என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உசுரே நீ தானே!... அத்தியாயம்- 7
    X

    உசுரே நீ தானே!... அத்தியாயம்- 7

    • என்னால ரிசப்சனிஸ்ட் வேலை எல்லாம் சேர்த்து பார்க்க முடியாது... சாரி சார்! - பளிச்சென்று சொன்னாள்.
    • வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த திவ்யாவுக்கு, மனசு முழுக்க கவலை அப்பி கிடந்தது.

    மறுநாள் காலை...

    நெல்லை நகரம் கண் விழித்து தன் வழக்கமான பணிகளை செய்ய ஆரம்பித்த நேரம்.

    அன்றைய நாளிதழ் பார்த்த பின்பு, திவ்யா, டேவிட் இருவருக்கும் தூக்கி வாரி போட்டது.

    நள்ளிரவில் பயங்கரம்... புதுமண தம்பதிகள் தாக்குதல்!

    ரவுடிகள் தப்பி ஓட்டம்

    போலீஸ் விசாரணை!!

    இப்படி தலைப்புடன், அன்று முன்தினம் இரவு நடந்த சம்பவம், அதைத் தொடர்ந்து போலீஸ் ஸ்டேஷன் சென்றது, கம்ப்ளைன்ட் கொடுத்தது, இப்படி நடந்த சம்பவங்களின் தொகுப்பாக அந்த செய்தி வெளியாகி இருந்தது தான் காரணம்.

    செய்தியை படித்தவுடன் இருவரும் ஒருவரை ஒருவர், மாறி மாறி பார்த்துக் கொண்டனர். பெருமாள் போலீஸ் ஸ்டேஷன் வந்தது உள்பட எல்லா விஷயங்களும், ஒன்று விடாமல் வரிக்கு வரி அப்படியே பிரசுரமாகி இருந்தது.

    'என்னடா இது? நம்மளைப் பற்றிய செய்தி இப்படியாக நாளிதழில் வரும் என்று எதிர்பார்க்கவே இல்லையே' என யோசித்தபடி திவ்யா டேவிட்டை பார்த்தாள்.

    "இதையெல்லாம் பெருசா எடுத்துக்காத திவ்யா! பத்திரிகைகாரங்க காற்று மாதிரி! எல்லா இடத்திலும் பூந்துருவாங்க. என்ன? நாம போற இடத்தில எல்லாம் நம்மகிட்ட இதைப் பற்றியே கேப்பாங்க. நாம கொஞ்சம் பொறுமையா பதில் சொல்லணும். அவ்வளவுதான். மத்தபடி, இதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிக்காதே" - அப்போதைக்கு திவ்யாவை சமாதானப்படுத்த டேவிட் இப்படி சொன்னாலும், மறுநாளே திவ்யா ஒரு பிரச்சினையை சந்திக்க வேண்டி வந்தது.

    அன்று நண்பகல் 11.30 மணி. அவள் வழக்கம் போல அலுவலகம் சென்று தன் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தாள். ஒரு மணி நேரம் கழித்து, எம்.டி. அவளை அழைப்பதாக அட்டெண்டர் வந்து கூறியதும், சற்று குழப்பத்துடன் எழுந்து சென்றாள்.

    "உக்காருங்க..."-வழக்கத்தை விட சற்று கடுமையான குரலில் எம்.டி. கூறியது மனதை நெருடியது.

    இருந்தாலும், அவள் எம்.டி.யின் எதிரே இருந்த சேரில் அமர்ந்தாள். பக்கத்தில் மற்ற இரு போர்ட் ஆப் டைரக்டர்களும் அமர்ந்திருந்தனர்.

    'என்னமோ ஒரு விபரீதம் நடக்கப் போகிறது' என்பதை திவ்யாவுக்கு அவளது உள் மனசு கூறியது. இருப்பினும் மனதை தேற்றிக்கொண்டு எம்.டி.யின் முகத்தை பார்த்தாள்.

