என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அர்த்தம் மாறிய பழமொழிகள்: யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்
    X

    அர்த்தம் மாறிய பழமொழிகள்: 'யானைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும்'

    • ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயரும் சொற்கள் எப்போதும் தன் மொழியின் தன்மையையும் மாற்றிக்கொள்ளும்.
    • ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும். இது தான் பழமொழியின் உண்மை வடிவம்.

    அசோக் உன் டைரியிலே குறிச்சி வைச்சிக்கோ,"யானைக்கு ஒரு காலம் வந்தா பூனைக்கு ஒரு காலம் வரும்....". முன்னுச்சியை ஒருதரம் கோதிவிட்டு, தொடையைத் தட்டி ஸ்டைலா தலைவர் பேசுறா மாதிரி கெத்துள்ள ஒரு பழமொழிதான் இது.

    அட என்னப்பா போனதடவை நாய், இந்த தடவை பூனையும் யானையுமா ? ஜமாய்ங்க என்று முதுகு தட்டிப் போகிறது பூனைகளின் பார்வைகள்.

    தேன்தமிழில் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு உவமையும், கருத்தையும் கொண்டு இருக்கும். பழமொழியும் அப்படியே. எனக்கு இன்னொரு பேரு இருக்கு என்பதைப் போலத்தான் அர்த்தங்களும் அதிகம்.

    பத்துபேர் ஒரு அறையில் குழுமி இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஒரு விளையாட்டு. முதல் நபர் காதில் சொல்லும் ரகசிய வார்த்தையை பத்தாவது நபர் சரியாக சொல்ல வேண்டும். ஆனால் அப்படி வர வாய்ப்பே இல்லை. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடம் பெயரும் சொற்கள் எப்போதும் தன் மொழியின் தன்மையையும் மாற்றிக்கொள்ளும்.

    களவாணி படத்தில் ஒரு காட்சி வரும். பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான்னுங்கிற கதைதான். சாதாரண வார்த்தைகளே அப்படியெனில் பழமொழிகள் மனிதர்களின் நண்பர்களைப் போலல்லவா ?

    மாடு கட்டிப் போரடித்தால்

    மாளாது செந்நெல்

    என்று யானை கட்டிப் போரடித்த

    அழகான தென்மதுரை

    என்ற இலக்கியப் பாடல் ஒன்று உண்டு. தற்போது எயந்திரங்கள் கொண்டு நெல்மணிகளை கதிரில் இருந்து பிரிக்கிறார்கள். ஆனால் முன்னோர்கள் அவ்வேலைக்கு மாடுகளையும், அதிக விளைச்சல் நேரங்களில் யானைகளையும் பயன்படுத்தி போரடித்து இருக்கிறார்கள். இந்த போரடித்தல் வார்த்தையும் வாய்மொழியாக மருவி வந்தது தான். சூடடித்தல் தான் காலப்போக்கில் போரடித்தல் ஆனது.

    சங்ககாலம் போல இப்போதும் மதுரையில் அழகர்கோவில் அருகே புலிப்பட்டி கிராமத்தில் சுமதி என்ற யானையைக் கட்டி போரடித்து வருகிறார் மதன் என்னும் பட்டதாரி. மதுரை சுமதி கூகுளிலும் பிரபலம். விஜய் பாடினாமாதிரி கூகுள் பண்ணிப் பாருங்களேன்.

    அறுவடை முடிந்து நெல்லை சேமித்து வைத்ததும் நெல்லை தின்பதற்கு எலிகள் நிறைய வரும். அப்படி வரும் எலிகளை வேட்டையாட பூனைகளை கொண்டு போய் விடுவார்கள்.

    என்ன.. யானைக்கு வரவேற்பு சற்று பலமாக இருக்கும். பூனைகள் நல்லதே செய்தாலும் மறைமுகமாக செய்ய வேண்டியிருக்கும். இது வலியோரின் கரம் எதிலும் ஓங்கி இருப்பதையும் எளியோரின் கரம் நலிந்திருப்பதையும் ஒரு வகையில் குறிக்கிறது.

    பழமொழியின் உண்மையான விளக்கத்திற்குப் போகும் முன் பூனைகளைப் பற்றி ஒரு சிறு குறிப்பு வரையலாம்.

    நம்மாளு ஒரு நாளைக்கு 70 சதவீதம் தூங்கியே பொழுதைக் கழிப்பாங்க, வடிவேலு விடவும் சும்மா இருக்கிறது எத்தனை கஷ்டன்னு ஒரு புக்போடற அளவுக்கு விவரம் கேட்டுக்கலாம். பூனைகளோட வியர்வை உள்ளங்கால் வழியாதான் வெளியேறும். அவற்றின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை உடையது. ஒயிலான நடையை கேட் வாக்னு சொல்லுவாங்க. பெண் பூனைகள் எப்போதும் புதுப்பொண்ணு வீட்டில் வலதுகாலை எடுத்து வைத்து வர்றாமாதிரி வலதுகால் பழக்கம் கொண்டது. பசங்களை சாதாரணமாகவே கணக்கெடுக்க மாட்டோம். ஆனாலும் வரலாறு தப்பா பேசக்கூடாது பாருங்க, அதனால ஆண் பூனைகளுக்கு இடதுகால் பழக்கம் உள்ளதுன்னு ஒரு வரி சேர்த்துக்கிட்டா எடிட்டர் திட்டமாட்டாரு.

