என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நினைத்ததை நடத்தும் திருச்செந்தூர் முருகன்- திருச்செந்தூர் முருகன் வஸ்திரம் மீது விழுந்த புலவரின் வெற்றிலைச் சாறு!
- முருகன் மீது பாடிய பாடல்களால் புகழ் பெற்ற கந்தசாமி புலவரிடம் ஒரே ஒரு குறை இருந்தது.
- திருச்செந்தூர் முருகன் ஒரே நேரத்தில் கட்டபொம்மன், கந்தசாமி புலவர் இருவரது பக்தியையும் கவுரவித்து உலகுக்கு உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்செந்தூர் முருகன் தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களை ஒருபோதும் கைவிட்டதே இல்லை. நூறு சதவீதம் முழு நம்பிக்கையுடன் இருந்தால் அவன் அருள் நிச்சயமாக கிடைக்கும். இதற்கு உதாரணமாக சொல்ல வேண்டுமானால் கந்தசாமி புலவரை சொல்லலாம்.
இவர் நெல்லை சீமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். நெல்லை அருகே உள்ள முத்தாலங்குறிச்சி என்ற சிறிய கிராமம்தான் இவரது சொந்த ஊராகும். இந்த ஊர் தாமிரபரணி நதிக்கரையோரம் அமைந்திருக்கும் கிராமங்களில் ஒன்றாகும்.
கந்தசாமி புலவர் தீவிர முருகப் பக்தர். முருகனின் பெயரை சொல்லாமல் அவர் எதையும் செய்யவே மாட்டார். எப்போதும் முருகனை பற்றியே அவர் பாடல்களை பாடிக் கொண்டு இருப்பார்.
இதனால் அவரது புகழ் நெல்லை சீமை முழுவதும் பரவி இருந்தது. இவரது பாடல்களை கேட்க வீரபாண்டிய கட்டபொம்மனே பாஞ்சாலங் குறிச்சியில் உள்ள தனது அரண்மனையில் இருந்து குதிரையில் ஏறி முத்தாலங்குறிச்சி கிராமத்துக்கு வந்து விடுவாராம். பல தடவை கட்டபொம்மன் அப்படி வந்ததாக வரலாறு இருக்கிறது.
முருகன் மீது பாடிய பாடல்களால் புகழ் பெற்ற கந்தசாமி புலவரிடம் ஒரே ஒரு குறை இருந்தது. அது அவருக்கு 2 கண்களுமே தெரியாது. பார்வையற்ற அவர் முருகனை தனது மனதுக்குள் நினைத்து நினைத்து பாடல்களை பாடுவது உண்டு. ஒருநாள் கூட அவர் திருச்செந்தூர் முருகனை பற்றி பாடாமல் இருந்ததே கிடையாது.
திருச்செந்தூர் முருகன் எந்த வடிவழகில் இருப்பார் என்பது அவருக்குத் தெரியாது. ஆனாலும் முருகனின் அழகை மற்றவர்கள் சொல்வதை கேட்டு மனதுக்குள் கற்பனைகளை வரவழைத்து அவர் பாடல்கள் பாடுவது தனித்துவம் நிறைந்ததாக இருந்தது.
கந்தசாமி புலவரிடம் இன்னொரு பழக்கமும் இருந்தது. ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை அவர் முத்தாலங்குறிச்சியில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்செந்தூர் முருகன் ஆலயத்துக்கு நடந்தே வந்து விடுவார்.
சாலை வசதிகள் இல்லாத அந்த காலக்கட்டத்தில் கம்பை ஊன்றிக் கொண்டு தட்டு தடுமாறி அவர் திருச்செந்தூர் ஆலயத்துக்கு வந்து விடுவது உண்டு. கடலில் குளித்து விட்டு, ஆலயத்தை ஒரு முறை வலம் வந்து உள்ளே சென்று கருவறை சன்னதி முன்பு நின்று மனமுருக முருகனை பாடுவார்.
மாத கடைசி வெள்ளிக்கிழமைகளில் முருகன் முன்பு நின்று அவர் பாடும் பாடல்களை கேட்க பக்தர்கள் திரண்டு விடுவார்கள். அவர் பாடி முடித்ததும் கருவறை அர்ச்சகர்கள் முருகன் காலடியில் இருந்து பூக்களும், பன்னீர் இலை திருநீரும் பிரசாதங்களும் எடுத்து வந்து அவர் கையை பிடித்து கொடுப்பார்கள்.
