என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஜெர்மனியில் விசித்திர பியர் திருவிழா
- பியர் குடிப்பது ஒரு கலாச்சார அடையாளம்.
- ஊர்வலம் மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடக்கும்.
ஜெர்மனியின் பவேரியத்தலைநகரமான மியூனிக்கில் கொண்டாடப்படும் இந்த அக்டோபர்பெஸ்ட் (Oktoberfest) லிட்டர் லிட்டராக பியர் குடிப்பதைத்தான் முதன்மைப்படுத்துகிறது!
"என்னது சாராயம் குடிக்க திருவிழாவா?"
"ஆமாம்யா! இப்ப என்னங்கிறீரு" என்கிறார்கள் இந்த ஊர் மக்கள்!
நம் ஊர் டாஸ்மாக்கில் போல 'மட்டையாவதற்கோ அல்லது "என்னப்பிடிக்கலைன்னுட்டா மச்சி! அவளப்போட்டுத் தள்ளிடணும்னுதான் சரக்கடிக்கறேன்" என்று புலம்புவதற்கோ இல்லை.
இங்கே பியர் குடிப்பது ஒரு கலாச்சார அடையாளம். அதுவும் இந்த அக்டோபர்பெஸ்ட் என்னும் திருவிழா 1810-ம் ஆண்டு பவேரிய மன்னர் லுட்விக், சாக்சே ஆல்டென்பர்க் என்னும் சிறிய ஜெர்மன் பிரதேசத்தின் இளவரசி தெரெசாவைத்திருமணம் புரிந்துகொண்ட சமயத்தில் தொடங்கப்பட்ட கோலாகலம்.
தம் மன்னரின் திருமண வைபவத்தை பிரஜைகளும் கொண்டாடவேண்டும் என்பதற்காக மியூனிக்கின் வயல் வெளிகளில் மக்களின் கொண்டாட்டமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அக்டோபர்பெஸ்ட் கடந்த இருநூத்திச்சொச்ச வருடங்களில் பல வடிவங்கள் மாறினாலும் இன்றும் உலகத்திலேயே மிக அதிக மக்கள் ஒன்று கூடிக்கொண்டாடும் விழாவாக கருதப்படுகிறது. நகரமயமாக்கப்பட்டபின் இந்த விழாவுக்கென்றே ஒரு பெருந்திடல் அமைக்கப்பட்டு அதற்கு தெரெசா பசும்புல் வெளி என்றும் சுருக்கமாக ஜெர்மானிய மொழியில் வைசென் என்றும் சொல்கிறார்கள்.
2018 செப்டம்பரில் இந்த விழா தொடங்கிய நாளன்று காலை மேகமூட்டத்துடன் இன்றைய சீதோஷ்ணம் காற்று மழை என்றது கூகிளின் அலெக்சா. ஸ்வெட்டர் மாட்டிக்கொண்டு பார்க்க கிளம்பிவிட்டேன். மரீன் பிளட்ஸ் என்னும், மிக அழகான பவுண்டன் பன்னீர்த்தூவும் அந்த ராஜபாட்டையில் நடுவில் ஒரு நல்ல இடத்தைப்பிடித்துக்கொண்டேன். சரியாக பத்து மணிக்கு ஊர்வலம் நான் இருந்த பாட்டையில் வந்து முன்னேறியது.
கோலாகலமாக வயதானவர்களும், பெண்களும் கட்டுமஸ்து இளைஞர்களும் சின்னப்பையன்களும் சிறுமியரும் சம்பிரதாய உடையில் கையில் அவரவர் ஊர்களின் விசேஷ சாமக்கிரியைகளுடன் (ஒரு சிலர் மிகப்பெரிய கத்தி, துருப்பிடிக்காத 18-ம் நூற்றாண்டுத்துப்பாக்கி, பதப்படுத்தப்பட்ட செம்மறி ஆட்டை குச்சியில் தலை கீழாகக்கட்டி, கொத்துக்கொத்தாய் மலர்ப்பந்துகள் அடுக்கி என வர்ஜ்யா வர்ஜ்யமில்லாமல்) ஊர்வலம் வருகிறார்கள்.
இந்த ஊர்வலத்தின் ஸ்பெஷல் அவர்களின் உடைகள் தாம். பவேரிய உடைகளான டிரெண்டல் என்னும் உடையைப்பெண்கள் அணிகிறார்கள். இது மூன்று பீஸ் கொண்ட உடை – பாவாடை, பிளவ்ஸ் மற்றும் ஏப்ரன் எனப்படும் கவசம் போன்ற மார்புப்பகுதி உடை. ஆண்கள் லெதர்ஹோசென் என்னும் தோலிலானா அரை டிராயர் மற்றும் நம் ஊரில் அந்தக்காலத்தில் எலிமெண்டரி பள்ளிப்பிள்ளைகள் போட்டுக்கொள்ளும் டிராயர் பட்டி, மேலே இறுக்கமான சட்டை.
