என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பக்தனுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சாரங்கபாணி
    X

    பக்தனுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சாரங்கபாணி

    • லட்சுமியிடம் மும்மூர்த்திகளில் யார் பொறுமையானவர் என்பதை தெரிந்து கொள்ளவே இவ்வாறு நடந்து கொண்டதாக கூறி விளக்கம் அளித்தார்.
    • ஸ்ரீசாரங்கபாணி கோவிலுக்கு எப்படியாவது ராஜகோபுரம் அமைத்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டார் அந்தப் பக்தர்.

    வைணவ தலங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் ஆலயங்களுக்கு அடுத்தபடியாக பக்தர்களிடம் அதிக வரவேற்பை பெற்று இருப்பது கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணி ஆலயம் ஆகும். 108 திவ்ய தேசங்களில் இது 12-வது திவ்ய தேசமாக வரையறுக்கப்பட்டுள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள பழமையான வைணவ தலங்களில் சாரங்கபாணி ஆலயம்தான் மிகமிக பழமையானது. இந்த ஆலயத்து பெருமாளால்தான் நாலாயிர திவ்ய பிரபந்தம் இந்த உலகத்துக்கு கிடைத்தது. பஞ்சரங்க திருத்தலங்களில் இந்த ஆலயமும் ஒன்றாக போற்றப்படுகிறது.

    பொதுவாக வைணவ தலங்களில் ஆழ்வார்கள் தங்களது பிரபந்தங்களால் பெருமாளை அழகுற வர்ணித்து பாடி இருப்பார்கள். அவை அனைத்தும் பாடல் பெற்ற தலங்களாக அழைக்கப்படுகின்றன. திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை 11 ஆழ்வார்களும், திருப்பதி வெங்கடாஜலபதியை 10 ஆழ்வார்களும் மங்களாசாசனம் செய்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 7 ஆழ்வார்கள் கும்பகோணம் சாரங்கபாணியை புகழ்ந்து பாடி மங்களாசாசனம் செய்துள்ளனர்.

    இத்தகைய சிறப்புடைய கும்பகோணம் சாரங்கபாணி ஆலயத்தின் தல வரலாற்றை முதலில் தெரிந்து கொள்வோம். பிருகு மகரிஷி ஒரு தடவை வைகுண்டம் சென்று இருந்தார். மும்மூர்த்திகளில் யார் மிகவும் பொறுமைசாலி என்பதை தெரிந்து கொள்ள முடிவு செய்து இருந்த அவர் திருமாலை பரிசோதிப்பதற்காகவே வைகுண்டம் சென்றிருந்தார்.

    திருமாலின் மார்பில் பிருகு மகரிஷி எட்டி உதைத்தார். அதை திருமால் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அருகில் இருந்த லட்சுமிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. உங்கள் மார்பில் நான் இருக்கும் நிலையில் பிருகு மகரிஷி உதைக்க வந்ததும் தடுக்காதது ஏன் என்று சண்டையிட்ட லட்சுமி திருமாலை பிரிந்து சென்று விட்டார்.

    இதை கண்ட பிருகு மகரிஷி மனம் வருந்தி திருமாலிடம் மன்னிப்பு கேட்டார். பிறகு லட்சுமியிடம் மும்மூர்த்திகளில் யார் பொறுமையானவர் என்பதை தெரிந்து கொள்ளவே இவ்வாறு நடந்து கொண்டதாக கூறி விளக்கம் அளித்தார். பிறகு உனக்கு நான் தந்தையாக இருக்க விரும்புகிறேன். என் மகளாக பிறக்க வேண்டும் என்று வேண்டினார்.