முருகன் பிரசாதம் கிடைத்ததும் கந்தசாமி புலவர் திருச்செந்தூர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மீண்டும் முத்தாலங்குறிச்சிக்கு சென்று விடுவார். கடைசி வெள்ளிக்கிழமை தவிர மற்ற நாட்களில் வீட்டில் இருக்கும் போதும் அவர் முருகன் படம் முன்பு அமர்ந்து முருகனைப் பற்றி பாடிக் கொண்டே இருப்பார்.
அவர் திருச்செந்தூர் முருகன் மீது வைத்திருந்த பக்தி முழுமையானது. சிறுதுளி அளவுகூட மாசு மருவற்றது. இதனால்தான் திருச்செந்தூர் முருகனின் கருணை பார்வையை அவர் பெற முடிந்தது. கந்தசாமி புலவருக்கு வெற்றிலை போடும் பழக்கம் இருந்தது. ஒருநாள் அவர் வாய் நிறைய வெற்றிலையை போட்டுக் கொண்டு ரசித்து ருசித்து சுவைத்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவருக்கு முருகனை பாட வேண்டும் என்ற உணர்வு எழுந்தது.
அடுத்த வினாடி திருச்செந்தூர் முருகனை புகழ்ந்து பாடினார். ஆனால் அவர் வாயில் இருந்து வெற்றிலைச் சாறு தெறித்து விழுந்தது. அவர் எச்சிலுடன் வெற்றிலைச் சாறின் ஒரு பகுதி அவர் முன்பு இருந்த முருகன் படம் மீது விழுந்தது.
அதே சமயத்தில் மற்றொரு அதிசயமும் நடந்தது. திருச்செந்தூர் ஆலயத்தின் கருவறையில் உள்ள முருகனின் அலங்கரிக்கப்பட்ட வஸ்திரம் மீது வெற்றிலைச் சாறு விழுந்து இருந்தது. முத்தாலங்குறிச்சியில் கந்தசாமி புலவர் வாயில் இருந்து தெறித்த வெற்றிலைச் சாறு திருச்செந்தூர் முருகன் வஸ்திரம் மீது பட்டு இருந்தது.
அந்த சமயத்தில் பூஜையை செய்து வந்த அர்ச்சகர் முருகன் வஸ்திரத்தில் வெற்றிலை கரையை கண்டதும் பதறி அதிர்ச்சி அடைந்தார். நாம் வெற்றிலை போடவில்லை. வேறு யாரும் கருவறைக்குள் வர மாட்டார்கள். அப்படியானால் முருகன் அணிந்திருக்கும் ஆடை மீது வெற்றிலைச் சாறு எப்படி வந்தது என்று மனதுக்குள் கேள்விகளை கேட்டபடி குமுறினார்.
கடைசியில் இது முருகனின் லீலைகளில் ஒன்றாக இருக்கும். உரிய நேரத்தில் இதற்கான காரணத்தை முருகன் சொல்வார் என்று நினைத்த படி அந்த அர்ச்சகர் பணிகளை முடித்து வீட்டுக்கு சென்று விட்டார். அன்று இரவு அவர் தூங்கிக் கொண்டிருக்கும் போது திருச்செந்தூர் முருகன் கனவில் வந்தார்.
ஒளியில் ஜொலித்த முருகப்பெருமான் அர்ச்சகரைப் பார்த்து, "என்னப்பா.... இன்று எனக்கு நீ பூஜை செய்யும்போது என் ஆடையில் காணப்பட்ட வெற்றிலைச் சாற்றை கண்டு குழம்பிப் போய் விட்டாய் அல்லவா? அதை பார்த்து பயந்து விட்டாயா? பயப்படாதே, நான் சொல்வதை நன்றாக கேள். முத்தாலங்குறிச்சியில் இருந்து மாதந்தோறும் வரும் கந்தசாமி புலவர் பற்றி உனக்கு தெரியும். இரண்டு கண்களும் பார்வை இல்லாத அவனுக்கு நான் பார்வை கொடுக்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த மாதம் கடைசியில் அவன் என்னை பாட வரும்போது நீ ஒன்றை செய்ய வேண்டும்.
