என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நாளை தேய்பிறை சஷ்டி... முருகன் அருள்பெற வாழைப்பழ தீபம்
    X

    நாளை தேய்பிறை சஷ்டி... முருகன் அருள்பெற வாழைப்பழ தீபம்

    • ஆறு விதமான சக்திகளை கொண்டவராக தோன்றியவர் தான் முருகப்பெருமான்.
    • திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு.

    முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம் ஆகும். மாதந்தோறும் வருகின்ற சஷ்டி, கிருத்திகை போன்ற தினங்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்வது சிறப்பான பலன்களை தரும்.

    அமாவாசையை அடுத்து வரும் சஷ்ட வளர்பிறை சஷ்டி என்றும், பவுர்ணமியை அடுத்து வரும் சஷ்டி தேய்பிறை சஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது.

    ஆறு விதமான சக்திகளை கொண்டவராக தோன்றியவர் தான் முருகப்பெருமான். முருகப்பெருமானை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் வல்வினைகள் நீங்கி நன்மைகள் ஏற்படும் என்பது நிச்சயம்.

    திதிகளின் வரிசையில் சஷ்டி ஆறாவதாக வருவதால் அதற்கு மிகப்பெரிய வலிமை உண்டு. ஐஸ்வர்யத்தை தரக்கூடியது 6 என்ற வழக்கு ஜோதிடத்தில் உள்ளது.

    ஜோதிடத்தில் 6-ம் எண்ணுக்கு உரிய கிரகம் சுக்கிரன். இவர் லட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறார். திருமணம், வாகனம், வீடு ஆகியவற்றை தரக் கூடியவரும் சுக்கிரன்தான். எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம். 16 பேறுகளில் ஒன்றாகவே குழந்தைப்பேறு கருதப்படுகிறது. எனவே குழந்தைப்பேறுடன் மீதமுள்ள 15 பேறுகளையும் அளிக்கும் வல்லமை சஷ்டி விரதத்திற்கு உண்டு.

    முருகன் அருள் வேண்டி பக்தர்கள் இருக்கும் விரதங்களுள் மிகச்சிறப்புடையது சஷ்டி விரதம். இந்த விரதத்தை மனதில் கொண்டே 'சஷ்டியிலிருந்தால் அகப்பையில் வரும்' என்ற பழமொழி எழுந்தது.

    திருமணம் இல்லாமல் ஒருவருக்கு வாழ்க்கை முழுமையடையாது என்பது போல, குழந்தை இல்லாமல் திருமண வாழ்க்கை நிறைவு பெறாது. சஷ்டி விரதம் இருந்தால் நல்ல குழந்தைப்பேறு கிடைக்கும். நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்ற பொருளும் உண்டு.

    வீட்டிலேயே சஷ்டி விரதத்தை கடைபிடிப்பவர்கள் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, முருகனுக்கு உகந்த வாசம் மிகுந்த மலர்களை சாற்றி, ஆறு விளக்குகளை கிழக்கு நோக்கி இருக்குமாறு ஏற்றி, பூஜை செய்து விரதத்தை தொடங்கலாம்.

    ஆறுமுகனுக்கு ஆறு விளக்குகளை ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பு.

    முருகனுக்கு உகந்த ஏதாவது ஒரு நைவேத்திய பொருளை படைக்கலாம். அதாவது சுண்டல் அல்லது சர்க்கரைப் பொங்கல் போன்று செய்யலாம்.

    தேய்பிறை சஷ்டி அன்று வீட்டில் குறிப்பிட்ட முறையில் விளக்கேற்றி வழிபட்டால் வாழ்க்கையில் தோல்வி என்பதே ஏற்படாது. தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அதோடு நீங்கள் என்ன வேண்டுதலை முன்வைத்து இந்த விளக்கை ஏற்றுகிறீர்களோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

    இதற்காக தேய்பிறை சஷ்டி நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, வீட்டின் பூஜை அறையில் முருகன் படம் அல்லது விக்ரகத்தை எடுத்து, சுத்தம் செய்து, அலங்கரித்து வைத்துக் கொள்ளுங்கள். முருகன் படம் அல்லது விக்ரகத்திற்கு முன்பு இரண்டு வாழைப்பழங்களை ஒரு சிறிய தட்டில் எடுத்து வையுங்கள். அந்த வாழைப்பழத்தின் மத்தியில் சிறிதாக குழி போன்று ஏற்படுத்தி, அதில் சிறிதளவு நெய் விட்டு, திரிப் போட்டு தீபம் ஏற்றுங்கள். பஞ்சாமிர்தம் எப்படி முருகனுக்கு மிகவும் பிரியமான அபிஷேகப் பொருளோ அதே போல் இது முருகப் பெருமானுக்கு மிகவும் பிரியமான வேண்டுதலாகும். நெய் விளக்காக இதை ஏற்றுவது மிகவும் சிறப்பானது.

    இந்த வாழைப்பழ தீபத்தை செவ்வாய்கிழமையிலும் கூட ஏற்றலாம். இருந்தாலும் சஷ்டி திதியில், அதுவும் நாளை தேய்பிறை சஷ்டி அன்று ஏற்றுவது மிகவும் சிறப்பானதாகும். இந்த விளக்கை ஏற்றி வைத்து, ஏதாவது ஒரு கோரிக்கையை முருகனிடம் முன் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

    அடுத்து வரும் சஷ்டி திதி அன்று இதே போல் விளக்கேற்றி மற்றொரு வேண்டுதலை வைக்கலாம். இந்த விளக்கை நம்பிக்கையுடன் ஏற்றி வந்தால் வாழ்வில் பல மாற்றங்களையும், அதிசயங்களையும் முருகப் பெருமான் நடத்துவதை காணலாம்.


