என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

ஞானம் தரும் சுவாமிமலை
- முருகப்பெருமான் மனம் இரங்கவில்லை. பிரம்மனுக்கு கூடுதல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார்.
- உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் தெரியுமா?” என்று கேட்டார்.
ஓம் எனும் பிரணவ மந்திரம் மகத்துமானது. இந்த மந்திர ஓசையால்தான் உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பிரணவ இந்த மந்திரத்துக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா? இந்த கேள்வியை ஒரு தடவை முருகப்பெருமான் படைப்பு தொழில் செய்யும் பிரம்மனை பார்த்து கேட்டார். அதற்கு முன்பு வரை பிரம்மன் ஆணவத்தின் உச்சத்தில் இருந்தார்.
உலகில் உள்ள எல்லா உயிரினங்களையும் படைக்கும் ஆற்றல் இருப்பதால் உலகிலேயே தனக்கு நிகர் வேறு யாரும் இல்லை என்ற ஆணவம் அவர் மனதில் இருந்தது. இதை அறிந்த முருகப்பெருமான் அவரது ஆணவத்தை அடக்கும் நோக்கத்திற்காகவே பிரணவ மந்திரத் திற்கு அர்த்தம் சொல்லும்படி கேட்டார்.
பிரம்மனுக்கு அர்த்தம் தெரியவில்லை. என்ன சொல்வது என்று யோசித்தார். உடனே முருகப்பெருமான் பிரம்மனின் தலையில் "நச்"சென கொட்டினார். பிரம்மனுக்கு 4 தலைகள் உண்டு. 4 தலைகளிலும் மாறி மாறிக் கொட்டினார். வலி தாங்காமல் பிரம்மன் கதறினார்.
என்றாலும் முருகப்பெருமான் விடவில்லை. அவர் அடித்த அடியில் பிரம்மன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவரை எழுப்பிய முருகப்பெரு மான் தனிமை சிறையில் அடைத்து வைத்தார். முருகப்பெருமானிடம் இப்படி வந்து சிக்கிக் கொள்வோம் என்பதை பிரம்மன் எதிர்பார்க்கவில்லை. தனிமை சிறையில் வாடி வதங்கினார்.
அதன் பிறகும் முருகப்பெருமான் மனம் இரங்கவில்லை. பிரம்மனுக்கு கூடுதல் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நினைத்தார். அதன்படி பிரம்மனிடம் இருந்த படைப்பு தொழிலை பறிமுதல் செய்து கொண்டார். பிறகு உலகின் படைப்பு தொழிலை முருகப்பெருமானே செய்யத் தொடங்கிவிட்டார்.
பிரம்மன் தனிமை சிறையில் அடைக்கப்பட்ட தகவல் பிரபஞ்சம் முழுக்க பரவியது. இதுபற்றி அறிந்த மகாவிஷ்ணு மிகவும் வருத்தப்பட்டார். பிரம்மனை விடுவிக்க என்ன செய்யலாம் என்று யோசித்தார். முருகப்பெருமான் யார் சொன்னால் கேட்பார் என்று ஆய்வு செய்தார்.
சிவபெருமானிடம் முறையிட்டால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும் என்று முடிவுக்கு வந்தார். உடனே சிவபெருமானை சென்று பார்த்தார். பிரம்மன் தனிமை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தகவலை சொல்லி அவரை விடுவிக்க ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டார்.
இதை அறிந்த சிவபெருமானும் ஆச்சரியப்பட்டார். பிரம்மனுக்கு ஏன் இவ்வளவு பெரிய தண்டனை கொடுக்கப்பட்டது என்று கேட்டார். ஓம் எனும் பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் தெரியாததால் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்டு சிரித்த சிவப்பெருமான் உடனடியாக முருகப்பெருமானை தொடர்பு கொண்டார். சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் பிரம்மனை விடுதலை செய்யும்படி உத்தரவிட்டார். தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்பதால் முருகப்பெருமானும் உடனடியாக பிரம்மனை விடுதலை செய்தார்.
இதனால் சிவபெருமான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். முருகனை அழைத்து தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு பாசம் பொங்க பார்த்தார். பிறகு, "முருகா.... நீ இன்னும் எங்களுக்கு எல்லாம் சிறுவன்தான். உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்கு அர்த்தம் தெரியுமா?" என்று கேட்டார்.