கந்தசாமி புலவர் என்னை போற்றி பாடி முடித்ததும் நீ பிரசாதம் கொடுக்க செல்வாய். அப்போது என் கழுத்தில் கிடக்கும் மாலையில் இருந்து ஒரே ஒரு பூவை எடுத்துக் கொண்டு போ. அந்த பூவை கந்தசாமி புலவரின் ஒரு பக்க கண்ணில் மட்டும் வைத்து எடுத்து விடு. அவனுக்கு பார்வை கிடைத்து விடும்" என்றார்.
முருகனின் உத்தரவை கேட்டு மகிழ்ச்சி அடைந்த அர்ச்சகர், "அவருக்கு இன்னொரு கண் பார்வை எப்படி கிடைக்கும்?" என்று கேட்டார். அதற்கு முருகப்பெருமான் பதில் அளிக்கும்போது, "கந்தசாமி புலவருக்கு ஒரு கண்ணில் பார்வை வந்ததும் அவரே உன்னிடம் இன்னொரு கண் பார்வை எப்போது கிடைக்கும் என்று கேட்பார். உடனே நீ பாஞ்சாலங்குறிச்சியில் இருக்கும் கட்டபொம்மன் மன்னர்கள் பரம்பரையில் 46-வது மன்னராக இருக்கும் திக்விஜய கட்டபொம்மனை போய் பார். அவர் மூலம் உனக்கு மற்றொரு கண்ணில் பார்வை கிடைக்கும் என்று சொல். மற்றதை நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார்.
முருகன் இவ்வாறு சொல்லி முடித்த மறுவினாடி கனவு கலைந்தது. அர்ச்சகருக்கு வியர்த்து கொட்டியது. முருகனின் திருவிளையாடலை நினைத்து வியந்து போனார். கடைசி வெள்ளிக்கிழமைக்காக அவர் காத்து கொண்டிருந்தார்.
கடைசி வெள்ளிக்கிழமையும் வந்தது. கந்தசாமி புலவரும் வழக்கம் போல முத்தாலங்குறிச்சியில் இருந்து புறப்பட்டு வந்து கடலில் நீராடி ஆலயத்தை சுற்றி வழிபட்டு கருவறை முன்பு நின்று முருகனை பாடினார். அவர் பாடி முடித்ததும் அர்ச்சகர் முருகன் சொன்னபடி பிரசாதமும், ஒரே ஒரு பூவையும் எடுத்து வந்தார்.
கந்தசாமி புலவரின் ஒரு பக்க கண்ணில் முருகா சரணம்.... முருகா சரணம்... என்று சொன்னபடி பூவை வைத்து விட்டு எடுத்தார். அடுத்த வினாடி கந்தசாமி புலவருக்கு அந்த கண்ணில் பார்வை கிடைத்தது. அவர் மகிழ்ச்சியால் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
கருவறை முருகன் அழகைப் பார்த்தார். ஆனந்த கூத்தாடினார். மேலும் மேலும் புகழ்ந்து பாடினார். மகிழ்ச்சி குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பியதும் அர்ச்சகரை பார்த்து எனக்கு இன்னொரு கண்ணிலும் பார்வையை முருகன் தந்து இருக்கலாமே என்றார்.
உடனே அர்ச்சகர் சிரித்தபடி, "நீ இப்படி கேட்பாய் என்று முருகன் ஏற்கனவே என்னிடம் சொல்லி இருக்கிறான். நீ பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்று திக்விஜய கட்ட பொம்மனை பார். அவன் மூலம் உனக்கு இன்னொரு கண்ணிலும் பார்வை கிடைக்கும் என்று முருகன் கூறி இருக்கிறான்" என்றார்.
கந்தசாமி புலவருக்கு இதை கேட்டதும் மேலும் ஆச்சரியமாக இருந்தது. திருச்செந்தூரில் இருந்து புறப்பட்டு பாஞ்சாலங்குறிச்சிக்கு சென்றார். அங்கு அரண்மனையில் திக் விஜய கட்டபொம்மனை சந்தித்தார். கட்டபொம்மன் அவரை வரவேற்று ஆசனத்தில் அமர செய்து என்ன விசயமாக வந்திருக்கிறீர்கள் என்று கேட்டான்.
கந்தசாமி புலவர் திருச்செந்தூர் ஆலயத்தில் தனக்கு முருகன் அருளால் ஒரு கண் பார்வை கிடைத்த அற்புதத்தை எடுத்துக் கூறினார். இன்னொரு கண் பார்வை உன் மூலம் கிடைக்கும் என்று முருகன் உத்தரவிட்டிருக்கிறார். எனவேதான் உன்னைத் தேடி வந்திருக்கிறேன் என்றார்.
