என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்!
    X

    வாழ்வுக்கு ஆதாரமான நதி வளம் காப்போம்!

    • ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை சுருங்கி சிறு சந்துகள் போல ஓடுகின்றன.
    • நதிகளின் உரிமையைக் காக்க உறுதி பூண்டு செயல்பட வேண்டிய நாளாக நதிகள் தினம் அமைகிறது.

    நீரின்றி அமையாது உலகு என்பது வள்ளுவர் வாக்கு! (குறள் எண் 20)

    சுத்தமான காற்றும் சுத்தமான நீரும் மனிதர் உயிர் வாழ முக்கியமானவை. நாளுக்கு நாள் மோசமாகி வரும் நீர் வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே உலக நதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் நான்காம் ஞாயிற்றுக்கிழமை நதிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த 2023-ம் ஆண்டின் நதிகள் தினத்தின் கருப்பொருள் - நதிகளின் உரிமைகள் என்பதாகும்.

    உலகெங்குமுள்ள நாடுகளில் நதிகள் அசுத்தப்படுத்தப்படுகின்றன; அதன் மண் வளம் சுரண்டப்படுகிறது. அதை ஒட்டியுள்ள மழைக்காடுகள் அழிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் உலக மக்களின் எதிர்கால வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கப்போகும் விஷயங்களாக ஆகி மனித குலத்தின் இருப்பையே கேள்விக் குறி ஆக்கும்!

    இதைத்தடுத்து எதிர்கால சந்ததியினருக்கு நதிகளை சுத்த நீருடன் பாயும் ஜீவ நதிகளாகப் பாதுகாத்து அளிப்பதே இன்றைய உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.

    ஆயிரத்திதொள்ளாயிரத்து எண்பதுகளில் மார்க் ஏஞ்சலோ என்பவர் வட கனடாவில் பி.சி. ரிவர்ஸ் டே என்பதை அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நதி வளத்திற்காக அவர் பாடுபட்டு பல்வேறு நற்பணிகளைச் செய்தார்.

    இவரது வெற்றிகளைக் கண்ட உலகம் இவரைப் பாராட்டியதோடு உலகெங்கும் நதிகளைப் பாதுகாக்கும் செய்தியை முன் எடுத்தது.

    இந்திய நதிகள்: காலம் காலமாக இந்திய நாகரிகம் நதிகளைக் கொண்டாடி வருவதை அனைவரும் அறிவோம். காலையில் தினமும் செய்யும் பிரார்த்தனையில் கங்கை, யமுனை, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, காவேரி ஆகியவற்றைப் போற்றித் தொழுவது நமது மரபு.

    நமது நாட்டில் காவேரி புனித நதியாகப் போற்றப்படுகிறது. 805 கிலோமீட்டர் ஓடும் காவிரி தமிழகத்தில் மட்டும் 461 கிலோமீட்டர் ஓடி டெல்டா பகுதியை அமைத்து சிறந்ததொரு வாழ்வாதாரமாகத் திகழ்கிறது.

    "வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத்தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும்" தன்மையை பட்டினப்பாலையில் கடியலூரு உருத்திரங்கண்ணனார் பாடியுள்ளார்.

    ஆறு கிடந்தன்ன அகல் நெடும் தெரு என்று நமது வீதிகளை ஆறுகளுடன் ஒப்பிடுவதை நெடுநல்வாடையில் பார்க்கிறோம்.

    காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்

    கண்டதோர் வையை பொருனை நதி - என

    மேவிய ஆறு பலவோடத் திரு

    மேனி செழித்த தமிழ்நாடு என பெருமிதம் கொள்கிறார் பாரதியார்.

    ஆனால் தமிழ் கண்ட வையையும் வளம் தந்த காவிரியும் தாமிரபரணியும் இன்று வற்றி இருப்பதையும் மணல் சுரண்டப்பட்டு காய்ந்து கிடப்பதையும் பார்க்கிறோம். ஆறுகள் ஆக்கிரமிக்கப்பட்டு அவை சுருங்கி சிறு சந்துகள் போல ஓடுகின்றன. பெரிய மணல் வளம் திட்டமிடப்பட்டு மணல் மாபியாக்களால் கொள்ளை அடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். எப்போதுமே நீரை உறிஞ்சிக் காக்கும் நல்ல மணல் வளம் போய் விடுவதால் கோடை காலங்களிலும் இருக்க வேண்டிய நீர் இல்லாமல் போகும் நிலையும் ஏற்பட்டு விட்டது.

    கங்கையின் பெருமை!

    இன்னரு நீர்க்கங்கை ஆறெங்கள் ஆறே- இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே? என்று கேட்டு புனித கங்கையைப் போற்றி முழக்கமிட்டார் உலக மகாகவி பாரதியார்.

