குவிந்து போனது.
மாத முடிவில் காசோலையைத் திருப்பித்தர கஞ்சன் வீட்டுக்கு ஊர்ப் பெரியவர்கள் சென்றனர். "அந்தப் பணத்தைக் கோயிலுக்கான எனது நன்கொடையாகவே வைத்துக்கொள்ளுங்கள்!" என்று கஞ்சன் சொன்னதும் எல்லாரும் அதிர்ந்து போயினர். "நான் காசோலை கொடுத்த பிறகு இந்த ஒருமாதமும் தினசரி என்னை வாழ்த்தியும் பாராட்டியும் நூற்றுக்கணக்கான ஊர்மக்கள் பேசினர். தருவதால் ஏற்படும் மகிழ்ச்சியை முழுமையாக உணர்ந்து கொண்டேன். அடுத்தாண்டுத் திருவிழாவுக்கு ஒன்னரை லட்சம் தருவேன்" என்றார் திருந்திய கஞ்சன்.
நல்ல எண்ணங்கள்! இனிய சொற்கள்! நல்ல நோக்கக்கங்கள்! நல்ல செயல்பாடுகள்! இவையே நம்மை நல்வழிப்படுத்தும் நடத்தைகள்!!
நடத்தை நலமானால் வாழ்க்கை சுகமாகும்!
தொடர்புக்கு 9443190098






