என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: உயிர்தப்பிய அதிசயம்...!
    X

    மீனா மலரும் நினைவுகள்: உயிர்தப்பிய அதிசயம்...!

    • தூரத்தில் படகு வரும் சத்தம் கேட்டதும் அதோ வந்திட்டாங்க... நம்மை காப்பாத்திடுவாங்க... என்று மனதில் நிம்மதி பிறந்தது.
    • மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போலாகிவிட்டது. சிரமப்பட்டது சரி. ஆனால் படமாவது ‘ஹிட்’ ஆகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    மிகப்பெரிய ஏரி...

    எதிர் பாராமல் ஏரிக்குள் சிக்கி கொண்டோம். எப்படி மீளப்போகிறோம் என்ற பயம்! ஒரு பக்கம் பயமுறுத்தியது.

    கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தண்ணீர்! யார் காப்பாற்ற வருவார்கள் என்றும் தெரியவில்லை. நேரம் செல்ல செல்ல பயம் மனதை கவ்வியது. எனக்கு நீந்த தெரியும். தண்ணீரில் குதித்து நீந்தி கரை சேருவோமா என்று யோசித்தேன். ஆனால் அவ்வளவு தூரம் நீந்த முடியுமா என்ற தயக்கமும் இருந்தது.

    இருந்தாலும் வேறு வழியில்லை என்று முடிவு செய்து அஜய் என்ன செய்வது..? தண்ணீரில் குதித்து நீந்துவோமா என்றேன். அப்போது தான் தெரிந்தது அவர் என்னை விட அதிகமாக பயந்து போய் இருந்திருக்கிறார். அவருக்கு நீந்தவும் தெரியாது என்றார்.

    என்ன செய்வது...? சற்று தூரத்தில் தண்ணீருக்குள் ஒரு பாறைக்குன்று தெரிந்தது. எப்படியாவது அந்த பாறைக்கு சென்று விட்டால் போதும். தைரியமாக இருக்கலாம். எப்படியாவது படக்குழுவினர் நம்மை காப்பாற்ற ஏதாவது செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைத்தேன்.

    அதற்கு மிதவையை நகர்த்தி கொண்டு அந்த பகுதிக்கு செல்ல வேவண்டும். அது எப்படி? துடுப்பும் இல்லை. கைகளையே துடுப்பாக்கி கொள்ளலாம் என்று முடிவு செய்து மிதவையில் அமர்ந்து தண்ணீரை துளாவி விட தொடங்கினேன்.

    மறுபக்கம் அவருக்கு தண்ணீரை துளாவவும் தெரியவில்லை. அதையும் சொல்லி கொடுத்தேன். மிதவை மெல்ல மெல்ல பாறையை நோக்கி நகர்ந்தது. பத்து, பதினைந்து நிமிடங்களுக்குள் பாறையை நெருங்கி விட்டோம். அஜய் முதலில் பாறையில் குதித்து நான் ஏறுவதற்கு கை கொடுத்து உதவினார்.

    தண்ணீரைவிட்டு பாறை யில் பாதுகாப்பாக வந்து சேர்ந்து விட்டோம். இனி எப்போது மீட்க வரு வார்கள்...? எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். அந்த ஏரியில்

    அந்த ஏரியில் படகு, பரிசல் போக்குவரத்து எதுவும் கிடையாது எங்களை மீட்பதற்குத் தான் படகு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    நேரம் நகர்ந்து கொண்டிருந்தது. காலையிலும் சாப்பிடாததால் பசி வயிற்றை வதைத்தது. உச்சி வெயில் வேறு தாகத்தால் நாவும் வறண்டது. சுற்றிலும் தண்ணீர் இருந்தும் குடிப்பதற்கு வாய்ப்பில்லையே! என்ன செய்வது?

    தாகத்தால் நாவும் வறண்டது பசியால் வயிறும், பயத்தால் இதயமும் தான் துடித்தது. நேரம் சென்றது தான் மிச்சம் ஆனால் யாரும் மீட்க வருவது போல் தெரியவில்லை.

    மறுபுறத்தில்.....

    கரையில் இருந்த படக்குழுவினர் எங்களை மீட்பதற்காக கயிறு தயார் செய்து இருக்கிறார்கள். அந்த கயிற்றின் ஒரு முனையை டிராலியில் கட்டி விட்டு, மறு முனையை மிதவையில் கொண்டு கட்டி இழுப்பதற்காக ஒருவர் கயிற்றை எடுத்து கொண்டு ஏரியில் குதித்து நீந்தியிருக்கிறார்.

