என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

எண்ணத்தின் பேராற்றல்!
- பொறாமையில்லாத வஞ்சகமில்லாத நல்ல மனநிலைமை ஏராளமான நோய்களை குணப்படுத்திவிடும்! என்கிறார் வ.உ.சி.
- எண்ணற்ற வியாதிகளுக்கு நிரந்தரமாகத் தீர்வு காண உடலுக்கு வைத்தியம் பார்க்காதீர்கள். மனத்திற்கு வைத்தியம் பாருங்கள்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் ஓர் அழகான குட்டிக்கதை சொல்கிறார். கூட்டுப்புழு பட்டுப்பூச்சி ஆவது எப்படி என்பது பற்றிய கதை அது. குழந்தைகளைப் பெற்ற பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான கதை.
தரையில் ஊர்ந்து செல்லும் ஒரு புழு. அந்தப் புழு கனவு கண்டால் அதிகபட்சம் என்ன கனவு காணலாம்? எழுந்து நடக்க வேண்டும் என விரும்பலாம்.
அந்த விருப்பத்தை அந்தப் புழு வெளியே சொன்னால் கூடக் கேட்பவர்கள் கேலி செய்வார்கள். `ஊர்ந்துசெல்லும் புழுவுக்கு நடக்க ஆசையாம்! பாரேன்!` என்று சிரிப்பார்கள்.
ஆனால் அது நடக்க அல்ல, ஆகாயத்தில் பறக்கவே விரும்புகிறது. கனவு காண்பதற்கும் ஓர் அளவு வேண்டாமா!
ஆனால் என்ன ஆச்சரியம்! அதன் ஆசை சாத்தியமாகிறது. ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு உள்ளே குடியிருந்த புழு கொஞ்ச காலத்தில் கூட்டை உடைத்துக்கொண்டு பட்டுப்பூச்சியாய் வெளியே பறந்து செல்கிறது.
இந்த அதிசயச் சாதனை நிகழ்ந்தது எப்படி?
பரமஹம்சர் விளக்குகிறார்....
இரண்டு செயல்களைச் செய்தது அது. ஒன்று `நான் பட்டுப்பூச்சி! நான் பட்டுப்பூச்சி!` என்று ஒருகணம் கூட விடாமல் மனத்தில் நினைத்துக் கொண்டிருந்தது.
இன்னொன்று, தன்னுடைய அந்த நினைப்பின் தீவிரத்தை வேறு யாரும் குறுக்கிட்டுக் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டுமே? எனவே தன்னைச் சுற்றி ஒரு கூட்டைக் கட்டிக்கொண்டு அதன் உள்ளேயே இருந்தது அது.
அவ்வளவுதான்! ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, தான் எண்ணியபடியே வண்ணத்துப் பூச்சியாக ஆனந்தமாய் விண்ணில் பறந்தது.
புழுவாக இருக்கும் நம் குழந்தைகள் பட்டுப்பூச்சியாக மாற வேண்டாமா? அவர்கள் தாம் விரும்பும் துறையில் பட்டாம்பூச்சியாக சமுதாயத்தில் மேலே மேலே பறக்க வேண்டாமா? என்ன செய்ய வேண்டும் அதற்கு?
எப்படிக் கூட்டுப்புழு தன்னைப் பட்டுப்பூச்சி என்று விடாமல் நினைத்ததோ அதுபோல் நம் குழந்தைகளும் கட்டாயம் தான் விரும்பிய துறையில் தன்னால் முன்னேற முடியும் என்று ஓயாமல் நினைக்க வேண்டும்.
அந்த நினைப்பை மற்றவர் தடைசெய்யாத வகையில் அந்த நினைவையே தீவிரமாய் நினைத்துப் பழக வேண்டும். இதற்குப் பெற்றோர்தான் உதவ வேண்டும்.
`நீ உருப்பட மாட்டாய்! நீ எங்கே தேறப் போகிறாய்!` என்பது போன்ற எதிர்மறை வாக்கியங்களை நம் பிள்ளைகளிடமும் பெண்களிடமும் ஒருபோதும் சொல்லக் கூடாது. அவை அவர்கள் மனத்தில் அழுத்தமாகப் பதிந்தால் நாம் விரும்பும் பலன் கிட்டாது.
மாறாக `உன்னால் முடியும், நிச்சயமாக முடியும்!` என்று உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் தங்களால் முடியும் என்று நினைக்கத் தொடங்குவார்கள். அந்த நினைப்பை வேறு நினைப்பு தடை செய்யாத மாதிரிக் காப்பாற்றுவதும் உங்கள் பொறுப்புத் தான்.
தேவையற்ற புறக் கவர்ச்சிகளுக்கு உங்கள் குழந்தை ஆட்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தொலைக்காட்சியில் கண்ட தொடர்களையும் அவர்கள் பார்க்க வேண்டாம். மோசமான திரைப்படங்களுக்கு அவர்கள் போக வேண்டாம். இப்படியெல்லாம் பார்த்துக் கொள்வதுதான் ஆன்மிக வழியில் குழந்தைகளை வளர்க்கும் முறை. அப்படி வளரும் குழந்தைகள் தாங்கள் நினைத்ததைக் கட்டாயம் சாதிப்பார்கள்.
