என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது
    X

    எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது

    • அம்மாவின் குரல் ஒரு தேவதையின் குரல்போல், அவன் இதயத்தில் தொனித்தது.
    • அன்பைப்போல் ஆற்றல் கொண்ட சக்தி வேறொன்று கிடையாது.

    'நீங்கள் இந்த நாட்டை மாற்ற விரும்பினால், வீட்டிற்குச் சென்று உங்கள் குடும்பத்தை நேசியுங்கள்'.

    -அன்னை தெரசா

    பெற்றோர்க்கு அவன் ஒரே மகன்; செல்லப்பிள்ளை. நல்ல வளர்ப்பு. எல்லாவற்றிலும் ஓர் ஒழுங்கு அவனிடத்தில் உண்டு. கல்லூரிப் படிப்பை முடித்ததும், எவ்விதச் சிரமமுன்றி ஒரு நல்ல நிறுவனத்தில் அவனுக்கு வேலை கிடைத்தது.

    சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் இருப்பான். மாலையில் அலுவலகத்திலிருந்து நேராக வீடுதான். அரட்டை அடித்தல், ஊர் சுற்றுதல், வீண் செலவு என எதுவும் கிடையாது. வேலையில் ரொம்ப 'சின்சியர்'.

    அவனுக்குள் திடீரென்று ஒரு காதல் முளைத்தது. அவன் வேலை பார்க்கின்ற அலுவலகத்தில், புதிதாக ஒரு பெண் வேலைக்குச் சேர்ந்தாள். அவளைப் பார்த்த முதல்நொடியிலேயே, அவனுக்கு அவள்மீது அப்படி ஓர் ஈர்ப்பு. அவளின் சிரிப்பு, பேச்சு, நளினம், அறிவுத்திறன் - எல்லாவற்றிலும் ஓர் விசேஷித்த அழகை அவன் கண்டு ரசித்தான்.

    இருவருக்குள்ளும் நல்ல நட்பின் புரிதல் ஏற்பட்டது. அவள் அவனிடத்தில் சகஜமாகப் பழகினாள். ஒவ்வொரு நாளும் தவித்துக் கொண்டிருந்த அவன், ஒருநாள் மாலையில் அவளுடன் 'காபி டே' சென்றிருந்தபோது, தன் காதலை அவளிடத்தில் சொல்லிவிட்டான்.

    முதலில் திடுக்கிட்டாள். பின்னர் தயங்கினாள். ஓரிரு நாட்கள் கழித்து, அவளும் காதலுக்குச் சம்மதம் தெரிவித்தாள். அவர்களின் காதல் வெளியே யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வளர்ந்தது.

    அவளின் திருமணத்திற்கான பேச்சு வீட்டில் எழவே, தயங்கித் தயங்கிப் பெற்றோரிடம் தன் காதலைப் பற்றி எப்படியோ சொல்லிவிட்டாள்.

    'பையன் ஜாதகத்தை வாங்கிக் கொண்டுவா. நம்ம ஜோசியர்கிட்ட கொடுக்கிறேன். பொருத்தம் நல்லபடியா அமைஞ்சிருந்தா, அவங்க வீட்ல பேசி முடிச்சிடலாம்' என்று மிகமிக நிதானமாக அப்பா சொல்ல, அவள் மகிழ்ந்துபோனாள்.

    அவனிடத்தில் விஷயத்தைச் சொன்னாள். அவனுக்கும் ஏக மகிழ்ச்சி. தன் பெற்றோரிடம் எதுவும் சொல்லாமல், தனது ஜாதகத்தை அவளிடம் கொடுத்தனுப்பினான்.

    மறுநாள் ஆவலோடு காத்திருந்தான். ஆனால், அவள் அலுவலகத்திற்கு வரவில்லை. இரண்டு நாளாயிற்று. போன் செய்தான். அவள் எடுத்தாள்.

    'சாரிங்க. நமக்கு ஜாதகப் பொருத்தம் இல்ல. மீறி கல்யாணம் பண்ணினா, உங்க உயிருக்கு ஆபத்து வரும்னு ஜோசியர் சொல்லிட்டாரு. தப்பா எடுத்துக்காதீங்க' என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டாள்.

