என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
    X

    சர்க்கரை நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

    • சம்பா, குதிரை வாலி போன்றவை அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன.
    • வெள்ளை சர்க்கரை என்று முன்பு கூறினாலும் எந்தவித சர்க்கரையினையும் தவிர்ப்பதே நல்லது.

    எத்தனை முறை சர்க்கரை நோயினைப் பற்றி எழுதினாலும் பின்பற்ற வேண்டிய உணவு முறைகளைப் பற்றி எழுதினாலும் அது அவசியமானதாகவே இருக்கின்றது.

    தவிர்க்க வேண்டிய உணவுகள் என்று சில உள்ளன.

    * அதிக மாவு சத்து நிறைந்த உணவுப் பொருட்கள்

    * அதிக புரதம்

    * பதப்படுத்தப்பட்ட உணவுகள்

    * மாவு சத்து நிறைந்த காய்கறிகள்

    * வெள்ளை சர்க்கரை-மற்ற எந்த சர்க்கரையும் கூடாது

    * மிக அதிக அளவு பால், பால் சார்ந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    * பாலிஷ் செய்த தானியங்கள் அனைத்துமே தவிர்க்கப்பட வேண்டும்.

    இன்று மாப்பிள்ளை சம்பா, குதிரை வாலி போன்றவை அதிகம் பரிந்துரைக்கப்படுகின்றன.

    பதப்படுத்தப்பட்ட அசைவம், சிகப்பு அசைவம் இவைகளை தவிர்க்க வேண்டும். வெள்ளை சர்க்கரை என்று முன்பு கூறினாலும் எந்தவித சர்க்கரையினையும் தவிர்ப்பதே நல்லது.

    உருளை, சர்க்கரை வள்ளி போன்றவை அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப சிறிது எடுத்துக் கொள்ளலாம். என்றாலும் இவைகளை தவிர்ப்பதே நல்லது.

    அதிக கொழுப்பு நிறைந்த பால், பால் சார்ந்த உணவுகளை தவிர்த்து விட வேண்டும்.

    * சத்து சோடா, டயட் சோடா ஆல்கஹால் இவை யாருக்குமே தேவை இல்லை.

    கீரை, பச்சை காய்கறிகள், மருத்துவர் அறிவுரைபடியான பழங்கள், முழு தானிய உணவு, பருப்பு வகைள், கொட்டை வகைகள்.

    இவை எல்லாம் செய்யக்கூடாது

    * Junk Food இதனை அடியோடு தவிர்க்க வேண்டும். இதனை தமிழில் மொழி பெயர்த்தால் குப்பை உணவு என்றே கூறுகின்றனர்.

    * Syuare Meal அதாவது முழுமையான இலை போட்ட சாப்பாடு விருந்து போன்ற உணவினை தவிர்த்து விட வேண்டும்.

    * உருளை, சோளம் இவைகளை தவிர்த்து விடுவது நல்லது அல்லது மருத்துவர் அறிவுரைப்படி அளவாக எடுத்துக் கொள்ளலாம்.

    * அதிக கொழுப்புமிக்க அசைவம், பதப்படுத்தப்பட்ட அசைவம் இவற்றினை தடுத்திட வேண்டும்.

    * அதிக கொழுப்பு அல்லது முழு கொழுப்பு கொண்ட பால், பால் சார்ந்த உணவுகளை தவிர்த்திட வேண்டும்.

    சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள் செய்ய வேண்டியவை:

    * நன்கு நீர் குடிக்க வேண்டும். 8 கிளாஸ் அளவு நீர் குடிப்பது நல்லது.

    * எப்போது உண்ணும் பொழுதும் அதிக நார்சத்து நிறைந்து இருக்க வேண்டும்.

    * ஆரஞ்சு, ஆப்பிள், பேரிக்காய், பிளம்ஸ், செர்ரி, பப்பாயா, கொய்யா இவைகளை மருத்துவர் ஆலோசனைபடி எடுத்துக் கொள்ளலாம்.

    * வெந்தயம் அன்றாட உணவில் சேர்க்கலாம்.

    * அளவான கொட்டை வகை உணவுகளை மருத்துவர் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்வோம்.


    கமலி ஸ்ரீபால்

    மேலும் அறிந்து கொள்வோம்:

    * ஆப்பிள் சிறந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் வைட்டமின் 'சி' சத்தும் நார் சத்தும் கொண்டது. உணவு பாதையினை சுத்தம் செய்யும். கொலஸ்டிரால் குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    * கொய்யா பழத்தின் ஜிஐ வெகு குறைவு. வைட்டமின் 'சி', 'ஏ' சத்து நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுவது. மலச்சிக்கலை நீக்கும்.

