என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    இலக்கணப் புலவர் முனைவர் தி.முத்து கண்ணப்பர்
    X

    இலக்கணப் புலவர் முனைவர் தி.முத்து கண்ணப்பர்

    • தமிழ் இலக்கணத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த தமிழ் அறிஞர் அவர்.
    • தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்தவர்.

    சுமார் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சியிலும் வானொலியிலும் ஒரு தமிழ் அறிஞர் குரல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. `தமிழைச் சிதைக்காதீர்கள், இலக்கணப்படி எழுதுங்கள்' என்று கண்டிப்போடு ஓங்கிக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பெரியவர்.

    அந்தக் குரலைக் கேட்டவர்கள் கண்ணை மூடிக் கொண்டு அவர் இலக்கணப் புலவர் முனைவர் முத்து கண்ணப்பர் என்று சொல்லி விடுவார்கள். தமிழ் இலக்கணத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த தமிழ் அறிஞர் அவர்.

    இலக்கணப் புலி செல்வநாத முதலியார், பிரசங்க சிந்தாமணி கோவிந்தசாமிப் பிள்ளை, திரு.வி. கல்யாண சுந்தரனார், ரா.பி. சேதுப்பிள்ளை, வையாபுரிப் பிள்ளை, கி.வா. ஜகந்நாதன் போன்ற பற்பல உயர்நிலைத் தமிழ் அறிஞர்களிடம் முறையாகத் தமிழ் இலக்கணம் பயின்ற பெருமைக்குரியவர் தி.முத்து கண்ணப்பர்.

    இலக்கணத்தில் பெரும்புலமை பெற்ற அவரை `இலக்கண முத்து' என்றே அறிஞர்கள் மதிப்போடு குறிப்பிடுவதுண்டு. `தமிழில் தவறுகளைத் தவிர்ப்போம், நல்ல தமிழ் அறிவோம், தமிழ்ச் சொல்லும் பொருளும்' உள்ளிட்ட அவரது நூல்கள் இளைஞர்களுக்குத் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்றுத் தருபவை. எளிதில் அனைவருக்கும் புரியக் கூடிய பழகு தமிழில் எழுதப் பட்டவை. யார் வேண்டுமானாலும் எளிதாக அந்த நூல்களைப் படித்து விளங்கிக் கொள்ள முடியும்.

    `முத்தமிழ்வேள், நெய்தல் இலக்கியச் செம்மல்' உள்ளிட்ட பற்பல பட்டங்களைப் பெற்றவர் முத்து கண்ணப்பர். தமிழக அரசால் தமிழ்த் தென்றல் திரு.வி.க விருதளித்து கவுரவிக்கப்பட்ட பெருமையும் அவருக்கு உண்டு.

    சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர்கள் சங்கத் தலைவராக இருந்தவர். தமிழகப் புலவர் குழுவின் தலைவராக இருந்தவர்.

    மகாத்மா காந்தியிடம் சமூக சேவைக்கான நேரடிப் பயிற்சி பெற்றவர். காந்தியத் தாக்கத்தால் எப்போதும் வெண்மை நிறக் கதர் ஆடையையே அணிந்து வந்தார்.

    `சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம்'அவரது ஆய்வு நூல்களில் மிக முக்கியமானது. இன்னும் பற்பல பழந்தமிழ் இலக்கிய ஆராய்ச்சி நூல்களின் ஆசிரியர் அவர். தமிழே வாழ்வாக வாழ்ந்தவர்.

    கி.வா.ஜ. பழமொழிகளைத் தொகுத்தது போல், `கடல் தந்த கவிதை' என்ற தலைப்பில் மீனவர்களின் நாட்டுப்புறப் பாடல்களைத் தேடித் தேடித் தொகுத்திருக்கிறார் முத்து கண்ணப்பர். அவரே சிறந்த கவிஞரும் கூட. மரபுக் கவிதைத் தொகுதிகள் பலவற்றின் ஆசிரியர்.

    சமூக சேவகி முத்துலட்சுமியின் பணிகளால் ஈர்க்கப்பட்ட அவர், `டாக்டர் முத்துலட்சுமி வாழ்க்கை வரலாறு' என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூல் வாழ்க்கை வரலாற்றுத் துறையில் குறிப்பிடத்தக்க ஒரு நூல்.

    தமிழ்ச் சான்றோரான அவரின் ஏராளமான சிற்றுரைகளை `சான்றோர் சிந்தனை' என்ற தலைப்பில் சென்னை வானொலி நிலையம் தொடர்ந்து ஒலிபரப்பி வந்தது.

    அந்தப் பதிவுகள் பல இப்போதும் இணையத்தில் கேட்கக் கிடைக்கின்றன. சுருக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் கேட்போர் மனத்தில் பதியும் வண்ணம் அறநெறிகளை வலியுறுத்திப் பேசுவதில் அவருக்கு இணையான இன்னொருவர் இல்லை என்றே கூற வேண்டும். அவர் சொன்ன அறநெறிகள் அனைத்தையும் அவர் தம் சொந்த வாழ்விலும் பின்பற்றி வந்தார் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.