    இதை கேட்டு மனம் இரங்கிய லட்சுமி, பிருகு மகரிஷி மகளாக பிறக்க சம்மதித்தாள். அவள் உத்தரவுபடி பிருகு மகரிஷி புண்ணிய பூமியான கும்பகோணத்தில் தவம் இருந்தார். அப்போது புனித தீர்த்த குளத்தில் தாமரை மலரில் லட்சுமி அவதரித்தாள். அவளுக்கு கோமளவல்லி என்று பெயரிட்ட பிருகு மகரிஷி லட்சுமியை வளர்த்து திருமாலுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.

    இந்த திருமணத்திற்காக திருமால் வில் ஏந்தி வந்தார். வில் என்றால் சாரங்கம் என்றும் ஒரு அர்த்தம் உண்டு. இதனால் திருமாலுக்கு சாரங்கபாணி என்ற பெயர் ஏற்பட்டது. தாமரை மலரில் லட்சுமி அவதரித்ததால் இந்த தலத்தை லட்சுமியின் அவதார தலம் என்று சொல்கிறார்கள்.

    இந்த தலத்து கருவறையில் கோமளவல்லியுடன் சாரங்கபாணி அருள்பாலிக்கிறார். கருவறையை சுற்றி நரசிம்மரின் அவதார சிலைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. கோமளவல்லியை திருமணம் செய்வதற்காக சாரங்கபாணி தேரில் வந்தார். இதை பிரதிபலிக்கும் வகையில் சுவாமி சன்னதியை தேர் அமைப்பில் கட்டி உள்ளனர். அந்த தேர் அமைப்பு மிக சிறந்த கலை படைப்பாக போற்றப்படுகிறது. தேரின் குதிரைகள், யானைகள், சக்கரங்கள் கல்லால் ஆனவை. தேரின் இருபுறங்களிலும் உத்திராயண, தட்சாயண வாசகங்கள் உள்ளன. தேர் சக்கரம் மிக பிரமாண்ட மாக அழகுற அமைந்துள்ளது. வெளிநாட்டவர்கள் இந்த ஆலயத்துக்கு வரும்போது இந்த தேர் அமைப்பை பார்த்து வியந்து போகிறார்கள்.

    ஆனால் தமிழர்கள் இந்த கலை படைப்பை கண்டு கொள்ளாமலேயே இருக்கிறார்கள். கும்பகோணத்துக்கு யாத்திரை செல்லும்போது தவறாமல் அவசரப்பட்டு திரும்பாமல் நின்று நிதானமாக இந்த கலைப்படைப்பை பார்த்து விட்டு வரவும்.

    இதே பகுதியில் சந்தானகிருஷ்ணன் அருள்பாலிக்கிறார். அவரை வணங்கினால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகமாகும். மூலவர் சாரங்க பாணிக்கு பயத்தம் பருப்பு, வெல்லம், நெய் கொண்டு தயாரிக்கும் கும்மாயம் என்ற நைவேத்தியத்தை சிறப்பாக படைப்பார்கள். அதற்கு காணிக்கை செலுத்துவது நல்லது.

    இந்த தலத்து சாரங்கபாணிக்கு திவ்ய பிரபந்தம் தந்தவர் என்ற சிறப்பு உண்டு. ஒரு தடவை நாதமுனி என்பவர் சாரங்கபாணியை வழிபட வந்தார். அப்போது சில பக்தர்கள் சுவாமியின் சிறப்புகளை பாடி, "ஓராயிரம் பாடல்களில் இந்த பத்து அடங்கும்" என்று முடித்தனர். இதை கேட்ட நாதமுனி ஆயிரம் பாடல்கள் உள்ளதா? என்று ஆச்சரியப்பட்டார்.

