என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    ரோகிணி நட்சத்திர பலன்கள்
    X

    ரோகிணி நட்சத்திர பலன்கள்

    • ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறவியிலேயே மேதையாக இருப்பார்கள்.
    • வளர்பிறையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால் கண் பார்வை குறைபாடுகள் அகலும்.

    காலபுருஷ தத்துவப்படி 27 நட்சத்திரங்களில் நான்காவது நட்சத்திரம் ரோகிணி. இதன் அதிபதி சந்திரன். இந்த நட்சத்திரம் சுக்கிரனின் வீடான ரிஷப ராசியில் உள்ளது. இந்த நட்சத்திரத்தில் உச்சமாகும் கிரகம் சந்திரன். நீச்சமாகும் கிரகம் கேதுவாகும். இதன் உருவம் தேர் வண்டி. இதன் அதிதேவதை கிருஷ்ணர். இது கிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரமாகும். இது வானில் சக்கரம் போலவும், தேர் போலவும் காட்சியளிப்பதால் இதற்கு ரோகிணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதன் தமிழ் பெயர் சகடம், ரோகிணி ஆண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. இது உடலின் முகத்தை ஆள்கிறது. அதாவது முகம், வாய், நாக்கு மற்றும் கழுத்து பகுதிகளை ஆளுமை செய்கிறது.

    ரோகிணி நட்சத்திர பொதுபலன்கள்

    இது சந்திரனின் உச்ச நட்சத்திரம் மற்றும் சுக்ரனின் வீடான ரிஷபத்தில் உள்ள நட்சத்திரம் என்பதால் இதில் பிறந்தவர்கள் மிக அழகாக இருப்பார்கள். தங்களை அலங்கரித்துக் கொள்வதில் அதீத விருப்பம் உள்ளவர்கள். பிறரை ஈர்க்கும் கவர்ச்சியான முகப்பொலிவு, உடல் அமைப்பு உள்ளவர்கள்.குடும்ப உறவுகளின் உணர்விற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

    தனது அன்பினால் பிறரை வசப்படுத்துவதில் வல்லவர்கள்.

    பெற்றோர்கள் மேல் மிகுந்த மதிப்பு, மரியாதை உண்டு. சந்திரனைப் போல் குளிர்ந்த தேகம் உள்ளவர்கள்.

    உணவுப் பிரியர்கள். இனிப்பான, குளிர்ச்சியான, ஆடம்பர உணவு உண்பதில் ஆர்வம் உண்டு. புத்தி சாதுர்த்தியம் நிறைந்தவர்கள். பிறருக்கு உதவி செய்யும் மனோபாவம் உண்டு. அதிக நண்பர்கள் உண்டு. எதிர்பாலின நண்பர்கள் அதிகமாக இருப்பார்கள்.

    இயற்கையை ரசிப்பவர்கள். கலை உணர்வு நிரம்பியவர்கள். கலைத்துறையில் தனக்கென்று தனி இடத்தை தக்க வைத்துக் கொள்வார்கள். கதை, கட்டுரை, கவிதை, ஒவியம் போன்றவற்றில் விருப்பம் உண்டு. வெளிநாட்டு வாழ்க்கையில் நாட்டம் உண்டு.

    பிறருக்கு உபதேசிக்கும் குணம் உண்டு. நல்ல சுறுசுறுப்புடன் துடுக்குத்தனம் நிறைந்து இருக்கும். மிகப் பெரிய சாதனைகளை நிகழ்த்திக் காட்டுவார்கள். எதிரிகளை ராஜ தந்திரத்துடன் வீழ்த்துவார்கள்.

    அதிர்ஷ்டம், செல்வாக்கு நிரம்பியவர்கள். புகழ், அந்தஸ்து, கவுரவம் உள்ளவர்கள். கவுரவப் பதவி உண்டு. செல்லும் இடம் எல்லாம் மதிப்பு, மரியாதை இருக்கும். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை அயராது பாடுபடுவார்கள். கொள்கை பிடிவாதம், லட்சியம் உண்டு. குல கவுரவம் உள்ளவர்கள். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாய்க்கும், தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தக்கூடியவர்கள் என பொதுவான கருத்து உண்டு.

    கல்வி

    இந்த ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறவியிலேயே மேதையாக இருப்பார்கள். வகுப்பில் ஆசிரியர் நடத்தும் பாடத்தை அப்படியே மனதில் பதிய வைத்து பரிட்சை எழுதி பாஸ் ஆகுவார்கள். அக்ரிகல்சர் (விவசாயம்) தொடர்பான படிப்பு, கலைத்துறை, கலைகள் சார்ந்த படிப்பு, பொறியியல் நிர்வாகம் சார்ந்த படிப்பு, ஆசிரியர் படிப்பு, அழகுக் கலை சிறப்பாக இருக்கும்.

