என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உழைப்பால் உறுதி பெறுவோம்!
    X

    உழைப்பால் உறுதி பெறுவோம்!

    • குறுக்கு வழியைத் தேடுவோருக்கெல்லாம் ஏமாற்றம்தான் மிஞ்சுமேயொழிய எந்த முன்னேற்றமும் எஞ்சாது.
    • உழைப்பு சுயநலம் தாண்டிய பொதுநல இலக்கை நோக்கிப் பயணப்பட்டால் அதைவிட நன்மை தருவது உலகில் வேறு எதுவுமில்லை.

    உழைப்பில் ஆர்வமிக்க அன்பானவர்களே! வணக்கம்!

    இன்றைய இருபத்தொன்றாவது நூற் றாண்டு, மனிதர்கள் இடையராத வேகத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் நூற்றாண்டாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று நாம் மார் தட்டிக்கொள்கிறோம். இருந்தாலும், எந்த விதமான கடின உழைப்புமின்றி வசதியாக வாழ்வதற்கேற்ற வாய்ப்புகளைத் தேடியும் அலைந்து கொண்டிருக்கிறோம்.

    மனிதனின் அறிவும் திறமையும் வளர வளர, அவனது உடல் உழைப்பிற்கான தேவைகள் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. இது ஒருபக்கம் மானுடத்தின் அறிவின் வெற்றி என்றாலும், உழைப்பு என்பது வெறும் உடல் உழைப்பு மட்டுமில்லை என்பதை நாம் கவனமாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.

    திறமையும் அறிவும் மிக்க மனிதர்களில் பலர் வெற்றி பெற்ற மனிதர்களாக ஆகாமல் போவதற்குக் காரணம் அவர்களிடம் உழைப்பு இல்லாமல் போவதே ஆகும். "உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ" எனும் தமிழின் புகழ்பெற்ற உழைப்பின் வாசகத்தை எழுதியவர் பட்டினத்தார் என்னும் ஞானி என்றால் ஆச்சரியப்படுவீர்கள்! அதிலும் தவ நிலையை அடைய முயலும் துறவியர்க்காகவே அவர் இவ் வாசகத்தைச் சொல்லியிருக்கிறார் என்றால் மேலும் நாம் ஆச்சரியப்படத்தான் வேண்டும்.

    உழைப்பு என்பது மனத்தாலும் உடலாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய தொடர் முயற்சி. அதற்கு அறிவும் திறமையும் துணை புரியுமேயொழிய முழுமை வெற்றிக்கு உழைப்பு மட்டுமே தனிப்பெரும் காரணமாக அமையும். எத்தனை திறமை இருந்தாலும் உழைப்பின் முயற்சியின்றி எதுவுமே வாய்க்காது.

    ஒரு நாள் ஒரு நகரத்தில் சுவரெங்கும் ஒட்டப்பட்டிருந்த ஒரு விளம்பரச் சுவரொட்டி நகர மக்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. விளம்பரம் இதுதான்," வாழ் நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே சாப்பிட எளிய வழி கூறுகிறோம். 400 ரூபாய் மட்டும் கொண்டு வாருங்கள்!".மக்கள் எல்லோருக்கும் ஆச்சரிய அலைவரிசை!. 'என்னது? வாழ்நாள் முழுமையும் உட்கார்ந்துகொண்டே சாப்பிட வழி, வெறும் 400 ரூபாய்ச் செலவிலா?' மக்கள் ஒவ்வொருவரும் தனித்தனியாகச், சரியான சில்லறையோடு, விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த மைதானம் நோக்கிச் செல்லத் தொடங்கினர். அந்த மைதானத்தில் பெரிய கூடாரம் ஒன்று போடப்பட்டுக், கூட்ட நெரிசல் இல்லாமல் வரிசையாகச் செல்வதற்கான வசதிகள் வெகு நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தன.