    அந்த ஆயிரம் பாடல்களையும் தேடி தொகுக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் எப்படி அவற்றை தேடுவது என்று தெரியவில்லை. அப்போது அவரது கனவில் வந்த சாரங்கபாணி, "நீ ஆழ்வார்திருநகரிக்கு சென்று நம்மாழ்வாரை வழிபடு. அவருக்கு உதவி செய்வார்" என்றார். அதன்படி நாதமுனி ஆழ்வார்திருநகரிக்கு வந்து நம்மாழ்வாரை வழிபட்டார். அதன் பலனாக ஆயிரம் பாடலுக்கு பதில் நான்கு ஆயிரம் பாடல்கள் கிடைத்தன. அவை தான் நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று புகழப்படுகின்றன. இந்த தலத்தில் தாயாரை திருமணம் செய்ய வந்த திருமால் ஒரு இடத்தில் ஒளிந்தாராம். அந்த இடத்தில் பாதாள சீனிவாசர் சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தலத்தில் சொர்க்கவாசல் கிடையாது. வைகுண்டத்தில் இருந்து திருமால் நேரடியாக இந்த தலத்துக்கு வந்ததால் இவரை வணங்கினாலே முக்தி கிடைத்து விடும் என்ற ஐதீகம் உள்ளது. எனவேதான் முக்தி பாதைக்கு வழிவகுக்கும் சொர்க்கவாசல் இந்த தலத்தில் இல்லை என்று சொல்கிறார்கள்.

    இந்த தலத்தை உபய பிரதான திவ்யதேசம் என்றும் சொல்வார்கள். உற்சவருக்கு மூலவருக்கான பூஜைகள் செய்யப்படுவதால் அப்படி அழைக்கப்படுகிறது. அதுபோல இந்த தலத்தில் சாரங்க பாணியை மாமனார் வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளை என்று சொல்கிறார்கள். லட்சுமி இந்த தலத்தில் அவதரித்ததால் மாப்பிள்ளையாக வந்த திருமால் இங்கு தங்கி விட்டதாக சொல்கிறார்கள்.

    இந்த தலத்தில் எத்தனையோ அற்புதங்கள் நடந்துள்ளன. உதாரணத்துக்கு இரண்டு சொல்லலாம். ஒவ்வொரு திவ்ய தேசமாகச் சென்று பெருமாளின் திருப்பணியில் ஈடுபட்டு அவரை தரிசித்துச் சென்ற திருமழிசை ஆழ்வார், கும்பகோணத்திற்கும் சென்றார். அங்கே சயன நிலையில் இருந்த சாரங்கபாணி பெருமாளைப் பார்த்ததும் திருமழிசை ஆழ்வாருக்கு ஒரு விசித்திரமான கோபம் பெருமாள் மீது ஏற்பட்டது.

    அதாவது, 'கொள்ளிடத்திற்கும் காவிரிக்கும் நடுவில் இருக்கும் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் ஆனந்தமாக சயனித்து இருப்பது போல் இங்கே கும்பகோணத்திலும் காவிரி, அரசலாறு இவற்றின் நடுவே பெருமாள் சயனித்திருக்கிறாரே.. பக்தனான தான் வந்து எதிரே நிற்பது கூடத் தெரியாமல் அப்படி என்ன சயனம்?' இப்படி ஒரு விளையாட்டுக் கோபம்.

    அந்தக் கோபத்தோடு, "அப்படியென்ன உனக்கு பெருமாளே களைப்பு? எடுத்த அவதாரங்கள் ஒவ்வொன்றிலும் சிரமப்பட்ட களைப்பா?" இப்படிக் கேள்வி மேல் கேள்வி கேட்டு விட்டு கடைசியில், "நான் வந்திருப்பது தெரியவில்லையா? எழுந்திருந்து பேசும்" என்றார். இதைக் கேட்டதும், பக்தனின் அன்புக்குக் கட்டுப்பட்ட பெருமாள், சயன நிலையில் இருந்தவாறே சற்று எழுந்தார். அதைக் கண்டதும், ஆழ்வாருக்கு தவறு செய்து விட்டோமே என்று மனசாட்சி குத்தியது.