சுந்தரகாண்டத்தில் ஒரு சம்பவம் வருகிறது. அசோக மரத்தின் அடியில் அமர்ந்திருந்த சீதாதேவி ஒருநாள் மிகுந்த வியப்போடு ஒரு காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மரக்கிளை ஒன்றில் ஒரு குளவி, ஒரு சின்னஞ்சிறு புழுவைத் தன் கூட்டில் வைத்து அதைத் தன் கொடுக்கால் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தது!
`திரிஜடா! என்ன செய்கிறது இந்தக் குளவி?` என்று சீதை அசோக வனத்தில் தனக்குத் துணையாக இருந்த விபீஷணனின் மகள் திரிஜடையிடம் விளக்கம் கேட்டாள். திரிஜடை சொன்னாள்:
`தாயே! அந்தக் குளவி புழுவைக் கொட்டிக்கொட்டி அதைக் குளவியாகவே மாற்றிவிடும். எப்போதும் அந்தக் குளவியைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பதால் ஒருகால கட்டத்தில் அந்தப் புழு குளவியாகவே உருமாறிவிடும்!`
இதைக் கேட்ட சீதாப்பிராட்டி கவலையோடு கேட்டாள்:
`நான் எப்போதும் ராமபிரானையே நினைத்துக் கொண்டிருக்கிறேன். விரைவில் நான் ராமபிரானாகவே மாறிவிட்டால் என்ன செய்வது திரிஜடா? அப்போது உலகில் இரண்டு ராமர்கள் அல்லவா இருப்பார்கள்?`
திரிஜடை கலகலவெனச் சிரித்துவிட்டுச் சொன்னாள்:
`அப்போதும் உலகில் ஒரு ராமர்தான் இருப்பார் அம்மா! நீங்கள் ராமராக மாறியது மாதிரி, உங்களையே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் ஸ்ரீராமர் சீதாதேவியாக மாறிவிடுவார் இல்லையா?`
திருப்பூர் கிருஷ்ணன்
மேல்நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஆலன் என்ற உயர்நிலை ஆன்மீகவாதி, மிகச் சிறந்த உளவியல் அறிஞரும் கூட. அவரது சிந்தனைகளால் கவரப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளை, தாம் சிறையில் இருந்தபோது அவரது நூல்கள் சிலவற்றைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
`அகமே புறம், மனம்போல வாழ்வு, மெய்யறிவு, வலிமைக்கு மார்க்கம்` என்பன போன்ற தலைப்புகளில் அவை சின்னஞ்சிறு நூல்களாக வெளிவந்திருக்கின்றன. இணையத்திலும் இவை படிப்பதற்கு இலவசமாகக் கிடைக்கின்றன.
ஜேம்ஸ் ஆலன் அற்புதமான சில உளவியல் உண்மைகளைக் கண்டுபிடித்து உலகிற்கு அறிவித்திருக்கிறார். அவற்றில் ஒன்றுதான் அகம் புறத்தை மாற்றுகிறது என்பதும் புறம் அகத்தை மாற்றுகிறது என்பதும்.
(ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகளால் கவரப்பட்ட இன்னொரு பிரமுகர் காலஞ்சென்ற டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தி.)
அகம் புறத்தை மாற்றுகிறது என்ற உளவியல் விதிக்கான ஆதாரம்தான் மேலே சொன்ன ராமாயணக் கதை.
அகம் புறத்தை மாற்றுகிறது. அகத்தில் எண்ணும் எண்ணங்கள் புறத்தில் பற்பல விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இது என்றும் மாறாத உளவியல் விதி. ஆன்மிகத்தின் அடிப்படையே உளவியல்தான்.
இந்த விதியிவிருந்தே இன்னொரு விதியும் உருவாகிறது. அகம் புறத்தை மாற்றுவது போலவே புறமும் அகத்தை மாற்றுகிறது. புறத்தில் உள்ள விஷயங்களைச் சீராக்கினால் அகம் தானாகவே மாறுகிறது. உருவத்தை மாற்றினால் உள்ளமும் மாறிவிடுகிறது.
ராவணன் சீதையைத் தன் பக்கம் கவர்வதற்காக ராமனாக உருவை மாற்றிக் கொண்டான். ஆனால் ராமனாக உருமாறியதும் அவனிடம் பிறன் மனைவியைக் கவர வேண்டும் என்ற எண்ணமே தோன்றவில்லை! எனவே மீண்டும் ராவணனாகவே அவன் தன் வடிவை மாற்றிக் கொண்டான் என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை....
அகவிஷயங்கள் புறத்தைப் பாதிக்கின்றன. அதுபோலவே புற விஷயங்களும் அகத்தைப் பாதிக்கத்தான் செய்கின்றன.