    குறிஞ்சி மலர் புகழ் பிரபல எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி முனைவர் பட்டம் பெற விரும்பி, `பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும்' என்ற தலைப்பைப் பதிவு செய்தபோது, அவருக்கு ஆய்வு நெறியாளராக அமைந்தவர் முத்து கண்ணப்பர்தான்.

    திருப்பூர் கிருஷ்ணன்

    நா. பார்த்தசாரதிக்கும் அவருக்கும் இடையே நீடித்த நட்பு இருந்தது.

    முத்து கண்ணப்பரின் வழிகாட்டுதலோடு ஆய்வேட்டை நிறைவு செய்து பல்கலைக் கழகத்தில் சமர்ப்பித்த நா. பார்த்தசாரதி, முனைவர் பட்டம் பெறுவதற்குள் காலமாகி விட்டார். நா. பார்த்தசாரதியின் ஆய்வேட்டைப் பின்னர் அதே தலைப்பில் தமிழ்ப் புத்தகாலயம் நூலாக வெளியிட்டது.

    முத்து கண்ணப்பர் எளிமையான வாழ்க்கை நடத்தியவர். தமது நண்பர்களை உயிராக மதித்தவர். தமது உயர்ந்த நட்புச் செல்வத்தையே பெறுதற்கரிய செல்வமாக மதித்துப் போற்றினார். தமது உற்ற நண்பர்களான தமிழ் அறிஞர்களுடன் அளவளாவுவதில் அவர் பெருமகிழ்ச்சி கண்டார்.

    தமிழ் மொழியைச் சிதைப்பவர்களைக் கண்டால், சீற்றம் கொள்வதை விட அதிகமாக வருத்தம் கொள்வார். அந்த வகையில் சீத்தலைச் சாத்தனாரின் வாரிசு அவர் என்று தான் சொல்ல வேண்டும்!

    `திரிகூட ராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி, செயங்கொண்டாரின் கலிங்கத்துப் பரணி, அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து' போன்ற இடைக்கால இலக்கியங்கள் அனைத்தும் அவர் விரல் நுனியில் இருந்தன. சங்கப் பாடல்களையும் காப்பியங்களையும் கரைத்துக் குடித்திருந்தார்.

    எந்தப் பழந்தமிழ் நூல் குறித்து அவரிடம் சந்தேகம் கேட்டாலும் உடனுக்குடன் விளக்கம் தரக் கூடியவர். தமிழ் சார்ந்த சந்தேகங்களுக்கு விளக்கம் தருவதை வாழ்நாள் முழுவதும் ஒரு கடமைபோல் பின்பற்றியவர்.

    மேற்கோள்கள் அனைத்தையும் மனத்தில் வைத்திருப்பாரே தவிர எதன்பொருட்டும் புத்தகங்களை எடுத்து ஒப்பிட்டுப் பார்க்க மாட்டார். அவரது பழந்தமிழ் அறிவு கேட்பவர்களிடம் பிரமிப்பை ஏற்படுத்தும்.

    தமிழறிவு குறித்து மட்டுமல்ல. அவரது மனப்பாடச் சக்தி குறித்தும் அவரைச் சந்திப்பவர்கள் வியப்பில் ஆழ்வார்கள். ஆயிரக்கணக்கான செய்யுள்களை அவர் பிழையில்லாமலும், எந்தத் தடுமாற்றமும் இல்லாமலும் எடுத்துச் சொல்வார். பழந்தமிழைப் பொறுத்தவரை அவர் ஒரு நடமாடும் பல்கலைக் கழகமாகவே விளங்கினார்.

    `அந்தக் காலத் தமிழறிஞர் பரம்பரையில் எஞ்சியிருந்த மிகச் சில விழுதுகளில் ஒருவர் முத்து கண்ணப்பர்' என அவர் காலமானபோது பலர் தங்களின் இரங்கல் செய்தியில் குறிப்பிட்டார்கள்.

    முத்து கண்ணப்பர் 1915 ஜூன் 4-ந்தேதி பிறந்தவர். நான்காம் வயதிலேயே தந்தையை இழந்துவிட்டார். இளமையில் வறுமை அவரை வாட்டி வதைத்தது. நாள்தோறும் எட்டு மைல் நடந்தே சென்று கல்வி கற்றார்.

    1938 முதல் 42 வரை ராமகிருஷ்ண மடமே இவரை வளர்த்தது. ராமகிருஷ்ண மடம் உயர்ந்த ஆன்மிகச் செல்வராக இவரை உருவாக்கியது.