    இயக்குநர் A. வெங்கடேஷ்

    "நம்ம கம்பெனியோட ரிசப்ஷனிஸ்ட், மெட்டர்னிட்டி லீவ்ல ரெண்டு மாசம் போயிருக்காங்கன்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்?"- எம்.டி. கூற அதை ஆமோதிப்பது போல் தலையை ஆட்டினாள் திவ்யா

    "அதனால இந்த இடைப்பட்ட காலத்துல, நாம ஒரு ரிசப்சனிஸ்ட டெம்ரவரியா அப்பாயிண்ட் பண்றதுங்கிறது, கம்பெனிக்கு ஒரு எக்ஸ்ட்ரா செலவு தான் இல்லையா? எம்.டி. கேட்க, அதற்கும் ஆமா என்பது போல் தலையாட்டினாள்.

    "அதனால, அவங்க லீவ்ல இருந்து திரும்ப வர வரைக்கும், ரிசப்ஷன் டூட்டியும் நீங்களே சேர்த்து பார்த்திருக்கீங்களா?"

    இப்படி அவர் கேட்கவும் திவ்யாவின் முகம் மாறியது. 'தற்காலிக ரிசப்பனிஸ்ட் நியமிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயமும் அல்ல. அப்படி ஒரு ரிசப்ஷன்னிஸ்ட் நியமித்து அவளுக்கு சம்பளம் கொடுப்பதும் ஒரு பெரிய விஷயம் அல்ல'. ஆனாலும், ஒரு எச்.ஆர். ஆக இருக்கும் தன்னை, ரிசெப்ஷனிஸ்ட் வேலையும் சேர்த்து பார்க்க சொல்வது திவ்யாக்கு, சுயமரியாதையை இழப்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது.

    அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், "சார்... நான் பாக்குற வேலையே எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கு! இதுல ரிசெப்ஷன் டூட்டியும் சேர்த்து பார்க்கிறதுங்கிறது எப்படி? - என இழுத்தாள்.

    "நான் இந்த கம்பெனிக்கு எம்.டி . எனக்கு தெரியும்! யாருக்கு எவ்வளவு வேலை? எவ்வளவு சுமை? யாருக்கு என்ன வேலை கொடுக்கலாம், வேண்டாம் அப்படின்னு..."

    திவ்யா பார்க்க, கடுமையான முகத்துடன் எம்.டி. பேச்சை தொடர்ந்தார். "ரெண்டு வேலையும் சேர்த்து பார்க்க முடியுமா... முடியாதா? அதான் என்னுடைய கேள்வி!" - என அவர் கேட்க, மவுனமாக இருந்தாள் திவ்யா.

    "அப்போ உங்களுக்கு ரெண்டு வேலையும் சேர்த்து பார்க்க பிடிக்கல... அப்படித்தானே?" என கேட்க அதற்கும் பதில் சொல்லாமல் திவ்யா மவுனம் காத்தாள். உங்களுக்கு கவுரவ பிரச்சினை. அப்படித்தானே திவ்யா?" நிமிர்ந்து அவரை பார்த்தாள். எம்.டி. தொடர்ந்தார்.

    "ஒரு எச்.ஆரா இருக்கிற நாம எப்படி ரிசப்ஷன் வேலை பார்க்க முடியும்? அப்படின்னு நினைக்கிறீங்க. இல்லையா?" சற்று கடுமையாக அவர் கேட்கவும், இதற்கு மேல் மவுனம் காக்க கூடாது என்று முடிவு செய்த திவ்யா, "ஆமா சார்... ஒரு எச்.ஆர் போஸ்ட்ல இருக்கிற எனக்கு, இதுக்கு மேல உள்ள போஸ்ட் ஏதாவது காலியா இருந்தா சொல்லுங்க. சேர்த்து பார்க்கிறேன். என்னால ரிசப்சனிஸ்ட் வேலை எல்லாம் சேர்த்து பார்க்க முடியாது... சாரி சார்!" - பளிச்சென்று சொன்னாள்.

    இப்படி திவ்யா பேசுவாள் என எம்.டி. எதிர்பார்க்கவில்லை. எனவே சற்று முகம் மாறி போக, "கவுரவ பிரச்சினை..." என தனக்குள் கூறியபடி தலையை ஆட்டினார் . "அப்கோர்ஸ்... கௌரவ பிரச்சினை தான் சார்!"- திவ்யா சற்று குரலில் கண்டிப்பையும், கனிவையும் சேர்த்து காட்டினாள்.