    'நானூறு மட்டுந்தானா? இல்லை.. நாலாயிரமா? நாலு லட்சமா?" என மக்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் பேசிக்கொண்டே வரிசையாகக் கூடாரத்திற்குள் சென்றனர்.

    கூடாரத்திற்குள் ஆயிரக்கணக்கில் மர நாற்காலிகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன; விளம்பரம் செய்திருந்தவர்களில் ஒருவர் கூடாரத்திற்குள் கூடியிருந்த மக்களைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்," மக்களே! இங்கே பாருங்கள்! இங்கே அடுக்கி வைக்கப்பட்டுள்ள மர நாற்காலிகள் அனைத்தும் அசல் தேக்கு மரத்தினால் செய்யப்பட்டவை; நீங்கள் எப்படிப் பயன்படுத்தினாலும் இவை உடையாது!, சிதையாது!. நாங்கள் உத்திரவாதம் தருகிறோம். இந்த நாற்காலியை 400 ரூபாய் கொடுத்து நீங்கள் வாங்கிச் சென்று உங்கள் வீட்டில் போட்டால் உங்கள் ஆயுள் முழுவதும் அதில் உட்கார்ந்து கொண்டு சாப்பிடலாம்; நாங்கள் கியாரண்டி!" என்றார்.

    வந்திருந்த மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். உழைக்காமல் உட்கார்ந்து சாப்பிட வழி சொல்வானென்றால், இவன் இப்படிப் புதுவிதமாக நாற்காலி விற்று ஏமாற்றுவானென்று யாருக்குத் தெரியும். குறுக்கு வழியைத் தேடுவோருக்கெல்லாம் ஏமாற்றம்தான் மிஞ்சுமேயொழிய எந்த முன்னேற்றமும் எஞ்சாது.

    உண்மையான உழைப்பு என்பது எப்போது மற்றவர் பாராட்டும் வெற்றி நிலையை எய்தும் என்றால், அந்த உழைப்பில் தன்னலம் கடந்த பொதுநல நோக்கமும் கலந்திருக்க வேண்டும். தேநீர்க் கடையொன்றில் தேநீர் தயாரிக்கும் வேலையில் ஒருவர் இருக்கிறார்; வருகிற வாடிக்கையாளர்களுக்கு மனம் கோணாமல் தேநீர் தயாரித்துத் தயாரித்துத் தந்து, நாள்முடிவில் பணிக்கான , உழைப்பிற்கான ஊதியமும் பெற்றுச் செல்கிறார். இது அவர் ஆற்றுகிற பணி!; ஆனால் வெற்றிகரமான உழைப்பு! என்று கூறிவிட முடியாது. அன்றாடம் அலுவலகம் சென்று திரும்பி வருவதும், மற்ற பணிகளுக்குச் சென்று திரும்பி வருவதும் மாதம் முடிந்ததும் சம்பளம் வாங்குவதும் வெறும் பணி தானேயொழிய வெற்றிகரமான உழைப்பாகக் கருதப்படமாட்டாது.

    தேநீர் தயாரிப்பவர், முதல்போட்ட முதலாளிக்கு நஷ்டம் வராத அளவிற்குப் பாலின் அளவையும், தேயிலைத் தண்ணீரையும், சர்க்கரையையும் போட்டுக் கலந்து கொடுத்தாலே அவரது பணி நிறைந்து விடுகிறது. ஆனால், தேநீரை அருந்துகிற வாடிக்கையாளரின் சுவைத் தேவையை நிறைவு செய்யும் வண்ணம் கலந்து சூடாகச் சுவைப்படுத்தித் தருவதில்தான் தயாரிப்பின் திறமும் உழைப்பின் நுட்பமும் அடங்கியிருக்கிறது.

