என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

நினைத்ததை நடத்தும் திருச்செந்தூர் முருகன்- கந்தசஷ்டி கவசம் பிறந்தது!
- சிறு வயதிலேயே தமிழில் கவி பாடும் வகையில் தேவராசன் புலமை பெற்று இருந்தார்.
- கவசம் என்பது நம்மை பாதுகாக்கும் அரண் என்று அர்த்தமாகும்.
திருச்செந்தூர் தலத்தில்தான் கந்தசஷ்டி கவசம் பாடல் பிறந்தது என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக இருக்கிறது. கந்தசஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராய சுவாமிகள் என்பவர் ஆவார். இவர் தமிழகத்தின் வட மாவட்டத்தில் உள்ள வல்லூர் என்ற ஊரில் பிறந்தவர்.
இவரது தந்தை வீராசாமி பிள்ளை. இவர் கணக்காளராக பணிபுரிந்து வந்தவர். மைசூர் அரண்மனையில் கணக்காளராக இருந்ததால் இவருக்கு செல்வமும், புகழும் அதிகமாகவே இருந்தது. ஆனால் திருமணமாகி நீண்ட நாட்கள் ஆகியும் குழந்தை இல்லாத குறை அவரை வாட்டியது.
இதற்காக அவர் முருகனை மனமுருக வேண்டி விரதம் இருந்தார். முருகன் திருவருளால் வீராசாமி பிள்ளைக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு அவர் தேவராசன் என்று பெயரிட்டார். சிறு வயதிலேயே தமிழில் கவி பாடும் வகையில் தேவராசன் புலமை பெற்று இருந்தார்.
தமிழ் அறிஞர்களுடன் பழகி தனது தமிழ் புலமையை மேம்படுத்திக் கொண்டார். இளம் வயதில் அவருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரித்தது. இதனால் ஆலயங்களுக்கு செல்ல தொடங்கினார். நாளடைவில் இறைவன் மீது பாடல்கள் பாட தொடங்கினார்.
மற்ற இறை அடியார்களிடம் இருந்து இவர் பாடல்கள் இயற்றுவதில் வித்தியாசமாக இருந்தார். கவசம் பாடல்களையே அவர் அதிகம் இயற்றினார். கவசம் என்பது நம்மை பாதுகாக்கும் அரண் என்று அர்த்தமாகும். போருக்கு செல்பவர்கள் எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள கவச உடை அணிவது வழக்கம். அதில் இருந்துதான் கவசம் என்று சொல் வந்தது.
உடலை கவசம் பாதுகாப்பது போல ஆன்மாவை பாதுகாத்து மேம்படுத்த இறைவனின் அருள் எனும் கவசம் நமக்கு கவசமாக இருக்க வேண்டும் என்பதில் தேவராசன் உறுதியாக இருந்தார். அந்த அடிப்படையில்தான் அவர் சிவ கவசம், சண்முக கவசம், சக்தி கவசம், நாராயண கவசம் போன்ற பாடல் தொகுப்புகளை எழுதி இருந்தார். இதனால் அவர் பெயர் தேவராய சுவாமிகள் என்று மாற்றம் கண்டு இருந்தது.
ஒரு சமயம் இவருக்கு தீராத வயிற்று வலி ஏற்பட்டது. எவ்வளவோ மருத்துவ சிகிச்சைகள் செய்தும் அவரது வயிற்று வலி தீரவில்லை. நாளுக்கு நாள் வயிற்று வலி அதிகரித்தபடி இருந்தது. எனவே வாழ்க்கையில் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது. அதன் உச்சமாக தற்கொலை செய்து கொள்ளலாம் என்று அவர் முடிவு செய்தார்.
கொங்கு மண்டலத்தில் இருந்த அவர் எங்கு, எப்படி, எப்போது தற்கொலை செய்து கொள்வது என்று யோசித்தார். நீண்ட யோசனைக்கு பிறகு திருச்செந்தூருக்கு சென்று முருகனை கும்பிட்டுவிட்டு கடலில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்தார்.
அதன்படி கொங்கு மண்டலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு நடந்தார். வழியில் மடங்களில் தங்கி சாப்பிட்டு ஓய்வெடுத்து திருச்செந்தூர் அடைந்தார். அப்போது திருச்செந்தூர் நகரமும், கோவிலும் விழா கோலத்துடன் இருந்தது.