உடனே முருகப்பெருமான் சிரித்துக் கொண்டே தெரியும் என்றார். இதைக் கேட்ட சிவபெருமானுக்கு மீண்டும் ஆச்சரியம் ஏற்பட்டது. பிரம்மனுக்கே தெரியாத பிரணவ மந்திரம் உனக்கு எப்படி தெரியும்? அதை எனக்கு சொல்ல முடியுமா? என்று கேட்டார்.
அதற்கு முருகப்பெருமான், "மந்திரத்தை எல்லோருக்கும் கேட்கும்படி சொல்ல முடியாது" என்றார். உடனே சிவபெருமான், "என் காதில் சொல்" என்றார். அதன்படி சிவபெருமான் காது அருகே சென்று ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் அர்த்தத்தை முருகப்பெருமான் விளக்கமாக கூறினார். இதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்த சிவ பெருமான் முருகப் பெருமானை வாழ்த்தினார்.
இதனால்தான் "அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பையா" என்ற பெயர் முருகப்பெருமானுக்கு ஏற்பட்டது. தகப்பன் சாமி என்ற பெயரும் முருகப்பெருமானுக்கு ஏற்பட்டது இதனால்தான்.
இந்த நிகழ்ச்சி நடந்த இடம் சுவாமிமலை. இந்த தலம் கும்பகோணத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கும்பகோணம் யாத்திரை மேற்கொள்பவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
சுவாமி மலையில் முருகப்பெருமான் குருவாக இருந்து அருள்பாலிக்கிறார். இதனால் இந்த தலத்துக்கு குருமலை என்ற பெயரும் உண்டு. தஞ்சை மாவட்டத்தில் எங்கும் மலைகள் கிடையாது. எனவே இந்த சிறிய மலையில் முருகன் வீற்றிருப்பது தனி சிறப்பாக கருதப்படுகிறது.
சிறு குன்றில் வீற்றிருக்கும் முருகனை தரிசிக்க 60 படிக் கட்டுகள் ஏறி செல்ல வேண்டும். முதலில் மகா மண்டபத்துக்குள் நுழைந்ததும் கொடி மரம் அருகே கண் கொடுத்த விநாயகர் இருக்கிறார். அவரை வழிபட்டு விட்டு முருகப் பெருமானை வழிபட செல்லுங்கள். கருவறை யில் முருகப்பெரு மான் வலது கையில் தண்டம் ஏந்தியபடி முத்திரை காட்டியபடி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். உச்சிகுடுமி யுடன் இடது கையை தொடையில் வைத்தபடி யோக நிலையில் ஒரு குரு போல காட்சி அளிக்கும் அந்த முருகப்பெருமானை பார்த்தாலே நமக்கு ஞானம் வந்து விடும்.
அவர் கையில் வைத்திருக்கும் வேலுக்கு தனி சக்தி உண்டு. அந்த வேல் வஜ்ரவேல் என்று அழைக்கப்படுகிறது. அந்த வேலுக்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய 3 சக்திகளின் ஒருங்கிணைந்த ஆற்றல் இருப்பதாக கணித்துள்ளனர்.
இந்த முருகனை அலங்கார பிரியர் என்றும் சொல்கிறார்கள். விபூதி அபிஷேகம் செய்யும்போது வயதான ஞானி தோற்றத்தில் முருகப்பெருமான் மாறி காட்சி அளிப்பதாக சொல்கிறார்கள். அதுபோல சந்தனம் அபிஷேகம் செய்யும்போது கம்பீரமான பாலசுப்பிர மணியர் வடிவில் காட்சி தருகிறார்.