    நாம் பார்க்கிற வேலை அரசாங்க வேலையாக இருந்தாலும் தனியார் வேலையாக இருந்தாலும், ஆற்றுகிற அந்தப் பணியின்மூலம் நாலுபேர் பயன்பெறப் போகிறார்கள் என நினைத்துக்கொண்டு பணியாற்றினால் அதைவிடச் சிறந்த உழைப்பு வேறு எதுவுமில்லை. அப்படிப் பார்க்கும் போது ஆடுமாடு மேய்ப்பது முதல், அரசாங்கத்தின் மிக உயர்ந்த நிருவாகப் பணி வரை எல்லாவற்றிலும் பொதுநன்மை கருதுகிற அக்கறை கலந்திருந்தால், நீங்கள் தான் ஆகச் சிறந்த உழைப்பாளர்.

    ஒரு கிராமத்தில் ஒரு மனிதன் கடைந்தெடுத்த சோம்பேறி. உழைத்துச் சாப்பிடவேண்டும் என்கிற எண்ணம் துளியும் இல்லாதவன். வேலைக்குப் போகாமல் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் இருக்கிறானே என்று இவன்மீது பரிதாபப்பட்டு, அவனுக்கு அவனது உறவினர்கள் அரிசி பருப்புக் கொடுத்துச் சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ள உதவி வந்தனர். ஆயினும் அவனுக்குச் சமைத்துச் சாப்பிடவும் சோம்பேறித்தனம். ஒருநாள் திடீரென அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றுவிட்டான்.

    நாள்தோறும் அங்குள்ள அருவியில் குளிப்பது, பசித்தால் சமைக்கத் தேவைப்படாத பழங்களை மரங்களிலிருந்து பறித்து உண்பது, பெரிய நிழல்தரும் மரங்களின்கீழ் படுத்து உறங்குவது என்பதை வழக்கமாக்கிக் கொண்டான். கொஞ்சநாள் அவனது வாழ்க்கை உழைப்பு ஏதுமின்றி நிம்மதியாக இப்படியாகக் கழிந்தது. ஆயினும் பழங்களை மட்டுமே உண்டு வாழ்கிற வாழ்க்கை சிலநாளில் சலித்துப் போனது. வேறுவழி தேடிக் காடுகளில் அலையத் தொடங்கினான்.

    அப்போது ஓர் இடத்தில் இரண்டு கால்களையும் இழந்த நரி ஒன்று இருப்பதைப் பார்த்தான்; இரண்டு கால்களும் இல்லாத இந்த ஜீவன் எப்படித் தனது உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்கிறது என யோசித்தான். அப்போது அங்கே ஒரு புலி ஒரு இறைச்சித் துண்டைக் கவ்விக்கொண்டு வந்து அந்த நரியின் முன்னே போட்டது. காலிழந்த நரியும் நன்றிப் பெருக்கோடு அந்தப் புலியைப் பார்த்து விட்டு இறைச்சியை ஆவலோடு உண்ணத் தொடங்கியது.

    ஒவ்வொரு நாளும் தான் வேட்டையாடிப் பெற்ற இறைச்சியின் ஒருபகுதியை, வேட்டையாடும் வாய்ப்பிழந்த நரிக்காகப் புலி கொண்டு வந்து தருகிறது என யூகித்து அறிந்து கொண்டான். "ஆகா! கடவுளின் கருணையே கருணை! உழைக்க முடிந்தவர்கள், உழைக்க முடியாதவர்களுக்கு உதவுகிற அற்புதச் செயல்பாட்டை, விலங்குகளுக்கே இறைவன் கற்றுத் தந்திருக்கிறபோது, மனிதர்களான நமக்கும் வழிகாட்டாமலா இருக்கப் போகிறார்!".

    அந்தச் சோம்பேறி மனிதன் முடிவெடுத்தான். இனிமேல் உணவு தேடி வனத்திற்குள் செல்லப் போவதில்லை. மனிதர்கள் வந்துபோகிற வனத்தின் பாதையோரத்தில் அமர்ந்து விடுவது; நரிக்குப் புலி கொண்டுவந்து போட்டது போல நமக்கும் உணவுகொடுக்க யாராவது ஒரு மனிதன் வருவான் என்று.