    காலரைத் தூக்கிவிட்டுட்டு எலியைக் கொன்னுட்டோன்னு சொல்ல முடியாது. ஏன்னா இவங்களுக்கு காலர் எலும்புகள் கிடையாது. கடல் நீரைக் கூட அசால்டா குடிப்பாங்க, பூனையோட சிறுநீரகங்களுக்கு உப்பை வடிகட்டும் திறன் உண்டு.

    அடுத்தது, அரசருக்கு கொடுக்கப்படும் உணவை பரிசோதனை செய்து பார்க்கும் டெஸ்டிங் வேலையை தனக்குத்தானே செய்துப்பாங்க. சாப்பிடறதுக்கு முன்னாடி உணவை மூன்றுமுறை சோதனை செய்து டேஸ்ட் பார்த்த பிறகு நாலாவது முறைதான் சாப்பிடுவாங்க. ஸ்வீட்ஸ் சுத்தமாக ஆகாது. மோலி அல்லது ராணின்னு செல்லப்பெயர் உண்டு. இந்த வரி வாசிக்கும்போது ஏஞ்சலா பூனையை மனதில் நினைத்துக் கொள்ளவும்.

    இதுவரைக்கும் 33 இனம் பூனைகளால் அழிந்திருக்குன்னு உங்களால நம்பமுடியுமா.. மிகவும் அதிகமாக வேட்டையாடக் கூடிய 100 இனங்களில் பூனையும் ஒன்று. அடுத்தமுறை பூனையைப் பார்த்தா பயப்படுவீங்களா... ?!

    நம்ம பழமொழிக்கும் இந்த குறிப்புகளுக்கும் சம்பந்தமில்லை, சில நேரம் திரைப்படத்திற்கு ஒட்டாத நகைச்சுவைக் காட்சிகள் ஹிட் அடித்தா மாதிரிதான் இந்த குறிப்புகளும்.

    ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும். இது தான் பழமொழியின் உண்மை வடிவம்.

    ஆ என்றால் ஆவினம். பசுக்கூட்டம். பசுவின் பாலில் இருந்து கிடைக்கும் நெய்யை இளமைக் காலத்தில் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பொலிவு கிடைக்கும். ஆனால், வயது ஏற ஏற இதன் நன்மையும் மனிதருக்கு தீமையாய் முடியும் என்பதால்... முதுமையின் போது பூ நெய் எனப்படும் தேனை உண்டால் உடலுக்கு எந்த தீங்கும் நேராது என்பது பழமொழியின் கருத்தாகும்.

    ஏறத்தாழ 20000 வகைகள் கொண்ட ஈ இனத்தில் ஏழு இனங்கள் தேனீக்கள் என்று அழைக்கப்படுகிறது. தேனீயில் 44 வெரைட்டி தேனீக்கள் உண்டு. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும். ஒரு துளி தேனை வெளியேற்ற 50 முறை வயிற்றில் இருந்து கக்குகிறது. தேனீக்கள் சுமார் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே வாழறாங்க அதுவும் கூட்டுக்குடும்பமா...இங்கேயும் ராணியின் ராஜ்ஜியம்தான்.

    ஆண் தேனீக்களுக்கு கொடுக்கு கிடையாது, உணவு சேகரிக்கவும் போகமாட்டாங்க. இனவிருத்தி முடிந்து இவங்களோட சிறகுகள் எல்லாம் உதிர்ந்து இறந்து போவதுதான் இதன் பணி.

    ராணித்தேனீ ஒரு நாளைக்கு 1500 முதல் 3000 வரை முட்டைகளை இடும். கணக்குப்பார்த்தா வருஷத்துக்கு இரண்டு லட்சம் முட்டைகள். பேறு காலங்களில் ராணித்தேனீக்கு உணவு கொடுக்க பத்து தேனீக்கள் தாதிக்களாய் இருக்காங்க. ராணித்தேனீயின் கட்டளைக்கு கீழ்படிகிறார்கள்.

    வெள்ளோட்டம் பார்க்கிறவங்க ஊர்ப்பக்கம் நீர்வரத்துக்கு இந்த வார்த்தையை பயன்படுத்துவாங்க. தன் கூட்டை விட்டு வெளியே வர்ற ராணித்தேனீ, தான் இருக்கும் சூழலை கண்காணிக்க அறிமுக விழா மாதிரி நான் வந்துட்டேன்னு...பறக்குமாம். தகவல்களை தங்கள் குழுவிற்கு தெரிவிக்க நடன அசைவுகளைப் பயன்படுத்துமாம். 65 முதல் 100 அடிவரை பறந்த நிலையில்தான் இனப்பெருக்க உறவு கொள்ளுமாம். தேனீமாதிரி சுறுசுறுப்பாக இருன்னு வார்த்தைக்கு சொல்லலைங்க வாழ்ந்து காட்டுவதால சொல்லி இருக்காங்க.

    இப்போ புரியுதா யானைக்கு ஒரு காலமும் பூனைக்கு ஒருகாலமும்... இளமைக்காலத்தில் உணவுப் பழக்கத்தில் நெய்யின் அளவும் வயதாக வயதாக குறைந்து அதற்கு பதில் தேனை அருந்தினால் நலமுடன் வாழலாம் என்ற மருத்துவக் குறிப்பான பழமொழிதான். ரஜினி ஸாருடைய பஞ்ச் டயலாக் மாறி மாறிட்டது.

    -லதா சரவணன்

    Next Story
    ×