அப்போதுதான் தேவராய சுவாமிகளுக்கு திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கி இருப்பது நினைவுக்கு வந்தது. அவர் சென்ற சமயத்தில் கந்தசஷ்டி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன. ஆயிரக்கணக்கானவர்கள் திருச்செந்தூர் கோவிலிலும், சுற்றப்புறங்களில் தங்கி விரதம் இருந்து முருகனை வணங்கி கொண்டிருப்பதை கண்டார்.
திருச்செந்தூர் கடலோரத்திலும் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருப்பதை பார்த்தார். இந்த சமயத்தில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொள்வது என்பது இயலாத காரியம் போல அவருக்கு தோன்றியது. என்ன செய்வது என்று யோசித்தார்.
திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும். இன்றுதான் முதல் நாள். இன்னும் 9 நாட்கள் என்ன செய்வது என்று தேவராய சுவாமிகளுக்கு தவிப்பு ஏற்பட்டது. வேறு வழியின்றி 9 நாட்களும் திருச்செந்தூர் ஆலயத்திலேயே தங்கி இருந்து கந்தசஷ்டி விழாவை கண்டு கழித்துவிட்டு உயிரைப் போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தார்.
அதன்படி திருச்செந்தூர் ஆலய பிரகாரத்தில் தங்கினார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் கருவறை முன்பு நின்று வழிபட்டு வந்தார். அப்படி ஒரு தடவை அவர் திருச்செந்தூர் முருகனை வழிபட்டு கொண்டிருந்த போது அவர் காதுக்குள் யாரோ ஒருவர் கவசம் பாடு என்று சொல்வது போல இருந்தது.
தேவராய சுவாமிகள் ஆச்சரியத்துடன் சுற்றும் முற்றும் பார்த்தார். யாரும் இல்லை. திருச்செந்தூர் முருகனே தன்னை பாடச் சொல்லி உத்தரவிடுவதை உணர்ந்தார். எனவே முருகனை பாட தீர்மானித்தார். என்ன பாடுவது என்று யோசித்தபோது தற்போது நடக்கும் கந்த விழாவை அடிப்படையாக கொண்டு முருகன் அருள் பெற கந்தன் மீது சஷ்டி கவசம் பாடுவது என்று முடிவு செய்தார்.
அதோடு நோய் நொடி இல்லாமலும், எதிரிகளால் அழிவு வராமலும் முருகன் காக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாட ஆய்வு செய்தார். உடலில் ஒவ்வொரு உறுப்பின் பெயரை சொல்லி காக்க என்று முருகனை வேண்ட நினைத்தார். அறுபடை தலங்களில் அருள்பாலிக்கும் ஆறு முருகன் மீதும் தனித்தனி சஷ்டி கவசம் பாடல்களை இயற்ற மனதில் உறுதி செய்து கொண்டார்.
அன்றைய தினமே திருச்செந்தூர் பிரகார சன்னதியில் அமர்ந்து பாடத் தொடங்கினார்.
சஷ்டியை நோக்க சரவண பவனார்
சிஷ்டருக்கு உதவும் செங்கதிர் வேலோன்
பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை
கீதம் பாடக் கிண்கிணி ஆட....
-என்று தொடங்கி தேவராய சுவாமிகள் அந்த சஷ்டி கவசத்தை பாடினார். முருகனின் ஆறுபடை வீடுகளுக்கும், ஆறு பாடல்கள் பாடியுள்ளார். இப்பாடல்களில் முருகனின் அருள் திறமை, வீரம், சூரபத்மனை வென்றது போன்றவற்றைக் கூறி, 'நான் உனக்கு சரணம், என்னையும் காத்தருள்' என்று வேண்டுகின்றார். எளிய சொற்களை உபயோகித்து, எளிதாகப் பொருள் உணர்ந்து கொள்ளும் வகையில் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவராய சுவாமிகள் திருப்பரங்குன்றம், பழனி, பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி மற்றும் தமிழகத்தில் உள்ள முருகன் ஆலயங்களுக்கு செல்லும் போதெல்லாம் நோயால் பாதிக்கப்பட்ட பலர் முருகன் அருளுக்காக ஏங்கி ஆங்காங்கே இருப்பதை கண்டு வருந்துவார். அவர்கள் அனைவரும் நலம் பெற முருகன் வழிகாட்ட வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்.
