என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மனச்சாந்தி பெறும் வழி!
    X

    மனச்சாந்தி பெறும் வழி!

    • அன்னங்களைப் பார்த்தவாறே சற்றுநேரம் அமைதியாய் இருந்த புத்தர், விழிகளை மூடி தியானத்தில் ஆழலானார்.
    • நம் மனமும் ஓர் ஏரிதான். அதன் இயல்பு எப்போதும் கலக்கமில்லாமல் தெளிந்து அமைதியாக இருப்பதுதான்.

    புத்தர் தன் சீடர்களுடன் பயணப்பட்டுச் சென்று கொண்டிருந்தார்.

    அவர்கள் செல்லும் வழியில் பூத்துக்குலுங்கும் மலர்வனம் ஒன்றும் சற்றுத் தொலைவில் ஓர் அழகிய ஏரியும் தென்பட்டன.

    மலர்வனத்தில் பலவண்ண மலர்கள் சிலுசிலுவென்று தென்றல் காற்றில் அசைந்தாடின. அந்தப் பிரதேசத்தின் இயற்கை அழகு பார்க்கும் எவர் மனத்தையும் கொள்ளை கொள்வதாக இருந்தது.

    மலர்வனத்தில் சற்றுநேரம் தங்கி தியானத்தில் ஈடுபடலாம் என முடிவு செய்தார் புத்தர். மலர்வனத்தின் நடுவே இருந்த அரச மரத்தின் நிழலில் சம்மணமிட்டு அமர்ந்துகொண்டார். அவரின் முகப்பொலிவு அந்த இடத்தையே பிரகாசப்படுத்தியது.

    அங்கிருந்து பார்த்தால் தொலைவில் இருந்த ஏரியின் அழகிய காட்சி தென்பட்டது. பற்பல வெள்ளை நிற அன்னங்கள் ஏரியில் உல்லாசமாக நீந்திக் கொண்டிருந்தன.

    அன்னங்களைப் பார்த்தவாறே சற்றுநேரம் அமைதியாய் இருந்த புத்தர், விழிகளை மூடி தியானத்தில் ஆழலானார். அவர் சீடர்களெல்லாம் எதிரே அமர்ந்து தியானம் செய்யலானார்கள்.

    அப்போது மலர்வனத்தின் வெளியே இருந்த மண்பாதை வழியே ஒருவன் ஓர் எருமை மாட்டை ஓட்டிக் கொண்டு சென்றான். அவன் மாட்டோடு ஏரியை நெருங்கினான். அந்த எருமையை ஏரித் தண்ணீரில் நீராட்டுவதே அவன் எண்ணம்.

    அவன் எருமையை ஏரியில் இறங்கச் செய்து ஏரித் தண்ணீரால் அதன் முதுகைச் சுத்தம் செய்யலானான். மிரட்சியுடன் அவனையும் எருமையையும் பார்த்த அன்னங்கள் அவன் இருந்த பகுதியை விட்டுவிட்டு ஏரியிலேயே சற்றுத் தூரத்தில் நீந்தத் தொடங்கின.

    இப்போது அதே பாதையில் வேகவேகமாக ஓடிவந்தான் இன்னொருவன். அவன் விழிகள் பரபரவென அங்குமிங்கும் பார்த்தன. அவன் பெரும் கலக்கத்தில் இருக்கிறான் என்பதை அவன் முகமே காட்டியது.

    திடீரென அவன் விழிகள் மலர்வனத்தை நோக்கின. அரச மரத்தடியில் தியானம் செய்தவாறு அமர்ந்திருந்த புத்தர்மேல் அவன் பார்வை பதிந்தது.

    யார் இந்தத் துறவி? செதுக்கி வைத்த சிலைபோல் அமர்ந்திருக்கிறாரே? எப்படித் தன் மனத்தை முழுமையாய்க் கட்டுப்படுத்தி அவரால் இப்படி அமர்ந்திருக்க முடிகிறது? தன் மனம் எண்ணற்ற நினைவுகளின் சுமையில் அலைபாய்கிறதே?

    அவர் மனம் பூரண சாந்தியுடன் இருக்கிறது என்பதைக் கள்ளம் கபடமற்ற அவரின் முகமே புலப்படுத்துகிறது. நினைவுகளின் சுமையில் இருந்து விடுபட்டு மனச்சாந்தி பெறுவது எப்படி என்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வோம் என்று அவன், புத்தரை நோக்கி மெல்ல நடக்கலானான். அவரின் சீடர்களைத் தாண்டிச் சென்று முன்னே வந்து அமர்ந்துகொண்டான். புத்தர் எப்போது கண்மலர்வார் என வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தான்.

    சிறிதுநேரம் சென்றது. தியானத்தை அப்போதைக்கு முடித்துக்கொண்ட புத்தர் மெல்லத் தன் விழிகளைத் திறந்தார். தன்னைத் தொடர்ந்து வரும் தன் சீடர் கூட்டத்தின் இடையே யார் இந்தப் புதியவன்?