இதை கேட்டதும் திக்விஜய கட்டபொம்மனுக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமுமாக இருந்தது. திருச்செந்தூர் முருகன்தான் உன்னை அனுப்பி வைத்தாரா? என்று கண்ணீர் மல்க கேட்டான். சரி.... வா போகலாம் என்று கந்தசாமி புலவரை அழைத்துக் கொண்டு தனது குல தெய்வ ஆலயமான ஜக்கம்மாள் ஆலயத்துக்கு நடந்தே சென்றார்.
அப்போது திக்விஜய கட்டபொம்மன் தனது உடைவாளை உருவி கையில் ஏந்தியபடி கம்பீரமாக நடந்து வந்தான். இதைக் கண்டதும் கந்தசாமி புலவருக்கு கோபம் ஏற்பட்டது. கோவிலுக்கு தானே போகிறோம். வாள் எதற்கு? என்று அவர் நினைத்தார். கட்டபொம்மனை பார்த்து, "நீ மன்னன் என்பதால் அகந்தையுடன் நடந்துக் கொள்கிறாய். எதற்காக இப்போது வாளை உருவி கையில் வைத்துக் கொண்டு வருகிறாய்?" என்று கேட்டார். ஆனால் அவரது கேள்விக்கு கட்ட பொம்மன் எந்த பதிலும் சொல்லவில்லை. சிரித்துக் கொண்டே நடந்தார்.
இருவரும் ஜக்கம்மாள் ஆலயத்துக்குள் நுழைந்தனர். அங்கு கட்டபொம்மன் மனமுருகி ஜக்கம்மாளை வணங்கினான். பிறகு ஜக்கம்மாள் கழுத்தில் கிடந்த மாலையில் இருந்து ஒரே ஒரு பூவை மட்டும் எடுத்து கந்தசாமி புலவரின் பார்வை வராத மற்றொரு கண் மீது வைத்து எடுத்தார்.
என்ன ஆச்சரியம்... கந்தசாமி புலவரின் அந்த கண்ணில் இருந்தும் குறைகள் நீங்கி பார்வை தெரிந்தது. கந்தசாமி புலவரும், திக்விஜய கட்ட பொம்மனும் மகிழ்ச்சி கடலில் மிதந்தனர். திருச்செந்தூர் முருகன் உங்களுக்கு பார்வை தருவதற்காக எனக்கு மிகுந்த பாக்கியத்தை கொடுத்து இருக்கிறான் என்று கட்டபொம்மன் உணர்ச்சி பொங்க கூறினார். ஆனால் கந்தசாமி புலவர், "என்னதான் இருந்தாலும் உனக்கு ஆணவம் போகவில்லை. எதற்காக வாளை பிடித்து இருக்கிறாய்? ஆணவம் மிகுந்த உன்னால் எனக்கு கிடைத்த பார்வை வேண்டாம். உன் வாளை தா... என் கண்ணில் குத்திக் கொள்கிறேன்" என்றார்.
இதை கேட்டதும் திக்விஜய கட்டபொம்மன் சிரித்தபடி, "புலவரே என்னை நீங்கள் தவறாக புரிந்து கொண்டிருக்கிறீர்கள். ஒருவேளை உங்களுக்கு பார்வை கிடைக்காமல் போய் இருந்தால் இந்த வாளால் என்னை குத்தி மாய்த்துக் கொள்ள மனதுக்குள் நினைத்திருந்தேன். ஆனால் திருச்செந்தூர் முருகன் உனக்கு அருள்பாலித்து விட்டார்" என்றார்.
கட்டபொம்மனின் இந்த வார்த்தைகளை கேட்டதும் கந்தசாமி புலவர் மெய் சிலிர்த்துப் போனார். "மன்னா... உன் பக்தி எந்த அளவுக்கு உயர்ந்ததாக இருக்கிறது. இது தெரியாமல் நான் பேசி விட்டேன்" என்று மனம் உருகினார். இந்த சம்பவத்தில் திருச்செந்தூர் முருகன் ஒரே நேரத்தில் கட்டபொம்மன், கந்தசாமி புலவர் இருவரது பக்தியையும் கவுரவித்து உலகுக்கு உணர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்ற ஒரு அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.