    இதற்காகவே காத்திருந்தது போலவே எம்.டி. வேகமாக எழுந்து ஆரம்பித்தார்.

    "புருஷன் கூட போய் போலீஸ் ஸ்டேஷன்ல நிக்கறது எல்லாம் உங்களுக்கு கவுரவ பிரச்சினை இல்லை... அது பேப்பர்ல நியூஸா வரும்... அது கவுரவ பிரச்சினை இல்லை... கம்பெனிக்காக கொஞ்ச நாளைக்கு ரிசப்ஷன் வேலைய சேர்த்து பார்க்கிறதுக்கு மட்டும் கவுரவபிரச்சினையா?" என கேட்க, அவர் அப்படி தனக்கு நடந்த ஒரு தனிப்பட்ட விஷயத்தை அலுவலக சம்பந்தப்பட்ட விசயத்திற்குள் கொண்டு வந்தது, திவ்யாவுக்கு எரிச்சல் ஏற்றியதால், அவளும் 'சடக்' என்று எழுந்து, 'சார்... என்னால இனி இந்த வேலைய கண்டினியூ பண்ண முடியாது. நான் பேப்பர் போட்டுடறேன் சார்," - என சொல்லிவிட்டு திவ்யா, அவரது பதிலே எதிர்பார்க்காமலேயே அந்த ரூமை விட்டு வெளியேறினாள்.

    அவள் போவதையே முறைத்த பார்வை பார்த்தவர், பக்கத்தில் இருந்த, மற்ற இரு டைரக்டரையும் பார்த்து, "ஏதோ ரவுடிங்க பிரச்சினைன்னு, போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இருக்கா. அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் நமக்கு வேண்டப்பட்டவரு. இவ நம்ம கம்பெனியில வேலை பார்க்கிறானு தெரிஞ்சு, எனக்கு போன் பண்ணி 'சார் உங்க கம்பெனில வேலை பார்க்கிற பொண்ணு...பிரச்சினை வராமல் பார்த்துக்கொள்கிறேன் சார்ன்னு' என்கிட்ட வழிஞ்சாரு... கொடுக்க வேண்டியது கொடுத்து கம்பெனி பெயர் வெளிய வராம தடுத்துட்டேன். அதை பத்தி விசாரிக்கலாமுன்னுதான் மெதுவா ஆரம்பிச்சேன். அதுக்குள்ள கோவப்பட்டு, வேலைய விட்டுட்டு போறா... போகட்டும்... வெளியே போனால் தான் இந்த வேலையுடைய அருமை என்னன்னு தெரியும்...!"- என குரலில் வன்மத்தையும் கோபத்தையும் கலந்த எம்.டி.யின் குரல், அந்த அறையை விட்டு சென்று கொண்டிருந்த திவ்யாவின் காதில் விழத்தான் செய்தது.

    'ஒருவரை வேலையை விட்டு அனுப்ப வேண்டும் என்றால், அவரிடம் நேரடியாக அதை சொல்லாமல், சம்பந்தப்பட்டவரே அந்த வேலையை விட்டுவிட்டு போகும்படி அவருக்கு நெருக்கடியை நேரடியாகவும், மறைமுகமாகவும் செய்வது தான், மேலிடத்தில் இருப்பவர்கள் கையாளும் டெக்னிக்.' அதைத்தான் வெற்றிகரமாக அந்த எம்.டி.யும் செய்து முடித்தார். அந்த கம்பெனி வேலையை அன்றோடு தலை முழுகினாள், திவ்யா.

    வேலையை ராஜினாமா செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்த திவ்யாவுக்கு, மனசு முழுக்க கவலை அப்பி கிடந்தது. அண்ணனையை எதிர்த்து, 'என் சொந்தக்காலில் நான் நின்று கொள்வேன். என் காதலுக்கு மட்டும் அனுமதி கொடுங்கள்..." என்று அம்மா அப்பாவையும் சமாதானப்படுத்தி, கல்யாணமும் முடிந்து, பத்து நாட்களுக்குள்ளாக வேலையை விடுவோம் என்று திவ்யா நினைத்து பார்க்கவே இல்லை.

