என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்று வினா எழுப்பி விடையாக வாழ்ந்த புரட்சித்தலைவர்
    X

    மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்று வினா எழுப்பி விடையாக வாழ்ந்த புரட்சித்தலைவர்

    • தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டதும் மக்களின் பேராதரவால் அ.தி.மு.க. எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கி மாபெரும் வெற்றிப்பெற்றார்.
    • முதலமைச்சராக பதவியேற்றவர், தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று தேர்தல்களிலும் அமோக வெற்றி பெற்று முதலமைச்சராகவே மறைந்தார்.

    மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36-வது நினைவு நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும், மனிதநேய அறக்கட்டளையின் தலைவருமான சைதை துரைசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திரையுலகில் ஒரு புதிய வரலாறும், அரசியலில் ஒரு மாபெரும் புரட்சியும் உருவாக்கி, உலக மக்கள் அனைவராலும் போற்றிப்பாராட்டும் வகையில் வாழ்ந்து வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர்.

    தி.மு.க. இயக்கத்தை வளர்த்து, அரியணையில் அமர்த்தி, அண்ணாவை முதலமைச்சராக்கி, அவரது மறைவுக்கு பிறகு கருணாநிதியை முதலமைச்சராக்கிய முக்கியமானவர்களில் முதன்மையானவர் எம்.ஜி.ஆர்.. தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டதும் மக்களின் பேராதரவால் அ.தி.மு.க. எனும் அரசியல் இயக்கத்தை உருவாக்கி மாபெரும் வெற்றிப்பெற்றார்.

    முதலமைச்சராகப் பதவியேற்றவர், தொடர்ந்து அடுத்தடுத்த மூன்று தேர்தல்களிலும் அமோக வெற்றிபெற்று முதலமைச்சராகவே மறைந்தார். மனிதநேயத்தின் அடையாளமாக, அனைத்து மக்களுக்குமான சேவை நிறைந்த ஆட்சி, நேர்மையான அதிகாரம் என்ற வகையில் 10 ஆண்டுகள் பொற்கால ஆட்சி நடத்தினார்.

    அவருக்குப் பிறகு ஜானகியம்மாள், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் முதலமைச்சராவதற்கும் எம்.ஜி.ஆரின் செல்வாக்குதான் அடிப்படை காரணம். தமிழகத்தின் தனிப்பெரும் சக்தியாக, ஒட்டுமொத்த மக்களின் பேராதரவைப் பெற்ற அவதாரப் புருஷராக, திரைப்படத்தை அறிவாயுதமாகப் பயன்படுத்திய ஒப்பற்ற கலையுலக மேதமையாக இன்றுவரை மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதநேயரின் நினைவுநாள் இன்று.

    கடையேழு வள்ளல்கள் மக்கள் பணத்தை வாரி வழங்கி வள்ளலானார்கள். ஆனால் திரைப்படத்தில் நடித்து, தான் உழைத்து சம்பாதித்த பணத்தை கடைசி வரை வாரி வழங்கி வள்ளல்களுக்கெல்லாம் வள்ளலாக வாழ்ந்து வழிகாட்டியவர் எம்.ஜி.ஆர். தனது சொந்த நிதியில் இருந்து அறக்கட்டளை தொடங்கி இலவசக்கல்வி, இலவச மருத்துவமும் மக்களுக்கு கொடுத்தார்.

    அவரது பண்புகளை பின்பற்றியே, யாரிடமிருந்தும் நன்கொடை பெறாமல் என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் நிதியில் இருந்து மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். அறக்கட்டளையை தொடங்கி பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் அரசுப்பணியில் சேருவதற்கான பயிற்சியை 17 ஆண்டுகளாக தொடர்ந்து இலவசமாக வழங்கிவருகிறோம்.