    'வீணாகப் பெருமாளை சிரமப்படுத்துகிறோமே! அவருடைய சயன நிலையைக் கெடுக்கிறோமே!' என்று தவித்துப் போனார். உடனே அவசர அவசரமாக, 'எழுந்திருந்தது போதும், சயனித்துக் கொள்ளும்' என்று சொல்வது போல், 'வாழி கேசவனே' என்று மங்களாசாசனம் செய்தார். சயனத்திலிருந்து எழுந்த பெருமாள், அப்படியே உத்தான சயன நிலையில் நிலைத்து அருளி சேவை சாதித்தார். இன்றும் கும்பகோணம் சாரங்கபாணி ஆலயத்தில் இந்த நிலையிலேயே பெருமாள் காட்சி அளிக்கிறார்.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மற்றொரு சம்பவம் வருமாறு:-

    கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணி கோவில் மடப்பள்ளியில் சாமிக்கு நைவேத்தியம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வந்த லட்சுமி நாராயணப் பெருமாள் என்னும் பக்தருக்கு நீண்ட நாட்களாக ஒரு குறை இருந்துவந்தது. பெருமாளின் 108 திவ்விய தேசங்களில் திருப்பதி, ஸ்ரீரங்கத்துக்கு அடுத்தபடியாக மூன்றாவதாக உள்ள ஸ்ரீசாரங்கபாணி கோவிலுக்கு ராஜகோபுரம் இல்லையே என்பதுதான் அந்தக் குறை.

    ஸ்ரீசாரங்கபாணி கோவிலுக்கு எப்படியாவது ராஜகோபுரம் அமைத்துவிட வேண்டும் என்று உறுதி பூண்டார் அந்தப் பக்தர்.

    ராஜகோபுர திருப்பணி என்றால் சும்மாவா? இப்போது கோடிக் கணக்கில் ரூபாய் செலவாகும் என்றால், பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு சில லட்சங்களையாவது செலவு செய்ய வேண்டுமே?

    ஆனால் மடப்பள்ளியில் நைவேத்தியம் செய்துவரும் லட்சுமி நாராயணப் பெருமாளால் அவ்வளவு பெரிய தொகையை புரட்டுவது என்பது இயலாத காரியம்தான். அதற்காக தளர்ந்து போய்விடவில்லை அவர். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என்று எண்ணியவர், ராஜகோபுர திருப்பணிக்கான வேலைகளை லட்சிய வெறியோடு செய்யத் தொடங்கினார். 'என் ஆயுள் முழுக்க ஓடி உழைத்தாவது ராஜகோபுரம் கட்டியே தீருவேன்' என்று உறுதி எடுத்துக் கொண்டார்.

    "பக்தனுக்கு என் மீது இவ்ளோ பற்றுதலா!" என்று அந்த வேளையிலே சாரங்கபாணி எண்ணினாரோ என்னவோ... ராஜகோபுர திருப்பணிக்கு பலரிடம் இருந்தும் லட்சுமி நாராயணப் பெருமாளுக்கு உதவிகள் தேடி வந்தன. ராஜகோபுரம் கட்டுவதையே தனது லட்சியமாகக் கொண்டு செயல்பட்டதால், வாழ்க்கை பற்றி லட்சுமி நாராயணப் பெருமாள் துளியும் சிந்திக்கவில்லை. அவரது திருமண வயதும் கடந்துவிட்டது.

    ஆண்டுகள் பல கடந்த நிலையில், லட்சுமி நாராயணப் பெருமாளின் மனதில் உதித்த திட்டம் நிறைவேறும் நாள் நெருங்கியது. ஆம்... ராஜகோபுரம் கட்டி முடித்தாகிவிட்டது. அன்பர்கள் பலரது முயற்சியால் பிரமாண்டமாக எழுந்து நின்ற ராஜகோபுரத்தை இமைக்க மறந்து ரசித்தார் அவர். ஸ்ரீசாரங்கபாணி கோவிலுக்கு ராஜகோபுரம் கட்டப்பட்டது, கும்பகோணத்திற்கு மேலும் பெருமை சேர்ப்பதாக அமைந்தது.