    தன் முன்னே அமர்ந்திருந்த புதியவனைக் கருணை பொங்கப் பார்த்தார். `யாரப்பா நீ? உனக்கு என்ன வேண்டும்?` எனப் பரிவு பொங்கக் கேட்டார்.

    தன்னை யாராகிலும் ஒருவர் இப்படி அன்போடு கேட்கமாட்டாரா என்றே காத்திருந்தது போல் அவன் விம்மி விம்மி அழலானான்.

    புத்தர் அவன் அழுது முடிக்கும்வரை அமைதி காத்தார். பின் ஆறுதல் தொனிக்கும் சொற்களில் `ஏனப்பா அழுகிறாய்?` எனக் கேட்டார். அவன் விம்மியவாறே பேசலானான்:

    `சாமி. எனக்கு வாழ்வில் ஏராளமான கஷ்டங்கள். கடன் வாங்கி என் ஒரே மகளுக்கு விமரிசையாகத் திருமணம் செய்தேன். அவள் திடீரெனக் காலமாகிவிட்டாள். இடிபோல் தாக்கிய அந்த நிகழ்வால் என் மனைவிக்குப் பித்துப் பிடித்துவிட்டது. பொருளாதாரக் கஷ்டமும் அதிகமாகியுள்ளது.

    மகளின் திருமணத்திற்காக யாரிடமெல்லாம் கடன் வாங்கினேனோ அவர்கள் ஒன்றுகூடி என்னை நெருக்குகிறார்கள். என் மனம் கலங்கிக் குழம்புகிறது. நிம்மதியே இல்லை. இரவு தூக்கமில்லை.

    நான் எனக்குக் கடன் கொடுத்தவர்களிடம் தவணை வாங்கி, மெல்ல மெல்ல என் கடனை அடைத்துவிடுவேன். என் மனைவியையும் வைத்தியத்தால் குணப்படுத்தி விட முடியும். காலமான என் மகள் பற்றிய நினைவுகளும் காலப்போக்கில் மங்கும். இதெல்லாம் எனக்குப் புரிகிறது.

    ஆனால் இவை நடப்பதற்கு முன்னால் என் மனத்தின் அளவுகடந்த கலக்கத்தால் நான் என்ன ஆவேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நானும் என் மனைவிபோல் பைத்தியம் ஆவேனா அல்லது என் மகளைப் போல் இறந்தே போவேனா என இரவும் பகலும் எண்ணியெண்ணிக் குழம்புகிறேன்.

    நீங்கள்தான் என் மனக் கலக்கத்தில் இருந்து நான் விடுபட எனக்கு ஒரு வழி சொல்லவேண்டும்!`

    புத்தர் தாயன்போடு அவனையே சற்றுநேரம் பார்த்தவாறிருந்தார். பிறகு அவனைப் பார்ப்பதை விட்டுவிட்டு ஏரியைப் பார்க்கலானார்.

    எருமை மாட்டை நீராட்டியவன் இப்போது தன் பணியை முடித்திருந்தான். மெல்ல மாட்டை அழைத்துக் கொண்டு வந்த வழியே திரும்பிச் சென்றான்.

    சீடர்களிடம் ஒரு மண்பானையைக் கேட்டு வாங்கினார் புத்தர். பானையை கலக்கத்தோடு இருந்தவனின் கையில் கொடுத்தார்.

    அன்பனே! குடிப்பதற்குக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும். அங்கிருக்கும் ஏரிக்குச் சென்று இந்தப் பானை நிறையத் தண்ணீர் மொண்டு வா!

    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. தன் மனக் கலக்கத்தில் இருந்து விடுபட அறிவுரை கேட்டால் குடிப்பதற்குப் பானையில் நீர் கொண்டுவரச் சொல்கிறாரே?

    இருக்கட்டும். மாபெரும் ஞானி இவர் என்று பார்த்தாலே தெரிகிறது. இவருக்குப் பணிவிடை செய்வதால் ஒன்றும் கெட்டுவிடாது.

    `அப்படியே ஆகட்டும் சாமி!` என்ற அவன் பானையோடு ஏரியை நோக்கிச் சென்றான். இப்போது புத்தரும் அவரது சீடர்களும் ஏரியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    ஏரியில் நீர் சேந்துவதற்காகப் பானையைத் தண்ணீரில் அமிழ்த்தப் போன அவன் திகைத்தான். குடிப்பதற்கு அல்லவா நீர் கேட்டார் அந்த மகான்? இதென்ன ஏரிநீர் இப்படிச் சேறும் சகதியுமாகக் குழம்பிக் கிடக்கிறது? இதை எப்படிக் குடிநீராகக் கொண்டு கொடுப்பது?

    தயங்கிய அவன் வெறும் பானையோடு மறுபடி புத்தரைத் தேடி வந்தான். புத்தர் தண்ணீர் கிடைத்ததா என வினவினார்.

