என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

வளமை குன்றா வாழ்வு தரும் அன்னாபிஷேக தரிசனம்
- அன்னாபிஷேகத்தில் சிவனுக்கு இடப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமே.
- ஆழாக்கு அரிசி அன்னதானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம் என்பது தமிழ்ப் பழமொழி.
தானத்தில் சிறந்த தானம் அன்னதானமே என புராணங்களும் மகாபாரத இதிகாசமும் கூறுவதோடு அந்த தானத்தின் எல்லையற்ற மகிமையையும் எடுத்துக் கூறுகின்றன.
ஐப்பசி பவுர்ணமியின் சிறப்பு
ஐப்பசி பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் மெய் சிலிர்க்க வைக்கும் விதத்தில் நடத்தப்படுகிறது.
முதலில் சம்பிரதாயமுறைப்படி நடத்தப்படும் புனித தீர்த்தம், பசும் பால், நெய், இளநீர், கரும்புச்சாறு, சந்தனம், விபூதி, தயிர், பஞ்சாமிர்தம், மஞ்சள் ஆகியவற்றால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறும். இதில் அன்னாபிஷேகம் சிறப்பாகக் கருதப்படுகிறது.
சிவலிங்கம் முழுவதும் அன்னாபிஷேகத்தால் மூடப்பட்டு உச்சியில் காய்கறிகளால் அலங்கரிக்கப்படுகிறது.
பவுர்ணமியன்று இது நடத்தப்படுவதன் காரணம் என்ன?
அதற்கு ஒரு புராண வரலாறு உண்டு.
முன்பொரு காலத்தில் பிரம்மன் தன்னை சிவனுக்கு நிகராக நினைத்து கர்வம் கொண்டான். அந்தக் கர்வத்தைப் போக்க சிவபிரான் பிரம்மனின் ஒரு தலையைக்கிள்ள, அந்தக் கபாலம் அவர் கையில் ஓடாக ஒட்டிக் கொண்டது.
பிரம்மனின் சிரத்தைக்கொய்ததால் ஏற்பட்ட பிரம்மகத்தி தோஷம் சிவனைப் பற்றிக் கொண்டது.
எப்போது அவர் கையில் உள்ள கபால ஓடு அன்னத்தால் நிரம்புகிறதோ அப்போது தோஷம் நீங்கும் என்று தோஷ நிவர்த்தி ஏற்பட ஈசன் காசிக்குச் சென்று அன்னபூரணி கையால் அன்னத்தைப் பெற்று தோஷம் நீங்கப் பெற்றான்.
சிவபிரான் அன்னபூரணியிடமிருந்து அன்னம் பெற்ற நாள் ஐப்பசி பவுர்ணமி ஆகும். ஆகவே அந்த நாளில் யார் ஒருவர் ஈசனின் அன்னாபிஷேகத்தைத் தரிசிக்கிறாரோ, யார் ஒருவர் சிவலிங்கத்திற்கு அன்னாபிஷேகம் செய்கிறாரோ அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் அன்னம் கிடைக்கும்; கர்மவினைகளும் அகலும் என்பது உள்ளிட்ட பல நற்பயன்களும் சித்திக்கும் என்று ஆனது.
அன்னாபிஷேக பலன்கள்
அன்னாபிஷேகத்தில் சிவனுக்கு இடப்படும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு சிவலிங்கமே.
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர், கங்கை கொண்ட சோழபுரம் உள்ளிட்ட சிவாலயங்களில் பிரம்மாண்டமாக நடக்கும் இந்தத் திருநாள் அபிஷேகம் பக்தர்களைப் பரவசப்படுத்தும். திருநாள் பிரசாதத்தை உட்கொள்வதால் அனைத்து நற்பலன்களும்கிட்டும்.
நற்பலன்களில் சில:
1) ஆயுள் முழுவதும் இல்லத்தில் அன்னம் இருக்கும்.
2) கர்மவினைகள் கழியும்.
3) சிறுவர்களுக்கு நினைவாற்றல் கூடும்.
4) வணிக சம்பந்தமான பிரச்சினைகள் தீரும்.
5) மகப்பேறு இல்லாதோர்க்கு மகப்பேறு கிடைக்கும்.
6) உழவு செழிப்பதோடு அனைத்து தானியங்களும் கிடைக்கும்.
