என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    வெயில் காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்கும் முறைகள்!
    X

    வெயில் காலத்தில் குழந்தைகளைப் பாதுகாக்கும் முறைகள்!

    • குழந்தைகளுக்கு தளர்வான, இலகுவான ஆடைகளை அணிவிக்கவும்.
    • வெப்ப காலங்களில் உணவு, பால், பழங்கள் ஆகிய அனைத்துமே விரைவாகக் கெட்டுவிடும் தன்மையுடையன.

    வெப்பத்தினால், பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. உடல் உஷ்ணம் (ஹீட் ஸ்ட்ரோக்), உணவு நஞ்சாதல், அதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு என பல பாதிப்புகள் ஏற்படக்கூடும். எனவே, அதன் அறிகுறிகள், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள், சிகிச்சை முறைகள் பற்றி தெரிந்து கொள்வோம்:

    குழந்தைகளுக்கு ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படக் காரணம்:

    குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் உஷ்ணம் என்பது உடலின் வெப்பநிலை 40°செல்சியம் (104°பாரன்ஹீட்) -க்கு மேல் உயர்ந்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு நிலையைக் குறிக்கிறது. அவ்வாறு ஏற்பட்டு, உடலை குளிர்விக்க முடியாமல் போகும் போது, உடலின் முக்கிய உறுப்புகளுக்கு சேதம் ஏற்படுகிறது.

    அறிகுறிகள்:

    தோல் வறண்டு, சூடாக இருத்தல்.

    குழப்பம், மயக்கம், தலைவலி, தலைசுற்றல்.

    மந்தமான பேச்சு, விரைவான இதயத் துடிப்பு.

    குமட்டல், வாந்தி.

    உணர்ச்சி இன்மை, வலிப்பு.

    எவ்வாறு தடுத்துக் கொள்ளலாம்?

    வெயிலில் குழந்தைகளை அதிக நேரம் அழைத்துச் செல்ல வேண்டாம். குறிப்பாக, வெப்பமான நேரங்களில் (மதியம் 12 மணி முதல் 3 மணி வரை) குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதைத் தவிர்க்கவும்.

    குழந்தைகளுக்கு தளர்வான, இலகுவான ஆடைகளை அணிவிக்கவும்.

    வெயிலில் செல்லும்போது, குழந்தைக்கு தொப்பி, கண்ணாடி அணிவிக்கவும்.

    அடிக்கடி தண்ணீர் குடிக்க வைக்கவும்.

    நிழலான, குளிர்ந்த இடத்தில் குழந்தைகளை வைத்திருக்கவும்.

    வெப்பமான நேரங்களில், குழந்தைகளை அதிக நேரம் விளையாட விட வேண்டாம்.

    வெயில் தாக்கத்தினால் உடல் உஷ்ணம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

    உடனே குழந்தையை நிழலான, குளிர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லவும்.

    ஈரமான துணி கொண்டு உடலை துடைக்கவும்.

    விசிறி வீசி உடலை குளிர்ச்சியாக வைக்கவும்.

    குளிர்ந்த நீரை குடிக்க கொடுக்கவும்.

    குழந்தையின் நிலைமை மோசமடைந்து, மயக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகவும்.

    ரத்தக் குழாய்கள் வழியாக நீரேற்றம் செய்வது அவசியம்.

    உணவு நஞ்சாதல்:

    வெப்ப காலங்களில் உணவு, பால், பழங்கள் ஆகிய அனைத்துமே விரைவாகக் கெட்டுவிடும் தன்மையுடையன. ஆகவே சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளை உண்பதற்கு முன்பு வீணாகி விட்டதா? என்பதைப் பரிசோதித்த பின் எடுத்துக்கொள்வது நல்லது.

    சால்மோனெல்லா, கேம்பைலோ பாக்டர் போன்ற பாக்டீரியாக்கள், வெயில் காலங்களில் அதிகமாகப் பரவும் தன்மையுடையவை. சில பாக்டீரியாக்கள் பால், பால் சார்ந்த பொருட்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றில் அதிகமாகப் பல்கிப் பெருகக்கூடியன. இதுமட்டுமல்லாமல் மேலும் சில பாக்டீரியாக்கள் சமைத்து நீண்ட நேரம் ஆன உணவுகளைக் கெட்டுவிடச் செய்கிறது. தொடக்க நிலையில் சிலருக்கு உணவின் சுவை மாறியுள்ளதைக் கண்டறிய முடிவதில்லை. இப்படிக் கெட்டுப்போன உணவைச் சாப்பிடுவதால் ஏற்படுவதுதான் உணவு நஞ்சாதல் என்கிறோம்.

    சமைத்த உணவை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து மீண்டும், மீண்டும் சூடுபடுத்தி உண்ணுவதும் உணவு நஞ்சாவதற்கு மற்றுமொரு காரணம் ஆகும். உணவை ஆக்கும் ஒருவரின் கைகள் தூய்மை கெட்டு இருந்தாலும், அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்தாலும், அவருக்குள்ள நோயும் உணவின் மூலம் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.

    உணவு நஞ்சாதலின் அறிகுறிகள்:

    கெட்டுப்போன உணவை எடுத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே இதன் அறிகுறிகள் தொடங்கிவிடும். அவையாவன,

    உடல் சோர்வு

    வயிற்று வலி

    வாந்தி

    வயிற்றுப்போக்கு

    மயக்கம்

    வயிற்றுப் பிடிப்பு

    பசியின்மை

    மரு.அ.வேணி MD., DM(Neuro), 75980-01010, 80564-01010.

    உணவு நஞ்சாவதைத் தடுக்க...

    சமைத்த 4 மணிநேரத்திற்குள் உணவை உண்டு விடுவது நல்லது.

    வெளியிடங்களில் அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

    உணவு ஆக்குவதற்கு மற்றும் உண்பதற்கு முன்பு கைகளை நன்றாகத் தூய்மை செய்ய வேண்டும்.

    காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை நன்கு தண்ணீரில் சுத்தப்படுத்திய பின்பு பயன்படுத்த வேண்டும்.

    மலம் கழித்த பின்பு கைகளை நன்கு தூய்மை செய்ய வேண்டும்.

    வெயில் காலங்களில் பரவும் தொற்று நோய்கள்:

    அம்மை நோய்

    தட்டம்மை

    சின்னம்மை

    விளையாட்டம்மை

    புளு காய்ச்சல்

    இருமல், சளி

    போன்ற தொற்று நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவுவதற்கு அதிக வாய்புள்ளது. எனவே சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

    Next Story
    ×