search icon
என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்!
    X

    பேராற்றல் மிக்க பெண்கள் உலகம்!

    • பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
    • அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

    மார்ச் 8-ம் நாள் உலக மகளிர் தினம். 2024-ம் ஆண்டின் கோஷமாக முன்னிலைப்படுத்தப்படுவது : பெண்கள் முன்னேற்றத்தில் முதலீடு செய்யுங்கள்; முன்னேற்றத்தை துரிதப்படுத்துங்கள்.

    உலக ஜனத்தொகை 810 கோடி என்ற எண்ணிக்கையை 2024-ல் எட்டி விட்டது. இதில் மகளிரின் எண்ணிக்கை 49 சதவீதம்.

    பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவதாக அனைவரும் கூறி வந்த போதிலும் உலகில் சுமார் 8 சதவீத பெண்கள் அன்றாட உணவிற்கே அல்லல்படும் நிலையில் இருக்கின்றனர். ஆகவே சுருக்கமாகச் சொல்லப் போனால், "போகுமிடம் வெகு தூரம்; போக வேண்டும் நெடு நேரம்" என்பதே பெண்களின் சம உரிமைப் போராட்டத்தின் இன்றைய நிலை.

    பெண்கள் இன்றிருக்கும் நிலையைக் கூடத் தாமாகப் பெறவில்லை. அதற்கென ஆங்காங்கே உரிமைப் போர்கள் நடைபெற்றே வந்தன.

    பெண்கள் போராடிப் பெற்ற ஓட்டுரிமை: பெண்கள் சாதாரணமாகப் பெறவில்லை ஓட்டுரிமையை! மிகுந்த போராட்டம் அதற்காகவே பிரிட்டனில் வெடித்தது. பெண்கள் ஓட்டுரிமை வேண்டும் என்று கேட்டபோது "பைத்தியக்காரத்தனமான, சூழ்ச்சி நிறைந்த முட்டாள் பெண்கள் கேட்கும் உரிமை இது" என்று கூறிய விக்டோரியா மகாராணியார் ஒரு பெண்ணிற்கு சாட்டையால் அடித்து தண்டனை தர ஆணையிட்டார்.

    ஆனால் பெண்கள் அசரவில்லை. 1901-ம் ஆண்டு ஏழாம் எட்வர்ட் பட்டம் சூட்டியபோது எமிலின் பங்கர்ஸ்ட் என்ற பெண்மணியின் தலைமையில் கூட்டம் கூட்டமாகப் பெண்களின் அணி திரண்டது. ஆண்கள் கூட்டம் போடும் இடங்களிலெல்லாம் அவர்கள் திடீரென வந்து குதித்தனர். மேடை மீது ஏறி மெகா போன் வாயிலாக எங்களுக்கும் ஓட்டுரிமை வேண்டும் என்று கோஷமிட்டனர். உண்ணாவிரதம் இருந்தனர். சிறைக்கும் சென்றனர்.

    இந்தியாவில் வைசிராயாக இருந்த லார்ட் கர்ஸான் பெண்கள் தாழ்ந்தவர்கள் என்பதற்காக பதினைந்து காரணங்களைப் பட்டியலிட்டார். ராயல் கமிஷனோ 'ஒரு பெண்ணின் மூளை எதையும் சமாளித்து ஈடு கொடுக்க வல்லதா" என்று ஆராய முற்பட்டது. ஆனால் பெண்கள் அயர்ந்து போகவில்லை. முதலாம் உலக மகாயுத்தம் 1914-ல் ஆரம்பிக்கவே ஆண்கள் போர்க்களம் செல்லவே, அனைத்து வேலைகளையும் பெண்கள் மேற்கொண்டு தங்கள் திறனைக் காண்பித்தனர். டிராம் விடுவது, கார்களை ஓட்டுவது, மெகானிக்குகளாக அனைத்து வாகனங்களையும் பழுதுபார்ப்பது உள்ளிட்ட வேலைகளை அவர்கள் செய்து காட்டவே உலகமே பிரமித்தது. 1918-ல் யுத்தம் முடிந்தது. பிரதம மந்திரி ஜார்ஜ் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கினார். போராட்டம் உலகெங்கும் வலுக்கவே இன்னும் 28 நாடுகள் பெண்களுக்கு உரிமையை வழங்கின. 1952-ல் களமிறங்கிய ஐ.நா. உலகெங்கும் ஆண்களுக்கும் இருக்கும் அனைத்து உரிமைகளையும் பெண்களுக்குக் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

