என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

பணம் உதிர்காலம்!
- சந்தேகப்பிராணிகள் அலுத்துக்கொண்டாலும் இந்தப்பணமில்லாப்பரிவர்த்தனையில் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
- ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் வந்தன, ஒரு கல்யாணத்துக்கு வேண்டியவை அனைத்துமே மொபைல் மூலம் வாங்கிவிடும் சவுகரியம் வந்தாகிவிட்டது.
"இந்தாங்க!"
"நூறு ரூபாயா? சில்லரை இல்லியேம்மா. பாக்கி மூணு ரூபாய்க்கு சாக்லேட் எடுத்துக்குங்க!"
"ஏங்க இன்னிக்கி ஓனர் வாடகை கேட்டு வந்துருவாரு! கேஷ் வெச்சுட்டு போங்க!"
"ஏண்டி இத நேத்தே சொல்ல மாட்டியா?"
"அய்யோ கேஷ் இல்லியா? போன மாசமே அடுத்த நாள் தரேன்னதுக்கு வாய் கூசாம கத்திட்டுப்போனாரு! நீங்க வேலைக்குப்போறதுக்கு முன்ன பாங்குலேர்ந்து கேஷ் எடுத்து குடுத்துடுங்க!"
இந்த சங்கடங்கள் எல்லாம் சூரியன் கிழக்கில் உதிப்பது போல தவறாமல் பல வீடுகளில் நடந்த, ஆம் இறந்த காலம்தான், நடந்த அக்கப்போர்கள். தகவல் தொழில் நுட்பமும் தொலைத்தொடர்பும் போட்டி போட்டுக்கொண்டு, பின்னங்கால் பிடறிபட வேகமாக முன்னே ஓடியதால் ஏற்பட்ட பல நன்மைகளில் மிக முக்கியமானது கரன்சி இல்லாப்பரிவர்த்தனை (Cashless Transactions).
அட! அதென்னங்க கரன்சி இல்லாத பரிவர்த்தனை!
சில வருடங்களுக்கு முன்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதே அதன்பின் நமது அரசாங்கம் இந்தக்கரன்சி இல்லாப்பரிவர்த்தனைகளை முன்னெடுத்து ஊக்குவிக்க ஆரம்பித்திருக்கிறது.
"என்னவோ போங்க! சாதாரணமா கேஷ் குடுத்தாலே ஆயிரம் வில்லங்கம் வருது! இப்ப இந்த மாதிரி கரன்சி இல்லாம வேறயா..!"
சந்தேகப்பிராணிகள் அலுத்துக்கொண்டாலும் இந்தப்பணமில்லாப்பரிவர்த்தனையில் பல நன்மைகள் இருக்கத்தான் செய்கின்றன.
காலாகாலமாகப் பெண்களைக் கேலி செய்யப்பயன்படும் மஞ்சப்பைகள் இனி தேவையில்லை! நோட்டுக்கள் அடுக்கி வைக்கப்பட்ட பெருத்த பர்சுகளும் அதை நோட்டம் விட்டு ஆட்டையைப்போடத்துடிக்கும் பிக் பாக்கெட் பயமும் இல்லை. சம்பளப்பணத்தை பாங்கில் போட்டுவிட்டு கிரெடிட், டெபிட் கார்டுகளோடு கடைக்குள் நுழைந்து கொத்தமல்லியிலிருந்து கோட்டு சூட்டு வரை பிளாஸ்டிக் அட்டையை வைத்தே வாங்கிவிடலாமே!
அதுவும் இந்த ஆன்லைன் ஷாப்பிங் வந்த பிற்பாடு கடைகளுக்குப்போக வேண்டிய அவசியமும் இல்லை. இரவுச்சாப்பாட்டை முடித்துப்படுக்கப்போகும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு கம்ப்யூட்டர் அல்லது மொபைல் மூலம் ஆன் லைன் ஷாப்பிங்கில் வாங்கலாமே! கடை திறந்திருக்குமோ என்னமோ, ஆபீசில் பர்மிஷன் கிடைக்குமோ, குழந்தை பள்ளியிலிருந்து வந்துவிடும் நேரமாச்சே என்பது போன்ற நிபந்த னைகள் எதுவும் இல்லாமல், வீட்டில் சாய்நாற்காலியில் அமர்ந்தவாறே வாங்கும் சவுகரியம்!
"இன்னிக்குதான் மாசம் இருவது தேதியாகுது! ஒண்ணாம் தேதிதானே சுளையா பதினெட்டாயிரம் ரூபாய் குடுத்தேன். அதுக்குள்ள தீர்ந்து போச்சுன்றியே?"
"ஆமா நாந்தான் உங்க பணத்தை எடுத்து எங்க பொறந்த வீட்டுக்கு கொடுத்திருக்கேன்! கேப்பீங்களே!"