    மீண்டும் போன் செய்தான். இப்போது போனை அவளின் அப்பா எடுத்தார்.

    'தம்பி எம்பொண்ணு எல்லா விஷயத்தையும் எங்கிட்ட சொன்னா. எங்களுக்கும் ரொம்ப விருப்பம்தான். அதனாலதான் ஜாதகத்தை கேட்டு வாங்கினோம். ஆனா ஜாதகப் பொருத்தம் சரியில்ல. எம்பொண்ணுக்கு நாகதோஷம். அதனால, நாகதோஷம் இருக்கிற பையனுக்குக் கொடுத்தாதான், குடும்ப வாழ்க்கை நல்லா இருக்கும், புரிஞ்சிக்கோங்க' என்று சொல்லி முடித்துவிட்டார். அதன்பின், அலுவலகத்திற்கு அவள் வரவில்லை.

    அவன் மனதிற்குள் நொறுங்கிப்போனான். யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் உள்ளுக்குள்ளேயே உருகினான். பெற்றோரிடமோ நண்பர்களிடமோ அவன் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஆனால், விரக்தியின் எல்லைக்கு அவன் போய்க்கொண்டிருந்தான். தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தான்.

    'செய்வதை விரைவில் செய்' என்றொரு குரல் அவனுக்குள் ஒலித்துக்கொண்டே இருந்தது. ஆனால், எப்படி தற்கொலை செய்வது? பல வழிகள் இருக்கின்றன. எது சுலபமான வழி? பட்டென்று உயிர் போய்விட வேண்டும். என்ன செய்வது? இறுதியாக, ரெயிலின்முன் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான். 'இன்றே செய்துவிடு, இப்போதே செய்துவிடு' என்று ஏதோ ஒன்று அவனை வேகப்படுத்தியது. இரவு முழுவதும் தூக்கமில்லை.

    மறுநாள் காலை, வழக்கம்போல் வீட்டிலிருந்து கிளம்பினான். முகத்தில் கலவர உணர்வு படர்ந்திருந்தது.

    'ஏன் ஒருமாதிரி இருக்கிறே? உடம்புக்கு சரியில்லையா?' - அவன் நெற்றியைத் தொட்டுப் பார்த்தபடி அப்பா கேட்டார்.

    'அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா'.

    'ஆபீஸ்ல ஏதும் பிரச்சினையா?'

    'இல்லியே' என்று செயற்கையான ஒரு புன்னகையுடன் சொல்லிவிட்டு நகர்ந்தான்.

    அலுவலகத்திற்குச் செல்லவில்லை. ஒரு பூங்காவிற்குப் போய் பைத்தியம் பிடித்தவனைப்போல் அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். ரெயில் நிலையத்தில், மாலை குறித்த நேரத்தில் வருகின்ற எக்ஸ்பிரஸ் ரெயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும். அதைத் தவிர வேறு எந்த சிந்தனையும் அவனிடத்தில் இல்லை. கடிகாரத்தை அடிக்கடி பார்த்தான். 'போ போ' என்று ஒரு சத்தம் அவனைத் துரத்திக்கொண்டே இருந்தது.

    எக்ஸ்பிரஸ் ரெயில் வருவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ரெயில் நிலையத்திற்கு வந்துவிட்டான். அந்த ரெயில் அங்கு நிற்காமல் வேகமாகக் கடந்து செல்லும். அதன்முன் விழுந்தால் அடுத்த நொடியிலேயே வாழ்க்கை முடிந்துவிடும்.

    இன்னும் பத்து நிமிடத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துவிடும். குதிப்பதற்கு வசதியாக, பிளாட்பாரத்தின் முனையில் தயாராக நின்று கொண்டிருந்தான். அந்நேரம் அவனுடைய மொபைல் போன் ஒலித்தது. எடுக்கவா வேண்டாமா என்ற குழப்பம். வேண்டா வெறுப்போடு எடுத்துப் பார்த்தான். 'அம்மா' என்று திரையில் வந்தது.

    'அம்மாவா! இந்நேரம் எதுக்கு கூப்பிடுறாங்க. சரி, கடைசியா ஒரு வார்த்தை பேசி முடிச்சிலாம்' என்ற எண்ணத்தோடு மொபைல் ஆன் செய்தான்.

