search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சிறுநீரக தொற்றாலும் முதுகுவலி வரலாம்- டாக்டர் சவுந்தரராஜன்
    X

    டாக்டர் சவுந்தரராஜன்


    சிறுநீரக தொற்றாலும் முதுகுவலி வரலாம்- டாக்டர் சவுந்தரராஜன்

    • பெண்களை பொறுத்தவரை பிரசவத்துக்கு பிறகு முதுகு வலி வரும். அதை இலகுவான உடற்பயிற்சிகள், யோகா மூலம் சரி செய்ய முடியும்.
    • உடல் பருமனாலும் முதுகு வலி வரும். அதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்தால் போதும்.

    நாற்காலியில் ஹாயாகத்தான் அமர்ந்து இருப்பார்கள். அதை விட்டு எழும்பும்போது அவர் நெழிந்து சிரமப்படுவதை பார்த்தே பக்கத்தி்ல் இருப்பவர்கள் கேட்பார் என்ன முதுகு வலியா? என்று.

    முதுகு வலி... பெரும்பாலானவர்களிடம் காணப்படும் ஒரு வியாதிபோலவே ஆகிவிட்டது. யாரை பார்த்தாலும் முதுகுவலி தாங்கமுடியவில்லை என்று பேசுவதை கேட்டிருக்க முடியும். ஆண்-பெண் இரு பாலரிடமும் இந்த பிரச்சினை இருக்கிறது.

    முதுகுவலி தானோ என்று சாதாரணமாகவும் எடுத்துக்கொள்ள முடியாது.

    முதுமையில் எலும்பு தேய்மானத்தில் முதுகுவலி ஏற்படலாம். நமது உடல் அமைப்புகள் வைத்து கட்டிடம் கட்டுவதுபோல் தான். ஒவ்வொரு செங்கலுக்கும் இடையே பிடிமானத்திற்காக சிமெண்டு போட்டு கட்டப்படும். அதே போலத்தான் முதுகு தண்டுவடமும் இயற்கையாகவே அமைந்துள்ளது.

    இதில் தேய்மானம் ஏற்படுவது, 'டிஸ்க்' பிறள்வதால் கடுமையான வலி ஏற்படும்.

    நான் தஞ்சாவூரில் பணியாற்றிய போது அங்குள்ள டவுன்பஸ் நிலையம் அருகில் ஒரு ஓ.பி. இருந்தது. காலையில் மார்க்கெட்டுக்கு வரும் பெண் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் முதுகு வலிக்காகவே மருந்து வாங்க வருவார்கள். அதற்காக நீண்ட வரிசையில் காத்து நிற்பார்கள். ஒரு குறிப்பிட்ட பஸ் வந்ததும் அதில் பாதிபேர் பஸ்சுக்காக ஓடுவார்கள்.

    அதற்காகவே முன்கூட்டியே மருந்து சீட்டு தயார் செய்து வைத்திருப்போம். சாதாரண வலி, கடுமையான வலி ஆகியவற்றுக்கு தகுந்தவாறு மாத்திரைகள் கொடுப்போம்.

    இதை சொல்வதற்கு காரணம் அந்த அளவுக்கு முதுகுவலியால் அவதிப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். கடுமையான உழைப்பால் எலும்பு தேய்மானம் ஏற்பட்டு வலி வரலாம்.

    அதனால் தான் கிராமங்களில் பனைமர கயிற்று கட்டிலில் தூங்குவார்கள். அது வலியை கட்டுப்படுத்தும். இப்போதைய நகர வாழ்க்கையில் கயிற்றுக் கட்டிலை பார்க்க முடியாது. மரக்கட்டில் அல்லது தரையில் வெறும் விரிப்பை மட்டும் விரித்து படுங்கள். மெத்தையில் படுப்பதை தவிருங்கள். முதுகு வலியை தவிர்க்கலாம்.

    பெண்களை பொறுத்தவரை பிரசவத்துக்கு பிறகு முதுகு வலி வரும். அதை இலகுவான உடற்பயிற்சிகள், யோகா மூலம் சரி செய்ய முடியும்.


    உடல் பருமனாலும் முதுகு வலி வரும். அதற்கு உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்தால் போதும்.

    பகல் நேரம் நீண்ட நேரம் அலுவலகத்தில் நாற்காலியில் அமர்ந்து சிலர் வேலை பார்க்கலாம். அப்போது முதுகுக்கு சிறு தலையைணை வைத்துக் கொள்வது, அடிக்கடி எழுந்து நடமாடுவது போன்ற பழக்கங்களை கடை பிடித்தால் போதும்.