    இவ்விரதத்தை முழு நேரமும் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

    மீண்டும் மாலையில் பூஜை செய்து விரதத்தை முடித்துக் கொள்ளலாம். வீட்டிலேயே இருப்பவர்கள் விரதம் முடியும் வரை முருகனுக்கு விளக்கு ஏற்றி வைப்பது மிகவும் நல்லது.

    வீட்டிலேயே முருகனின் பாமாலைகளைப் பாடலாம். குறிப்பாக கந்த சஷ்டி, திருப்புகழ் உள்ளிட்ட முருகனின் சிறப்புகளை உணர்த்தும் பாடலை படிக்கலாம்.

    மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வணங்க வேண்டும். மேலும் நவகிரக சன்னிதியில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும்.

    பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நெய்வேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேய்பிறை சஷ்டியில் முருகன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களில் உங்களால் முடிந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். குறிப்பாக இளநீர் மற்றும் தேன் போன்றவற்றை வாங்கி கொடுப்பதன் மூலம் சுபிட்சம் பெருகும்.

    தேய்பிறை சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு திருமண தடை நீங்கி மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் சிறப்பான வெற்றிகள் உண்டாகும். நேரடி, மறைமுக எதிரிகள் விலகுவார்கள்.

    உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பொருளாதாரத்தில் இருந்துவந்த கஷ்ட நிலை நீங்கும். தொழில், வியாபாரங்களில் லாபம் பெருகும்.

    பொதுவாக தீராத பிரச்சினையில் தவிப்பவர்கள், திருமணம் ஆகாமல் தள்ளி போய் கொண்டே இருப்பவர்கள், குழந்தை இல்லாதவர்கள், வாழ்க்கையில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வருபவர் ஆகியோர் சஷ்டி திதியில் விரதம் இருந்து முருகனை வழிபடலாம். சஷ்டியில் விரதம் இருப்பவர்கள் முருகனுக்குரிய மந்திரம், சுலோகம் போன்றவற்றை சொல்லித்தான் வழிபட வேண்டும் என்பது கிடையாது. உண்மையான பக்தியுடன், மனமுருகி முருகப்பெருமானை அழைத்து வேண்டுதலை சொன்னால் போதும், முருகப் பெருமான் அந்த வேண்டுதலை நிச்சயம் நிறைவேற்றி வைப்பார்.

    வேலை காரணமாக வெளியில் செல்பவர்கள், உடல் வேலையில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் ஓம் முருகா என்ற மந்திரத்தை ஜெபித்தபடி பணியை தொடரலாம். புலால் உணவுகள் மற்றும் போதை வஸ்துக்களை தவிர்க்க வேண்டும். மனதில் தீய எண்ணங்களோ, கடுமையான உணர்ச்சிகளோ இல்லாதவாறு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

    உடல்நிலை சரியில்லாதவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு இந்த சஷ்டி விரதத்தை அனுஷ்டிக்கலாம். குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லைகள் முழுவதுமாக நீங்கவும் சஷ்டிவிரதத்தை கடைப்பிடிக்கலாம். முழு நாளும் உபவாசம் இருக்க இயலாதவர்கள் அன்றைய தினம் காலையில் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் முதல் உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

    இந்த முறையில் தொடர்ந்து விரதம் இருந்திட முருகப்பெருமானின் அருளால் மேலான செல்வமும், வெற்றியடையும் யோகமும் கிட்டும் என்பது ஐதீகம். நாளை தேய்பிறை சஷ்டி விரதம் இருந்து முருகனின் திருவருள் பெறுவோம்.

    மணமாலை தந்தருள்வாய்

    விரைவில் திருமணம் நடைபெற அருணகிரிநாதர் இயற்றிய இந்த பாடலை தேய்பிறை சஷ்டி தினத்தன்று உளப்பூர்வமாக பாடி வந்தால் பலன் கிடைக்கும்.

    நீலங்கொள் மேகத்தின் மயில்மீதே

    நீ வந்த வாழ்வைக் கண்டதனாலே

    மால் கொண்ட பேதைக்குன் மணநாறும்

    மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே!

    வேல்ெகாண்டு வேலைப் பண்டெறிவோனே

    வீரங்கொள் சூரர்க்குங் குலகாலா

    நாலந்த வேதத்தின் பொருளோனே

    நானென்று மார்தட்டும் பெருமானே.

    பொருள்: அன்றொரு நாள், சூரன் மீது வேலாயுதத்தை விடுத்தவனே! வீரம்மிக்க அசுரர் குலத்திற்கு காலனாக வந்தவனே! வேதங்கள் கூறுகின்ற உறுதிப் பொருளாகத் திகழ்பவன் நான் என்று மார்தட்டிக் கொண்டு வருகின்ற எம்பெருமானே! நீலவண்ணம் கொண்ட மேகம் போல தோகை விரித்தாடுகின்ற மயில் மீது வரும் முருகப் பெருமானே! நீ வருகின்ற அழகினைக் கண்டு, மயக்கம் கொண்ட பேதையாகிய எனக்கு, உன் மார்பில் ஆடுகின்ற நறுமணம் மிக்க மலர் மாலையினைத் (மணமாலை)தந்தருள்வாயாக.

    Next Story
    ×