சிடுசிடுவென்று கோபித்துக்கொள்ளும் மனிதர்கள் இருக்கும் வீட்டைப் போய்ப் பாருங்கள். வீடு சுத்தமாக இராது. குப்பையும் கூளமுமாய் தூசும் துறும்புமாய் இருக்கும்.
துப்புரவாகவும் ஒழுங்காகவும் பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்ட அறையில் போனால் நம்மை அறியாமலேயே நம் மனத்தில் சாந்தி நிலவும்.
சுற்றுப்புறத்தை ஒழுங்காகவும் சீராகவும் வைத்துக்கொண்டால் நம் வாழ்க்கை இனிக்கும். மனத்தில் அமைதி வரும். வீட்டில் அன்பு மலரும். புறத்தால் அகம் சீராகும். அகம் சீரானால் வாழ்க்கை மேம்படும்.
வலிமையான எண்ணத்தோடும் சீரான ஒழுங்கு முறைகளோடும் வாழும் மனிதன் எண்ணிய எண்ணியாங்கு எய்துகிறான். அவன் தீவிரமாக எதை எண்ணினானோ அதை அடைய அவனது சுற்றுப்புற ஒழுங்கும் உதவுகிறது.
`எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிய ராகப் பெறின்!`
என்று திருக்குறள் சொல்கிறதே?
காதல் மணம் புரிந்துகொண்ட கணவன்- மனைவியிடையே சில ஆண்டுகளில் கடும் சண்டை எழுந்தது. அவர்கள் விவாகரத்துப் பெற முடிவு செய்தார்கள். ஏனோ மனைவிக்கு அதில் விருப்பமில்லை.
அவள் ஓர் உளவியல் நிபுணரை அணுகினாள். கணவனையும் உடன் அழைத்துச் சென்றாள். தன் பிரச்சினையை ஒரு கடிதமாக எழுதி உளவியல் நிபுணரிடம் கொடுத்தாள்.
அந்தக் கடிதத்தில் தெரிந்த அவள் கையெழுத்தைப் பார்த்த அவர் யோசனையில் ஆழ்ந்தார். கையெழுத்து சாய்வாக இருந்தது. நேராகவோ சீராகவோ இல்லை.
கணவனிடமும் ஒரு கடிதம் எழுதச் சொன்னார் அந்த உளவியல் நிபுணர். கணவன் கையெழுத்தையும் பரிசீலித்தார். அதுவும் சீராக இல்லை. பின் அவர் ஒரு யோசனை கூறினார். ஆறுமாதம் வரை சேர்ந்தே வாழுமாறும் ஆனால் கையெழுத்து நோட்டுப் புத்தகம் வாங்கி நாள்தோறும் திருத்தமான கையெழுத்தில் ஓரிரு பக்கங்கள் எழுதிப் பழகுமாறும் அறிவுறுத்தினார்.
அவர்கள் அந்த அறிவுரையைப் பின்பற்றினார்கள். என்ன ஆச்சரியம்! ஆறு மாதத்திற்குள் அவர்கள் பழைய காதலித்த காலத்தைப் போலவே மீண்டும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தத் தொடங்கினார்கள். விவாகரத்து எண்ணத்தையே கைவிட்டு விட்டார்கள். நெகிழ்ச்சியோடு உளவியல் நிபுணருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.
சூட்சுமம் இதுதான். அகம்தான் கையெழுத்தைத் தோற்றுவிக்கிறது. குழப்பமான மனம் குழப்பமான கையெழுத்தை ஏற்படுத்துகிறது. கையெழுத்தைச் சீராக்கும்போது தானாகவே அகமும் சீராகி விடுகிறது. குழப்பமில்லாத கையெழுத்து தெளிவான மனத்தைத் தோற்றுவித்து விடுகிறது.
உடல் என்பது மனம் உடுத்தியிருக்கும் ஆடை போன்றதுதான். மனத்தைச் சீர்செய்யும்போது உடல் தானே சீராகி விடும்.
`எண்ணற்ற வியாதிகளுக்கு நிரந்தரமாகத் தீர்வு காண உடலுக்கு வைத்தியம் பார்க்காதீர்கள். மனத்திற்கு வைத்தியம் பாருங்கள். பொறாமையில்லாத வஞ்சகமில்லாத நல்ல மனநிலைமை ஏராளமான நோய்களைக் குணப்படுத்திவிடும்!` என்கிறார் வ.உ.சி.
எனவே ராமகிருஷ்ணர் சொன்ன கூட்டுப் புழுவைப் போல் மாறுவோம். மன நலம் உடல் நலம் இரண்டும் பெற்று நாம் விரும்புகிற நல்ல விஷயங்கள் அனைத்தையும் அடைவோம்.
ஆன்மிகம் என்பது மனத்தை மேம்படுத்துவது என்பதையும் உண்மையான ஆன்மிகம் மனம் சார்ந்தது என்பதையும் புரிந்துகொள்வோம். மனத்துக்கண் மாசிலன் ஆவதே ஆன்மிகத்தின் அடிப்படை என்பதை உணர்வோம்.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com