    தொழில்

    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாக திறமை உள்ளவர்கள். எதிலும் கர்வம் கொள்ளாதவர்கள். எந்த வேலையாக இருந்தாலும் பொறுப்பாக எடுத்து செய்வார்கள். அதனால் எந்த தொழிலிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தன்னுடைய பணியாளர்களை மதிப்புடன் நடத்துவார்கள்.இவர்கள் கலைத்துறையில் சிறந்து விளங்கு வார்கள். உணவு சார்ந்த தொழில், ஓட்டல், லாட்ஜ், பால் பண்ணை, அழகு நிலையம், சார்ந்த துறை போன்றவற்றில் சிறந்து விளங்குவார்கள். அது சார்ந்த விற்பனை செய்து லாபத்தை குவிப்பார்கள். குறிப்பாக சமையலில் சிறப்பாக செயல்படுவார்கள்.

    தனம், வாக்கு குடும்ப ஸ்தானம்

    பேச்சுத்திறமையால் எதையும் சாதிப்பதில் வல்லவர்கள். தன்னையும் தன்னைச் சார்ந்த குடும்பத்தையும் கனிவுடன் கவனிப்பார்கள். சுக்ரன் வீட்டு சந்திரன் என்பதால் சுக போக வாழ்க்கையை விரும்புபவார்கள்.

    நிலையான, நிரந்தரமான வருமானம் உண்டு. பணப்பிரச்சினை என்பது இவர்களுக்கு வராது. அதாவது தேவை எதுவோ, எவ்வளவோ அது சரியான நேரத்திற்கு கண்டிப்பாகக் கிடைத்துவிடும்.நினைத்ததை நினைத்தபடி அடைய வேண்டும் என விரும்புபவர்கள். அதனால் காதலிலும் தான் விரும்பியவரை விடாப்படியாக கடைசி வரை போராடி திரு மணம் செய்து கொள்வார்கள்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி, செல்: 98652 20406

    தசா பலன்கள்

    சந்திர தசா

    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சந்திரன் ராசி அதிபதி என்பதால் முதல் 10 வருடங்கள் சந்திரன் திசை நடக்கும். இது ஜென்ம தாரையின் நட்சத்திரம். சந்திரன் நீர் கிரகம் என்பதால் குழந்தை சளி, வீசிங், இருமல், ஜீரம், ஒவ்வாமை, அலர்ஜி, நீர் கண்டம் போன்ற உடல் பாதிப்புகள் இருக்கும். தாயின் ஆரோக்கியத்தில் பிரச்சினை உண்டாகும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும்.

    செவ்வாய் தசா

    ரோகிணி நட்சத்திரத்திற்கு 2-வதாக வரக்கூடிய தசா செவ்வாய். இது தன, சம்பத்து தாரையின் தசாவாகும். இதன் கால அளவு 7 ஆண்டுகள்.

    இது குழந்தை பருவம் என்பதால் கல்வியில் சிறப்பாக விளங்குவார்கள். கோப உணர்வு அதிகமாக இருக்கும். தாய், தந்தைக்கு தொழில் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடும்ப முன்னேற்றத்திற்கு தேவையான ஸ்திர சொத்துக்கள் சேரும். சில குழந்தைகள் இளம் வயதில் சம்பாதிக்க துவங்குவார்கள். சுப விரயங்கள் அதிகமாகும்.

    ராகு தசா

    மூன்றாவதாக வரக்கூடியது ராகு தசா. இதன் தசா வருடம் 18 ஆண்டுகள். இது விபத்து தாரையின் நட்சத்திரம் என்பதால் ராகு தசை காலத்தில் இவர்கள் அதிகம் போராட்டங்களை சந்திக்க வேண்டியது இருக்கும். உயர் கல்வியிலும், புதிய வேலை கிடைப்பதிலும் கூடுதல் முயற்சி தேவைப்படும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை உண்டாகும். தேவையற்ற காதல் நட்பு, பழக்க வழக்கங்களால் பிரச்சினைகள் உண்டாகலாம். சிலருக்கு இளம் பருவத்தில் தவறான நட்பு, திருமணத்தால் வாழ்க்கை நரகமாகும். சிலருக்கு சுபிட்சமான வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை அமையும்.

    குரு தசா

    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 4-வதாக வரக் கூடியது குரு தசா. குரு தசை 16 வருடங்கள். இது சேஷம தாரையின் நட்சத்திரம் என்பதால் வாழ்ககையில் ஏற்றம் மிகுதியாக இருக்கும். நிதி நிலை முன்னேறும், நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.நிலையான தொழில், உத்தியோகம், வீடு, வாகனம் என வாழ்க்கையில் செட்டிலாகும் காலம். வாழ்வில் சாதனை படைத்து, சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்க உகந்த காலம்.