    நாவல் பழம்- பல நோய்களில் இருந்து காக்க வல்லது. இன்சுலின் உற்பத்தியினை கூட்டுவதாக அறியப்படுகின்றது. பொட்டாசியம் சத்து கொண்டது.

    ஆரஞ்சு: நார் சத்தும், வைட்டமின் 'சி' சத்தும் அதிகம் கொண்டது. இருதய நோய், சர்க்கரை நோய் தவிர்ப்பிற்கு ஏற்றது.

    சர்க்கரை நோயினை சமாளிப்பது என்றாலே ரத்தத்தில் சர்க்கரை அளவினை கட்டுப்பாட்டில் கொண்டு வருவதுதான். இந்த நோய் 400 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களை உலகெங்கும் பாதித்து உள்ளது. ரத்தத்தில் சர்க்கரை அளவினை குறைக்க உதவும் சில வழிகளில் ஒன்று குறைந்த கார்போஹைடிரேட் உள்ள உணவினை எடுத்துக் கொள்வதுதான். மாவு சத்து உணவினை குறைத்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு நன்கு குறையும். அவ்வகையில்,

    * பசலை கீரை: அதிக சத்து, ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்து வைட்டமின் ஏ, பி2, சி மற்றும் கே கொண்டது. 100 கி பசலை கீரையில் 4 கி மாவு சத்துதான்.

    * புரோகலி: பச்சை காலி பிளவர் என்றும் இதனைக் கூறுவர். ஆரோக்கியமான காய்கறி. வைட்டமின் சி, கே. சத்து, நார்சத்து மிகுந்தது. புற்று நோயினை எதிர்க்க வல்லது. 100 கி புரோகலி இலையில் 7 கிராம் அளவே மாவு சத்து உள்ளது.

    * தக்காளி ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது. வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் சத்து கொண்டது. உயர் ரத்த அழுத்தத்தினை கட்டுப்படுத்த வல்லது. 100 கி தக்காளியில் சுமார் 5 கி மாவு சத்து உள்ளது.

    பீன்ஸ்: வைட்டமின் சி, நார் சத்து மிகுந்தது. இதுவும் 100 கிராமிற்கு 4 கிராம் மாவு சத்து கொண்டது. உடற்பயிற்சி செய்வது, அதிக கொழுப்பினைத் தவிர்த்தல். யோகா செய்தல், குறைந்த மாவு சத்து எடுத்துக் கொள்ளுதல் சர்க்கரை நோய் பாதிப்பினை வெகுவாய் கட்டுப்பாட்டில் வைக்கும்.

    சர்க்கரை சாப்பிடுவதால்- சத்து எதுவும் இல்லை. எடை கூடும். ஏனெனில் இனிப்பு எனும் பொழுதில் அதில் கொழுப்பும் சேர்ந்து விடுகின்றது. இத்துடன் அதிக உடல் உழைப்பின்மை கூடும் போது சர்க்கரை நோய் பாதிப்பு ஓடி வந்து விடுகின்றது.

    பழங்கள் என்றவுடன் அதனையும் குறிப்பிட்ட அளவுடனேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

    சர்க்கரை பாதிப்பும், உயர் ரத்த அழுத்தமும் நெருங்கிய நண்பர்கள், ஒரு சேர உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துவார்கள்.

    இந்த நீரிழிவு நோயினை பற்றி அன்றாடம் வலியுறுத்தி கட்டுரைகள் வெளிவருவதன் காரணம் என்ன? கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படாத சர்க்கரை பாதிப்பு உறுப்புகளுக்கு நிரந்தர பாதிப்பினை அளிக்கலாம். கண் பார்வை இழத்தல், இருதய நோய், பக்கவாதம், சிறுநீரக பாதிப்பு, கால் துண்டிக்கப்படுதல் என்ற அளவுக்கு கூட செல்லலாம். நீரிழிவு பிரிவு 1 என்பது ஆட்டோ இம்யுன் பாதிப்பு ஆகும். இதற்கான சிகிச்சை முறை இன்சுலின் சார்ந்தே இருக்கும். இங்கு குறிப்பிடப்பட்டுள்ளவை நீரிழிவு பிரிவு 2 பற்றியது மட்டுமே.

    ஆரோக்கியமற்ற உணவு, வாழ்க்கை முறை, டென்ஷன், அதிக எடை இவை நீரிழிவு பிரிவு 2 தாக்குதலுக்கு முக்கிய காரணம் ஆகின்றன.