    கொஞ்சதூரம் நீந்தியவர் நீந்த முடியாமல் திணறியிருக்கிறார். விட்டால் அவர் தண்ணீரில் மூழ்கி விடுவார் என்று எப்படியோ சிரமப்பட்டு அவரை மீட்டு இருக்கிறார்கள்.

    அந்த முயற்சியும் தோல்வி அடைந்ததால் எங்களை எப்படி மீட்பது என்று நினைத்து பதற்றத்தில் இருந்து இருக்கிறார்கள். படகுக்கு என்ன செய்வது? படகு வேண்டுமென்றால் செகந்திரபாத்துக்கு தான் செல்ல வேண்டும். என்று கூயிருக்கிறார்கள்.

    உடனடியாக செகந்திரா பாத்துக்கு ஆட்களை அனுப்பி ஒரு மோட்டார் படகை ஏற்பாடு செய்து லாரியில் ஏற்றிக்கொண்டு வந்திருக்கிறார்கள். படகு புறப்பட்டதும் எல்லோர் பார்வையும் ஏரி மீது தான்.

    தூரத்தில் படகு வரும் சத்தம் கேட்டதும் அதோ வந்திட்டாங்க... நம்மை காப்பாத்திடுவாங்க... என்று மனதில் நிம்மதி பிறந்தது.

    படகு நெருங்கி வர வர மனதில் அப்படி ஒரு சந்தோசம். அப்பாடா.. இனி எப்படியாவது தப்பிவிடலாம் என்ற சந்தோசம் அது.

    படகு வந்தது. எங்களை சுமந்தபடி கரை திரும்பியது. காலை 12 மணியளவில் தண்ணீரில் சிக்கிய நாங்கள் கரை திரும்பிய போது மாலை சுமார் 4 மணி இருக்கும் எங்களை பார்த்த பிறகு தான் படக்குழுவினருக்கும் நிம்மதி. அதுவரை அவர்களும் தவித்தபடி தான் இருந்து இருக்கிறார்கள்.

    அன்றுடன் ஷூட்டிங்கை முடித்து விட வேண்டும் என்பது தான் திட்டம். ஆனால் முடியவில்லை.

    மீதி காட்சியை இன்னொரு நாள் வைத்துக் கொள்ளலாம் என்று அவசர அவசரமாக விமானத்தை பிடித்து சென்னை திரும்பினோம்.

    நடந்த சம்பவத்தை பற்றி நினைக்க கூட நேரம் இல்லை. சென்னை திரும்பியதும் உடனடியாக அடுத்த படம் ஷூட்டிங்.

    அது ஒரு இந்திப்படம். பிர்லா கோளரங்கத்தில் இரவு 9 மணிக்கு தொடங்கிய ஷூட்டிங் அதிகாலை 3 மணி வரை தொடர்ந்தது. பின்னர் வீடு திரும்பி சிறிது நேரம் தூங்கிவிட்டு மீண்டும் காலையில் எழுந்து அடுத்த ஷூட்டிங் புறப்பட்டேன். அந்த காலகட்டத்தில் அப்படித்தான். காலில் சக்கரத்தை கட்டிக் கொண்டு ஓடுவது போல் ஓடிக்கொண்டிருந்தேன்.

    ஆனால் என்னோடு நடித்த ஹூரோ அஜய் மிகவும் பயந்துவிட்டார். காய்ச்சல், வாந்தி, பேதி என்று நான்கைந்து நாட்கள் வீட்டிலேயே முடங்கி விட்டார் என்றார்கள்.

    மிகப்பெரிய கண்டத்தில் இருந்து தப்பியது போலாகிவிட்டது. சிரமப்பட்டது சரி. ஆனால் படமாவது 'ஹிட்' ஆகி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. அது கூடுதலான மனச்சுமையைதான் கொடுத்தது.

    இன்னொரு விஷயம். ஆபத்தில் சிக்கி மீண்ட அந்த ஏரி பக்கம் அதன் பிறகு இதுவரை சென்றதில்லை.

    எனது சினிமா வாழ்க்கையில் இது திகில் நிறைந்த மறக்க முடியாத அனுபவம்.

    அடுத்த வாரம் ஒரு ராஜகுமாரனுடனான சந்திப்பு பற்றிய சுவையான தகவல்களுடன் சந்திக்கிறேன்...

    (தொடரும்.)

    Next Story
    ×