ஜெயராமன் ரகுநாதன்
ஒரு காலத்தில் இந்த டிரெண்டல் உடை பாரில் மற்றும் எடுபிடி வேலை செய்யும் பெண்களின் உடையாக இருந்து வந்தது. அதே போல குதிரை லாயங்களில் வேலை செய்யும் ஆண்களின் உடை இந்த லெதர்ஹோசென்! ஆனால் ஆஸ்திரிய மன்னர் பிரான்ஸ் ஜோசெப் (தன் திருமணத்துக்குப்போகும் வழியில் எதேச்சையாகப்பார்த்து, "அண்ணலும் நோக்கி அவளும் நோக்கி"யதால் மையல் கொண்டுவிட்ட சிஸ்சி என்னும் பவேரிய சாதாரணவளைப் பிடிவாதமாகத் திருமணம் செய்து கொண்டவர்!) இந்த வித உடையை அணிந்து அதற்கு பெரும் கவுரவத்தை ஏற்படுத்திவிட்டார்.
சம்பிரதாயமாகத்தொடங்கப்பெறும் இந்த அக்டோபர்பெஸ்ட் முதலில் பலவித மாநிலங்கள் மற்றும் பியர் கம்பெனிகளின் சார்பில் அலங்கார வண்டிகள், அவற்றின் பின்னே தெரெசா மைதானத்தில் பணி புரியவரும் பெண்கள், காவல் காக்க வரும் ஆண்கள் என அனைவரும் அவரவர்களின் கலாச்சார உடையலங்காரங்களுடன் பெரும் ஊர்வலமாக வருகின்றனர். சாலையின் இருபுறமும் மக்கள் கூடி ஆரவாரம் செய்ய மறு ஆரவாரம் செய்து உற்சாக மூட்டுகிறார்கள். நான் கூட துப்பாக்கி ஏந்தி வந்த ஒரு ஆசாமியைப்பார்த்து கையை ஆட்டி வைத்தேன். அவர் என்னைக்கவனிக்காமல் எனக்குப்பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஜப்பானியப் பெண்ணைப் பார்த்து சிரித்தார்!
குரூப் குரூப்பாகப்போகும் இந்த ஊர்வலத்தில் கிட்டத்தட்ட 90-100 குரூப்புக்கள் ஊர்வலம் போகுமாம். அவர்களின் உற்சாகம், தம் நாட்டின் பாரம்பரியத்தில் கலந்துகொள்ளும் பெருமிதம், வயது வித்தியாசமின்றி மழைத்தூறலையும் பொருட்படுத்தாத அழகான தாத்தாக்களூம் பாட்டிகளும் குழந்தைகள் மாதிரிச்சிரித்துக்கைகளை வீசி ஆட்டிக்கொண்டு போகும் குதூகலம் நிச்சயம் ரசிக்கப்படவேண்டிய ஒன்று. இந்த ஊர்வலம் மிகப்பெரிய ஒற்றுமை ஊக்கி என்பதில் சந்தேகமில்லை.
காலை 9 மணியளவில் தொடங்கும் இந்த ஊர்வலம் மியூனிக்கின் முக்கிய ராஜ பாட்டையின் வழியாகச்சென்று தெரெசாப்பசும்புல்வெளியை சுமார் 12 மணியளவில் அடைகின்றது. அங்கே மியூனிக்கின் மேயர் ஒரு அடையாள சுத்தியுடன் முதல் பியர் பீப்பாயைத்தட்டி உடைத்து பியரை வழிய விட்டு முதல் ஒரு லிட்டர் பியர் கோப்பையை பவேரிய மாநிலத்தின் தலைவருக்கு அளிக்க ஆரவாரமாகத்தொடங்குகிறது இந்த அக்டோபர்பெஸ்ட் என்னும் பியர் திருவிழா. ஒவ்வொரு வருடமும் மேயருக்கு எத்தனை சுத்தியல் அடி தேவைப்படுகிறது என்பது பற்றி பெட் எல்லாம் கட்டுகிறார்கள்! இதில் ரிகார்ட் வைத்திருப்பவர் தாமஸ் விம்மர் என்னும் மேயர் – 1950ஆம் ஆண்டு இவருக்கு முதல் பீப்பாயை உடைக்க 19 சுத்தியல் அடி தேவைப்பட்டதாம்! மூன்றே அடிகளில் உடைத்த மேயர்களும் உண்டு!
தெரெசாப்பசும்புல் வெளியில் இந்த அக்டோபர்பெஸ்டிவலின் போது தரப்படும் பியர் வேறெப்போதும் கிடைக்காதாம்! இன்னும் இரண்டு நாளில் அந்த தெரெசாபசும்புல்வெளியில் போய் அக்டோபர்பெஸ்டின் கோலாகலத்தைப்பார்த்துவிட்டு வரும் வாரம் எழுதுகிறேன்.
ராஜபாட்டையில் ஊர்வலம் நடந்தது என்று சொன்னேனே, அதற்காக டிராபிக்கை முழுமையும் நிறுத்தி சாலையை துப்புரவாகத்துடைத்துவிட்டிருந்தார்கள். ஊர்வலம் மட்டுமே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நடக்கும். இந்த ராஜபாட்டையில் டிராபிக் விளக்குகள் மட்டும் எப்போதும் போல இம்மி பிசகாமல் சிவப்பு ஆரஞ்சு பச்சை என்று குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாமல் ஒளிர்ந்துகொண்டிருந்த டிசிப்ளினில் நமக்கு ஒரு படிப்பினை இருக்கிறது என்பேன்!






