என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரஜினி... பெரிய மனசுக்கு சொந்தக்காரர்!
    X

    ரஜினி... பெரிய மனசுக்கு சொந்தக்காரர்!

    • டைரக்டர் முதல் காட்சியை விவரித்தார். முதல் சீனே ரொமான்ஸ் சீன்... அச்சச்சோ...
    • எவ்வளவு பெரிய ஸ்டார்... அவர் நான் இருக்கும் இடத்துக்கு வந்து என்னை வாழ்த்தியதை என்னால் நம்பவே முடியவில்லை.

    ராஜமுந்திரியில் உள்ள ஓட்டல்...

    ஒரே தளத்தில் உள்ள அறைகளில் தான் நானும் ரஜினிசாரும் தங்கி இருந்தோம். அவர் இருக்கிறார் என்பதாலேயே எனக்கு அறையை விட்டு வெளியே வரவே ஏதோ ஒருவிதமான தயக்கம் இருந்தது.

    அறையிலேயே அடைந்து கிடந்தேன். வெளியே வரவேயில்லை. அம்மாவும் கூட வெளியே சென்று ரஜினிசாரை சந்திக்க தயங்கினார்.

    குழந்தையாக அவருடன் ஜாலியாக விளையாடி இருக்கிறேன். ஆனாலும் பருவம்... வெட்கம்... தயக்கம்... தடுத்தது. சும்மாவா பாடினார்கள் 'பார்த்த ஞாபகம் இல்லையோ... பருவ நாடகம் தொல்லையோ" என்று.

    காலையில் ரெடியாகி லொகேஷனுக்கு புறப்பட்டேன். மனசு பக்... பக்... என்று படபடத்தது. அதையும் தாண்டி ஒரு சந்தோசம். அந்த உணர்வை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

    ஷூட்டிங் ஸ்பாட்...

    சற்று தூரத்தில் ரஜினிசார்.

    ஏராளமான ரசிகர்கள் கூட்டம் திரண்டிருந்தது. அவர்களின் ஆரவாரமும், சத்தமும் அதிர்ந்தது. எல்லோரும் ஒரே குரலில் 'மீனா... மீனா...' என்று உரக்க கத்தினார்கள்.

    அடேய்! அங்கே சூப்பர் ஸ்டாரே நிக்குறார்டா... என்று என் மனம் சொல்லியது. அது ரசிகர்களுக்கு கேட்கவா போகிறது. கேட்டாலும் ஏற்கும் மன நிலையில் அவர்கள் இல்லை.

    தெலுங்கில் சீதாராமையாவின் பேத்தி படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த நேரம் அது. அந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அங்கு என்னை பார்த்ததும் அவர்களுக்கு உற்சாகம்.

    ரஜினிசார் பக்கத்தில் சென்ற போதும் அவரிடம் ஒரு ஹலோ சார்.... அல்லது குட்மானிங்... ம்கூம்... எதுவும் சொல்ல முடியவில்லை. அவரை பார்த்து சிரித்தேன். நகர்ந்தேன். அவ்வளவுதான்.

    டைரக்டர் முதல் காட்சியை விவரித்தார். முதல் சீனே ரொமான்ஸ் சீன்... அச்சச்சோ...

    நான் அந்தரத்தில் பூப்பந்தல் மீது நிற்பேன் கீழிருந்து என் காலில் பூவால் வருடி கிச்சு... கிச்சு... மூட்டுவார் ரஜினி சார். நிஜமாகவே எனக்கு கூச்சமும், வெட்கமும் கலந்து ஒரு மாதிரி ஆகிவிட்டது.

    அப்புறம் மேலிருந்து பூக்களை அவர் மீது கொட்டுவேன். அவர் அலேக்காக என்னை தூக்கி விடுவார்.

    வெட்கத்தால் கையால் ஒரு கண்ணை மறைத்துக் கொண்டு ஒற்றை கண்ணால் அவரை பார்ப்பேன். அவர் என்னை பார்த்த தும் இன்னொரு கையால் மறு கண்ணை மூடிக்கொண்டு அடுத்த கண்ணால் பார்ப்பேன்.

    இந்த காட்சிகளிலும் வெட்கம்... வெட்கம்... அப்படி ஒரு வெட்கம்...

    மதியம் சாப்பாட்டு இடைவேளை வந்தது. அவராகத்தான் பேச்சை தொடங்கினார்.

    "என்னதான் 2 பேரும் ஒன்றாக நடித்து இருந்தாலும் ஹீரோயின் ஆனதும் ஒரு மாதிரி இருக்குல்ல" என்றார்.

    நானும் "ஆமாம்" என்றேன்.

    இப்படித்தான் ஒவ்வொரு நாளும்...

    இருவருமே ஓரிரு வார்த்தைகள் பேசிக் கொள்வதோடு சரி. சகஜ நிலைக்கு வரவே சில நாட்கள் ஆகி விட்டது.

    அப்போது ஒருநாள் லீவு கிடைத்தது. அந்த விடுமுறையிலும் ஓய்வு எடுக்க நான் விரும்பவில்லை. வேறு ஒரு தெலுங்கு படத்தில் சில காட்சிகள் நடித்துக் கொடுக்க வேண்டியிருந்தது. எனவே ஐதராபாத்துக்கு புறப்பட்டேன்.

