என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தவம் செய்வோம்!
    X

    தவம் செய்வோம்!

    • மனிதன் தன் உணர்வுகளில் மேலான நிலையை அடையும் பயிற்சி தானே வாழ்க்கை?
    • அகம் சீராக இருந்தால் புறத்தில் நாம் அனுபவிக்கும் வாழ்வும் சீராக இருக்கும். ஏனென்றால் அகமே புறம்.

    தவம் என்பது தன்னை வெல்லல். தொடர்ந்து தவம் செய்வதன் மூலம் ஒருவர் தன்னை வெல்லும் ஆற்றலை மிகுதிப் படுத்திக் கொள்ளலாம்.

    புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்து விடுபட வேண்டும் என்று உண்மையாகவே நினைப்பவர்கள் நாள்தோறும் சிறிதுநேரம் தவம் செய்து, அந்தப் பழக்கங்களில் இனி ஈடுபட மாட்டேன் என்ற எண்ணத்தை தவத்தின் இறுதி நிலையில் நெஞ்சில் உறுதிப் படுத்திக் கொண்டால் போதும்.

    மெல்ல மெல்ல மனம் அந்தப் பழக்கங்களைத் துறந்துவிடும். மனத்தை நல்ல வழிகளில் பழக்குவதற்குத் தவத்தைப் போல் உதவிசெய்யும் வேறொரு பயிற்சி இல்லை.

    வேதாத்ரி மகரிஷி `அனைவரும் தவம் செய்யலாம், செய்ய வேண்டும்!` என அண்மைக் காலத்தில் உரத்துக் குரல் கொடுத்தவர். குண்டலினி யோகத்தை எல்லா மக்களுக்கும் கற்பிக்க முனைந்தவர்.

    மூலாதார சக்தியை முதுகுத் தண்டின் கீழ்ப் பகுதியில் இருந்து நெற்றிப் பொட்டில் கொண்டுவந்து நிறுத்தி நாள்தோறும் தியானம் செய்யும் தவமுறைக்குப் புதுப்பொலிவு கொடுத்தவர்.

    அவரது நெறியில் முக்கியமான ஒரு படிநிலை சொல்லப்படுகிறது. அகத்தாய்வு என்பதே அது. நாள்தோறும் மனத்தை நாம் ஆராயும் போது தீய நினைவுகள் தானே மட்டுப்படும்.

    சிலர் நாட்குறிப்பு எழுதும் வழக்கத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மிக நல்ல வழக்கம். புதுச்சேரி ஆனந்தரங்கம் பிள்ளை தன் நாட்குறிப்பை அவரது சமகால வரலாறாகவே படைத்திருக்கிறார்.

    ஆனால் நாட்குறிப்பு எழுதுபவர்கள் அதில் அன்றாடம் நடந்த சம்பவங்களை மட்டும் பதிவு செய்கிறார்கள். அது போதாது. அவர்கள் தங்களின் மன உணர்வுகளையும் பதிவுசெய்ய வேண்டும்.

    இரவு படுக்கப் போவதற்கு முன்னால் அந்த நாள் முழுவதும் நம் மனம் என்னென்ன உணர்வுகளில் திளைத்தது என்பதை ஆராய்ந்து பதிவு செய்ய வேண்டும்.

    தீய நினைவுகள், கோபம், காமம் போன்ற உணர்வுகள் நம் மனத்தில் தோன்றியதா என்பதை ஆய்வு செய்து எழுதும்போது நம் ஆழ்மனம் அந்த நினைவுகளைத் தவிர்க்க வேண்டுமெனத் தானே எச்சரிக்கை கொள்ளும்.

    போகப் போக அத்தகைய உணர்வுகளின் கோரமான பிடியிலிருந்து நாம் விடுபட நம் மனமே நமக்கு உதவும்.

    வேதாத்ரி மகரிஷி

    வேதாத்ரி மகரிஷி சொல்லும் அகத்தாய்வுத் தவம் என்பது சம்பவங்களை ஆராய்வதல்ல. உணர்வுகளை ஆராய்வது. மனிதன் தன் உணர்வுகளில் மேலான நிலையை அடையும் பயிற்சி தானே வாழ்க்கை?

    தவம் ஒரு மனிதனின் முகத்தில் அளவற்ற பொலிவை ஏற்படுத்துகிறது. சிலரைப் பார்த்ததுமே நமக்கு மரியாதை தோன்றக் காரணம் அவர் முகத்தில் தென்படும் தவப் பொலிவை நம் மனம் நாமறியாமலே உணர்வதுதான்.

    ஆரா என்று அழைக்கப்படும் சூட்சுமமான ஒளிவட்டம் தவம் செய்வோர் முகத்தைச் சுற்றிப் பரவுகிறது. அடுத்தவர்கள் அவர்களின் சொல்லுக்குத் தங்களையறியாமலே கட்டுப்படுகிறார்கள்.

