search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    சென்னை மாகாணம் மாறி தமிழ்நாடு என பெயர் சூட்டிய பொன்னாள் இன்று
    X

    சென்னை மாகாணம் மாறி 'தமிழ்நாடு' என பெயர் சூட்டிய பொன்னாள் இன்று

    • பரந்து விரிந்த நமது தமிழ் நிலமும், இனமும் மிக நீண்ட வரலாறு கொண்டது.
    • ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் அதாவது சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்தது.

    இந்தியாவில் எந்த மாநிலத்துக்கும் இல்லாத பெருமை தமிழ்நாட்டின் பெயருக்கு உண்டு. எந்த மாநிலத்துக்கும் 'நாடு' என்ற பெயர் இருக்காது.

    அத்தகைய பெருமைக்குரிய பெயர் சூட்டப்பட்ட நாள்தான் இன்று. இந்த நாளையும் அதன் வரலாற்றையும் தமிழர்கள் அறிந்து கொள்ள வேண்டும். நினைவில் கொள்ள வேண்டும்.

    பரந்து விரிந்த நமது தமிழ் நிலமும், இனமும் மிக நீண்ட வரலாறு கொண்டது. எத்தனையோ மன்னர்கள் ஆண்ட பூமி. வளர்த்த தமிழ்-கலாசாரம்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் அதாவது சென்னை மாகாணம் என்ற பெயரில் இருந்தது. அப்போது ஆந்திரா, கேரளா மாநிலங்களும் ஒன்றிணைந்து இருந்தது.

    நாடு சுதந்திரம் பெற்ற பிறகு மொழி வாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. 1956-ல் மாநில எல்லைகளை மறுவரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் சென்னை மாகாணத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவுக்கும், கர்நாடகாவுக்கும் பிரிந்து சென்றன. வட பகுதி ஆந்திர மாநிலத்துக்கு சென்றது. எஞ்சிய நிலப்பகுதி சென்னை மாநிலம் என்று அழைக்கப்பட்டது.

    சென்னை மாநிலம் என்ற பெயரை மாற்றி தமிழ்நாடு என்று பெயர் சூட்ட வலியுறுத்தி காங்கிரசை சேர்ந்த சங்கர லிங்கனார் 1957-ல் சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கினார். போராட்டம் தொடங்கிய 76-வது நாளில் அவர் உயிர் துறந்தார். அதன் பிறகு இந்த போராட்டம் தீவிரம் அடைந்தது.

    1967-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வந்ததும் தமிழ்நாடு என்று பெயர் சூட்ட முடிவெடுத்தது. அதே ஆண்டில் ஜூலை 18-ந்தேதி அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை தமிழ்நாடு என்று பெயர் சூட்டும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்தார். அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேறியது.

    இதையடுத்து அண்ணா எழுந்து, "தமிழ்நாடு என்ற பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றிய வரலாற்று சிறப்புமிக்க இந்த நன்னாளில் தமிழ்நாடு வாழ்க என்று நாம் வாழ்த்துவோம்" என்று கூறி விட்டு அவர் "தமிழ்நாடு" என்று மூன்று முறை குரல் எழுப்பினார். சபையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் பதிலுக்கு "வாழ்க" என்று 3 முறை குரல் எழுப்பினார்கள்.

    ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநில தினத்தை கொண்டாடி வரும் நிலையில் தமிழக தினமும் கொண்டாடப்பட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். எல்லைகள் பிரிக்கப்பட்ட நவம்பர் 1-ந்தேதியில் கொண்டாடலாம் என்றும் பெயர் சூட்டப்பட்ட நாளில் கொண்டாடலாம் என்றும் இருவேறு கருத்துக்கள் எழுந்தன.

    கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18-ந்தேதியே தமிழ்நாடு தினமாக கொண்டாடப்படும்" என்று அறிவித்தார்.

    Next Story
    ×