என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நல்லதும் தீயதும்!!
    X

    நல்லதும் தீயதும்!!

    • ஒரு பொருளையோ அல்லது ஒரு செயலையோ எப்படி நல்லது என்றும் தீயது என்றும் பகுத்துக் காண்பது.
    • நல்லது போலவே பல தீயவைகள் நாட்டில் உண்டு; தீயது போலவே பல நல்லதுகளும் நாட்டில் உண்டு.

    வாழ்க்கையில் நல்லது கெட்டது தெரிந்து கொள்வதற்கு எப்போதும் ஆவலாகக் காத்திருக்கும் வாசகப் பெருமக்களே வணக்கம்!.

    ஒரு நாணயத்தின் இருபக்கங்கள் போல ஒவ்வொருவர் வாழ்க்கை அனுபவத்திலும், ஒவ்வொரு கட்டத்திலும் நல்லது தீயது எனும் இரண்டையும் கடந்தேதான் வாழ வேண்டியிருக்கிறது. நல்ல அறம் சார்ந்த வாழ்க்கை வாழவேண்டும் என்பதுதான் மனிதர் ஒவ்வொருவரின் குறிக்கோளாக இருந்தாலும், அதற்கு முன்னதாக எது நல்லது? எது கெட்டது? என்பதைப் புரிந்து கொள்வதிலேயே பாதி வாழ்க்கை கழிந்துபோய் விடுகிறது. அதனால்தான் மகாகவி பாரதியும்,

    "நல்லது தீயது நாம் அறியோம் அன்னை

    நல்லது நாட்டுக! தீயது ஓட்டுக!"

    என்று பராசக்தியிடம் பிரார்த்தனை வைக்கிறார். ஆம் வாழ்க்கையில் எது நல்லது? எது தீயது? யார் நல்லவர்? எவர் தீயவர்? என்று புரிந்து கொள்வதிலேயே பெரும்பான்மைப் பொழுதுகள் குழப்பத்திலேயே கழிந்து விடுகின்றன; பின்னர் நல்ல வாழ்க்கையை எல்லாரும் போற்றும்படி வாழ்வது எப்படி?.

    கற்றறிந்த மேதைகளும், வாழ்ந்து அனுபவப்பட்ட பெரியவர்களும், வாழ்வியலில் சிலவற்றை 'நல்லவை' என்றும் சிலவற்றைத் 'தீயவை' என்றும் வகைப்படுத்தி வைத்திருக்கின்றனர். அவர்களின் மதிப்பீடுகளின் வழி தீயவற்றை விலக்கி, நல்லவற்றைக் கடைப்பிடித்து வாழ்ந்தால், அறம் சார்ந்த எண்ணங்களோடு ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கையை நம்மாலும் வாழ முடியும். தீயவற்றை விலக்கக் கற்றுக் கொண்டாலே, அல்லவை தேயத் தொடங்கினாலே, அறம்பெருகிடும்! என்கிறார் வள்ளுவர்.

    ஒரு பொருளையோ அல்லது ஒரு செயலையோ எப்படி நல்லது என்றும் தீயது என்றும் பகுத்துக் காண்பது?. சில விஷயங்கள் அந்தப் பொருள் அளவிலேயே நல்லவையாக இருக்கும்; சில கையாளப்படும் தன்மைகளைப் பொறுத்து நன்மைகளை விளைவிப்பனவாக அமைந்து விடும். எளிதாக அவற்றை நல்லவை என்று ஏற்றுக் கொள்ளலாம். சில, நன்மைக் குணம் சார்ந்தவையாக இருந்தாலும் அவை சிலருக்கோ சில நேர்வுகளுக்கேற்ப நலம் பயக்காதவையாகவும் அமைந்துவிடும். உதாரணத்திற்குத் தேனை எடுத்துக்கொள்வோம்; தேன் உடம்பிற்கு நல்ல மருந்தாகவும் உணவாகவும் அமையக் கூடியதுதான். ஆனால் நீரிழிவு நோயாளிகளுக்கோ அது தீமையை விளைவிக்கும் எனும்போது நன்மைக்குணம் எதிர்முகத் தன்மையதாக மாறிப் போகிறது.