    ஸ்ரீஅரவிந்தர்

    ஸ்ரீஅரவிந்தர் தெய்வ சக்தியைத் தன்னில் இறக்கிக் கொள்வதற்காக ஓயாமல் தவம் செய்தவர். கொல்கத்தாவில் இருந்த அம்புபாய் புரானி என்பவர் புதுச்சேரி வந்து அரவிந்தரின் குழுவில் சிறிதுகாலம் இணைந்திருந்தார். பின் பணிநிமித்தம் காரணமாக அவர் மறுபடி மூன்றாண்டுகள் கொல்கத்தா சென்றுவிட்டார். அரவிந்தர் பாண்டிச்சேரியிலேயே தவ வாழ்வு வாழ்ந்துவந்தார்.

    மூன்றாண்டுகளுக்குப் பிறகு மறுபடி பாண்டிச்சேரி வந்தார் அம்புபாய் புரானி. ஸ்ரீஅரவிந்தரை தரிசித்தார். புரானிக்குப் பெரும் வியப்பு.

    அரவிந்தர் மாநிறத்தில் தானே இருப்பார்? இப்போது அவர் முகமும் உடலும் தங்க நிறத்தில் ஜொலிக்கிறதே? இது எப்படி?

    வியப்போடு கேட்ட புரானியைப் பார்த்துக் கனிவோடு சிரித்தார் அரவிந்தர். `நான் தெய்வ சக்தியை என் உடலில் இறக்குவதற்காகத் தொடர்ந்து தவம் செய்கிறேன் இல்லையா? தெய்வ சக்தி என்னில் மெல்ல இறங்கத் தொடங்கியிருக்கிறது. அது தன் புற விளைவுகளைக் காட்டுகிறது போலும். இந்தப் புற விளைவை அதிகம் லட்சியம் செய்ய வேண்டியதில்லை!`

    ஆம். கண்ணாடிப் பெட்டிக்குள்ளே ஒரு வைரத்தை வைத்துவிட்டு அதன் ஒளி வெளியே தெரியக் கூடாதென்றால் சாத்தியமா? அதன் ஒளி சுற்றுப் புறமெங்கும் பரவத்தானே செய்யும்?

    இறைவன் என்ற மாபெரும் வைரத்தை நெஞ்சுக்குள்ளே வைத்துத் தவம் செய்தால் அந்த இறைவனின் பொன்னொளி உடலில் பரவி உடலும் பொன்னிறம் பெறுவது இயற்கை தானே?

    ராமகிருஷ்ண பரமஹம்சர்

    ராமகிருஷ்ண பரமஹம்சர் வண்டி கட்டிக் கொண்டு ஒரு வீட்டில் பூஜை செய்யப் புறப்பட்டுப் போனார். பூஜை சில நாட்கள் நடைபெற்றது. எப்போதும் தவத்தில் தோய்ந்து வாழும் மகான் அல்லவா பரமஹம்சர்? பூஜை முடிந்து மறுபடி தன் வீடுசெல்ல வேண்டி வாயிலுக்கு வந்தார்.

    வாயிலில் பெரும் மக்கள் வெள்ளம் கூடியிருந்தது. பரமஹம்சர் எதற்கிந்தக் கூட்டம் என்று திகைப்போடு உள்ளே திரும்பிவிட்டார். ஏன் இத்தனை மக்கள் வாயிலில் கூடியிருக்கிறார்கள் என்று அந்த இல்லத்தாரைக் கேட்டார்.

    `சுவாமி. தங்கள் முகம் தங்க நிறத்தில் ஜொலிக்கிறதே! அதைப் பார்க்கக் கூடியுள்ள மக்கள் இவர்கள்!` எனப் பணிவோடு பதில் வந்தது. பரமஹம்சர் தன் முகத்தில் கைகளால் அறைந்து கொண்டார்.

    `என் முகத்தின் பொலிவைப் பார்க்கவா இத்தனை கூட்டம்? நான் சொன்ன கருத்தைக் கேட்டுப் பின்பற்ற இவர்கள் வரவில்லையா? காளி! என் பொலிவை நீ எடுத்துக் கொண்டுவிடு!`

    அவர் இப்படிப் பிரார்த்தித்த பின்னர் கொஞ்ச நாளில் அவர் முகம் மெல்ல மெல்லப் பழையபடி மாநிறம் கொண்டதாக மாறிற்று என்கிறது பரமஹம்சரின் திருச்சரிதம்.

    தவம் செய்வது பெரும் முகப்பொலிவைத் தரும். ஆனால் தவத்தின் மெய்யான நோக்கம் அதுவல்ல. அகத்தைப் பொலிவுபெறச் செய்வதே தவத்தின் பயன்.

    அகம் சீராக இருந்தால் புறத்தில் நாம் அனுபவிக்கும் வாழ்வும் சீராக இருக்கும். ஏனென்றால் அகமே புறம்.

    வ.உ.சி. சிறையில் இருந்தபோது மெய்ஞ்ஞானியான ஜேம்ஸ் ஆலனின் நூல்கள் சிலவற்றை மொழிபெயர்த்தார். ஜேம்ஸ் ஆலன் டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியையும் கவர்ந்த சிந்தனையாளர். வ.உ.சி. மொழிபெயர்த்த நூல்களில் ஒன்றின் பெயர் அகமே புறம் என்பது.

