என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

திருமணம் நடத்தி வைக்கும் உத்திரகோசமங்கை மங்களநாதர்
- அத்தனை சிறப்பு வாய்ந்த சிவத்தலமா அது என நிறைய பேர் நினைக்க கூடும்.
- உலகின் முதல் சிவன் ஆலயம் உத்திரகோசமங்கை சிவாலயம் தான்.
திருவாரூரில் பிறந்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, திருவண்ணாமலையை நினைத்தால் முக்தி. உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி.
உத்திரகோசமங்கை மண்ணை மிதித்தாலே முக்தி கிடைக்குமா? அத்தனை சிறப்பு வாய்ந்த சிவத்தலமா அது என நிறைய பேர் நினைக்க கூடும்.
வாருங்கள்! பதிவின் மூலம் உத்திரகோசமங்கை தலத்தின் பழமையினையும், தலச்சிறப்புகளையும் பற்றி பார்ப்போம்.
"மண் தோன்றியபோதே மங்கை தோன்றியது" என்னும் பழமொழியின் மூலம் உத்திரகோசமங்கை சிவாலயத்தின் புராதனத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.
மதுரையின் அரசி, ஏறிய பல்லக்கு இறங்காத நாச்சியார் மீனாட்சியின் சொந்த ஊர் எது என்றால் மதுரை என்பார்கள்.
காவிரி சூழ் சோலைகளின் நடுவில் கருமணி போல் துயிலும் ரெங்கநாதரின் சொந்த ஊர் எது என கேட்டால் ஸ்ரீரங்கம் என்பார்கள்.
ஆனைத்தோலினை மார்பிலும், புலித்தோலை இடையிலும் அணிந்து மேனியெங்கும் வெண்ணீறை பூசி ஆலகால விஷத்தை அருந்தியதால் கண்டம் நீலமாகிய நீலகண்டனான ஆலவாய் அழகனின் சொந்த ஊர் எது என கேட்டால் நிறைய பேர் கயிலாயம் என்பார்கள். சிலர் காசி என்பார்கள். பலர் ராமேஸ்வரம் என்பார்கள்.
அதிகம் படித்த பலரோ தென்னாடுடைய சிவன் அவர். எந்நாட்டவருக்கும் இறைவன் அவர். அதனால் எல்லா நாடும் அவருடைய சொந்த நாடு தான் என்பார்கள்.
ஆனால் உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என பெருமையோடு சொல்கிறது சிவ புராணம்.
உலகின் முதல் சிவன் ஆலயம் உத்திரகோசமங்கை சிவாலயம் தான்.
மதுரை மற்றும் மதுரையைச் சுற்றிலும் சிவனார் ஏராளமான திருவிளையாடல்களை நிகழ்த்தினார். திருவிளையாடல் புராணத்தில் வரும் 'வலை வீசி மீன் பிடித்த படலம்' எனும் நிகழ்வு உத்திரகோசமங்கை தலத்தில்தான் நடந்தது.
உத்திரகோசமேங்கை கோவில் தெப்ப குளத்தில் வாழும் மீன்கள் அனைத்தும் கடல் நீரில் மட்டும் வாழும் மீன்கள் என்பதே சிவனார் நடத்திய திருவிளையாடலுக்கு அத்தாட்சியாக இன்றளவும் கருத்தில் கொள்ளலாம்.
ஆதி காலத்தில் அதுவும் நவக்கிரகங்கள் ஒன்பது என அறியப்படாத, வகைப்படுத்த படாத காலத்தில் சூரியன், சந்திரன், செவ்வாய் மட்டுமே கிரகங்களாக வகைப்படுத்தப்பட்டு இருந்தன.
நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோவில் உத்திரகோசமங்கை என்பதால் சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய மூன்று கிரகங்கள் மட்டுமே கிரக மேடையில் அமைக்கப்பட்டு இருப்பதன் மூலம் உத்திரகோசமங்கை தலத்தின் புராதனத்தை நம்மால் எளிதில் உணரலாம்.
கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான சிவ ஆலயம்.
ஆயிரம் சிவ அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம் உத்திரகோசமங்கை ஆலயம் ஆகும்.
சுரேஸ்வரன் அய்யாப்பழம்
அரனின் திருவடி, திருமுடியை காண்பதற்காக நடந்த பந்தயத்தில் பிரம்மனுக்கு ஆதரவாக பொய் சாட்சி கூறியதால் மற்ற எல்லா சிவாலயங்களிலும் பூக்களை சார்த்தி வழிபடும் போது சாபம் பெற்ற பூ என தாழம்பூவை மட்டும் ஒதுக்கி விடுவார்கள்.
