என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நம்பிக்கையே ஆதாரம்!
    X

    நம்பிக்கையே ஆதாரம்!

    • தாயின் தோள்களிலும் தந்தையின் கரங்களிலும் உறங்கும் குழந்தையை எந்த விதமான இரைச்சலும் நெருக்கடிகளும் தொந்தரவு தருவதில்லை.
    • கடவுள் நம்பிக்கை தொடங்கி சாதாரண மனிதர்கள்மீது கொள்கிற நம்பிக்கை வரை எல்லா நம்பிக்கைகளிலும் ஓர் ஆழ்ந்த அழுத்தமான பற்றுதல் கொண்டிருக்க வேண்டும்.

    அன்பிற் சிறந்த நம்பிக்கையாளர்களே! வணக்கம்!

    மகாகவி சுப்பிரமணிய பாரதி "நம்பற்குரியர் நம் வீரர்!" என்று குறிப்பிடுவார். நமது உலகமே நம்பிக்கையில்தான் நடந்து கொண்டிருக்கிறது.

    சூரியனும் நிலாவும் நம்பிக்கையோடு பூமியைச் சுற்றி வருகின்றன; இவற்றைக் காணும் நம்பிக்கையில் நாள்களின் உறுதியை உணர்ந்து நாமும் நம்பிக்கையோடு வாழ்க்கையை வலம் வந்து கொண்டிருக்கிறோம்.

    குழந்தைகள் பெற்றோர்களை நம்புகின்றன! பெற்றோர்கள் குழந்தைகளை நம்புகின்றனர்! ஆசிரியர்கள் மாணவர்களை நம்புகின்றனர்! மாணவர்கள் ஆசிரியர்களை நம்புகின்றனர்! தொழிலாளிகள் முதலாளிகளை நம்புகின்றனர்! முதலாளிகள் தொழிலாளிகளை நம்புகின்றனர். ஆண்டவன் பக்தர்களை நம்புகின்றான்! பக்தர்கள் ஆண்டவனை நம்புகின்றனர்! தொண்டர்கள் தலைவர்களை நம்புகின்றனர்! தொண்டர்களைத் தலைவர்கள் நம்புகின்றனர், இவ்வாறு ஒருவருக்கொருவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையின் அடிப்படையில் தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

    "நம்பு" என்கிற சொல்லின் அடியாகப் பிறந்ததே "நம்பிக்கை" என்கிற சொல் ஆகும். நம்பு என்பதற்கு "நசை" என்று பொருள் விளக்கம் தருகிறார் தொல்காப்பியர். நசை என்றால் ஆசைப்படுவது!, ஆர்வம் கொள்வது!, விரும்புவது ஆகும். ஒரு பொருள் அல்லது ஒரு செயல்மீது விருப்பத்தோடு ஈடுபாடு கொள்வதே நம்பிக்கை! விருப்பமின்றிக் கொள்வது மூட நம்பிக்கை அல்லது அவ நம்பிக்கை ஆகிவிடும்.

    நாரதர் திரிலோக சஞ்சாரி. அப்படியென்றால் அவர் விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள லோகம் என்ற மூன்று உலகங்களுக்கும் சென்றுவரும் ஆற்றலும் அனுமதியும் பெற்றவர். அவர் ஒருமுறை பூலோகத்திற்கு வருகை தந்தபோது ஓர் ஆன்மீகச் சொற்பொழி வாளரைப் பார்த்தார்.

    "சுவாமி வணக்கம்!"

    "மங்களம் உண்டாகட்டும்!"

    "நான் ஓர் ஆன்மீகச் சொற்பொழிவாளன்! பகவானின் புகழையும் பெருமையையும் அனுதினமும் மேடைகள்தோறும் பரப்பி வருபவன்!"

    "தெரியும்!"

    "நீங்கள் பூலோக சஞ்சாரம் முடித்து தேவலோகம் சென்று பகவான் திருமாலைக் காணும் போது 'எனக்கு எப்போது மோட்சம்?' என்று கேட்டுத் திரும்பி வரும்போது சொல்ல வேண்டும்!" என ஒரு வேண்டுகோள் வைத்தார் பண்டிதர். நாரதரும் "அப்படியே" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.