    காயங்கள் ஆறுவதில் கால தாமதம், மங்கலான பார்வை, அதிக சோர்வு, வறட்சி, ஈறுகளில் ரத்தக்கசிவு, அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் செல்லுதல், அதிக பசி இந்த அறிகுறிகள் இருந்தாலே உடனடியாக சர்க்கரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

    கீட்டோ டயட் என்ற உணவு முறையினை பின்பற்ற விரும்புபவர்கள் கண்டிப்பாக மருத்துவர் கண்காணிப்பில் இருப்பது நல்லது.

    மேலும் சிலவற்றினையும் அறிவோம்:

    காரட்டினை பச்சையாக சமைக்காமல் சாப்பிட்டால் மட்டுமே சத்து என்ற கருத்து உள்ளது. காரட்டினை ஆவியில் வேக வைத்து (ஸ்டீம் என்று சொல்லுவோம்) உண்பது நிறைந்த சத்தினை அளிக்கும். நீரில் வேகவைத்து அந்த நீரினை கொட்டி விடும் பொழுது அல்லது அதிக நேரம் கொதிக்க விட்டு வடிகட்டும் பொழுதும் சத்துக்களை இழக்கின்றோம்.

    இதுபோல் தான் தக்காளியும். பச்சையாகத்தான் உண்ண வேண்டும் என்பது இல்லை. அதிக நேரம் சூட்டில் சத்துக்கள் அழிந்து விடக்கூடாது. வடிகட்டி சத்தினை அழிக்கவும் கூடாது. பசலைக்கீரை பீட்டா கரோட்டின் சத்து நிறைந்தது. இருதய நோய், நுரையீரல் புற்றுநோய் இவற்றில் இருந்து காக்க வல்லது.

    பைப்ரோமியால்ஜியா: இதனை தசைநார் வலி என்று குறிப்பிடுவர். உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் வலி என்று கூறாதவர் குறைவு எனலாம். ஜுரம், வைரஸ் பாதிப்பு என பாதிப்பு ஏற்படும்பொழுது அதிக உடல் வலி, தாங்க முடிய வில்லை என்று கூறுவர். பாதிப்பு நீங்கும் பொழுது வலியும் நன்கு நீங்கும். அல்லது வெகுவாய் குறையும். ஆனால் எந்த காரணமும் இல்லாமல் மூட்டுகள் தசைகளில் வலி, சோர்வு, ஞாபகத் திறன் கூட குறைதல், மூட்டுகள் தேய்மானம் என கூடவே பக்க விளைவுகள் ஏற்படும் போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    பொதுவில் இந்த பாதிப்பு ஆண்களை விட பெண்களுக்கு கூடுதலாக காணப்படுகிறது. மூட்டு தேய்மானம் போன்ற அறிகுறிகள் தென்படும். எனவே மருத்துவர் மூலம் சரியான காரணம் கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.

    பெண்கள் பரம்பரை, மற்ற மூட்டு பிரச்சினைகள், இவைகள் இதற்கு கூடுதல் காரணமாக அமைகின்றன. சில வித்தியாசமான அறிகுறிகளும் தென்படலாம். மூட்டுகளில் இறுக்கம், சிறுநீர் செல்வதில் கட்டுப்படுத்த இயலாமை, வயிறு பாதிப்பு, சருமவலி, கை கால்களில் குறுகுறுப்பு, மூக்கு, கண், வாயில் வறட்சி, குளிர், வெப்பம் சிறிதளவும் தாங்க இயலாமை. கவனம் செலுத்த முடியாமல் எரிச்சல் அடைதல் போன்றவை அந்த அறிகுறிகள் ஆகும்.

    மருத்துவர் ரத்த பரிசோதனை செய்வார். ஹார்மோன் மாற்றங்களை அறிந்து சிகிச்சை அளிப்பார். உடற்பயிற்சி, யோகா, மனசோர்வு, மன அழுத்தம் நீங்க பயிற்சிகள், மருந்துகள் என்று சிகிச்சை வழங்கப்படும்.

    நார்ச்சத்து நிறைந்த உணவு, பச்சை காய்கறிகள், பழங்கள், மனநலத்திற்காக பிடித்த பொழுதுபோக்கு என வாழ்க்கை முறையினை மாற்றிக்கொள்ள வேண்டும். உணவில் வைட்டமின் ஏ, சி, டி, இ மற்றும் கால்சியம், மக்னீசியம், செலினியம், சிங்க் சத்துக்கள் நிறைந்து இருக்க வேண்டும். பீட்ரூட், பசலை இவை நல்ல பலன் தரும்.

    Next Story
    ×