உழவர்கள் தங்கள் இல்லத்தில் அன்னாபிஷேகம் செய்யும் பிள்ளைகள் இருந்தால் பல தலைமுறைகளுக்கு அன்னத்திற்குபஞ்சமே இருக்காது என்று நம்புவது நமது மரபாகும். நல்ல மழையை எதிர்பார்ப்பது போல அப்படிப்பட்ட பிள்ளைகள் தமக்குப் பிறக்க வேண்டும் என்று அவர்கள் வேண்டுகின்றனர்.
அன்னம் என்பது உயிர் வாழும் மனிதருக்கு அடிப்படைத்தேவையாகும்.
இதன் அதிபதி சிவபிரானே. இயற்கையின் பஞ்ச பூதங்களுக்கும் அதிபதி அவரே. இந்த இயற்கையின் பஞ்ச பூதங்களினால் தான் நெல்மணி நமக்குக் கிடைக்கிறது. நிலத்தில் விதை விதையிடப்பட, வானம் நீர் பொழிய, அங்கு நீர் பாய்ச்ச, சூரிய ஒளி (வெப்பம்) பயிர்களின் மேல்பட, வாயுவின் சேர்க்கையால் நெல்மணி நமக்குப்பூரணமாகக் கிடைக்கிறது. இந்த அன்னமே உலகில் வாழ் உயிர்களுக்கு உணவாக ஆகி ஆற்றலையும், ஆரோக்கியத்தையும் ஆயுளையும் தருகிறது.
ஆகவே தான் அன்னாபிஷேகத்தின் மகிமையை அனைத்து அறநூல்களும் போற்றிப்புகழ்கின்றன.
அன்னதானத்தின் சிறப்பு பற்றி நாரதர் கூறியது
பீஷ்மரிடம் தர்மபுத்திரர்தானங்களுள் சிறந்த தானம் எது என்ற தன் சந்தேகத்தைக் கேட்க அதற்கு பீஷ்மர் தான் நாரதரிடம் இது பற்றிக் கேட்டு தக்க பதிலைப்பெற்றதாகக் கூறி அந்தப் பதிலை விரிவாகக் கூறுகிறார் (அநுசாசனபர்வம் 98வது அத்தியாயம்).
அதில் உள்ள சில முக்கிய கருத்துக்களை இங்கு பார்க்கலாம்:
"உலக வாழ்க்கை என்பது அன்னத்தைப் பொறுத்ததே. அன்னதானத்திற்கு ஒப்பான தானம் முன்னுமில்லை; பின்னுமில்லை.
அன்னத்திலே தான் உயிர் இருக்கிறது. ஆகவே யார் ஒருவன் அன்னத்தை தருகிறானோ அவன் மறுமைக்கான புதையலைப் புதைத்து வைத்தவனாகிறான்.
தானம் பெற வந்த அனைவருக்கும் பேதம் பார்க்காது அன்னதானம் செய்தல் வேண்டும். அன்னமிடும்போது அதை ஏற்பவரின் ஊர், குலம், ஓதல், ஆசாரம், பெயர் உள்ளிட்ட எதையும் கேட்கக்கூடாது.
அறம், பொருள், இன்பம் ஆகிய அனைத்தும் அன்னத்தினாலேயே வருகின்றன. பூலோகமும் தேவலோகமும் அன்னத்தினாலேயே தான். அன்னம் ஒழிந்தால் தேகத்திலுள்ள ஐம்பூதங்களும் பிரிந்து போகின்றன. பலசாலியும் கூட அன்னமில்லாவிட்டால் பலத்தை இழக்கிறான்." - என்று இப்படி மிக விரிவாக அன்னதானப் பெருமையை நாரதர் விவரிக்கிறார்.
அப்பரின் அருள்வாக்கு
தலம் தலமாக சிவபிரானை தரிசித்து வந்த அப்பர் பெருமான் தில்லைக்கு வந்தார். அங்கு அவர் பெற்ற தரிசனம் அவருக்கு ஆனந்தக் கண்ணீரை வரவழைத்தது.
அன்னம் பாலிக்கும்தில்லைச் சிற்றம்பலம்
பொன்னம்பாலிக்கும் மேலும் இப்பூமிசை
என்னம்பாலிக்கும் ஆறு கண்டு இன்புர
இன்னம் பாலிக்குமோஇப்பிறவியே
என்று அவர் பாடி அருள்கிறார்.
இங்குள்ள ஸ்படிகலிங்கத்திற்கு தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
ஆக தினம் தோறும் அன்னாபிஷேகம் செய்யும் பெருமையைப்பெறுகிறது தில்லைத் திருத்தலம்!