உத்திரகோசமங்கை மூலவரான மங்களேசுவரருக்குத் தாழம்பூ சார்த்தப்படுகிறது.
இதன் மூலம் பிரம்மனும் பெருமாளும் அடி முடி தேடிய யுகத்திற்கு முன்பே இந்த கோவில் இருந்திருக்கிறது என இந்த ஆலயத்தின் தொன்மையினை தாழம்பூவை மூலவருக்கு சார்த்துவதன் மூலம் அறிய முடிகிறது.
உத்திரகோசமங்கை சிவாலயத்தில் தான் முதன்முதலில் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்பட்டது.
இத்தல மூலவர் 'மங்களநாதர்' சுயம்புவாக இலந்தை மரத்தடியில் தோன்றியவர்.
சுமார் 3,300ஆண்டுகள் பூத்து, காய்த்து கொண்டிருப்பது இத்தல விருட்சத்தின் சிறப்பம்சமாகும்.
சிவபெருமான் பார்வதிதேவிக்கு வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசம் செய்த இடம் உத்திரகோசமங்கை திருத்தலம் ஆகும்.
உத்திரன் (ருத்திரன்) + கோசம் + மங்கை - மங்கைக்கு உத்திரன் உபதேசம் செய்த இடம், ஆதலால் உத்திரகோசமங்கை என்றானது.
உத்தரம் - உபதேசம் அல்லது விளக்கம்.
கோசம் - ரகசியம்
மங்கை - பார்வதி.
பார்வதிக்கு இறைவன் வேதாகமங்களின் ரகசியங்களை உபதேசித்ததால் உத்தரகோசமங்கை என இத்தலம் பெயர் பெற்றது.
எதற்காக இந்த தலத்தில் வைத்து பார்வதி தேவிக்கு சிவனார் வேத உபதேசம் செய்தார் என்பதை திருவிளையாடல் புராணத்தில் ஆலவாய்க் காண்டத்தில் ஐம்பத்தி எட்டாவது திருவிளையாடலாக வரும் வலை வீசிய படலம் நிகழ்வின் மூலம் அறியலாம்.
கைலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவி கேட்டு கொண்டதற்கு வேதத்தின் உட்பொருளை பார்வதி தேவிக்கு விவரித்துக் கொண்டிருந்தார்.
சிவபெருமான் சிரத்தையோடு சொல்லும் வேதபாராயண விளக்கத்தை கவனிக்காமல் உமாதேவி சுனையில் துள்ளி விளையாடும் மீனை கவனித்து கொண்டிருந்தார்.
பொதுவாக கணவன், மனைவி சம்பாஷணையின் போதோ அல்லது மற்றவர்களோடு உரையாடும் போதோ பேசுவதை கவனிக்காமல் இருந்தால் பேசுபவர் கோபப்படுவது இயல்பு.
தான் சொல்லும் வேதத்தின் பொருளை கவனிக்காமல் மீன்கள் துள்ளி விளையாடுவதை கவனித்ததால் வேதத்திற்கும், நாதத்திற்கும் நாதனான வேதநாதன் தனது மனைவியான வேதநாயகியை சினத்தோடு மீனவ பெண்ணாக பூலோகத்தில் பிறக்கும் படி சபிக்கிறார்.
தாயாரை தந்தையான சிவன் சபித்ததை அறிந்த பிள்ளைகள் கணபதியும், கந்தனும் வேகமாக கயிலை மலைக்கு கோபத்தோடு வருகின்றனர்.
பரமசிவனார் அச்சமயத்தில் கயிலையில் இல்லை. நந்தி தேவர் கயிலையை பொறுப்பு அதிகாரியாக காத்து கொண்டு இருக்கின்றார்.
எங்க அப்பன் பரமசிவத்துக்கு வேற வேலையே இல்லை. எந்த நேரமும் எங்கம்மை பார்வதியோட சண்டை போட்டு எங்கம்மைக்கு சாபம் கொடுப்பதே அவரோட வேலையா போச்சு.
முன்னாடி ஒருக்கா சண்டை போடும் போது தக்க பிரஜாதிபதியோட மகளா பொறந்து வான்னு சாபம் போட்டாரு.
கல்யாணம் பண்ணி கைலாச மலைக்கு கூட்டிட்டு வந்து குடித்தனம் நடத்தையில தக்கராஜன் நடத்துமா யாகத்துக்கு எங்கம்ம போயிட்டாங்கன்னு உயிரோட கொளுத்தி புட்டாரு எங்கம்மைய...