    மனிதநேய அறக்கட்டளையில் இருந்து ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப்பணித்தேர்வுகள், டி.என்.பி.எஸ்.சி., சிவில் நீதிபதி, மாவட்ட நீதிபதி, அரசு உதவி வக்கீல் போன்ற உயர்பதவிகளுக்கு 3,708 மாணவர்களும், குரூப்-4 மற்றும் இதர துணைநிலை பதவிகளுக்கு 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், 170 சாதிப்பிரிவுகளிலிருந்து தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பாடத்திட்டத்துடன் எங்கள் மாணவர்களுக்கு எம்.ஜி.ஆரின் மனிதநேயம், நேர்மை, திறமை, பொறுமை போன்ற பண்புகளையும் கற்றுத்தருகிறோம்.

    மாணவர்களுக்கு எம்.ஜி.ஆர். கொண்டுவந்த சத்துணவுத்திட்டம் போன்று பொதுமக்களுக்கு மூன்று வேளையும் குறைந்த செலவில் உணவு தர வேண்டும் என்ற எண்ணத்தில் உருவானதுதான், மனிதநேய அறக்கட்டளை மூலம் சைதாப்பேட்டையில் நடத்தப்பட்ட மலிவு விலை உணவகம். ஜெயலலிதா என்னை பெருநகர சென்னை மேயராக்கியதும், இந்த மலிவு விலை உணவகத்தின் நீட்சியாக அம்மா உணவகத்தை மேம்படுத்தி, ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் முதலில் சென்னையிலும், பின்னர் தமிழகம் முழுவதும் கொண்டுசென்று எளிய மக்களின் வாழ்வாதாரத்திற்கு உத்தரவாதம் கொடுத்தோம்.

    எம்.ஜி.ஆரின் அறிவுரைகளை அரச கட்டளையாக ஏற்றுக்கொண்டு, அவரது வழியில் நேர்மை, சேவை, தூய்மை போன்ற பண்புகளைக் கடைப்பிடித்து குடிசை மாற்று வாரிய உறுப்பினர், எம்.எல்.ஏ., மேயர் ஆகிய பதவிகளில் சுயநலமற்ற முழுநேர சேவையாளனாகப் பணியாற்றினேன்.

    தமிழக முதலமைச்சராக பதவியில் இருந்த எம்.ஜி.ஆர். அரசு சலுகைகளை நிராகரித்து தன் சொந்த செலவில் பணியாற்றியது போலவே, நானும் மேயர் பதவியில் இருந்தபோது அரசு சலுகைகளை முற்றிலும் நிராகரித்து என் சொந்த செலவில் பணியாற்றினேன். 'வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்' என்று வினா எழுப்பி, அதற்கு விடையாகவும் வாழ்ந்து காட்டிய எம்.ஜி.ஆரின் பாதையில் என்னை போன்று கோடிக்கணக்கான பக்தர்கள், ரசிகர்கள் இன்றும் எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் தங்கள் சொந்த பணத்தை செலவழித்து சேவை செய்து அவரது புகழ்பரப்பி வருகிறார்கள்.

    சக பக்தர்களுடன் இணைந்து எம்.ஜி.ஆரின் புகழை அடுத்த தலைமுறையினருக்கு கடத்துவதில் கிடைக்கும் மகிழ்ச்சியும், பேரானந்தமும் வேறு எந்த பதவியிலும் கிடைக்கவில்லை. எனவே எம்.ஜி.ஆரால் எனக்கு கிடைக்கப்பெற்ற இந்த பெருவாழ்வில், இனி தேர்தல் அரசியலில் இருந்து முழுமையாக விலகி நின்று, மனிதநேய அறக்கட்டளை மூலம் ஆயிரக்கணக்கில் வெற்றி அடைந்திருக்கும் மாணவர்கள் எண்ணிக்கையை லட்சக்கணக்கில் உயர்த்துவதற்கும், சக மனிதர்களுக்கு முழுநேரமும் அர்ப்பணிப்புடன் சேவைபுரிந்து புரட்சித்தலைவரின் புகழ் பரப்புவதையுமே என் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டிருப்பேன் என்று இந்நாளில் உறுதியேற்கிறேன்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×