என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

அன்பே ஆயுதம்!
- ஓர் உயர் சக்தி இருக்கின்றது என்பதனை உன்னுள் உணர்ந்து நீ பிடித்த விதத்தில் பிடித்த ரூபத்தில் வழிபாடு செய்யலாம்.
- உடல் அசையாது ஒரு நிமிடம் கை, கால் மடக்கி உட்கார்ந்து பாருங்கள். மனம் அலைபாயாது.
பிறந்ததில் இருந்தே பூஜை, மணியோசை, சந்தனம், சாம்பிராணி, ஊதுவத்தி வாசம், மண மணக்கும் பிரசாதங்கள் என்ற சூழ்நிலையில் வளர்க்கப்பட்ட ஒரு பிறப்பு தான் என்னுடைய பிறப்பு. பள்ளி விடுமுறை நாட்கள், முக்கிய கிழமைகள் என்றால் காஞ்சிபுரம், மகாபெரியவர் மற்றும் திருவண்ணாமலையில் சேஷாத்திரி சுவாமிகள், ரமண மகிரிஷி, கோவில் என்றே எனது பயணம் இருந்தது.
இவை எல்லாம் வீட்டில் உள்ள பெரிசுகளின் நிர்வாகத்தில் நடந்தது. நிறைய ஆன்மீக புத்தகங்கள் படிக்கக் கொடுக்கப்பட்டன. புராணங்கள், பல பெரிய தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, பொது அறிவு என பல புத்தகங்களை நூலகங்களில் இருந்து எடுத்து வந்து தருவார்கள். அந்த கால சூழ்நிலையில் அநேக வீடுகளில் இவ்வாறு தான் இருந்திருக்கும்.
வீட்டில் நவராத்திரி கொலுவிற்கு எமிலிஜாய் சாந்தம்மாள் ஆசிரியையும், விக்டோரியா ஆசிரியையும் வருவார்கள். பக்கத்து வீட்டு இஸ்லாமிய குடும்பம் ஓட்டிய நட்பில் இருந்தது. யாரும் எந்தவித வித்தியாசமும் உணரவில்லை. எங்கள் வீட்டின் அருகில் மேரி மாதா ஆலயம் உள்ளது. கையில் சிறு குழந்தையாக ஏசு. அந்த சிலைக்கு எத்தனை முறை வீட்டில் பூத்து குலுங்கும் செம்பருத்தி பூவினை பறித்து மாலை கட்டி போட்டிருப்பேன் என்பது கணக்கில் அடங்காது.
இதனை ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால் எந்த தெய்வ நம்பிக்கை உடையவர்களாயினும் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவராயினும் மரியாதை, மதிப்போடு நடத்தத் தெரிய வேண்டும். இது நமக்கும் நம் குழந்தைகளுக்கும் மனதில் பதிய வேண்டும். ஆக முதலில் இந்த எண்ணம் மனதில் வந்தால் மட்டுமே 'ஆன்மா', 'ஆன்மீகப் பயணம்' என்பதனைப் பற்றி பேசவோ, சிந்திக்கவோ முடியும். இதனை முதலில் மனதில் பதிய வைத்து மேலே தொடருவோம்.
சிறு வயதிலேயே சித்தர் பீடங்களுக்கு செல்லும் வழக்கம் இருந்தது. சிறு வயதில் ' மகா பெரியவர்' அவர்களை சந்திக்கும் வாய்ப்பு நிறைய இருந்தது. ஏனோ அவரைப் பார்த்த உடன் உடலில் சப்த நாடியும் ஒடுங்கியது. அவரது மெல்லிய புன்னகையும், ஆசிர்வாதமும் கண்களில் நீர் வரவழைத்தது. ரமண மகரிஷி ஆசிரமும், சேஷாத்திரி சுவாமிகள் ஆசிரமும் இங்கேயே இருந்து விடலாமா என்று நினைக்கும் அளவு சக்தி அலைகள் நிறைந்து இருந்தது.
பிள்ளையாரில் ஆரம்பித்து ஆஞ்சநேயர் வரை வகுப்பில் நான் முதன்மையாக வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளும் அளவே தேவை இருந்தது. ஏன் இத்தனை சாமிகள் என்றால் எல்லோரும் உதவி செய்ய வேண்டும் என்ற ஆசைதான். நிறைவேறியதா? என்று யோசிக்க வேண்டாம் நமக்கோ வேலை முக்கியம். அதுவும் 2, 4 மாணவ, மாணவியருடன் கடுமையான போட்டி படிப்பில் இருந்த போது இந்த மாதிரி எல்லா கடவுளிடமும் சுலோகம் சொல்லி வேண்டிக் கொள்வது நல்லது தானே. இதற்காக நான் கடவுளுக்கு கல்கண்டு, திராட்சை, முந்திரி எல்லாம் கொடுத்தேன். (பிறகு நானே அதனை எடுத்து சாப்பிட்டு விட்டேன் என்பது வேறு விஷயம்) சரி, இப்படி வேண்டிக் கொண்டது நிறைவேறியதா என்று கேட்டால் சில முறை நடந்தது. சில முறை நடக்கவில்லை. நிறைவேறிய நேரங்களில் 'தேங்யூ' சொன்ன நான் நிறைவேறாத நேரங்களில் சற்று முகத்தினை தூக்கி வைத்துக் கொள்வேன். 'நீ எப்படியோ நான் சொன்னபடி சரியா நடந்துப்பேன்' என்று முந்திரி, திராட்சை, கல்கண்டினை கொடுத்து விடுவேன்.