    சனி தசா

    ஐந்தாவதாக வரக்கூடிய சனி தசா. இது பிரத்யக் தாரையின் தசாவாகும். இதன் கால அளவு 19 ஆண்டுகள். கோபம், பிடிவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதாக இருக்கும். இந்த காலத்தில் ஏற்றமும், சமூகத்தில் பெயர், புகழ் உண்டாகும். செல்வமும், செல்வாக்கும் அதிகரிக்கும். வாழ்க்கையில் சாதனைகள் பல படைப்பீர்கள். காரணமாக சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றும். குறிப்பாக முன்னோர் களின் பரம்பரை வியாதிகளின் தாக்கம் உருவாகும்.

    புதன் தசா

    ஆறாவதாக வரக்கூடியது புதன் தசா. இது 17 ஆண்டுகள் நடக்கக் கூடிய தசாவாகும். சாதக தாரையின் தசா என்றாலும் வயோதிகம் காரணமாக சுப பலன்களை அனுபவிக்கக் கூடிய வாய்ப்புகள் குறைவு. உயில் எழுதுவது, பாகப்பிரிவினை போன்ற முயற்சியில் ஈடுபடுவார்கள். தன்னம்பிக்கை குறைந்து மனக் குழப்பம் அதிகமாக இருக்கும்.சுப கிரகங்களின் பார்வை இருப்பின் சுப பலன்கள் கிடைக்கும்.

    ரோகிணி நட்சத்திரத்தின் சிறப்பு அம்சங்கள்

    இந்த நட்சத்திர அதிபதி சந்திரன். இடப்பெயர்ச்சிக்கு காரக கிரகம் என்பதால் இந்த நட்சத்திர நாளில் இடப்பெயர்ச்சி, வீடு மாற்றம் செய்யலாம். இது கால புருஷ லக்னத்திற்கு இரண்டாம் வீடு என்பதால் உடல் உறுப்பில் வாயைக் குறிக்கும். சந்திரன் உணவை குறிக்கும் கிரகம் என்பதால் இந்த நட்சத்திர நாளில் குழந்தைகளுக்கு முதன் முதலாக உணவு ஊட்டலாம். ரோகிணி நட்சத்திரத்தன்று அன்னதானம் செய்தால் பல மடங்கு புண்ணிய பலன்கள் பெருகும். அதே போல் முதன் முறை ஒருவரை வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கவும், விருந்திற்கு முதன் முதலாக செல்லவும் உகந்த நட்சத்திரம்.

    கால புருஷப்படி வலது கண்ணைக் குறிக்கும் ராசி ரிஷபம். இடது கண்ணைக் குறிக்கும் நட்சத்திரம் ரோகிணி என்பதால் இந்த நட்சத்திர நாளில் கண் சிகிச்சை செய்யலாம்.

    வளர்பிறையும் ரோகிணி நட்சத்திரமும் இணைந்த நாளில் சந்திர தரிசனம் செய்தால் கண் பார்வை குறைபாடுகள் அகலும். முகம் பொலிவாகவும், வசீகரமாகவும் இருக்கும்.கலை நிகழச்சிகள் நடத்த, கலைகள் கற்க, சாந்தி முகூர்த்தம் நடத்த, பெண்களிடம் காதலை வெளிப்படுத்த, உணவு விடுதி, தங்கும் விடுதிகள் துவங்க, ருது சாந்தி செய்ய, கிணறு வெட்ட, வாகனம் வாங்க ஏற்ற நட்சத்திரம் ரோகிணி.

    நட்சத்திர பட்சி : ஆந்தை

    யோகம் : சவுபாக்கியம்

    நவரத்தினம் : முத்து

    உடல் உறுப்பு : நெற்றி

    திசை : கிழக்கு

    பஞ்சபூதம் : நிலம்

    அதிதேவதை : பிரம்மா

    நட்சத்திர மிருகம் : ஆண் நாகம்

    நட்சத்திர வடிவம் : தேர், வண்டி, சக்கரம்

    அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

    நன்மை தரும் நட்சத்திரங்கள்:

    சம்பத்து தாரை. மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்

    சேம தாரை: புனர்பூசம், விசாகம். பூரட்டாதி.

    சாதக தாரை: ஆயில்யம், கேட்டை, ரேவதி

    பரம மிக்ர தாரை: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.

    பொதுவான பரிகாரங்கள்

    இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஜென்ம நட்சத்திர நாளில் விரதம் இருந்து மகா விஷ்ணுவை, கிருஷ்ணரை வழிபட வறுமை, தரித்திரம், பசிப்பிணி அகன்று செல்வச் செழிப்பு உண்டாகும்.

    ஜென்ம நட்சத்திர நாளில் அஷ்டலட்சுமியை வழிபட வாழ்நாள் முழுவதும் வெற்றிமேல் வெற்றி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    சாதக தாரையான 6-வது நட்சத்திர நாளில் ஆதிசேஷனை தொடர்ந்து வழிபட வளமான வாழ்க்கை அமையும். நாவல் மர விருட்சம் உள்ள கோவிலுக்கு செல்ல வேண்டும்.

    நாகாபரணம் தரித்த அம்மன் வழிபாடு சிறப்பு.

    Next Story
    ×