    கொஞ்ச தூரம் சென்றபின் ஓர் ஆல மரத்தின் அடியில் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளி செருப்புத் தைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார் நாரதர். நாரதரைப் பார்த்ததும் பார்த்துக்கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு வந்து வணக்கம் செலுத்தினார் தொழிலாளி.

    "மங்களம் உண்டாகட்டும்" ஆசீர்வத்தித்தார் நாரதர்.

    "சுவாமி பூலோக சஞ்சாரம் முடிந்து மேலோகம் செல்லும்போது அங்கே பகவானைப் பார்ப்பீர்கள் தானே!"-கேட்டார் செருப்புத் தைக்கும் தொழிலாளி.

    " எனக்காக பகவானிடம் ஒரு கேள்வி கேட்டு அதற்கான பதிலைக் கேட்டு வர வேண்டும்!; 'எனக்கு எப்போது மோட்சம்?' என்பதே நீங்கள் பகவானிடம் கேட்டுப் பெற வேண்டிய பதில்!" என்றார் தொழிலாளி!

    "அப்படியே!" என்று சொல்லி நகர்ந்தார் நாரதர்.

    மண்ணுலக உலா முடித்து விண்ணுலகம் புகுந்த நாரதர் "நாராயாணா! நாராயணா!" என்றவாறே வைகுண்டத்துக்குள் நுழைந்தார். அங்கே பகவானைக் கண்டு வணங்கியபின் பூலோகத்தில் பண்டிதரும் செருப்புத் தைக்கும் தொழிலாளியும் தங்களுக்கு எப்போது மோட்சம் என்று கேட்டுவரச் சொன்ன செய்தியைத் தெரிவித்தார்.

    பகவான் சிரித்துக்கொண்டே சொன்னார்," நாரதரே! அந்தப் பண்டிதர் இன்னும் நூறுமுறை இறந்து நூறு பிறவி எடுத்து வந்தாலும் மோட்சம் இல்லை!. அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி இன்று இறந்தாலும் நாளைக்கே மோட்சம்! என்று சொல்லிவிடு!"

    "இது என்ன சுவாமி வினோதமாக இருக்கிறது; பகவானின் பெருமைகள் கூறும் அத்தனை சாத்திர தோத்திரங்களையும் கரைத்துக் குடித்து விட்டு அன்றாடம் தமது சொற்பொழிவுத் திறத்தாலே மக்கள் அனைவருக்கும் பக்திப்பால் ஊட்டிவரும் பாகவதருக்கு இன்னும் நூறு பிறவிக்கு மோட்சம் இல்லையா? படிப்பு வாசனையே இல்லாத செருப்புத் தைக்கும் தொழிலாளிக்கு உடனடி மோட்சமா?" என்று கேட்டார்.

    "நாரதரே! மண்ணுலகம் செல்லுங்கள்!.அவர்கள் உங்களைப் பார்த்தவுடன்,'பகவான் என்ன பண்ணிக்கொண்டிருக்கிறார்? என்பதை முதல் கேள்வியாகக் கேட்பார்கள். அவர்கள் இருவரிடமும் நான் இப்போது கூறப்போகும் பதிலைச் சொல்லிப் பாருங்கள்! அப்போது அவர்கள் என்ன விதமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து, அப்புறம் ஒரு முடிவுக்கு வாருங்கள்!" என்றார் பகவான்.

    "சரி அவர்களிடம் நான் என்ன கூற வேண்டும்?" கேட்டார் நாரதர்.

    "நான் போய்ப் பார்க்கும்போது, பகவான் ஒரு துணி தைக்கும் ஊசியினுடைய காது ஓட்டைக்குள் ஒரு யானையைத் திணித்துக் கொண்டிருந்தார்! என்றுமட்டும் கூறிப்பாருங்கள்! பிறகு அவர்களது எதிர்வினைகளை வைத்து அவர்களுக்கு நான் கூறிய மோட்சக் கணக்கு சரியா? இல்லையா? என்பதைப் புரிந்து கொள்வீர்கள்!".