    நான் பெட்டிகளை எடுத்துக் கொண்டு கிளம்பியதை பார்த்ததும் 'என்ன ஷூட்டிங்' முடிந்ததா? கிளம்பிட்டியா? என்றார் ரஜினி சார். நான் இல்லை சார். ஒருநாள்தான். தெலுங்கு படம் ஒன்றில் சில காட்சிகள் பாக்கியிருக்கு. எனவே ஐதராபாத் செல்கிறேன் என்றதும் 'பிசி ஆயிட்டேன்னு சொல்லு' என்றார்.

    அதன் பிறகு ராஜமுந்திரியில் ஷூட்டிங் முடிந்து எல்லோரும் கிளம்பினோம். நான், ரஜினி சார், எம்.என்.நம்பியார் சார் எல்லோரும் ஆளுக்கொரு காரில் ரெயில்வே ஸ்டேசனுக்கு சென்றோம்.

    நாங்கள் சென்றதை கேள்விப்பட்டு ரெயில்வே நிலையத்திலும் பெரிய கூட்டம் திரண்டு இருந்தது. நாங்கள் வெளியே வராமல் காருக்குள்ளேயே இருந்தோம்.

    ரெயில் சற்று நேரத்தில் வந்து விடும் வாருங்கள் என்றார்கள்.

    நான் 'கூட்டம் அதிகமாக இருக்கிறது. ரெயில் வரட்டும். வந்தபின் வருகிறேன்' என்றேன்.

    சரி என்று சென்றவர்கள். சிறிது நேரத்தில் மீண்டும் வந்தார்கள். 'மேடம் ரெயில் பக்கத்தில் வந்து விட்டது' என்றார்கள். அவர்களுக்கு எங்கே ரெயிலை பிடிக்க முடியாதோ என்ற கவலை. எனக்கோ ரசிகர்கள் கூட்டத்தை பார்த்து பயம்.

    கடைசியில் நான் நினைத்த மாதிரியே நடந்தது. ரெயில் வந்து நிற்பதற்குள் காரை விட்டு இறங்கியதால் கூட்டம் மொய்த்து விட்டது. கூட்டத்துக்குள் சிக்கி கொண்ட என்னால் அங்கிருந்து ஸ்டேசனுக்குள் நகர முடியவில்லை. பாதுகாப்புக்காக வந்த வர்களாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. கூட்டத்தில் சிக்கி தடுமாறி எப்படி ஸ்டேசனுக்குள் சென்றேன் என்றே தெரியவில்லை. ரஜினிசார் உள்பட யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆளுக்கொரு பக்கம் மாட்டிக் கொண்டோம். லக்கேஜுகளையும் எடுக்க முடியவில்லை. தப்பித்தால் போதும் என்ற நிலை.

    ஒரு வழியாக ரெயிலுக்குள் ஏறியதும் 'ஷட்டைரை' மூடிவிட்டு அமர்ந்த பிறகுதான் நிம்மதி. டிரெஸ்செல்லாம் கச...கச என்றாகி விட்டது. வியர்வை மழையில் குளித்தது போல் இருந்தது.

    உதவியாளர்கள் லக்கேஜுகளை ஏதாவது ஒரு பெட்டிக்குள் போட்டு ஒரு வழியாக கொண்டு வந்து சேர்த்துவிட்டார்கள்.

    ரெயில் புறப்பட்ட பிறகுதான் ஷட்டரை திறந்தேன். ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. எல்லோரும் ஏறினார்களா? யார்-யார் எங்கே இருக்கிறார்கள்? என்று எதுவும் தெரியவில்லை.

    சுமார் 15 நிமிடங்கள் ஆகியிருக்கும்...

    திடீரென்று ரஜினி சார் நான் இருந்த பெட்டிக்குள் வந்து என் அருகில் நின்றார்.

    அவரை பார்த்ததும் எனக்கு இன்ப அதிர்ச்சி. வாங்க சார் என்றேன். அவர் என்னை பார்த்து பிரமித்தவராக, 'ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா... நீ இவ்வளவு பெரிய ஆளாயிட்டியா? எவ்வளவு ரசிகர்கள் கூட்டம்..... உன்னை பார்த்து ரொம்ப பெருமையா இருக்கும்மா. இன்னும் நிறைய பேரும் புகழும் பெற வேண்டும் 'காட் பிளஸ் யூ...' என்று வாழ்த்தினார்.

    அதை கேட்டு நெகிழ்ந்த என் கண்களில் இருந்து கண்ணீர் வந்து விட்டது. 'ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் சார்' என்றேன்.

    எவ்வளவு பெரிய ஸ்டார்... அவர் நான் இருக்கும் இடத்துக்கு வந்து என்னை வாழ்த்தியதை என்னால் நம்பவே முடியவில்லை.

    அவர்தான் ரஜினி என்ற மாமனிதர். அவரை போன்றவர்க ளின் வாழ்த்தும், ஆசீர்வாதமும் தான் என்னை வழி நடத்து கின்றன.

    மீண்டும் ஒரு புதிய தகவலுடன் அடுத்த வாரம் வருகிறேன்....

    (தொடரும்)

    Next Story
    ×