    பாதையோரத்தில் அமர்ந்த அவன் யாராவது மனிதர் வருவார்; உணவுகொண்டு வந்து தருவார்! எனக் காத்திருந்தான். மூன்று நாட்களாக யாரும் வரவில்லை; நம்பிக்கையோடு காத்திருந்தான். கடைசியில் ஒரு துறவி அவ்வழியே வந்தார்; அவர் கையில் உணவு எதுவுமில்லை.

    துறவியிடம் தான் உணவுக்காகக் கடவுளை நம்பிக் காத்திருக்கும் சங்கதியைச் சொன்னான். காலிழந்த நரிக்குப் புலியை அனுப்பி உணவிட்ட இறைவன், ஏன் எனக்கு உதவ யாரையுமே அனுப்பவில்லை எனக் கேட்டான்.

    துறவி சிரித்துக்கொண்டே சொன்னார்," இயலாதவர்க்கு உதவுவதில் இறைவன் எப்போதும் முன் நிற்பவன் தான். நீ உன்னை இயலாத நரியாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்!; ஆனால் இறைவன் உன்னை அடுத்தவர்க்கு உதவும் புலியாக நினைத்துக் கொண்டிருக்கலாம்!"என்று கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

    அப்போதுதான் அவனுக்கு பிறப்பின் பெருமையும் உழைப்பின் மகத்துவமும் புரியத் தொடங்கியது. ஊருக்குள் சென்று தனக்காக உழைத்து அடுத்தவர்க்கும் உதவும் பணியைத் தொடங்க வேண்டும் என்று புறப்பட்டான். ஞானம் பெற்றது காடாக இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்துவது நாடாக இருக்க வேண்டும் என்கிற புதுவித உழைப்பின் சித்தாந்தம் அவனுள் உதிக்கத் தொடங்கி விட்டது.

    உழைப்பு மனிதனைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது; கடின உழைப்பினால் ஒரு மனிதனுக்கு நோய் வந்ததாக வரலாறு கிடையாது. உழைக்காது உடம்பு பெருத்திருப்போர்க்கே எல்லா நோய்களும் வந்து விடுகின்றன. கடின உழைப்பு என்பது உடம்பையும் மனத்தையும் வருத்திச் செய்கிற வேலை அல்ல. பிறர் செய்யத் தயங்குகிற வேலையை மன உறுதியோடும் மன விருப்பத்தோடும் செய்து முடிப்பதே கடின உழைப்பு.

    உழைப்பிற்கு மூலதனமாகக் காசுபணம் எதுவும் தேவைப்படுவதில்லை. முயற்சியே உழைப்பின் மூலதனம். "முயற்சி தன் மெய் வருத்தக் கூலிதரும்" என்பது திருவள்ளுவ வாக்கு. எந்த முயற்சியையும் தளர்வடையாமல் மேற்கொள்வதற்கு அந்தச் செயலின்மீது இடையறாத ஆர்வம் வேண்டும். அந்த ஆர்வம் அந்த உழைப்பினால் ஏற்படப்போகும் பயன் விளைச்சலை மையமிட்டதாக அமையும்.

    மனித வாழ்வியலில் உழைப்பு மட்டுமே உறுதியான உடலையும், நிலைத்த மகிழ்ச்சியையும், விழுமியங்களோடு கூடிய நேர்மையான வாழ் நெறிமுறைகளையும் தரும். அந்த உழைப்பும் சுயநலம் தாண்டிய பொதுநல இலக்கை நோக்கிப் பயணப்பட்டால் அதைவிட நன்மை தருவது உலகில் வேறு எதுவுமில்லை.

    உழைப்பு! உழைப்பு! உழைப்பு!

    வேறு என்ன வேறு என்ன வேண்டும் பிழைப்பு?!

    தொடர்புக்கு - 9443190098

    Next Story
    ×