    பகவானிடம் விடைபெற்றுக் கொண்டு நாரதர் வெகு ஆவலோடு பூலோகம் வந்தார்; முதலில் பண்டிதரிடம் சென்றார். பண்டிதரும் வணங்கி, " மேலோகத்தில் பகவானைக் கண்டீர்களா? என்ன செய்து கொண்டிருந்தார்?" என்று கேட்டார்.

    நாரதரும் துணி தைக்கும் ஊசியின் காது ஓட்டைக்குள் பகவான் யானையை நுழைத்துக் கொண்டிருந்ததாக பகவான் கூறியனுப்பியதைக் கூறினார். உடனே பண்டிதருக்குக் கண்மண் தெரியாத கோபம் வந்து விட்டது."ஐயா நாரதரே! படித்தவர் மாதிரியா பேசுகிறீர்! யானையைக் கொண்டுபோய் யாராவது ஊசியின் காதுக்குள் நுழைக்க முடியுமா?.யாருக்குக் காது குத்த நினைக்கிறீர்?" என்று திட்டி அனுப்பிவிட்டார்.

    அடுத்து ஆல மரத்தடிக்குச் சென்றார். செருப்புத் தைத்துக் கொண்டிருந்த தொழிலாளி, கையில் செருப்புத் தைக்கும் ஊசி சகிதம் வந்து நாரதருக்குப் பெரிய வணக்கம் வைத்தார். அவரும் பண்டிதர் கேட்ட கேள்வியையே கேட்டார். நாரதரும், இப்போது நான் சொல்லப் போகும் பதிலை வைத்துக் கோபப்பட மாட்டாயே! என முன் எச்சரிக்கையாகக் கேட்டு விட்டு, பகவான் ஊசியின் காது ஓட்டைக்குள் யானையை நுழைத்துக் கொண்டிருந்த காட்சியைக் கூறினார்.

    அவ்வளவுதான், செருப்புத் தைக்கும் தொழிலாளி கையில் வைத்திருந்த எல்லாவற்றையும் கீழே போட்டு விட்டு, இரண்டு கைகளையும் தலைக்கு மேலே தூக்கிக் கும்பிட்டபடி "நாராயணா! நாராயணா!" எனக் கூத்தாடத் தொடங்கிவிட்டார்.

    இப்போது நாரதர் தொழிலாளியிடம் கேள்வி கேட்கத் தொடங்கிவிட்டார்,"ஐயா! அதெப்படி ஊசியின் காதுக்குள் யானையை நுழைக்க முடியும்? பக்தி உங்கள் கண்ணை மறைக்கிறதா? அறிவின் துணை கொண்டு ஆராய்ந்தால் இது பொருந்தாதே?"

    செருப்புத் தைக்கும் தொழிலாளி தனது காலடியில் கீழே விழுந்து கிடந்த ஓர் ஆலம்பழத்தை எடுத்து 'இதைப் பிய்த்துக் காட்டுங்கள்!' என்று கூறினார். 'உள்ளே இருப்பவை என்ன?' என்று கேட்டார். 'எல்லாம் ஆலமத்தின் விதைகள்! 'என்று பதிலளித்தார் நாரதர்.

    "ஆம் இத்துனூண்டு ஆலம்பழத்துக்குள் நூற்றுக் கணக்கான ஆலமரங்களை விதைகளாக உள்ளே வைத்துப் படைக்கத் தெரிந்த பகவானுக்கு அந்தச் சிறிய ஊசியின் காது ஓட்டைக்குள் யானையை நுழைப்பது என்ன முடியாத காரியமா? " கேட்டார் தொழிலாளி.

    வாயடைத்துப் போனார் நாரதர்.

    நம்பிக்கை!. ஆம்! அன்பின் வழிகொண்டு ஆண்டவன்மீது நம்பிக்கை வைத்ததால் அவரை எளிதில் அடைந்தார் செருப்புத் தைக்கும் தொழிலாளி. ஆனால் படித்த பண்டிதரோ அறிவின் வழியில் நம்பிக்கை கொண்டதால் ஆண்டவனைத் தேடிக்கொண்டே தான் இருக்க முடிந்தது.