    சிலமனிதர்களை ஆளைப்பார்த்து, நிறத்தைப் பார்த்து, வசதி வாய்ப்புகளைப் பார்த்து நல்லவர் என்றோ, தீயவர் என்றோ திடீர் முடிவுக்கு வந்துவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

    "கணைகொடிது யாழ்கோடு செவ்விது

    ஆங்கன்ன

    வினைபடுபாலால் கொளல்"

    சுந்தர ஆவுடையப்பன்

    நேராக இருப்பதெல்லாம் நேர்மையானதாக இருக்கும் என்பதில்லை; வில்லில் இருந்து புறப்பட்டு குறிநோக்கி வந்து உயிர்களைக் கொல்லும் அம்பு நேரானதாகத்தான் உள்ளது: ஆனால் அது நேர்மையானது கிடையாது; ஆட்களைக் கொல்லும் நேர்மையற்ற செயலுக்கு அது துணை போகிறது. கோணல்மாணலாக வளைந்திருப்பதெல்லாம் குதர்க்கமாகவே செயல்படும் என்பது இல்லை; வளைந்திருக்கும் யாழ் எனும் இசைக் கருவியில் இருந்து புறப்பட்டு வருகிற இசை மனித இதயங்களை நேர்பண்ணுகிற இசைமருத்துவத்தைச் செய்துவிடுகிறது. எனவே ஆட்களை விட அவர்களின் செயல்களை வைத்தே நல்லது கெட்டது தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறார் வள்ளுவர்.

    பொதுவாகவே கருவிகளில் நல்லது கெட்டது பார்த்து ஒதுக்குவதைவிட அவற்றின் மூலம் விளையும் நன்மை தீமைகளைக் கணக்கில் கொள்ளக் கற்றுக்கொள்ள வேண்டும். சமையல் கூடத்தில் பயன்படுத்தப்படும் கத்தியும், கசாப்புக்கடையில் பயன்படுத்தப்படும் கத்தியும் அடிப்படையில் கத்திதான் என்றாலும் அவற்றினால் விளையும் பயனைப் பொறுத்து அவற்றிற்கு நல்லது கெட்டது முத்திரை குத்தலாம். இன்னும் ஒருபடி மேலேபோய், மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்காக மருத்துவர்கள் கரங்களிலே உயிர்காக்கும் நோக்கோடு அமர்ந்திருக்கிற கத்தியை எந்த முத்திரை குத்தி நாம் ஆராதிக்கப் போகிறோம்?. ஆக, நன்மை தீமை என்பது கருவிகளில் இல்லை; கையாளும் மனிதர்களைப் பொறுத்தும், கையாளும் சூழல்கள் மற்றும் நோக்கங்களைப் பொறுத்தும் அவை நல்லவையா? தீயவையா? என்று தீர்மானிக்கப்படுகின்றன.

    மனிதர்கள் வாழ்க்கைக்குப் பயன்படுகிற பணம்கூட ஒரு கருவிதான். பணம் நல்லதா? கெட்டதா? என்று கேட்டால், காலம் காலமாக ஞானிகளும் துறவிகளும் பணம் தீயது என்றுதான் கூறியிருக்கிறார்கள். பணம் தீராத ஆசையைப் பெருக்கும்; ஆசை வேண்டாத செயல்களையெல்லாம் பணம் ஈட்டுவதற்குச் செய்யத் தூண்டும் என்று பணத்தை ஒதுக்கக் காரணம் கற்பிப்பர் தத்துவவாதிகள். ஆனாலும் பணம் நல்லது என்கிறார் உலகப்பொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகை. வாழ்வில் எவ்வளவு பெரிய பகைவர்களையும் அவர்களின் ஆணவம் அடக்கிப் பணியவைக்கப் பணம் அவசியம் தேவை என்கிறார். மேலும் 'செய்க பொருளை!' என்று கட்டளையிடவும் செய்கிறார்.

