என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தமிழ் போராளி இலக்குவனார்
    X

    தமிழ் போராளி இலக்குவனார்

    • திருவாரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்குவனாரிடம் 9, 10-ம் வகுப்புகளில் படித்த மாணவர்தான் கலைஞர் மு.கருணாநிதி.
    • ஆராய்ச்சி உலகிலும் இலக்குவனார் ஒரு போராளியாக விளங்கினார்.

    இன்று (நவம்பர் 17-ந் தேதி) தமிழறிஞர் இலக்குவனார் பிறந்த தினம். மொழிப்போர் தியாகி, செந்தமிழ் மாமணி என புகழப்படும் பேராசிரியர் இலக்குவனார் தமிழறிஞர்கள் வரிசையில் தனித்தன்மையானவர்.

    கல்லூரி பேராசிரியர்

    இலக்குவனார் திருவாரூர் மாவட்டம் வாய் மேடு கிராமத்தில் 17-11-1910 அன்று பிறந்தார். பெற்றோர் சிங்காரவேலர்-ரத்தினம். திருவையாறு அரசர் கல்லூரியில் புலவர் பட்டத்துக்கு படித்து ஆசிரியராக தம் வாழ்க்கையைத் தொடங்கி, கல்லூரி பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியவர். தமிழ் ஆட்சி மொழியாக வேண்டும், பாட மொழியாக வேண்டும் என பல போராட்டங்களை நடத்தி அதன் விளைவாக இருமுறை சிறைப்பட்டவர். இந்தியாவில் ஒரு மொழியின் உரிமைக்காக போராடி சிறை சென்ற ஒரே பேராசிரியர் சி.இலக்குவனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தி எதிர்ப்பு போராட்டம் எதிரொலியாக கைதாகி சிறைப்பட்டார். இதன் விளைவாக தான் வகித்து வந்த கல்லூரி பேராசிரியர் பணியை அவர் இழக்க நேரிட்டது.

    இவரது அஞ்சா நெஞ்சமும், தன்மான உணர்ச்சியும் எவ்விடத்திலும் இவர் தொடர்ந்து பணிபுரிய இடம் அளிக்கவில்லை. 1967-ல் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் அறிஞர் அண்ணா மீண்டும் இலக்குவனாருக்கு பணி புரியும் வாய்ப்பினை வழங்கினார். சென்னை மாநில கல்லூரியில் தலைமை தமிழ் பேராசிரியராக பணி புரிந்தார். இங்கும் ஓராண்டுக்கு மேல் அப்பணியில் நீடிக்க முடியவில்லை.

    கோயம்புத்தூரில் தமிழாசிரியர் மாநில மாநாட்டில் பேசிய கல்வி அமைச்சர் தமிழ் பாடமொழியாவதற்கு பல ஆண்டுகள் ஆகும் என்று கூறியதை கேட்டு அந்த மேடையிலேயே அமைச்சர் அவ்வாறு பேசியது தவறு என்று சுட்டிக்காட்டினார். தமிழில் காவலராக நீங்கள் இருப்பீர்கள் என்று மக்கள் உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளார்கள். நீங்கள் ஆங்கிலத்தின் காவலராக மாறலாமா என அவர் கேட்ட கேள்வி அந்த காலத்தில் தமிழ் நாடெங்கும் பரபரப்பாக பேசப்பட்டது.

    பி.ஏ.ஆனர்ஸ் எனும் படிப்பு மாறி எம்.ஏ. படிப்பு அறிமுகமானபோது தமிழ் பாடத்தை எடுத்துவிடலாம் என 1959-ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினர் முடிவு செய்தனர். அப்படி தமிழ் பாடத்தை நீக்குவது தவறு என ஒரு கூட்டத்தில் பேசினார். அப்போது அங்கு வந்து இருந்த செட்டிநாட்டு அரசர் முத்தையா செட்டியார் தமிழ் படித்து பலர் வேலை தேடி திண்டாடுகிறார்கள். எனவே இந்த முடிவு எனது முடிவே என்று கூறியுள்ளார். அரசர் முடிவு என்று தெரிந்தும் இலக்குவனார் விடவில்லை. "உங்கள் தந்தையார் அண்ணாமலை அரசர் இந்த நிறுவனத்தை தமிழுக்கு முதன்மை அளிக்கவே தொடங்கியதாக கூறினாரே? நீங்கள் உங்கள் தந்தையார் போலவே தமிழைப் போற்ற வேண்டாமா என்று அரசரையே கேட்கவும் அரசர் தமது வாதத்தை கைவிட்டு இனி எப்போதும் என் பல்கலைக்கழகம் தமிழுக்கு முதன்மையளிக்கும்" என்று கூறினார். மிகத்துணிச்சலாக அரசருடன் வாதாடி தமிழ் படிப்பு தொடங்கி வழிவகுத்த இலக்குவனாரை அனைவரும் பாராட்டினர்.