    அகம் தான் புறமாகிறது. அகத்தில் தவம் செய்யும்போது அது புறத்தில் நாம் விரும்பத் தக்க மாறுதல்களை நம்மை அறியாமலே உருவாக்குகிறது.

    `வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

    ஈண்டு முயலப் படும்!`

    என்கிறார் வள்ளுவர். விரும்பிய பயனை விரும்பியவாறு தர வல்லது தவம். எனவே தவம் செய்யுங்கள் என்கிறது வள்ளுவம்.

    தவம் செய்து தாம் விரும்பியதை எல்லாம் சாதித்தவர்கள் இருக்கிறார்கள். புராணத்தில் அப்படி வருகிற ஒரு பாத்திரம் விஸ்வாமித்திரர்.

    அவர் பெருந்தவம் நிகழ்த்தி வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்றவர். தம் அபாரமான தவ ஆற்றல் காரணமாக தன்னைச் சரணடைந்த திரிசங்குவுக்காக சொர்க்கத்திற்கு இணையாக இன்னொரு சொர்க்கத்தை அந்தரத்தில் படைத்தவர்.

    சராசரி மனிதர்கள் பெரும் முயற்சி செய்தும் செய்ய முடியாத அபாரமான சாதனைகளை எல்லாம் தவ முனிவர்கள் ஒரு கண்பார்வையில் நிகழ்த்தி விடுவார்கள். உண்மையான தவம் எந்த அற்புதத்தையும் நிகழ்த்த வல்லது.

    அணிமா, மகிமா, லகிமா உள்ளிட்ட அஷ்டமா ஸித்திகளும் தவம் செய்பவர்களுக்குத் தானே வந்தமையும்.

    சரி, புராணப் பாத்திரம் மட்டுமா? அண்மைக் காலத்தில் அப்படித் தவம் செய்து நாம் வியக்கும் வகையில் பெரும் ஆற்றல்கள் பெற்ற யாராவது இருக்கிறார்களா?

    ஏன் இல்லாமல்? அப்படி ஒருவர் இருந்தார். சென்னையில் வாழ்ந்தார். ஆகாயத்தில் பறவையைப் போல் பறந்தார். பறவைச் சித்தர் என்ற பெயராலும் அவர் அழைக்கப்பட்டார். அவரைப் பற்றித் தம் நூலில் பதிவுசெய்கிறார் திரு.வி.க. என்றழைக்கப்பட்ட திரு வி. கல்யாணசுந்தரனார். சென்னை ராயப்பேட்டை வெஸ்லி கட்டிடத்தின் மாடியில் நின்று கொண்டிருந்தார் அவர். அப்போது ஒரு கைம்பெண் ஆகாயத்தில் பறந்து வந்து அவரருகே நின்று சற்றுத்தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு மீண்டும் பறந்து சென்றார்!

    திருப்பூர் கிருஷ்ணன்

    ஆச்சரியத்தில் ஆழ்ந்த திரு.வி.க., அந்தப் பெண்மணி யார் எனப் பின்னர் விசாரித்தறிந்தார். சக்கரையம்மா என்றழைக்கப்பட்ட அவர், பாரதியாரைப் பாண்டிச்சேரி தலைமறைவு வாழ்க்கைக்குப் பத்திரமாகச் சென்னையில் இருந்து அனுப்பிவைத்த டாக்டர் நஞ்சுண்டராவின் குரு என்பதைத் திரு.வி.க அறிந்துகொண்டார்.

    இந்த விவரங்களையெல்லாம் திரு.வி.க தம் உள்ளொளி என்ற புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார். திரு.வி.க. பொய்யே பேசாதாவர் எனப் பலராலும் புகழப்பட்ட பெருமைக்குரியவர். பறவைச் சித்தரான சக்கரையம்மாவின் சமாதியும் அவருக்காக எழுப்பப்பட்ட அழகிய கோவிலும் சென்னை திருவான்மியூரில் இருக்கிறது. சக்கரையம்மாவுக்கு வானில் பறக்கும் சக்தியை எது தந்தது? அவரது குருவான நட்சத்திர குணாம்பாள் உபதேசம் செய்த ஸ்ரீசக்ர மந்திரமும் அந்த மந்திரத்தை ஜபித்து ஓயாமல் சக்கரையம்மா செய்துவந்த தவமும் தான்.

    `செய்கதவம் செய்கதவம் நெஞ்சே

    தவம்செய்தால்

    எய்த விரும்பியதை எய்தலாம்!`

    என்கிறார் பாரதியார்.

    தவம் செய்தால் மறுமைப் பயனை மட்டுமல்ல, இம்மைப் பயனையும் அடையலாம் என்கிறபோது, நாள்தோறும் சிறிதுநேரமாவது ஜபதபங்களைச் செய்து தியானம் செய்து தவத்தில் ஈடுபட முயலலாமே? நாம் அடைய விரும்பும் வெற்றிகளை நாம் செய்யும் தவத்தால் எளிதில் அடையலாமே?

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×