    முன்னோடிகள்: பெண்களின் உரிமைக்காகப் போராடிய ஏராளமான அதிசயப் பெண்மணிகள் உள்ளனர். எடுத்துக்காட்டிற்கு எலினார் ரூஸ்வெல்டைச் சொல்லலாம். அமெரிக்க ஜனாதிபதியாக நான்கு முறை பதவி வகித்து சாதனை புரிந்த பிராங்ளின் ரூஸ்வெல்டின் மனைவியான இவர், அவரது வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தவர்.

    அத்தோடு வெள்ளை மாளிகையில் குடியேறியவுடன் அவர் அடிக்கடி நிருபர்களைச் சந்திக்கப் போகிறேன் என்றார். அனைவரும் மகிழ்ந்த அந்த வேளையில் அற்புதமான அடுத்த வரியை அவர் கூறினார்: "ஆனால் அவர்கள் எல்லோரும் பெண்களாகவே இருக்க வேண்டும்!"

    அனைவரும் பிரமித்தனர். எல்லா பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு பெண் நிருபர்களை வேலைக்கு அமர்த்தின. பத்திரிகை உலகம் புதிய அழகைப் பெற்றது. செய்திகளின் தரமும் கூடியது.

    அதே போல உலக அரங்கில் பெண்களின் தாக்கம் அதிகமானது. இதுவரை அறிவிக்கப்பட்ட 864 நோபல் பரிசுகளில் 64 பரிசுகளை பெண்மணிகள் இலக்கியம், மருத்துவம், அமைதி, ரசாயனம், இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் பெற்றுள்ளனர்.

    பாரத ரத்னா: பாரதத்தின் உயரிய விருதான பாரத் ரத்னா இதுவரை ஐந்து பெண்மணிகளுக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்திரா காந்தி, மதர் தெரசா, அருணா ஆசப் அலி, இசையரசி எம்.எஸ். சுப்புலக்ஷ்மி, லதா மங்கேஷ்கர் ஆகியோர் இந்த உயரிய விருதைப் பெற்றுள்ளனர்.

    விண்வெளி வீராங்கனைகள்: 1963-ல் முதல்முறையாக வாலெண்டினா தெரஷ்கோவா என்ற ரஷிய பெண்மணி தனது 26-ம் வயதிலேயே விண்ணில் பறந்து சாதனை நிகழ்த்திக் காட்டினார். தொடர்ந்து விண்வெளிக்குச் சென்ற சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட விண்வெளிப் பயணிகளில் வீராங்கனைகள் ஏராளமானோரும் இந்தச் சாதனையில் ஈடுபட்டனர். ஸ்வெட்லேனா சாவிட்ஸ்கி, சாலி ரைட், கிறிஸ்டா மக்லிப், மே ஜெமிசன், ஐலீன் காலின்ஸ், இந்திய வீராங்கனையான கல்பனா சாவ்லா, பெக்கி விட்சன், கிறிஸ்டினா கோச், ரெசிகா மெய்ர், கேட் ரூபின்ஸ் செய்த சாத னைகள் வியப்பூட்டுபவை; பிரமிக்க வைப்பவை.

    உத்வேகமூட்டும் பெண்மணிகள்:

    உலகளாவிய விதத்தில் உத்வேகமூட்டும் பெண்மணிகள் பட்டியலைத் தயாரிக்கும் பத்திரிகைகளும், சர்வே நிபுணர்களும் தரும் தகவல்கள் சுமார் பத்தாயிரம் பேரைச் சுட்டிக் காட்டுகின்றன. அரசியலில் நியூசிலாந்து பிரதம மந்திரி, ஜேசிந்தா ஆர்டன், அமெரிக்காவின் கமலா ஹாரிஸ் மற்றும் ஹில்லாரி க்ளிண்டன், இந்தியாவின் நிர்மலா சீதாராமன், அழகிகள் மற்றும் திரைப்படத் துறையில் ஐஸ்வர்யா ராய், சீன நடிகை யாங் மி, ப்ரியங்கா சோபிரா, பாடகிகளில் டெய்லர் ஸ்விப்ட் உள்ளிட்டோர் முன்னணியில் இடம் பெறுகின்றனர்.