    கிராமங்களில் விளக்கெண்ணெய், நல்லெண்ணெய் போட்டு முதுகை தேய்த்து விடுவார்கள். சாதாரண வலிகள் அந்த மாதிரி பாட்டி வைத்தியத்திலும் சரியாகிவிடும்.

    ஆனால் சாதாரண முதுகு வலிதானே என்று மாத கணக்கில் வலி நிவாரண மாத்திரைகளை சுயமாக வாங்கி சாப்பிட்டு வருவது சிறுநீரகத்தை சிதைத்து விடும்.

    நாள்பட்ட சிறுநீரக தொற்றுகூட முதுகு வலியை ஏற்படுத்தி இருக்கலாம். எலும்பு புற்று நோய் கூட வலியை ஏற்படுத்தி இருக்கலாம்.

    எனவே நாள்பட்ட முதுகுவலி என்றாலும் மருத்துவர்களின் ஆலோசனை அவசியம். சிலர் சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ.ஸ்கேன் எல்லாம் பார்த்தும் எதுவும் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். ஆனால் முதுகு வலி மட்டு்ம் குறையமாட்டேங்குது என்பார்கள்.

    சிறுநீரக கற்களால் கூட வலி வரலாம். ஸ்கேன்களுக்கு தெரியாத கற்கள் சாதாரண பிளேன் எக்ஸ்ரேயில் தெரியும். அந்த மாதிரி பல அனுபவங்கள் உள்ளது.

    சிலருக்கு நவீன பரிசோதனைகளில் தெரியாது. சாதாரண சிறுநீர், ரத்த பரிசோதனையில் கிரியேட்டின் அளவு அதிகமாக இருப்பதன் மூலம் தெரியவரும். அதன்பிறகு முறையான சிகிச்சை அளித்து சிறுநீரகத்தை பாதுகாப்போம்.

    நவீன விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு சிலர் கூகுள் தேடல் மூலம் இணையதளங்களில் தேடி தனக்குத் தானோ சுயமாக சிகிச்சை எடுத்து கொள்வதும் உண்டு. அது ஆபத்தை ஏற்படுத்தி விடும். ஒரு முறை நான் கனடாவில் மேல் படிப்பு படித்து பயிற்சியில் இருந்த போது கிரேக்க நாட்டு மூத்த மருத்துவ பேராசிரியரிடம் பயிற்சி பெற்றேன். ஒரு நாள் ஒரு நோயாளியை வைத்து அந்த பேராசிரியர் அங்கிருந்த மாணவர்கள் அனைவரிடமும் சில விவரங்களை கேட்டார். இந்தியாவில் இருந்து அப்போது நான் மட்டும் தான் அந்த குழுவில் இருந்தேன். மற்றவர்கள் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்த வெள்ளைக்காரர்கள். நான் மட்டும் தான் அவர்களில் கருப்பு. அன்று அவர் கேட்டது வேறொன்றும் இல்லை. அந்த நோயாளியின் கால் மூட்டு வீங்கி இருந்தது. அந்த மூட்டுக்குள் செப்டிக் ஆகி இருக்கிறதா? சீழ் எதுவும் இருக்கிறதா? என்பதை எப்படி கண்டுபிடிப்பீர்கள் என்பது தான் அவரது கேள்வி.

    அப்போது மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலாக சொல்லிக்கொண்டு இருந்தார்கள். சிலர் எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்கலாம் என்றார்கள். சிலர் ஸ்கேன் செய்து கண்டுபிடிக்கலாம் என்றார்கள். இப்படி ஆளுக்கொரு பதிலை சொன்னபோது அவர் என்னை அழைத்து ராஜன் உனது முடிவு என்ன என்றார். நான் அந்த நோயாளியின் கால்களை பார்த்து மூட்டு பகுதியை தொட்டு நன்றாக அழுத்தி பார்த்து விட்டு உள்ளே நீர் கட்டி இருக்கிறது என்றேன். உடனே அவர் கேட்டார். எப்படி கண்டுப்பிடித்தாய் என்று. நான் தொட்டு பார்த்து தான் கண்டுபிடித்தேன் என்றேன். அவர் என்னை வெகுவாக பாராட்டினார். நான் சொன்னது போலவே அந்த நோயாளியின் கால் மூட்டில் ஊசி போட்டு நீரை வெளியே எடுத்தார்கள்.