இதனை ஏன் இங்கு குறிப்பிடுகின்றேன்? காரணம் இருக்கிறது. இத்தனை சாமிகளை வேண்டிய பிறகும் சில சமயங்களில் நாம் வேண்டுவது நடக்கவில்லையே என்று ஒரு மூத்தவரிடம் பேசிய போது அவர் சொன்னது.....
'உருவங்கள் வேறு படலாம். ஒளி ஒன்றுதான்'
'உன் முயற்சிக்கு ஏற்ப உன் உழைப் பிற்கேற்ற பலனே கிடைக்கும்' என்றார்.
'உழைப்புதான் பலன் என்றால் இத்தனை சாமிகள், பூஜைகள் எதற்கு?- இது எனது அடுத்த கேள்வியாக இருந்தது.
மனிதனுடைய ஐம்புலன்களையும் எளிதில் ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியாது. முடியாது என்பதனை விட மிகக் கடினம் என்று சொல்லலாம். 'வாய் ஜாங்கிரி இன்னும் வேணும்' என்று அடம் பிடிக்கும். இது போல பல உதாரணங்களைச் சொன்னார். உன் பரம்பரை வழக்கப்படி நீ பூஜை செய்கிறாய். அந்த தெய்வீக சூழல் மனதை அமைதிப்படுத்தும்.
ஓர் உயர் சக்தி இருக்கின்றது என்பதனை உன்னுள் உணர்ந்து நீ பிடித்த விதத்தில் பிடித்த ரூபத்தில் வழிபாடு செய்யலாம். இந்த ரூப வழிபாடே அரூபத்திற்கு செல்லும் வழிதான். அவரவர் வயது பக்குவத்திற்கேற்ப மனதை பக்குவப்படுத்தும் வழி முறைகள்தான் இவை. உயர் சக்தி என்பது ஒளிரூபம் எனலாம். ஒளி என்கிற-அந்த இறை சக்திதான் பிரபஞ்சம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றது. அது உன்னுள்ளும் இருக்கின்றது. காலம் கூட கூட அந்த இறை சக்தியினை, உன் ஆன்மாவினை உன்னுள்ளே பார்க்கலாம். அதற்கான எல்.கே.ஜி. படிப்புதான் ஆரம்பிக்கப் படுகின்றது என்ற விளக்கம் கிடைத்தது.
உன்னுள் இருக்கும் அதே ஒளியினை ஒவ்வொரு உயிர்களிடமும் நீ காண ஆரம்பிக்கும் போது நீ ஆரவாரமற்ற, மகிழ்ச்சியை அதாவது அமைதியான நிலையினை அடைவாய்.
மேற்கூறிய அனைத்து தொகுப்பும் காஞ்சி மகா பெரியவர் பலர் மூலமாக எனக்கு அருளியது என்று நான் நம்புகின்றேன்.
சரி, நாமும் நன்கு உழைக்க வேண்டும். இறையருளும் தேவை என்று ஒரு முடிவுக்கு வந்தாகி விட்டது. ஒரு முறை சத்குரு ஸ்ரீ சாந்தானந்த சுவாமிகள் பேசிய போது 'எல்லா தெய்வங்களையும் வணங்க வேண்டும். ஆனால் உனக்கென்று ஒரு வழி, வழிகாட்டும் தெய்வ ரூபம் இருக்கும். எந்த சுவிட்ச் போட்டால் எந்த பல்ப் எரியும் என்று ஒருவருக்குத் தெரிய வேண்டும் என்றார்.
இத்தகு கருத்துக்கள் ஏதோ ஒரு விதத்தில் சேர்ந்து கொண்டே இருந்தன. அனைத்து ரூபங்களும் ஒன்றே என்று இறைவனைப் பற்றிய கருத்து ஆழ் மனதில் பதிந்தது.
ரமண மகரிஷி அவர்களின் புத்தகங்களை படித்தல் மிகுந்த நன்மையினைத் தரும். மவுனம் என்பதன் அர்த்தம் புரியும். அமைதி என்பதன் உண்மையான விளக்கம் கிடைக்கும். குறிப்பாக ப்ளூடன்பரப் பிரண்டன் எழுதியுள்ளதைப் படிக்க வேண்டும். இவர் பிரிட்டன் நாட்டினை சேர்ந்தவர். தத்துவ ஞானி. இறை உணர்வாளர். தன் பத்திரிகை வேலையினைக் கூட துறந்து பல யோகிகள், ஞானிகளுடன் உரையாடியவர். கட்டுரைகள் எழுதியவர். காஞ்சி மகா பெரியவர் பற்றியும், ரமண மகரிஷி பற்றியும் பால் பிரண்டன் எழுதியதை படிப்பது ஒரு பாக்கியம்தான். நான் படித்தேன்.