    இன்போசிஸ் பவுண்டேஷனை நிறுவிய சுதா மூர்த்தி சிறந்த எழுத்தாளர். சேவை மனப்பான்மை கொண்டவர். கோவிட் காலத்தில் அவர் ஆற்றிய சேவையை அனைவரும் பாராட்டினர். உலகத்தில் மீடியா துறையில் ஒரு கலக்கு கலக்கி முன்னணியில் நிற்பவர் ஓபிரா வின்பிரே. சிறு வயதில் பல கொடுமைகளுக்கு ஆளாகி சுயமாக முன்னுக்கு வந்த இவர் பெண்களுக்காக குரல் கொடுப்பது நியாயமானதே.

    நீண்ட இந்த பட்டியலில் அன்றாடம் சேரத் துடிக்கும் பெண்மணிகளால், இது ஆயிரம் ஆயிரமாகப் பெருகும் என்பதில் ஐயமில்லை. விளையாட்டுத் துறையிலும் அறிவியலிலும் சாதனை படைக்கத் துடிக்கும் பெண்மணிகள் எங்களுக்கு இங்கு சில இடைஞ்சல்கள் இருக்கின்றன என்று சொல்வது கவனிக்கப்பட வேண்டிய ஒரு அம்சம்!

    பிரபலம் வேண்டாம்; சாதனையே முக்கியம்!

    எங்களுக்குப் பெயர் வேண்டாம், புகழ் வேண்டாம், காசு பணம் வேண்டாம் என்று சொல்லும் அபூர்வப் பெண்மணிகளும் இல்லாமல் இல்லை. எடுத்துக்காட்டிற்கு திம்மக்காவைக் கூறலாம். இவருக்கு இப்போது வயது 112. கர்நாடகத்தில் பழைய மைசூர் ராஜ்யத்தில் குப்பி தாலுக்காவில் (இப்போது தும்கூர்) 1911, ஜூலை 8-ம் நாள் பிறந்த இவர் ஏராளமான மரக்கன்றுகளை சிறு வயதிலிருந்தே நட்டு வந்திருக்கிறார். இவர் நட்டு வைத்த ஆலமரங்கள் மட்டும் 400. பத்மஸ்ரீ விருது இவருக்கு வழங்கப்பட்டது.

    இதிகாசத்திலும் இலக்கியத்திலும் பெண்கள்:

    ராமாயண மகாபாரத இதிகாசங்களில் வரும் அறிவுசால் பெண்மணிகளைப் பற்றி எழுதப் புகுந்தால் ஒரு கலைக்களஞ்சியமே உருவாகும்.

    திரவுபதி, தமயந்தி, சாவித்திரி. இப்படி அறத்தின் அடிப்படையிலான நூற்றுக்கணக்கான பெண்மணிகளை நமது இதிகாசங்களும் இலக்கியமும் சுட்டிக் காட்டுகின்றன. தமிழ் இலக்கியத்தை மட்டும் எடுத்துக் கொண்டோமானால் சங்க இலக்கியத்தில் நாம் காணும் பெண் புலவர்கள் ஏராளமானோர்.

    அஞ்சில் ஆந்தைமகள் நாகையார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், அவ்வையார், கழார்க் கீரனெயிற்றியார், குமிழிஞாழார் நப்பச லையார், நக்கண்ணையார், போந்தைப் பசலையார், மதுரை நல்வெள்ளியார், முள்ளியூர்ப் பூதியார், வெள்ளிவீதியார் என்று இந்தப் பட்டியல் நீளும். அவ்வையாரைப் போல இன்னொரு பெண் புலவர் இலக்கிய உலகில் உண்டா, என்ன?