கண்ணனின் அருள்வாக்கு
கண்ணபிரான் கீதையில் (அத் 3 - 14) அன்னாத்பவந்திபூதானி என்று கூறுகிறார். அன்னத்தினாலேயே பவுதிக உடல்கள் வளர்கின்றன என்பது இதன் பொருள்.
அறநெறிகளை அறிந்து உணர்ந்த நமது பழம் பெரும் மன்னர்கள் ஆங்காங்கே அன்ன சத்திரங்களை அமைத்து பசிப்பிணி போக்கியதை நமது ஏடுகள் எடுத்துரைக்கின்றன.
நமது ஆலயங்களிலும் பண்டு தொட்டு இன்று வரை அன்னதானம் சிறப்பாக நடை பெற்று வருவது கண்கூடு.
ஆழாக்கு அரிசி அன்னதானம்; போய் வருகிற வரைக்கும் புண்ணிய தானம் என்பது தமிழ்ப் பழமொழி.
இரு கதைகள்
அன்னதானத்தின் சிறப்பை விளக்கும் பல கதைகள் நமது இதிகாச புராணங்களில் உண்டு. கர்ணபரம்பரைக் கதைகளும் பல உள்ளன. இரு சம்பவங்களை இங்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம்.
இளம் வயது குருகுலத் தோழர்களாக விளங்கியவர்கள் ஏழை குசேலரும் மன்னர் பரம்பரையைச் சார்ந்த கண்ணபிரானும்.
குருகுல வாசம் முடிந்த பின்னர் ஏழை குசேலர் வறுமையால் வாடலானார். ஆனால் கண்ணனோ மன்னனாக ஆகி அரசாட்சி செய்ய ஆரம்பித்தான்.
ஒரு நாள் ஒரு சிறு மூட்டையில் அவலை எடுத்துக்கொண்டு சென்று தன் பால்ய கால நண்பனைப்பார்க்கச் சென்றார் குசேலர்.
குசேலர் அன்புடன் கொடுத்த ஒரு பிடி அவலை ஆசையுடன் ஏற்றுக்கொண்டு உண்டான் கண்ணன். பலன்? குசேலரின் ஏழைக் குடில் மாட மாளிகை கூட கோபுரம் கொண்ட பெரும் வீடாக ஆகியது.
இதுவே அன்னதான பலன்.
அடுத்தது கர்ணனைப் பற்றிய சம்பவம்.
பெரும் தானவீரனாக விளங்கிய கர்ணன் இறந்த பின் சொர்க்கத்திற்குச் சென்றான். அங்கு அவனுக்கு பசி தீரவில்லை.
அதன் காரணத்தைக் கேட்டபோது கண்ணபிரான் பதிலாகக் கூறியது : "நீ அனைத்து தானங்களையும் செய்தாலும் அன்னதானம் செய்யவில்லை. உனது விரலை வாயில் வைத்துக் கொள்"
உடனே கர்ணன் விரலை வாயில் வைக்க அவனது பசி தீர்ந்தது.
வியப்புடன் காரணத்தைக் கேட்க கண்ணன் கூறினான்: "ஒரு நாள் ஏழை ஒருவன் பசியினால் வாடி உன்னிடம் வந்து அன்ன சத்திரம் எங்கே இருக்கிறது என்று கேட்க நீ உன் விரலால் அதோ அங்கே இருக்கிறது என்று அன்ன சத்திரம் இருக்கும் திசையை நோக்கி உன் விரலைக்காட்டினாய். அந்த நற்பயனால் உனக்கு அந்த விரலை வாயிலே இட்டவுடன் உன் பசி போயிற்று. அன்னதானத்தின் மகிமை அப்படிப்பட்டது!" என்று பதில் கூறினான்.
இன்று அன்னதானம் உலகின் இன்றியமையாத தேவையாகி விட்டது.
ஏனெனில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாடி வதங்குவோரின் எண்ணிக்கை 53 நாடுகளில் மட்டும் 35 கோடி என்ற எண்ணிக்கையைத் தாண்டி விட்டது.
ஆகவே இந்த ஐப்பசி பவுர்ணமி நன்னாளில் உலகில் உள்ள அனைவருக்கும் அன்னம் கிடைக்க நமது சிவாலயங்களில் வேண்டிக் கொள்வோம்..
தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன்;
அனைவருக்கும் அன்னம் தந்து அவன் அருள் பாலிப்பானாக!