சேஷாத்ரி சுவாமிகள் ரமண மகரிஷியினை காத்து உலகிற்கு காட்டியவர். திருவண்ணாமலையில் மலையினை ஒளிப் பிழம்பினை கோடி சூர்ய பிரகாசமாக ஒளிர்வதனைக் காட்டியவர்.
மகா பெரியவர், சேஷாத்ரி சுவாமிகள், ரமண மகரிஷி. இவர்கள் மூவருமே சமீபத்திய காலத்தவர்கள். தெய்வீக பரிசுத்தம், தெய்வீக அழகு இவற்றினை அனைத்து சித்தர்கள், மகான்களின் முகத்தில் காண முடியும். அவர்கள் உலகின் எந்த இடத்தில் இருந்தாலும் இது போலத்தான் இருப்பார்கள் என்பது புரிய ஆரம்பித்தது.
இவர்களையெல்லாம் பார்த்த பிறகு இவர்களது அறிவின், ஞானத்தின் முன்னால் நாமெல்லாம் ஒரு மண் அளவு கூட இல்லை என்று தோன்றியது. இந்த எண்ணங்கள் திருமணத்திற்குப் பிறகு அதிகம் கூடி யது. எனது கணவர் ஸ்ரீபால் அவர்களும் ஆன்மீகம், சித்தர்கள், ஞானி கள் இவர்கள் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். ஆக எங்களின் ஆன்மீகப் பயணம் இவ்வழியிலேயே தொடர்ந்தது.
பல நல்ல நினைவுகள் இந்த பயணத்தினால் இன்றும் பசுமையாய் மனதில் இருக்கின்றது. ஒரே ஒரு கவனம் தேவை. இந்த கால சூழ்நிலையில் நம் முன்னோர்கள் அறிந்த பல காலமாக அறிமுகப்படுத்திய குருமார்களை சென்று சேருவது நன்மை பயக்கும்.
அடுத்து யோகா, தியானம் இவற்றினை முன்பெல்லாம் அதிக பிரபலமாக இல்லாவிட்டாலும் பழக்கத்தில் இருந்தது. யோகா எந்த அளவு நன்மை பயக்கும் என்பதனை பழகியவர்கள் மட்டுமே நன்கு அறிவார்கள். இன்று யோகா மையங்கள் நிறைய வந்துள்ளன. குழந்தைகளுக்கும் யோகா பயிற்சி தருவதால் அவர்களது பிடிவாதம். கோபம், தேவையற்ற கெட்ட பழக்கங்கள் நீங்கும். இன்று பல மருத்துவ மனைகள் கூட யோகா பயிற்சி யினை நடைமுறை படுத்துகின்றன.
* அதிக பேச்சு குறையும்.
* அதிக உணவு, நொறுக்குதீனி குறையும்.
* மனம்-மனம் போன போக்கில் குதிக்காது.
தினமும் 20 நிமிடங்களாவது யோகா செய்வது ஒருவரின் வாழ்வினை நன்கு உயர்த்தும்.
'அன்பே' உலகின் மிகப்பெரிய சக்தி வாய்ந்த ஆயுதம்!
யோகா பயில்பவர்களுக்கு தியானம் எளிதில் கை கூடும். உடல் அசையாது ஒரு நிமிடம் கை, கால் மடக்கி உட்கார்ந்து பாருங்கள். மனம் அலைபாயாது. இருந்து பாருங்கள். தியானத்தின் முக்கியத்துவம் அப்போதுதான் புரியும்.
சரி! இதெல்லாம் செய்து என்ன கிடைக்கும்? சொத்து, சுகங்கள் கூட வேண்டாம். நிம்மதியாவது கிடைக்குமா? என்று பலர் கேட்பது காதில் விழுகின்றது.
அப்படியெல்லாம் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள். சோதனைகள் கொட்டலாம். வாழ்க்கை உலுக்கி எடுக்கலாம். ஆனால் இதனைத் தாங்கி, தாண்டி வாழ்வினைத் தொடரும் ஆன்ம பலம் கிடைக்கும். இந்த ஆன்ம பலம் கிடைக்கவும், ஐம்புலன்களை கட்டுப்படுத்தவும் கண்டிப்பாய் ஒரு குருவின் வழிகாட்டுதல் அவசியமாகின்றது. ஒவ்வொருவர் வாழ்விலும் அவர்களின் முதல் குரு, முதல் தெய்வம் அவரவரது தாய்-தந்தையர்தான்.
-தொடரும்