    மருத்துவ அறிவை இப்படி தான் வளர்த்துக்கொள்ள வேண்டும். புகழ் பெற்ற நீதிபதி ஒருவர் சிறுநீரக பிரச்சினை என்பதை புரிந்து கொள்ள முடியாமல் ஏமாந்த சம்பவமும் நடந்தது. அந்த நீதிபதி இரவில் வீட்டில் நன்றாகத்தான் தூங்கி இருக்கிறார். காலை வரை பிரச்சினை இல்லாமல் தூங்குவாராம். காலையில் எழுந்து கோர்ட்டுக்கு செல்வார். கோர்ட்டு வழக்குகள் நடந்து கொண்டு இருக்கும் போது சில நேரங்களில் தூங்கி விடுவாராம். அவரை அறியாமல் தூக்கம் அவரது கண்களை தழுவி இருக்கிறது. இப்படி அடிக்கடி நடந்து இருக்கிறது. அதை உதவியாளர் அந்த நீதிபதியின் மனைவியிடம் சொல்லி கவலை பட்டு உள்ளார். அதை கேட்ட நீதிபதியின் மனைவியும் கவலை பட்டுள்ளார். ஏன் இவரை இப்படி தூக்கம் துரத்துகிறது. இரவு நன்றாகத்தான் ஓய்வெடுக்கிறார். அப்படி இருந்தும் அவரால் எப்படி தூக்கத்தை கட்டுப்படுத்தாமல் போகிறது என்று வேதனைப்பட்டுள்ளார்.

    ஆனால் யாராலும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. ஒரு நாள் இரவு காரில் என் வீட்டுக்கு வந்தார்கள். சுற்றி ஆயுத போலீசார் பாதுகாப்புடன் என் வீட்டுக்கு நீதிபதி வந்ததும் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. உடனே அவரை வீட்டில் வரவேற்று அழைத்து விவரம் கேட்டேன். அப்போது அவரது மனைவி தான் எல்லா விஷயங்களையும் தெளிவாக சொன்னார். காலையில் உடற்பயிற்சி செய்கிறார். இரவில் சரியான நேரத்திற்கு தூங்க சென்று விடுவார். காலை வரை நன்றாக தூங்குகிறார். அவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. லேசான ரத்த அழுத்தமும் இருக்கிறது. அதற்கு முறையாக மருந்து சாப்பிட்டு கட்டுப்பாட்டில் தான் வைத்திருக்கிறார் என்று தெளிவு படுத்தினார்.

    எல்லாவற்றையும் சேர்த்து வைத்து நான் ஒரு முடிவுக்கு வந்தேன். அவரிடம் இன்னொரு பரிசோதனை நாளை செய்து விட்டு வாருங்கள் என்றேன். அந்த பரிசோதனை செய்து வந்த போது தான் அவருக்கு கிரியேட்டின் அளவு அதிகமாக இருந்ததை கண்டுபிடித்தேன். அதாவது சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணம் இதுதான். அதை சொன்னதும் அவருக்கும், தாங்க முடியாத அதிர்ச்சி. எப்படி எந்த மருத்துவரும் இதை கண்டுபிடிக்க முடியவில்லையே. மருத்துவர்களும் ஏமாந்து போனார்களே என்றார். அதன் பிறகு அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியது ஆயிற்று.

    அதனால் தான் இப்போது எல்லா நோய்களுக்குமே சிகிச்சைக்கு வரும் போது சிறுநீர் பரிசோதனையையும் தவறாமல் செய்து வரவேண்டும் என்று நாங்கள் சொல்வது உண்டு. இதய நோய்க்கு வந்தால் சிறுநீரகத்தையும் அவசியம் பார்க்க வேண்டும்.

    சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளின் உணவு முறை

    காலை 6 மணி:- பால் அல்லது காபி-7.5 மி.மீ., அரிசி இட்லி - 4 அல்லது தோசை - 2, இடியாப்பம், பொங்கல், அரிசிப்புட்டு, அரிசிக்கஞ்சி, ரவை உப்புமா - 150 கிராம், முட்டை (வெள்ளைக்கரு மட்டும்) - 1.

    மதிய உணவு 12 மணி:- சாம்பார் சாதம் (2 கப்) - 60 கிராம், சாம்பார் - 75 மி.லி, ரசம் - 75 மி.லி., காய் - சமைத்த கீரை - 100 கிராம், மீன் அல்லது கோழி - 50 கிராம், தயிர் அல்லது மோர் - 100 மி.லி.

    மாலை 4 மணி:- காபி அல்லது பால்-100 மி.லி, மாரி பிஸ்கட் - 3. இரவு 7.30 மணி:- பால் - 150 மி.லி.

    Next Story
    ×