    'ராஜா, எனக்கு ரொம்ப தலைவலிக்குது. நீ ஆபீஸ்லேருந்து வரும்போது ரெண்டு தலைவலி மாத்திரை வாங்கிட்டு வாடா. அப்புறம், இன்னிக்கு டின்னர் உனக்குப் புடிச்ச ஆப்பமும் வஞ்சிர மீன் குருமாவும். சீக்கிரம் வந்துடு கண்ணு' என்று சொல்லிவிட்டு அம்மா போனை வைத்துவிட்டாள்.

    அம்மாவின் குரல் ஒரு தேவதையின் குரல்போல், அவன் இதயத்தில் தொனித்தது. டமார் டமார் என்று அவனுக்குள் ஏதோ தகர்ந்து விழுவதுபோல் தோன்றியது. கண்களிலிருந்து ஒரு கருப்புத் திரை விலகியது.

    'அம்மா அம்மா' என்று அவனின் வாய் முணுமுணுக்க, அவனை அறியாமல் அவன் கால்கள் பிளாட்பாரத்திலிருந்து பின்னோக்கி நகர்ந்தன. ரெயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தான். அப்போது எக்ஸ்பிரஸ் ரெயில் அந்த நிலையத்தைப் படுவேகமாகக் கடந்து போய்க்கொண்டிருந்தது. ஒரு மாயைப் பிடியிலிருந்து பட்டென்று விடுபட்டவனாய், அம்மாவிற்குத் தலைவலி மாத்திரை வாங்க அங்கிருந்த மெடிக்கல் ஷாப்பை நோக்கிச் சென்றான் அவன்.

    சட்டென்று ஒரு திருப்பம் எப்படி ஏற்பட்டது? அதை ஏற்படுத்தியது எது? அன்புதான். வேறென்ன! தெய்வத்தின் குரலாய் வந்த தாயின் அன்பு, மரணத்தின் விளிம்பில் நின்றவனைக் காப்பாற்றியது. அதுதான் அன்பின் வலிமை.

    எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒரு மொழி அன்புதானே. திமிங்கலங்கள், டால்பின் மற்றும் பிற மீன்கள் ஆயிரம் மைல்கள் தள்ளி இருந்தாலும், தனது இனம் அழைத்தவுடன் உதவிக்கு ஓடி வருமாம். அன்பின் வேகம் அபரிமிதமானது.

    சொந்தங்கள், நண்பர்கள் என நம்மைச் சுற்றிப் பெருங்கூட்டம் இருக்கலாம். ஆனால், அன்பினால் பிணைக்கப்பட்டிருக்கின்றோமா என்பது முக்கியம். பேருக்கு உறவு கொண்டாடுதல், காகிதப் பூச்சரங்களின் அலங்காரத்தைப் போன்றது.

    அன்பைப்போல் ஆற்றல் கொண்ட சக்தி வேறொன்று கிடையாது. உலர்ந்துபோன வேர்களுக்கு அது உயிரூட்டும். தடுமாறும் கால்களுக்கு அது வழிகாட்டும். அன்பு அற்புதமானது. ஆபத்து நேரத்தில் கைகொடுக்கும். அது வாழ்வளிக்கும்.

    முதலில் நம்மை நாம் நேசிக்க வேண்டும். அப்படியானால்தான், மற்றவர்கள் மீது அன்பு செலுத்த முடியும். அந்த அன்பு பெருகிப் பெருகிப் பரவிச் சென்று உறவுகளை வலுப்படுத்தும்; வாழ்வை வளமாக்கும்.

    கவிஞர் தியாரூ, 9940056332

    மூர்க்க மனம் சட்டத்திற்கு அஞ்சாது; நீதியை எண்ணாது. முட்புதர்கள் மண்டிக்கிடக்கும் கரடுமுரடான மண்ணில் திராட்சைக் கொடிகள் எப்படி வளரும். ஆனால், அந்த மனதையும் மாற்றக்கூடிய வல்லமை அன்புக்கு உண்டு.