    அன்று தீபாவளித் திருநாள். பிரம்மசாரியாக வாழ்ந்து, ஸ்ரீசாரங்க பாணிக்கே தனது வாழ்வை அர்ப்பணித்த அடியாரான லட்சுமி நாராயணப் பெருமாள் மரணம் அடைந்து பரமபதம் அடைந்தார். கும்பகோணம் மாநகர் வாழ் வைஷ்ணவ பெருமக்கள் எல்லாம் துயரம் அடைந்தனர். 'இனி, இப்படியொரு பக்தரை நாம் எப்போது காணப் போகிறோமோ...' என்று ஏங்கினர். லட்சுமி நாராயணப் பெருமாள்தான் பிரம்மசாரி ஆயிற்றே... அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்ய யாருமே இல்லை! எல்லோரும், 'அய்யோ பாவம்' என்றார்கள். அப்போது, "நான் இருக்கிறேன்..." என்று மக்கள் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வந்தான் ஓர் சிறுவன்.

    முந்தைய நாள் முழுக்கக் கண் விழித்திருந்து அழுதானோ என்னவோ... சோகம் அப்பிய அவனது முகம் சற்று வீக்கம் கண்டிருந்தது. தாரை தாரையாய் வடித்த கண்ணீரின் கறை முகத்தில் படிந்திருந்தது.

    'சொந்தத் தந்தையை இழந்ததுபோல் தவிக்கும் இந்தச் சிறுவன் யார்?' என்று மக்கள் யோசித்தனர்... லட்சுமி நாராயணப் பெருமாளின் பூதஉடலுக்குத் தானே இறுதிச்சடங்கு செய்வதாகச் சிறுவன் கூறினான். இதைக் கேட்ட கும்பகோணம் மக்கள், அது பெருமாளின் கட்டளையாகத்தான் இருக்கும் என்று கருதி சம்மதித்தனர்.

    ஒருவழியாக, இறுதிச்சடங்கு முடிந்தது. தான் வந்த காரியத்தை நிறைவேற்றி முடித்த சிறுவன், மக்கள் கூட்டத்தோடு கூட்டமாகக் கலந்து மறைந்தான். பொதுமக்களுக்கு ஆச்சரியம்! மறுநாள் அதைவிடப் பெரிய ஆச்சரியம், ஸ்ரீசாரங்கபாணி கோவிலில் காத்திருந்தது.

    அன்று காலை ஸ்ரீசாரங்கபாணியின் சந்நிதியை வழக்கம்போல் திறந்தார் கோவில் அர்ச்சகர். பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டு இருந்த ஆடை ஈரமாக இருந்தது. அதோடு, அவரது கையில் தர்ப்பைப்புல்லும் இருந்ததைக் கண்டு வியந்தார் அர்ச்சகர். "பகவானே... அப்படியென்றால் நேற்று பரமபதம் அடைந்த பக்தனுக்குச் சிறுவனாக வந்து இறுதிச்சடங்கு செய்தது நீதானா?" என்றுக் கூறி மெய்சிலிர்த்தார் அவர். இந்தத் தகவலை அறிந்த கும்பகோணம் மக்களும் மிகவும் பரவசப்பட்டுப் போனார்கள்.

    அன்று முதல் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசை (தீபாவளி) அன்று, தனது பக்தர் லட்சுமி நாராயணப் பெருமாளுக்காக கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி சிராத்தம் செய்கிறார். இவரது திருச்சந்நிதிக்கு இடதுபுறம், தாயாரை தரிசித்து விட்டு வரும் வழியில் தூண் ஒன்றில் சிலை உருவில் கை கூப்பிய நிலையில் காணப்படும் லட்சுமி நாராயணப் பெருமாளை நாமும் பார்க்கலாம்.

    Next Story
    ×