    உலகப் பயணம் ஒன்றை மேற்கொண்ட பிரபல எழுத்தாளர் மார்க் ட்வெயின் 1896-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18-ந்தேதி இந்தியா வந்தார். அவர் காசியில் கங்கையில் சடலங்கள் எரிந்த நிலையில் தள்ளி விடப்படுவதையும் மிதந்து செல்வதையும் பார்த்துத் திகைத்தார்.

    அப்போது ஆக்ராவில் டாக்டர் ஹென்கின் என்ற விஞ்ஞானி அரசுப் பணியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் கங்கை நீரைச் சோதனை செய்வதற்காக காசிக்கு சென்றார். அங்கே கங்கையில் கழிவு நீர் சேருமிடத்தைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து ஒரு கனசெண்டிமீட்டர் நீரை சோதனைக்காக எடுத்தார். சாதாரணமாக அந்த அளவு நீரில் லட்சக் கணக்கில் விஷக் கிருமிகள் இருக்கும். ஆனால் அவை அனைத்தும் ஆறு மணி நேரத்தில் இறந்ததைக் கண்ட ஹென்கின் ஆச்சரியப்பட்டு பிரமித்தார். மிதந்து சென்ற சில சடலங்களின் அடியிலிருந்து காலரா கிருமிகள் உள்ள நீரை எடுத்தார். ஆனால் அந்தக் கிருமிகளும் ஆறே மணி நேரத்தில் துடிதுடித்து இறப்பதைக் கண்டு வியப்புற்று உலகிற்கு இதை அறிவித்தார்.

    பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் மகராஜாக்களில் பலர் லண்டன் செல்லும் போது தங்களுடன் கப்பலில் கங்கை நீரை எடுத்துச் செல்வது வழக்கம். ஏனெனில் அது நீண்ட நெடும் பயணத்தில் எப்போதும் சுத்தமாகவே இருக்கும் என்பதால். ஆனால் கால வெள்ளத்தில் ஆலைகளில் இருந்து வெளியேற்றப்படும் அபாயகரமான நச்சுக்கள் கலந்த கழிவு நீர் பெருமளவு கங்கையிலும் யமுனையிலும் சேர்க்கப்படுவதால் அவற்றின் தூய்மை கெடப்பட்டு வருகிறது.

    கண்ணபிரான் பெரும் லீலைகள் புரிந்த புனிதமான யமுனா நதி தீரம் இன்று பரிதாப நிலையில் இருப்பது அனைவரும் சிந்திக்க வேண்டிய விஷயம்.

    இந்த நிலையை அகற்ற நதிகளின் உரிமையைக் காக்க உறுதி பூண்டு செயல்பட வேண்டிய நாளாக நதிகள் தினம் அமைகிறது.

    பெயர்களில் மட்டும் உள்ள ஏரிகள்!

    இது மட்டுமின்றி சென்னை, பெங்களூர் போன்ற நகர்களில் ஏராளமான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்களாக மாறி அந்த ஏரிகள் அந்தப் பகுதிகளின் தெருக்களின் பெயர்களில் மட்டுமே இன்று இருக்கும் அவல நிலையையும் பார்க்கிறோம்.

    சீனாவின் மஞ்சள் நதி: இது இப்படி எனில் சீனாவின் இரண்டாவது பெரும் நதியும் வாழ்வாதாரமாகவும் திகழும் மஞ்சள் நதி பாழ்பட்டு அசுத்த நதியாகவே ஆகி விட்டது. அதன் 66 விழுக்காடு நீர் குடிக்க முடியாத அசுத்த நீர். 435 கோடி டன்கள் அளவு கழிவு நீர் அதில் கலக்கப்பட்டதாக 2005-ம் ஆண்டு நதி நீர் அறிக்கை தெரிவித்தது. சீனாவின் 5464 கிலோமீட்டர் நீளமுள்ள மஞ்சள் நதியின் நிலையும் பரிதாபகரமாக ஆகி விட்டது.

    நடந்தாய் வாழி அமேசான்: அடுத்து உலகின் மிகப் பெரும் நதியான அமேசானைப் பார்ப்போம். பெருவிலுள்ள ஆண்டஸ் மலையில் 17000 அடி உயரத்தில் உள்ளது அழகிய ஏரி லாரிகோச்சா. இதுவே அமேசான் நதியின் மூலம்.

    இங்கிருந்து பிறக்கும் நதி 4000 மைல் தூரம் நடை பயின்று பல இடங்களில் பல பெயர்களால் அழைக்கப்பட்டு, அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் கலக்கிறது.

    நைலுக்கு அடுத்தபடியாக 'உலகின் இரண்டாவது பெரிய நதி' என்று பெயர் பெற்ற அமேசானில் 1500 வகைக்கும் மேலான மீன் வகைகள் உயிர் வாழ்கின்றன!