முருகப்பெருமான் நிற்கும் பீடம் சிவலிங்க ஆவுடை போல அமைக்கப்பட்டுள்ளது. அதன் மீதுதான் முருகப்பெருமான் இருக்கிறார். இது பாணலிங்கத்தை பார்ப்பதை போன்ற உணர்வை ஏற்படுத்தும். எனவேதான் இந்த தலத்தில் சிவனே முருகனாகவும், முருகனே சிவனாகவும் இருப்பதாக சான்றோர்கள் கருதுகிறார்கள்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 4-வது படை வீடாக சுவாமிமலை உள்ளது. இந்த தலத்தில் தல மரமாக நெல்லி மரம் இருக்கிறது. பார்வதிதேவி பூலோகத்துக்கு வந்தபோது இந்த தலத்தில் தவம் இருந்தாளாம். மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு செல்ல அவளுக்கு மனம் வரவில்லை.எனவே பார்வதிதேவியே நெல்லி மரமாக மாறி தல விருட்சமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
நக்கீரர், அருணகிரி நாதர் இந்த தலத்தில் முருகப்பெருமானை புகழ்ந்து பாடியுள்ளனர். அந்த பாடல்களை பாடினால் சுவாமிமலை முருகப் பெருமான் அருளை மிக எளிதாக பெற முடியும். குறிப்பாக எதிரிகள் தொல்லை ஏற்பட்டால் இந்த தலத்தில் ஒரு அர்ச்சனை செய்தாலே போதும் நீங்கி விடும் என்கிறார்கள்.
இந்த முருகப்பெருமான் செல்வம், குழந்தை வரம், ஆரோக்கியம், வேலை வாய்ப்பு, பதவி உயர்வு போன்றவற்றை தர வல்லவர். கல்வியில் சிறப்பு பெற்று உயர்ந்த ஞானம் பெற வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தவறாமல் சுவாமிமலை முருகப்பெருமானை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.
கும்பகோணத்துக்கு யாத்திரை செல்லும் போது புறநகரில் உள்ள பல்வேறு ஆலயங்களுக்கும் செல்ல வேண்டி இருக்கும். அதற்கேற்ப உங்கள் பயணத்தை அமைத்துக் கொண்டால் சுவாமிமலையில் ஞானம் தரும் முருகப்பெருமானை மிக எளிதாக வழிபட்டு விட்டு வரலாம்.
திருக்கார்த்திகை திருவிழா இந்த தலத்தில் 10 நாட்கள் மிக மிக விமரிசையாக நடைபெறும். அப்ேபாது டெல்டா மாவட்டங்க ளில் உள்ள மக்கள் சுவாமிமலைக்கு படை யெடுத்து வரு வார்கள். அந்த 10 நாட்களும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருவார்கள். எனவே இதை கருத்தில் கொண்டு உங்களது சுவாமிமலை பயணத்தை அமைத்துக் கொள்ளுங்கள்.
சித்திரை மாதம் 10 நாட்கள் பிரமோற்சவம் நடைபெறும். வைகாசி விசாகம் திருவிழாவும் சிறப்பாக நடத்துவார்கள். அந்த சமயங்களில் சென்றால் முருகப்பெருமானை பலவிதமான அலங்காரங்களில் தரிசிக்கலாம்.
தமிழ், ஆங்கில புத்தாண்டு நாட்களில் திருத்தணியில் நடத்துவது போல இந்த தலத்திலும் திருப்படி திருவிழா நடத்துகிறார்கள். ஒவ்வொரு படியாக பூஜை செய்து நடத்தப்படும் அந்த விழா கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
பொதுவாக சுவாமிமலைக்கு செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்களின் வருகை அதிகளவு இருக்கும். சென்னை மக்கள் செவ்வாய்க்கி ழமை சிறுவாபுரிக்கு எப்படி படையெ டுக்கி றார்களோ அப்படி சுவாமிமலைக்கு செவ்வாய்க்கிழமைகளில் ஞானத்தை தேடி வருபவர்களின் எண்ணிக்கை அதிகம். முடிந்தால் நீங்களும் செவ்வாய்க் கிழமை சென்று சுவாமிமலை ஆலயத்தில் தரிசிப்பது நல்லது.
முருகப்பெருமானிடம் ஞானம் பெற்று விட்டால் மட்டும் போதுமா? அதை அடித்தளமாக வைத்து கல்வி, கேள்வி போன்ற கலைகளில் மேம்பாடு பெற வேண்டும் அல்லவா? அதற்கு நீங்கள் கூத்தனூர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். அடுத்த வாரம் கூத்தனூர் தலம் பற்றி பார்க்கலாம்.