    ஒருவருடைய கண்ணோட்டத்தில் நல்லதாகத் தெரிவது, மற்றொருவர் கண்ணோட்டத்தில் தீயதாகத் தோன்றலாம். தெருச் சாலைகளில் வண்ண ஓவியங்களைப் பிரம்மாண்டமாக வரைந்து பரிசாகக் காசுபணம் பெறுவது என்பது, தெரு ஓவியருக்கு நல்லதாகத் தெரியலாம்; ஆனால் அந்தச் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கோ, அல்லது போக்குவரத்துக் காவலர்களுக்கோ அது தீயதாகத் தோன்றும்; சட்டப்படி அது குற்றமாகவும் கூறப்படும். வனங்களில் முளைத்துக்கிடக்கும் புல்வெளிகளைப் பார்த்து, வன விலங்குகளில் உங்களது கண்ணோட்டத்தில் நல்லவர் யார்? தீயவர் யார்? என்று கேட்கப்பட்டது. புற்கள் தந்த பதில் நம்மைச் சிலிர்க்க வைத்துவிடும். "எங்களைப் பொறுத்த வரை சிங்கம் புலி கரடி போன்றவை நல்ல விலங்குகள்; ஆடு, மாடு போன்றவை கொடிய விலங்குகள்" என்றன புற்கள். புற்களைப் பொறுத்தவரை தங்களைத் தொந்தரவு பண்ணாத, தங்களை உண்ணாத எல்லாமிருகங்களும் நல்ல விலங்குகள்; அவை மனிதர்கள் முதலான மற்ற எல்லா உயிர்களையும் அச்சுறுத்துகிற சிங்கம் புலியாக இருந்தாலும். தங்களை உண்ணுகிற ஆடுகளும் மாடுகளும் கொடிய விலங்குகளாம். எப்படி இருக்கிறது பாருங்கள் கணிப்பு.

    நல்லது தீயது தீர்மானிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கருத்துக்கள் உண்டு. ஒரு பள்ளி வகுப்பறைக்கு ஐந்து ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்; அந்த வகுப்பறையில் யார் சிறந்த நல்ல மாணவன் என்று கேட்டுப்பார்த்தால், ஐந்துபேரும் ஐந்து மாணவர்களின் பெயர்களைக்கூறி அதற்கான பதில்களை அவரவர் கணிப்பில் விளக்கவும் செய்வார்கள். வகுப்பிலேயே முதல் மதிப்பெண் எடுக்கக்கூடிய மாணவன், நேரந்தவறாமல், விடுப்பும் எடுக்காமல் நாள்தோறும் வகுப்புக்கு வரும் மாணவன், பொய்சொல்லாமல் ஒழுக்கமாகப் பணிவாக உள்ள மாணவன், வகுப்பாசிரியருக்கு உதவிசெய்து வகுப்பை அமைதியாகப் பார்த்துக் கொள்ளும் மாணவன், விளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பிடிக்கும் மாணவன். இந்தப் பட்டியலில், உண்மையில் எந்த மாணவனை நல்ல மாணவன் கணக்கில் சேர்த்துக் கொள்வது? ஒவ்வொரு நோக்கத்தில் ஒவ்வொரு மாணவனும் நல்லவனாக இருக்கிறானே!.

    "நெஞ்சத்து நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்!" என்கிற நாலடியார் இலக்கிய வரி, நெஞ்சத்தால் நடுவுநிலைமை தவறாமல் நல்லது கெட்டது பார்க்கும் தன்மை ஒவ்வொருவருக்கும் வேண்டும் என்கிறது. நடுக்கடலில் உருவாகும் புயல், ஒருபக்கம் கரையைக் கடக்கும் பகுதிகளில் பெரும் சேதத்தை உண்டுபண்ணிவிட்டுப் போகிறது. மற்றொரு பக்கம், பிற பகுதிகளில் பரவலாக மழையைப் பொழியச் செய்து நன்மை செய்துவிட்டுப் போகிறது. அப்படியானால் புயல் மனிதர்க்கு நன்மையா? தீமையா?. கணிக்க முடியாத அளவுக்குப் பட்டிமன்றத் தலைப்புப் போல ஆகிவிடுகிறது. தொடர்ந்து பெய்யும் மழையும், அளவுக்கு அதிகமாக அடிக்கும் வெய்யிலும் மக்களால் சபிக்கவே படுகின்றன. ஆயினும் மழையும், வெய்யிலும் பொதுநிலையில் மக்களுக்கு நன்மைகளைத் தானே செய்கின்றன. நன்மை தீமைகளைத் தனிமனித நோக்கில் பார்க்காமல், சமுதாயரீதியில் ஏற்படும் பெரும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு ஒன்றை நல்லது என்கிற முடிவுக்கு வரவேண்டும்; அல்லாத பட்சத்தில் தீயது என்று புறந்தள்ளப்பட வேண்டும்.