    ஆவேசமாக ஓடிவரும் நதியில்,ஒரு நாள் ஓடும் நீரின் அளவு, உலகில் ஓடும் நதிகளில் மூன்றில் இரண்டு பங்கு நீருக்குச் சமம்!

    அமேசான் நதி வழியாகவே உலகின் ஐந்தில் ஒரு பங்கு சுத்த நீர் பாய்கிறது.

    ஒரு வருடத்தில் தேம்ஸ் நதி, கடலில் சங்கமமாக்கும் நீரின் அளவை ஒரே நாளில் கடலில் கலக்கிறது அமேசான்!

    அசுர வேகத்தில் கடலில் கலக்கும் அமேசான், கடலின் உப்பு நீரை 100 மைல் தூரம் பின்னுக்குத் தள்ளி, தூய நீர்ப் பரப்பை ஏற்படுத்துகிறது என்றால் அது சாதாரண விஷயமா என்ன?

    இந்த சுத்த நீரும் தொழிற்சாலைக் கழிவுகளாலும் இதர பல வழிகள் மூலமாகவும் அசுத்தமாக்கப்பட்டு வருகிறது.

    1848 -லிருந்து 1859 முடிய அமேசான் காடுகளை ஆராய்ந்த பிரிட்டிஷ் அறிஞர் 'ஹென்றி பேட்ஸ்' 15000 மிருக வகைகளைக் கணக்கிட்டார்.

    இதே சமயம் தாவர இயல் நிபுணர் 'ரிச்சர்டு ஸ்ப்ரூஸ்' 7000 வகை புது தாவர இனங்களை இங்கே கண்டுபிடித்தார்!

    இதில் பாதி உலகில் முதன் முதலாகப் பார்க்கப் பட்டவை!

    அமேசான் மழைக்காடுகள் உலகின் நுரையீரல்கள் என வர்ணிக்கப்படுபவை. கார்பனை சேமித்து வைக்கக்கூடிய அரிய சேமிப்பகங்களுள் முக்கியமான ஒன்று இது. 100 பில்லியன் டன் கார்பன் (ஒரு பில்லியன் என்பது நூறு கோடியாகும்) அமேசான் மழைக்காடுகளில் சேமித்து வைக்கப்படுகிறது என்றும் வளி மண்டலத்தில் இருந்து வருடந்தோறும் சுமார் 200 கோடி கார்பன் டை ஆக்சைடை அமேசான் உறிஞ்சுகிறது என்பதும் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு. ஆனால் இது இனி கார்பன் டை ஆக்சைடை முன் போல பெருமளவில் உறிஞ்சாது.

    60 கோடி ஹெக்டேர் அதாவது 23 லட்சம் சதுர மைல் பரப்புள்ள பெரிய மழைக்காடு இது. ஆனால் வருடந்தோறும் 5800 சதுர மைல் அளவில் இது அழிக்கப்பட்டு வருகிறது.

    உலகின் பிரபல நடிகரான லியனார்டோ டிகாப்ரியோ 50 லட்சம் டாலர் தந்து அமேசான் காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற தனது எண்ணத்தை வலியுறுத்தியுள்ளார். எல்லா நாடுகளிலும் இப்படி ஒரு டிகாப்ரியோ இருந்தால் மழைக்காடுகளே அழியாமல் பாதுகாக்கப்படும் அல்லவா?!

    நதிகள் காப்போம்: மண்ணைச் சுரண்டிச் சுரண்டி ஆறுகளை வழக்கம் போலப் பாய விடாமல் ஆக்குவதால், நீடித்த அளவில் நம்மை நாமே அழித்துக் கொண்டவர்களாக ஆகிறோம். செழுமை வாய்ந்த மண் வளத்தினாலேயே, பாரம்பரியம் மிக்க இந்திய விவசாயிகள், நூற்றி முப்பது கோடிக்கும் அதிகமான இந்திய மக்கள் உணவு பெற வழி வகுக்கிறார்கள். உலகின் இதர இடங்களில் உள்ள மண்ணை ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்திய மண்ணில் ஒரு கியூபிக் மீட்டர் மண்ணில் மைக்ரோ ஆர்கானிசம் எனப்படும் நுண்ணுயிர்கள் மிக அதிக அளவில் காணப்படுவது நமது மண்வளத்தின் பெருமையைப் பறை சாற்றும் ஒரு அரிய உண்மையாகும்.

    நமது நதிகள் அனைத்தையும் நிலைபெறச் செய்ய, உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் உத்வேகமூட்டும் நதியைக் காக்கும் இயற்கை ஆர்வலராக மாறினால் நம் சந்ததியினர் நம்மை வாழ்த்துவார்கள் இல்லையா? நதிகள் காப்போம்! நீர் வளத்தை நிலைக்க வைப்போம்!

    தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

    Next Story
    ×