    கருணாநிதியின் ஆசிரியர்

    இலக்குவனாரின் இந்த போராட்ட குணம் பல போராளிகளை உருவாக்க வழி வகுத்தது. திருவாரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அவரிடம் 9, 10-ம் வகுப்புகளில் படித்த மாணவர் தான் கலைஞர் மு.கருணாநிதி. அதன் பின்னர் அவர் திருநெல்வேலி மா.தி.தா இந்து கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியபோது அவரிடம் இரண்டு ஆண்டுகள் படித்த மாணவர் தான் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலைவர் இரா.நல்லக்கண்ணு. மதுரை தியாகராஜர் கல்லூரியில் அவர் பேராசிரியராக பணியாற்றியபோது அவரிடம் படித்த காளிமுத்து, நா.காமராசர் இருவரும் இந்தி ஆட்சி மொழி சட்டத்தை எதிர்த்து சிறை சென்ற போராளிகள். நெஞ்சுக்கு நீதியில் கலைஞர் மு.கருணாநிதி, "அவர் மாணவர்களை உருவாக்கினார் என்பதை விட தமிழ் உரிமைக்கான போராளிகளை உருவாக்கினார் என்பதே பொருந்தும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

    ஆராய்ச்சி உலகிலும் இலக்குவனார் ஒரு போராளியாக விளங்கினார். தொல்காப்பியம் பற்றிய தமது ஆராய்ச்சியில் 3000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையும், தமிழ்நாடும் கடலால் பிரிக்கப்படவில்லை இணைந்தே இருந்தன என்று குறிப்பிட்டிருந்தார். இந்த ஆராய்ச்சி நூலை மதிப்பிட்டவர்கள் இந்த கருத்தை ஏற்க மறுத்தனர். இலங்கையும், தமிழ்நாடும் இணைந்திருந்தது என்ற கருத்தையும் அதன் அடிப்படையாக கொண்ட கற்பனை நில வரைபடத்தையும் நீக்கினால் தான் பிஎச்.டி பட்டம் வழங்க முடியும் என்று குறிப்பிட்டனர். இலக்குவனார் 37 விளக்கங்களை வழங்கிய பின் அவர்கள் தம் பிடிவாதத்தை தளர்த்தி பட்டம் வழங்க இசைவு தெரிவித்தனர்.

    தொல்காப்பியம்

    தமிழர்களின் தொன்மை வாய்ந்த இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தை ஆங்கில மொழியில் மொழி பெயர்த்த பெருமைக்குரியவர் பேராசிரியர் இலக்குவனார். இந்த நூலை அறிஞர் அண்ணா முதல்வரான பின் போப் ஆண்டவரை சந்தித்தபோது அவருக்கு கொடுத்தார். பழங்கால தமிழரின் பண்பாட்டு சிறப்பையும், நாகரிக பெருமையையும் விளக்கும் காலப்பெட்டகம் இந்த நூல் என தம் கைப்பட அண்ணா எழுதி கொடுத்தார் என்பது இலக்குவனாரின் பெருமைக்கும், புலமைக்கும் சான்றாகும். தமிழ், ஆங்கிலத்தில் பல நூல்களை எழுதியுள்ளார்.

    என்னாளும் தமிழின் எதிர்காலம் பற்றியே சிந்திப்பவர் இலக்குவனார் என்பதால் காலமெல்லாம் தமிழர் பெருமை கூறும் வகையில் பத்திரிகை நடத்தி வந்தார் .

    சங்க இலக்கியம், இலக்கியம், திராவிட கூட்டரசு, குறள்நெறி என்று பல பத்திரிகைகளை நடத்தினார். எனினும் திருக்குறளை பரப்புவதற்காக குறள்நெறி, தமிழ்முனை என்று பல பத்திரிகைகளை நீண்டகாலம் தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தினர். 3.9.1973 அன்று சிறுநீரக கோளாறு காரணமாக தனது 64-வது வயதில் காலமானார். தொல்காப்பியமும், திருக்குறளும் தமிழனின் இருகண்கள் என்பார் இலக்குவனார். ஒவ்வொரு தமிழரும் அவ்வாறு போற்றினால் அதுவே அவருக்கு செய்யும் புகழ் வணக்கமாக அமையும்.

    Next Story
    ×