கரன்சி இல்லாப்பரிவர்த்தனையில் இது போன்ற மாதாந்திரச்சண்டைகள் தவிர்க்கப்படும். ஒவ்வொரு முறையும் கார்டு பயன்படுத்தப்பட்டவுடன் உங்களுக்கு மொபைல் போனில் "த பாரு! சொச்சம் கணக்குல இவ்வளவுதான்! என்று முன்னெச்சரிக்கை மெசேஜ் வந்துவிடும்! ஆக, உங்கள் செலவுகளை குறைக்க முடிகிறதோ இல்லையோ அதைத்தீர்க்கமாக கணக்கு வைத்துக்கொள்வது படு சுலபம்!
பயணம் செய்யும்போது ரெயிலில் யாரோ கொடுத்த பிஸ்கெட்டைத்தின்றாலும் உங்கள் பணத்துக்கு பங்கம் வராது! முக்கியமாக இந்தக்கள்ள நோட்டுப்பயமே கிடையாது!
லட்சக்கணக்கானவர்கள் கரன்சியை விடுத்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறும்போது நாட்டில் பேப்பர் உபயோகம் குறைந்து பசுமை இந்தியாவுக்கு இரண்டு பிளஸ் புள்ளிகள் ஏறும்!
"இந்த பே டி எம், பே பால்ன்னுன்றாங்களே அதான் இந்தக்கரன்சியில்லாப் பரிவர்த்தனையா?"
ஆம்! அவைகளும்தான்!"
"அப்படீன்ன வேற நெறைய இருக்கா?"
ஜெயராமன் ரகுநாதன்
நிறைய கரன்சியில்லாப்பரிவர்த்தனைக்கான செயல் முறைகளும் மென்பொருள் சார்ந்த சேவைகளும் இணைய தளத்தை முதுகெலும்பாய்க்கொண்டு நாலு கால் பாய்ச்சலில் பரவ ஆரம்பித்துவிட்டன.
கரன்சியற்ற நிலைக்கு இட்டுச்செல்ல வந்துவிட்ட பலப்பல பரிவர்த்தனை முறைகளில் முக்கியமானவை இவைதாம்:
1. வங்கிக்கார்டுகள் Bank Cards / Prepaid and post paid
2. கட்டமைப்பில்லாத துணை சேவைத்தகவல் Unstructured Supplementary Services data (USSD)
3. ஆதார் துணை கொண்ட பரிவர்த்தனை Aadhaar enabled Payments
4. ஒருங்கிணைந்த பணப்பரிவர்த்தனை Unified Payments Interface
5. மொபைல் பணப்பை Mobile Wallets
6. விற்பனை பாயிண்ட் Point of Sale
7. இணைய வங்கி Internet Banking
8. மொபைல் வங்கி Mobile Banking
9. மினி ஏ டி எம் Micro ATMS
"அட என்னங்க! என்னென்னமோ பேரெல்லாம் சொல்றீங்க! இதெல்லாம் என்னது? சீக்கிரமா ஆகட்டும். எனக்கு அடுப்புல குழம்பு கொதிக்குது!"
சொல்கிறேன்..
பர்சில் கை விட்டு பணம் எடுத்துக்கொடுக்காமல் பொருள் வாங்குவது, தகவல் தொழில் தோடர்பு நுட்பத்தின் மூலம் சாத்தியமாகிவிட்டது. உங்களில் பலர் கணவரின் ஜாயிண்ட் பாங்க் அக்கவுண்ட் மட்டுமே என்றிருந்த காலங்கள் தாண்டி, தனி அக்கவுண்ட்டுக்கு மாறிவிட்டீர்கள். கடந்த சில வருடங்களாக கம்ப்யூட்டர் மூலமாகவும் மொபைல் மூலமாகவும் பரிவர்த்தனை செய்யும் அனுபவமும் பெற்று விட்டீர்கள். கிரெடிட் கார்ட் உபயோகம் பற்றி சகலருக்கும் தெரியும். இந்த செக், கிரெடிட் கார்டு போன்ற கரன்சியில்லாப்பரிவர்த்தனையை இன்னொரு லெவலுக்கு எடுத்துப்போய் விட்டது தொழில் நுட்பம். ஸ்மார்ட் போன்கள் வந்தாலும் வந்தன, ஒரு கல்யாணத்துக்கு வேண்டியவை அனைத்துமே மொபைல் மூலம் வாங்கிவிடும் சவுகரியம் வந்தாகிவிட்டது.
இதே நேரத்தில் வர்த்தக உலகில் இணையம் பெரும் புரட்சியை உண்டு பண்ணி ஆன்லைன் வியாபாரம் பெருகி இப்போது உப்பு, புளி, கொத்தமல்லி, கருவேப்பிலை கூட ஆன்லைனில் வாங்கலாம் என்னும் நிலையை அடைந்துவிட்டோம்.