கந்தசஷ்டி கவசம் பாடலை இயற்றிய போது தேவராய சுவாமிகளுக்கு இவையெல்லாம் நினைவுக்கு வந்தன. நோய்கள் மற்றும் மன கவலையால் பாதிக்கப்படுபவர்கள் முருகன் அருளால் கந்தசஷ்டி கவசம் பாடல்களை பாடினால் நோய்கள் நீங்கி மனதில் மகிழ்ச்சி பெற்று இன்பமுடன் வாழ வழி பிறக்க வேண்டும் என்ற நோக்கத்தை மனத்துக்குள் உள்வாங்கி கொண்டு கவசம் பாடலை பாடினார்.
இந்த கவசத்தின் பாடல் வரிகள் ஒவ்வொன்றும் திருச்செந்தூர் முருகனின் திருக்கையில் உள்ள வேலை போன்றது. எனவேதான் கந்தசஷ்டி பாடல் வரிகள் உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் கவசமாகவே மாறியது. அது மட்டுமின்றி கந்தசஷ்டி கவசம் மந்திரம் சக்தி கொண்டதாகவும் முருகன் அருளால் மேம்பட்டது.
அதனால்தான் தேவராய சுவாமிகள் கந்தசஷ்டி கவசம் பாடலை பாடி முடித்ததும் அவருக்கு இருந்த வயிற்று வலி முழுமையாக குணம் அடைந்து இருந்தது. தன்னை போலவே கந்தசஷ்டி கவசத்தை படிப்பவர்களின் நோய்கள் தீர வேண்டும் என்று தேவராய சுவாமிகள் வேண்டிக் கொண்டார்.
இந்த கவச பாடல் கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கியது. சஷ்டி என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு. நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளப்பட்டது. அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதைப் பாடுவார்களாம்.
ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி, காவல்தேடும் பாடல் அது. ஒவ்வொரு வரியும், ஒவ்வொரு உறுப்பையும் அதன் இயக்கத்தையும் காத்தருள வேண்டும் பாடலாக உள்ளது. ஒரு கால கட்டத்துக்கு பிறகு ஒலி வடிவத்திலும் கந்தசஷ்டி கவசம் வெளியானது. இது உலகம் முழுக்க கந்த சஷ்டி கவசம் பரவ வழி வகுத்தது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வீடுகளில் கந்தசஷ்டி கவசம் தெய்வீக பாடலாக ஒலித்தது. கந்தசஷ்டி கவசம் கேட்டால் மன நிம்மதி ஏற்படுவதாக பக்தர்கள் மகிழ்ந்தனர். கந்தசஷ்டி கவசத்தை தினமும் காலையில் பாடினால் அன்று முழுவதும் கந்தனின் அருள் சக்தி நமக்குக் கவசமாக இருந்து காப்பாற்றுகிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
உண்மையிலேயே தேவராய சுவாமிகள் இயற்றிய ஆறு கவசங்களும் சக்தி வாய்ந்தவை. தற்போது கந்தசஷ்டி பாடலாக ஒலிப்பது திருச்செந்தூர் தலம் மீது தேவராய சுவாமிகள் பாடிய கவசம் மட்டுமே. மீதமுள்ள 5 அறுபடை வீடுகளின் கவசத்தையும் பாடினால் மனமும், உடலும் மாற்றம் பெறும் என்பது நிதர்சனமான உண்மையாகும்.
திருச்செந்தூர் தலத்தில் இயற்றி அங்கேயே அரங்கேற்றமான கந்தசஷ்டி கவசம் பாடலை ஒருவர் எந்த அளவுக்கு பாடுகிறாரோ அந்த அளவுக்கு அவரது இல்லங்கள் பனி போல மறைந்து அன்பும், பக்தியும் மனதுக்குள் நிறையும். இது கோடிக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.
முருகனின் கந்தசஷ்டி கவசம் நம்மை என்றென்றும் காக்கும். அந்த கவச பாடல் திருச்செந்தூர் முருகன் அருளால் நமக்கு கிடைத்தது ஆகும். திருச்செந்தூருக்கு செல்லும் போது மறக்காமல் கவசத்தை பாடுங்கள். காலம் எல்லாம் தீராத இன்னல்கள் நீங்கி மாற்றங்கள் வருவதை கண்கூடாகப் பார்ப்பீர்கள்.
திருச்செந்தூர் முருகன் நிகழ்த்திய இதே போன்ற அற்புதத்தை அடுத்த வாரம் பார்க்கலாம்.