    'இனி தனக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை, டேவிட் சம்பளம் மட்டும்தான்! அதை வைத்து குடும்பத்தை ஓட்ட வேண்டும். சீக்கிரத்தில் தனக்கு இன்னொரு வேலையை பார்க்க வேண்டும். தனக்கு வேலை கிடைக்க தாமதமாகி பணக்கஷ்டம் வந்தால் கூட எந்த காரணத்தைக் கொண்டும் அப்பாவிடம் கையேந்த கூடாது. கேட்டால், அவர் கொடுப்பார் என்றாலும், நாம் அவரிடம் கேட்பது அவ்வளவு நன்றாக இருக்காது.

    இனி எந்தெந்த கம்பெனிகளில் நாம் வேலைக்கு சேர முயற்சிக்கலாம். இப்படி வேலையை விட்டுவிட்டு வந்து விட்டேன் என்பதை டேவிட்டிடம் எப்படி பக்குவமாக சொல்வது'- இப்படி எல்லாம் மனதிற்குள் எண்ணங்களை சுழல விட்டபடியே வீடு வந்து சேர்ந்தாள் திவ்யா.

    வீட்டு வாசல் கேட்டை திறந்து நுழையும் போதே, உள்ளே இருந்து டிரம்ஸ் வாசிக்கும் சத்தம், கூடவே கிட்டார், ப்ளுட், அதோட சேர்ந்து டேவிட் நண்பன் நெல்சன் குரலில்,

    "மடைதிறந்து தாவும் நதியலை நான்... மனம் திறந்து கூவும் சிறுகுயில் நான்...!"- என்ற பாடல் கேட்க, ஒரு சந்தோஷ சாரலாய் அந்தப் பாட்டு திவ்யாவின் மனசுக்குள் ஒரு சந்தோஷ மழையை பெய்ய வைத்தது என்னவோ உண்மைதான்!

    பாடலைக் கேட்டபடியே வீட்டிற்குள் நுழைந்தாள் திவ்யா.

    ஹாலில் டேவிட் நண்பர்களுடன் அமர்ந்து, இசை பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தான்.

    "ஒண்ணா கூடிட்டீங்களா... மியூசிக் பிராக்டிஸ் நடக்குதா?" என அவர்கள் மகிழ்ச்சியை கெடுக்க மனமில்லாமல், தான் வேலையை விட்டு விட்ட விஷயத்தை இப்போது சொல்ல வேண்டாம் என்று ஒத்தி வைத்துவிட்டு, சிரித்தபடி கேட்டாள், திவ்யா.

    அதைக் கேட்டதும் வாசித்த கிட்டாரை கீழே வைத்த படி எழுந்த டேவிட் சொன்னான். "இல்ல... எங்களில் யாருக்காவது ஒருத்தருக்கு, ஏதாவது டிப்ரஷன், அதான் மன அழுத்தம் வந்தா, இல்ல ஒரு மனசங்கடம் வந்துச்சுன்னா, உடனே நாங்க எல்லாம் சேர்ந்து மியூசிக் பிராக்டிஸ் ஆரம்பிச்சுடுவோம்" என கூற, திவ்யா கேட்டாள் "அப்போ உங்கள் நாலு பேருல, யாரோ ஒருத்தருக்கு ஏதோ ஒருபிரச்சினை! அப்படித்தானே? சரி... என்னால முடிஞ்ச சப்போர்ட்ட, நான் செய்றேன்! சொல்லுங்க... யாருக்கு என்ன மன கஷ்டம்? என்ன மன அழுத்தம்...?"

    டேவிட் நண்பர்கள் மூவரும் ஒருவரை ஒருவர் பார்க்க, "ஏன் தயங்குறீங்க... எதுவா இருந்தாலும் சொல்லுங்க, திவ்யா அழுத்தமாய் கேட்க, இடையில் புகுந்த டேவிட் மெதுவாக, சொன்னான்.

    "ஒண்ணும் இல்ல திவ்யா... எனக்கு வேலை போயிடுச்சு!"

    அவள் அதிர்ந்து போய் "என்ன செய்வது... என்ன பேசுவது?"- என்றே தெரியாமல், அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

    (தொடரும்)

    E-Mail: director.a.venkatesh@gmail.com / 7299535353

    Next Story
    ×