    பெண்களுக்கு இன்று இருக்கும் பிரச்சனைகள்:

    "ஆண்களோடு பெண்களும் சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்த நாட்டிலே" என்று மகாகவி பாரதியாரின் முழக்கம் முழங்கி நூறு ஆண்டுகள் கடந்து விட்டன. என்றாலும் நம் நாட்டைப் பொறுத்தவரையில்அரசியலுக்குத் தேவையான அளவு தலைமைப் பண்புள்ள பெண்மணிகள் இன்னும் தேவை. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள, கல்வியறிவில்லாப் பெண்மணிகள் ஏற்றம் பெற உரிய நடவடிக்கை தேவை.

    பாலியல் கொடுமைகளும், இல்லத்தில் ஏற்படும் வன்கொடுமைகளும் முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும். நீதித்துறை, விளையாட்டு, அறிவியல், கல்வி, விண்வெளி, பாதுகாப்பு, மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் பெண்களுக்கு இருக்கும் தடைகள் இனம் காணப்பட்டு அகற்றப்பட வேண்டும்.

    ஆணுக்கு அறிவு அதிகமா பெண்ணுக்கு அதிகமா?

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

    பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

    எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண்

    இளைப்பில்லை காண் என்ற கும்மியடி என்று மகாகவி பாரதியார் கூற்றை மெய்ப்பிக்கும் சம்பவத்தை சுட்டிக் காட்டுகிறது கொங்கு மண்டல சதகத்தில் உள்ள பாடல் எண் 65.

    தக்கையிசை ராமாயணம் என்ற நூலை இயற்றிய சிறந்த கவிஞரான எம்பிரான் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சங்ககிரியில் வாழ்ந்து வந்தார்.

    ஒரு நாள் கவிஞர் வெளியில் சென்றிருந்தபோது அவருடன் அளவளாவி மகிழ சில வித்துவான்கள் அவர் வீட்டிற்கு வந்தனர்.

    அறிவில் சிறந்த அவரது மனைவி பூங்கோதையார் அவர்களை வரவேற்று உபசரித்து கவிராயர் வெளியில் சென்றிருப்பதையும் சற்று நேரத்தில் வந்து விடுவார் என்பதையும் கூறினார். திண்ணையில் அமர்ந்த வித்துவான்கள் தங்களுக்குள் பல்வேறு விஷயங்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தனர்.

    அவர்களுள் ஒருவர் எவ்வளவு தான் கற்றாலும் ஆணுக்கு முன்னால் பெண்ணின் அறிவு குறைவு தான் என்ற தன் கருத்தை முன் வைத்தார். அதை அனைவரும் சந்தோஷமாக ஆதரித்து பெண்களை இழித்துச் பேச ஆரம்பித்தனர். வீட்டின் உள்ளேயிருந்து இதைக் கேட்டுக் கொண்டிருந்த பூங்கோதையாரால் ஒரு அளவுக்கு மேல் பொறுக்க முடியவில்லை.

    ஒரு சிறிய துண்டுச் சீட்டில் ஒரு பாடலை எழுதி ஒரு சிறுமி மூலம் புலவர்களிடம் அனுப்பினார். அந்தப் பாடல்:

    அறிவில் இளைஞரே ஆண்மக்கள்; மாதர்

    அறிவில் முதிஞரே ஆவர் – அறிகரியோ

    தான் கொண்ட சூல் அறிவர் தத்தையர்; ஆண்மக்கள்

    தான் கொண்ட சூல் அறியார் தான்

    இதைப் படித்துப் பார்த்த புலவர்கள் திகைத்துப் போனார்கள். அந்த நேரத்தில் வெளியில் சென்றிருந்த கவிராயர் திரும்பி வந்தார். நடந்ததை அறிந்து கொண்ட கவிராயர் தன் மனைவியிடம் அதற்கான விளக்கத்தைக் கேட்டார். ஆண்மக்களை இழித்துக் கூறலாமா என்ற அவர் கேள்விக்கு அம்மையார், "நான் இழித்துக் கூறவில்லையே ஆண், பெண் இருவரும் அறிவைக் கொண்டிருந்தாலும் அறிவில் சிறந்தவர்கள் பெண் மக்களே என்றல்லவா கூறி இருக்கிறேன்.