    நம்பிக்கை என்பது நம்மிலிருந்து தொடங்க வேண்டும். நாம் முதலில் நம்மால் முடியும் என்று நம்மை நம்பத் தொடங்க வேண்டும். நம்மை நம்புவது என்பது நம்மை நாமே நேசிப்பது. எந்த விதமான கழிவிரக்கமும் கொள்ளாமல் எல்லா நிலைகளிலும் நாம் பொருத்தமானவராக இருப்பதாகவே நினைக்க வேண்டும். தன்னம்பிக்கையே நன்னம்பிக்கையாக மாறும் மூல மந்திரமாகும்.

    ஒரு குழந்தையைப்போல நம்பிக்கை வையுங்கள் என்பார்கள்; தாயின் தோள்களிலும் தந்தையின் கரங்களிலும் உறங்கும் குழந்தையை எந்த விதமான இரைச்சலும் நெருக்கடிகளும் தொந்தரவு தருவதில்லை. ஏனெனில் குழந்தை முழுமையாகப் பெற்றோர் மீது நம்பிக்கை வைத்திருப்பதால் அது வருத்தப்படுவதுமில்லை; அவநம்பிக்கை கொள்வதுமில்லை!. அன்பின் அடிப்படையிலேயே நம்பிக்கை கிளை விரிக்கிறது.

    ஞானியும் விஞ்ஞானியும் வேறு வேறானவர்கள். ஆயினும் இயற்கைப் படைப்பின் ரகசியங்களை உள்ளுணர்வின் அடிப்படையிலும் அறிவியலின் வழிகாட்டலிலும் ஆராய்ந்து வருபவர்கள். ஞானிக்குக் கடவுளே முதன்மை; விஞ்ஞானிக்கோ அறிவே முதன்மை.

    ஞானியும் விஞ்ஞானியும் ஓர் இடத்தில் சந்தித்து விவாதித்துக் கொண்டனர். "கடவுளைக் காட்ட முடியுமா?"ஞானியிடம் விஞ்ஞானி கேட்டார். "காற்றைக் காட்ட முடியுமா? அதைப்போலத் தான் கடவுளும்! என்றார் ஞானி விஞ்ஞானியிடம். விஞ்ஞானி விட்டபாடில்லை; "இரண்டு நிமிடம் மூச்சு விடுவதை நிறுத்திப் பாருங்கள்! நீங்கள் காற்றை உணரலாம்!"என்றார். "அதையே ஒரு ஐந்து நிமிடம் நீட்டித்துப் பாருங்கள்! கடவுளையே நேரடியாகப் பார்த்து விடலாம்!" என்றார் நகைச்சுவையாக ஞானி.

    கடவுள் நம்பிக்கை தொடங்கி சாதாரண மனிதர்கள்மீது கொள்கிற நம்பிக்கை வரை எல்லா நம்பிக்கைகளிலும் ஓர் ஆழ்ந்த அழுத்தமான பற்றுதல் கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் எல்லாவற்றிலும் சந்தேகம் எனும் தொற்று நோய் பற்றிக்கொள்ளும். சந்தேகம் பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டால் எந்தச் செயலையும் நாம் முன்னெடுத்துச் செல்ல முடியாது. அவ நம்பிக்கையின் அவதாரமாகவே நாம் மாறிவிடும் அவலநிலை அரங்கேற்றம் ஆகிவிடும். எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து உதறி, நேர்முறை எண்ணங்களை மனத்தில் நிரப்பத் தொடங்கினால் நம்பிக்கை நாற்றுகள் தாமாகவே துளிர்த்து வளரத் தொடங்கி விடும்.

    எந்தச் செயலினைத் தொடங்கும் போதும் முழு விருப்பத்துடனும் முழு நம்பிக்கையுடனும் தொடங்கினால் முழு வெற்றிதான். அதற்கு நேர்த்தியான திட்டமிடலும் நிலைத்த செயலூக்கமும் மிக மிக அவசியம்.

    நம்பிக்கையே வாழ்க்கை!

    நம்புவோம் நாளையும் நமதே!

    தொடர்புக்கு - 9443190098

    Next Story
    ×