    ஊரில் ஒருவன் ஊதாரியாகச் சுற்றிக் கொண்டிருந்தான். பரம்பரைச் சொத்து ஏராளம். எனவே, வருமானத்திற்குக் கவலை இல்லை. அவனை யாரும் கட்டுப்படுத்த முடியாது. முரட்டு சுபாவம். அவனுக்கு ஒரு பெண்ணைப் பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள்.

    'இந்த முரடன்கிட்ட இவ என்ன பாடு படப்போறாளோ' என்றுதான் ஊருக்குள் எல்லாரும் பேசினார்கள்.

    ஆனால், காலப்போக்கில் அவனிடத்தில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தொழிலைக் கவனிக்கத் தொடங்கினான். குடும்ப காரியங்களில் அக்கறை செலுத்தினான். ஊதாரித்தனத்தினால் உண்டான நஷ்டங்களை உணர்ந்தான். விலக்க வேண்டியவைகளை விலக்கினான்.

    அவன் வாழ்க்கை புதிதானது. எல்லாவற்றிற்கும் காரணம், அவனுடைய மனைவியின் பொறுமையும் அன்பும்தான்.

    அன்பு அற்புதமான மாற்றங்களை ஏற்படுத்தும். இறுக்கமான மனதை நெகிழச் செய்யும். கற்சிலைபோல் இருப்பவனைக்கூட சிரிக்க வைக்கும். காட்டாறுபோல் இருப்பவனை, அமைதியான நீரோடைபோல் மாற்றிவிடும்.

    சிலர் கையில் பணம் சேரச் சேர, அவர்களின் பண்பு மாறிவிடும். அன்பான பார்வை, கனிவான பேச்சு எல்லம் மாயமாகிவிடும். ஒட்டி உறவாடாமல் ஒதுங்கி இருப்பதே கவுரவம் என்று நினைப்பார்கள்.

    ஆனால், செல்வந்தன் என்பவன் யார்? கோடி கோடியாய் வைத்திருப்பவன் அல்ல! நிலைமாறாத அன்பை நிறைவாய்க் கொண்டிருப்பவனே செல்வந்தன். அன்பில்லாதவன் ஒன்றுமில்லாதவன்.

    அறிவால் எல்லாவற்றையும் சாதித்துவிட முடியாது. அறிவை மட்டுமே சார்ந்திருப்பவர்கள், வாழ்வில் தோற்றுப்போகிறார்கள்.

    அன்புதான் சாதிக்கும். ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த வேண்டும். அன்பில் பூரணப்பட வேண்டும். அப்போதுதான் நம் வாழ்க்கைக்குப் பொருள் இருக்கும்.

    இறைவனுக்கு நிவேதனம் செய்த பிறகுதான் சாப்பிட வேண்டும். அதற்குமுன் தொடக்கூடாது என்பது ஐதீகம். ஆனால், பூஜையின்போது நிவேதனம் படைக்கும் முன்பாக, அந்தப் படையலிலிருந்து கொஞ்சம் சுவைத்துப் பார்ப்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர். சிலருக்கு அதிர்ச்சி. அவரைக் கடிந்து கொண்டார்கள்.

    'இப்படிச் செய்யலாமா? நிவேதனப் பொருட்களை எச்சில் பண்ணலாமா?' என்று முணுமுணுத்தனர். 'இது புனிதமான பூஜையாகுமா?' என்று கேட்டனர்.

    அதற்கு ராமகிருஷ்ண பரமஹம்சர், 'என் தாய் எனக்கு உணவு ஊட்டுவதற்குமுன், கொஞ்சம் சுவைத்துப் பார்த்துவிட்டுதான் ஊட்டுவாள். தாயின் அன்பே இந்த அளவிற்கு அக்கறையுடன் இருக்கும்போது, கடவுளிடம் தாம் செலுத்தும் அன்பு எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டும்! சுவை பார்த்து ஆராயாமல், பகவானுக்கு நான் எப்படி நிவேதனம் செய்ய முடியும்' என்றார்.

    ஆத்மார்த்த அன்புதான் அக்கறை கொள்ளும். குடும்பத்தின் மகிழ்ச்சி, சமூகத்தில் ஒருமைப்பாடு, அனைவருடனும் நல்லுறவு - எல்லாவற்றிற்கும் அன்புதான் ஆதாரம்.

    Next Story
    ×