    ஆன்மாவானது நீர்த்துளி வழியே பூமியில் சேர்ந்து உணவு வழியாக புருஷ கர்ப்பத்தில் தங்கி பின்னர் பெண்ணின் கருப்பையை அடைந்து கர்ப்பமுற்று சிசு பிறக்கிறது. ஆகவே தங்கள் கர்ப்பத்தைத் தெரிந்து கொள்ளாத ஆண்களை விட அதை அறிந்திருக்கும் பெண்களே அறிவில் சிறந்தவர்கள் என்கிறேன்" என்றார்.

    மேல் உலகம் சென்ற ஒரு உயிரானது, பூமிக்குத் திரும்பும்போது முறையே துறக்கம், மேக மண்டலம், நிலம், தந்தை, தாய் ஆகிய ஐந்து இடத்துப் புகுந்து வருவதை தியானித்தலே பஞ்சாக்கினி வித்தை என்று அறநூல்கள் கூறுகின்றன.

    சொர்க்கம் சென்ற ஆன்மா, மேகத்தை அடைந்து மழைத்துளி மூலம் நிலத்தை அடைந்து உணவுப் பொருளாய் புருஷ தேகத்தை அடைந்து பின்னர் இந்திரிய மயமாக பெண்ணின் கருப்பையை அடைந்து சிசுவாகப் பிறக்கிறது. புருஷ கர்ப்பத்தில் இரண்டு மாதம் தங்கி இருப்பதை ஆண்கள் அறிவதில்லை. ஆனால் கருவுற்ற உடனேயே பெண் மக்கள் அதை அறிந்து போற்றிப் பாதுகாத்து குழந்தையைப் பிரசவிக்கின்றனர்.

    அறிவில் சிறந்தவர் ஆணா, பெண்ணா? பெண்ணே தான் என்று அடித்துக் கூறினார் பூங்கோதையார்.

    விக்கித்துப் போன புலவர்கள் அதை ஒப்புக் கொண்டனர்.

    விஷயம் கொங்கு மண்டலம் வழியே தமிழகமெங்கும் பரவியது. அனைவரும் பூங்கோதையாரைப் பாராட்டி மகிழ்ந்தனர். தாய்க்குலத்தின் மகிழ்ச்சியைச் சொல்லவும் வேண்டுமோ!

    சிக்கலான கேள்விக்கு சரியான பதிலை அளித்த அறிவில் சிறந்த பெண்மணியான பூங்கோதையைப் பெற்ற மணியான பூமி கொங்கு மண்டலமே என்று கொங்கு மண்டல சதகத்தில் கார்மேகக் கவிஞர் பாடியுள்ளார்.

    குறுமுனி நேர் தமிழ் ஆழி உண் வாணர் குழாம் வியப்ப

    அறிவில் இளைஞரே ஆண் மக்கள் என்ன அறுதியிட்ட

    சிறிய விடைச்சி எம்பெருமான் மனைவி சிறந்து வளர்

    மறுவறு சங்ககிரி சேர்வது கொங்கு மண்டலமே

    பொருள்:

    தமிழ்க் கடலை உண்ட அகத்திய முனி போன்ற பல புலவர்கள் வியக்குமாறு, அறிவில் இளைஞர் ஆண் மக்களே என்று முடிவு கூறிய எம்பெருமான் கவிராயரது மனையாட்டியார் வாழும் சங்க கிரியும் கொங்கு மண்டலமே!

    தமிழ் மங்கையர் பொறுப்பு:

    இப்படி உலகிற்கே அரிய உண்மையை உணர்த்திய பெருமை தமிழ் மங்கையையே சாரும். பெண்களின் சம உரிமையை நிலை நாட்டி உலகெங்கும் அவர்களை மேல்நிலைக்குக் கொண்டு செல்ல தமிழ் மங்கையரை விட தகுதி வேறு யாருக்கு உண்டு. உலக மகளிர் தினத்தில் சிந்திப்போம். செய்வார்களா?


    தொடர்புக்கு:-

    snagarajans@yahoo.com

    Next Story
    ×