    இவர் எழுதியுள்ள `அவ்வை யார் வாழ்வும் வாக்கும்' என்ற நூலைத் தம்மைப் பராமரித்த ராமகிருஷ்ண மடத்தின் காலஞ்சென்ற துறவி சர்வக் ஞனானந்தருக்குத் தான் பக்தியோடு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

    முத்து கண்ணப்பர் வாரம் ஒருநாள் வீட்டிலோ, வெளியிலோ யாரிடமும் எதுவும் பேசாமல் முழுமையான மவுனவிரதம் இருப்பார். (பேராசிரியர் கு. ராஜவேலு கூட வாரம் ஒருநாள் மவுனவிரதம் இருக்கும் பழக்கமுடையவர்.) அவ்விதம் மவுனமாக இருப்பது தம்மை இறைச் சிந்தனையில் தோய்ந்திருக்கச் செய்வதாகவும் தமது ஆரோக்கியம் மேம்படுவதாகவும் அவர் சொன்னதுண்டு. அவர் தாம் ஒரு காந்தியவாதி என்பதைத் தம் மவுன விரதத்தாலும் மெய்ப்பித்தார்.

    `கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்ற அவ்வை வாக்கால் அனுபவ பூர்வமாகக் கவரப்பட்ட இவர், பின்னாளில் அவ்வை தாசனாகவே ஆகிவிட்டார். அவ்வையின் வாழ்வியல் சார்ந்த படைப்புகளில் மனம் பறிகொடுத்தார். தாம் எழுதிய பல படைப்புகளை `அவ்வைதாசன்' என்ற புனை பெயரில்தான் எழுதிவந்தார்.

    அவ்வையைத் தம் அகத்தில் வைத்துப் போற்றிய இவர் தம் இல்லத்திற்கும் அவ்வை அகம் என்றே பெயர் வைத்தார். தமது புதல்வியரில் ஒருவருக்கு அவ்வை எனப் பெயரிட்டு மகிழ்ந்தது அவரின் அன்பு மனம்.

    பத்துக் குழந்தைகள் அவருக்கு. 4 ஆண்கள், 6 பெண்கள். அவரது மனைவி திருமதி கமலா, ஓய்வு பெற்ற ஆசிரியை.

    கி.வா. ஜகந்நாதனுக்கு முத்து கண்ணப்பர் மேல் மிகுந்த மதிப்புண்டு. முத்து கண்ணப்பரோ கி.வா.ஜ. வைத் தம் ஆசானாகவே மதித்தார். கி.வா.ஜ.வின் வீட்டுக்குச் சென்று அவரிடம் முத்து கண்ணப்பர் தொல்காப்பியத்தின் சில நுணுக்கமான பகுதிகளைக் கற்றுக் கொண்டார்.

    கி.வா.ஜ. கண்டிப்பான ஆசிரியர். விளக்கம் சொன்ன பின் தொல்காப்பிய நூற்பாக்களைச் சப்தம் போட்டுத் திரும்பத் திரும்பச் சொல்லச் சொல்வார். உரத்த குரலில் முத்து கண்ணப்பர் கி.வா.ஜ. விடம் பாடம் கேட்ட நூற்பாக்களை ஒப்பிப்பார். அப்படி ஒப்பிக்காவிட்டால்

    கி.வா.ஜ. விடமாட்டார். தம்மைக் கி.வா.ஜ.வின் மாணவர் என்று வாழ்நாள் முழுதும் பெருமையோடு குறிப்பிட்டுக் கொண்டார் முத்து கண்ணப்பர்.

    கி.வா.ஜ. காலமானபோது முத்து கண்ணப்பர் மனத்தளர்ச்சி அடைந்தார். `ஓர் உயர்ந்த முருக பக்தரை முருகன் அழைத்துக் கொண்டுவிட்டான்!' என்று சொல்லி வருந்தினார். பின்னர் மெல்ல மெல்லத்தான் மனம் தேறினார்.

    காங்கிரஸ் கட்சி ஆட்சியில் மாண்புமிகு பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்த போது மாநில மேல்சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் முத்து கண்ணப்பர். சிறிது காலத்தில், தான் ஒரு காந்தியவாதி என்றும் அரசியலில் தமக்கு நாட்டமில்லை என்றும் கூறி மேல்சபை உறுப்பினர் பதவியில் இருந்து விலகினார்.

    ஏழை எளிய மக்களுக்குத் தமிழ் கற்பிப்பதிலேயே மன நிறைவு ஏற்படுவதாகக் கூறித் தம் கல்விப் பணியை ஒரு தொண்டாகப் பின்னர் வாழ்நாள் முழுதும் தொடர்ந்தார்.

    தன் முயற்சியால் எப்படி உயர வேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த இலக்கணப் புலவரான முத்து கண்ணப்பர் 2003 ஜனவரி 22-ந்தேதி காலமானார்.

    நான்கு வயதிலேயே தந்தையை இழந்த ஒருவர் சொந்த முயற்சியால் வாழ்வில் பெற்ற உயரம் வியக்க வைப்பது. விடாமுயற்சி மூலம் எவ்விதம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கு தமிழறிஞர் முத்து கண்ணப்பர் வாழ்வு இன்றைய இளைஞர்களுக்குத் தொடர்ந்து வழிகாட்டிக் கொண்டிருக்கிறது.

    Next Story
    ×