இன்னொரு வாட்டி எங்கம்மா ஏதோ தப்பு பண்ணிட்டாங்கன்னு சொல்லி மயிலாப்பூரில், சங்கரன்கோயிலில் போய் தவம் பண்ணுன்னு அனுப்பி விட்டுட்டாரு.
இவரோட கொண்டையில மறைச்சு வைச்சிருக்குற கங்கம்மாவோட குடித்தனம் நடத்துறதுக்காக எங்கம்மைய இந்த வாட்டி கடப்புறத்து பொண்ணா கயற்கண்ணி பேருல பொறந்து வான்னு சாபம் கொடுத்து விட்டுறுக்காரு.
இதுக்கு ஒரு முடிவு கட்டியாகணும். கணேசண்ணே.. அந்த வேதம் அத்தனையும் எடுத்து கடலில் போட்டுட்டு வருவோம்.. அப்ப தான் நம்ம அப்பாவோட ஆட்டம் கொஞ்சம் அடங்கும் என கந்தவேள் தனது அண்ணனான கணேசனோடு கூறி நந்திதேவர் தடுத்தும் கேட்காமல் வேதங்களை கந்தனும், கணபதியும் கடலில் வீசி எறிகின்றனர்.
பாருலோக மக்களுக்கு படியளந்து விட்டு கைலாசம் வந்த பரமசிவம் நடந்த சம்பவங்களை அறிந்து கோபம் கொள்கிறார்.
வேதங்களை கடலில் வீசி எறிந்த கந்தனை, கணபதியை போரிட்டு தடுக்காத நந்தியை சுறா மீனாக பிறக்கும் படி சபிக்கிறார் சிவன்.
சுறாவாக மாறிய நந்தி தேவர் கடலில் மிதக்கும் வேதங்கள் அசுரர்கள் கையில் சிக்காதவாறு காவல் புரிகிறார்.
முழு முதற்கடவுள் கணபதியை யாரும் சபிக்க முடியாது. அப்படி சபித்தால் சபித்தவரையே அந்த சாபம் பீடித்து விடும் என்பதால் சிவனார் கணபதியை சபிக்காமல் துடுக்காக பேசிய கந்த கடவுளை வேளாளர் வீட்டில் ஊமை குழந்தையாய் பிறக்கும் படி சபிக்கிறார்.
சங்கரனான சிவனின் சாபத்திற்கு பின் இருக்கும் திருவிளையாடல்கள் அனைத்தையும் அவர் தானே அறிவார்.
வேதங்கள் கடலில் மிதந்து கயற்கண்ணி என்ற பெயரில் பார்வதி தேவி வளர்ந்து வரும் உத்திரகோசமங்கை தலத்திற்கு வருகின்றது.
கயற்கண்ணி தேவியின் உறவினர்கள் மீன் பிடிக்க செல்லும் போது சுறா வடிவில் இருக்கும் நந்தி தேவர் அவர்களை தாக்குகிறார்.
சுறாவை பிடித்து கரைக்கு கொண்டு வரும் வீரனுக்கு தனது மகளான கயற்கண்ணியை மணம் முடித்து தருவதாக கயற்கண்ணியின் தந்தை செம்படவத்தலைவன் அறிவிக்கின்றார்.
வலைவாணன் என்ற பெயரில் வரும் சிவபெருமான் சுறா வடிவில் இருந்த நந்தி தேவரை அடக்கி கடலில் மிதந்த வேதங்களை கைப்பற்றி கரைக்கு வருகிறார்.
கரைக்கு வந்ததும் மீனவரான செம்படவத்தலைவன் தான் அறிவித்த படி தனது மகளான கயற்கண்ணியை, சிவனுக்கு மணம் முடித்து வைக்கிறார்.
மணம் முடித்த பின் உத்திரனான சிவன் வேதங்களை கோசம் எனும் உபதேசம் மூலம் மங்கையான பார்வதி தேவிக்கு உபதேசித்ததால் இந்த தலம் உத்திரகோசமங்கை என அழைக்கப்படுகிறது.
மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர். தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.
இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.
மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே "முகூர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன".
அழகும் ஆன்மிகமும் சிறந்து விளங்கும் இத்தலம் ராமநாதபுரம் அருகே அமைந்துள்ளது.
இத்தலத்தின் மரகத நடராசர் குறித்த வியப்பூட்டும் தகவல்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.
தொடர்புக்கு-isuresh669@gmail.com