    `சாமி. யாரேனும் மாட்டைக் குளிப்பாட்டி இருக்க வேண்டும். எதனாலோ ஏரி நீர் சேறும் சகதியுமாகக் குழம்பியுள்ளது. குடிப்பதற்கு அது பயன்படாது!`

    புத்தர் அமைதி ததும்ப முறுவல் பூத்தார். பிறகு சீடர்களிடம் அவனுக்குச் சாப்பிடக் கனிகளைக் கொடுக்கச் சொன்னார். சீடர்கள் தாங்கள் வைத்திருந்த கனிகளில் சிலவற்றை அவனுக்கு வழங்கிப் பசியாறச் சொன்னார்கள்.

    அவர்களின் அன்பால் நெகிழ்ந்த அவன் கனிகளை உண்டு பசியாறினான். இப்படிக் கொஞ்ச நேரம் சென்றது.

    இப்போது புத்தர் அவனிடம் அதே மண்பானையைக் கொடுத்து ஏரியிலிருந்து குடிநீர் எடுத்து வருமாறு மீண்டும் பணித்தார்.

    குழம்பிய ஏரியில் இருந்து மறுபடியும் குடிநீரா எனத் தானும் குழம்பிய அவன், மகானின் சொல்லைத் தட்டக்கூடாது என்று எண்ணியவனாய் அதே ஏரிக்கு மறுபடி சென்றான்.

    என்ன ஆச்சரியம்! இப்போது ஏரி நீர் தெளிந்திருந்தது. சேறும் சகதியும் அதன் அடிப்பகுதியில் போய்ப் பதிந்து விட்டன. அன்னங்கள் முன்போலவே ஏரியின் எல்லாப் பகுதிகளிலும் நீந்தத் தொடங்கியிருந்தன.

    பானை நிறைய நீரை மொண்டுகொண்ட அவன் புத்தரை நோக்கி வந்தான். அவர் பாதங்களில் தண்ணீர் நிறைந்த பானையை வைத்துவிட்டு வணங்கி நின்றான். பரிவோடு அவனைப் பார்த்த புத்தர் அவனிடம் கேள்வி கேட்கலானார்:

    `அன்பனே! அப்போது குழம்பியிருந்த அதே ஏரியில்தானே இப்போது நீ தண்ணீர் எடுத்தாய்?`

    `ஆமாம் சாமி!`

    `அப்போது குழம்பியிருந்த ஏரி இப்போது தெளிந்திருந்தது அல்லவா?`

    `ஆமாம்.`

    `அதைத் தெளியவைக்க நீ என்ன செய்தாய்?`

    நான் ஒன்றுமே செய்யவில்லை சாமி. குழம்பிய ஏரி சற்றுநேரம் சென்றதும் தானாய்த் தெளிந்து விட்டது.

    திருப்பூர் கிருஷ்ணன்

    `அன்பனே! நம் மனமும் ஓர் ஏரிதான். அதன் இயல்பு எப்போதும் கலக்கமில்லாமல் தெளிந்து அமைதியாக இருப்பதுதான். ஆனால் நினைவுகள் என்ற எருமைகள் நம் மன ஏரியைக் கலக்கிக் குழப்புகின்றன.

    அப்போது மீண்டும் மீண்டும் எதையாவது நினைத்துக் குழம்பாமல் அமைதியாக இருந்தால் போதும். நினைவுச் சகடுகள் தானே அடங்கிவிடும். மனத்தில் அதன் இயல்பான சாந்தி மீண்டும் வெளிப்பட்டுத் தோன்றும்.

    நம்மைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை நாம் கட்டுப்படுத்த இயலாது. ஆனால் நம் மனத்தை நாம் கட்டுப்படுத்த முடியும்.

    எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் ஏரி தானே தெளிந்ததுபோல் நம் மனமும் தானே அமைதியாகித் தெளிவடையும். தெளிவடைந்த அமைதியான மனம் உடையவர்களுக்கு எந்தக் கவலையும் தோன்றாது. அவர்கள் எதை வேண்டுமானாலும் சாதிக்க முடியும்.

    மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்யவேண்டாம். அதை அப்படியே விட்டு விட்டால் போதும்.

    சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. மனதை சமாதானப்படுத்தும் விதத்தைப் பற்றிச் சிந்திக்கவும் வேண்டாம். அது தன்னிச்சையாக. நம்முடைய முயற்சியின்றி நடக்கும்.

    புத்தரின் விளக்கத்தைக் கேட்ட அவன் பிரமிப்பில் ஆழ்ந்தான். புத்தரின் உபதேசத்தைக் கூர்மையாய்க் கேட்டுக்கொண்டார்கள் சீடர்கள்.

    `வாழ்வின் இந்த அடிப்படை உண்மையை உங்கள் அருளால் இன்று புரிந்துகொண்டேன் சாமி!` என்றான் அவன். அவனது விழிகளில் பக்திக் கண்ணீர் வழிந்தது.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×