    ஒரு பெரிய ஆழமான ஆறு; பெருக்கெடுத்து, பெரும் ஆற்றலோடு ஓடிக் கொண்டிருக்கிறது. ஆற்றைக்கடந்து அக்கரையில் இருக்கும் ஊர்களுக்குச் செல்ல வேண்டுமென்றால், படகுப் போக்குவரத்தில் மட்டுமே சென்றாக வேண்டும். ஒரு பெரிய படகு கிளம்பியது. அதற்குள் எண்ணிக்கையில் அதிகமான இளைஞர் கூட்டமொன்று ஏறியிருந்தது. படகின் ஓரத்தில் சாதுவான ஒரு துறவி அமைதியாக அமர்ந்து கண்களை மூடி மனத்திற்குள் ஜெபதபங்களைச் சொல்லத் தொடங்கியிருந்தார். இளைஞர்கள் அந்தத் துறவியைக் கேலிசெய்து கிண்டல் பண்ணத் தொடங்கினர். மாலை நேரம்; இன்னும் கொஞ்ச நேரத்தில் இரவு வந்து விடும். இரவு முழுவதும் அந்தப் படகில்தான் அவர்கள் பயணம் செய்தாக வேண்டும். ஆயினும், இளைஞர்களின் சேட்டைகள் குறைந்த பாடில்லை; கெட்ட வார்த்தைகள் சொல்லித் துறவியைத் திட்டினர், செருப்பால் துறவியின் தலையைத் தொட்டு, அவரைத் தியானம் பண்ண விடாமல் தொந்தரவு பண்ணிக்கொண்டே வந்தனர்.

    இரவு நன்றாக வந்து விட்டது; படகு போய்க்கொண்டிருந்தது. அப்போது , இருளைக் கிழித்ததுபோல ஒரு மின்னல் வெட்டியது; ஓர் அசரீரி வார்த்தை வானத்தில் இருந்து ஒலித்தது, " என் அன்பிற்குரிய துறவியே! சொல்! இப்போது இந்தப் படகை நான் புரட்டிப் போட்டுவிடவா?". அசரீரியின் குரலுக்கு பதில்சொல்லாமல், கண்களை மூடிய தியான நிலையிலேயே துறவி அமர்ந்திருந்தார். இதைப் பார்த்து மனந்திரும்பிய இளைஞர்கள் துறவியின் காலடியில் பொத்துபொத்தென்று விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கிடந்தனர். சிறிது நேரத்தில் கண்விழித்து, தவம்கலைத்த துறவி இளைஞர்களைத் தூக்கிவிட்டார்; அஞ்ச வேண்டாம் என்றார். பிறகு வானத்தை பார்த்துப் பேசினார், "என் அன்பான தெய்வமே! நீ ஏன் திடீரென்று படகைப் புரட்டவா? என்று சாத்தானின் குரலில் பேசினாய்? நீ புரட்ட வேண்டியது இளைஞர்களின் மனத்தை அல்லவா?" என்று கேட்டார்.

    "அது சாத்தானின் குரல்தான். நீ புரிந்து கொண்டாய்! அதனால் விபரீதம் எதுவும் நடக்கவில்லை; நன்மையே நடந்தது. எவன் சாத்தானின் குரலைப் புரிந்துகொண்டு அதற்குச் செவிசாய்க்காமல் இருக்கிறானோ, அவனே தெய்வத்தைப் புரிந்துகொள்வான்!" என்றது தெய்வத்தின் அசரீரி. ஆம்!. நல்லது போலவே பல தீயவைகள் நாட்டில் உண்டு; தீயது போலவே பல நல்லதுகளும் நாட்டில் உண்டு. பொது நோக்கில் சமுதாய நன்மைகள் விளைவிக்கும் நல்லவைகளை ஏற்றுக்கொண்டு, தீயவைகள் விலக்கி வாழ்வோம்.

    தொடர்புக்கு 94431 90098

    Next Story
    ×