என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    உடல் என்கிற சட்டை
    X

    உடல் என்கிற சட்டை

    • உடல் அழிந்தால் ஆன்மா முக்தி அடையும் அல்லது பிறிதோர் உடலைப் பெறும்.
    • சித்தர்களும் ஞானிகளும் என்றும் இறப்பதில்லை. அவர்கள் தங்கள் உடலை மட்டுமே துறக்கிறார்கள்.

    உடல் என்பதொரு சட்டை. உள்ளே இருக்கும் ஆன்மா உடல் என்கிற சட்டையைத் தரித்துக் கொள்கிறது.

    ஆன்மா நிரந்தரமானது. அதற்கு அழிவே இல்லை. உடல் என்றேனும் ஒருநாள் கட்டாயம் அழியக்கூடியது.

    சென்னை திருவான்மியூரில் கோவில் கொண்டிருக்கும் பெண் சித்தரான சக்கரையம்மா, மனிதர்கள் ஆன்ம வடிவானவர்கள் என்றும், ஆன்மா ஆனந்தமே வடிவானது என்றும், அதை உணர்ந்தால் மனிதர்கள் துன்பப்பட மாட்டார்கள் என்றும் தொடர்ந்து போதித்துள்ளார். நாம் உடல் அல்ல, ஆன்மா என்பதை உணர்ந்துகொண்டால் நிரந்தரமான ஆனந்தம் கிட்டும்.

    உடல் என்பது ஓர் உறை என்றும் அந்த உறையில் ஆன்மா என்கிற வாள் இருப்பதாகவும் வாள் நிரந்தரமானது என்றும் உறை அழியக் கூடியது என்றும் ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறியுள்ளார்.

    உடல் அழிந்தால் ஆன்மா முக்தி அடையும் அல்லது பிறிதோர் உடலைப் பெறும். இதையே நம் இந்திய ஆன்மிக மரபு வலியுறுத்துகிறது.

    `ஆன்மா உடுத்திக்கொள்ளும் வஸ்திரமே உடல்` என முழங்கினார் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரம் பிள்ளை. அவர் கோவையில் சிறைப்பட்டிருந்தபோது தத்துவ ஞானியான ஜேம்ஸ் ஆலன் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். ஜேம்ஸ் ஆலன் கருத்தும் இதுவே.

    உடல் என்கிற சட்டை பழுதுபட்டபோது, பயன் படாதபோது, அல்லது அதன் நிர்ணயிக்கப்பட்ட பயன்பாட்டுக் காலம் முடிகிறபோது, ஆன்மா அந்தச் சட்டையை உதறிவிட்டு வேறு புதிய சட்டையை அணிகிறது.

    நாம் உடல் போனால் ஏன் அழ வேண்டும்? நிரந்தரமான ஆன்மா என்றும் அழிவதில்லை என்ற உண்மையை உணர்ந்து அமைதி காக்க வேண்டியது அவசியமல்லவா? சட்டையை அதிகம் சட்டை செய்ய வேண்டிய தேவையென்ன?

    நாம் ஆன்மா என்பதை உணரும்போது சட்டையைப் பற்றிய பாசம் தானே உதிர்ந்துவிடுகிறது. பாம்பு சட்டையை உரிக்கிற மாதிரி ஆன்மா உடல் சட்டையை உதறுகிறது.

    இந்த உண்மையை மெய்ஞானிகள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தனர். தங்கள் உடலை அவர்கள் ஒருசிறிதும் பொருட்படுத்தவில்லை.

    பகவான் ரமணரும் ராமகிருஷ்ண பரமஹம்சரும் தங்களுக்கு வந்த புற்றுநோயை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அழிவற்றதும் என்றும் நித்தியமானதுமான ஆன்மாவின்மேல் சிந்தையைச் செலுத்திய அவர்களுக்கு உடல் கூட்டைத் துறப்பதில் தயக்கமெதுவும் இருக்கவில்லை.

    `குடம்பை தனித்தொழியப் புள்பறந்தற்றே உடம்போடு உயிரிடை நட்பு` என்கிறார் திருவள்ளுவர். அவர் உடலை முட்டையின் ஓட்டுக்கும் உள்ளிருக்கும் பறவையை உயிருக்கும் ஒப்பிடுகிறார்.

    உடலாகிய முட்டை ஓட்டைத் தனித்துக் கிடத்திவிட்டு, உள்ளிருக்கும் உயிர்ப்பறவை விண்ணில் பறக்கிறது என்கிறார். வள்ளுவர் சிந்தனை நம் இந்திய ஆன்மிக மரபைச் சார்ந்த சிந்தனைதான்.

    தங்கள் ஆன்மா தங்கியிருந்த கூடான தங்களின் உடலை மெய்ஞானிகள் உகுத்த விதங்கள் பற்பல.

    ராமலிங்க வள்ளலார் பூட்டிய அறையில் நிஷ்டையில் ஆழ்ந்தார். பலநாள் கழித்துத் திறந்து பார்த்தபோது அங்கே வள்ளலார் இருந்த சுவடே இல்லை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்ச பூதங்களால் ஆன உடலைப் பஞ்ச பூதங்களிலேயே பிரித்துக் கரைத்துவிட்டார் அவர்.

    திருவொற்றியூரில் பட்டினத்தார் சித்தி அடைந்த விதம் விந்தையானது. தன்னைக் கூடையால் மூடுமாறு கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களிடம் சொன்னார் அவர். அவர்கள் அவ்விதமே மூடினார்கள்.

    கூடையில் இருந்து அவர் மறைந்துபோனார். பின் வேறோர் இடத்தில் இருந்து சிரித்தவாறே நடந்து வந்தார்.

    சிறுவர்கள் திகைத்தார்கள். மறுபடி அவரைக் கூடையால் மூடினார்கள். மறுபடி அவர் சிரித்தவாறே எங்கிருந்தோ வந்தார்.

    சிறுவர்களுக்கு இது ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டு மறுபடி மறுபடி நிகழ்ந்தது.

    ஆனால் இறுதியாகப் பட்டினத்தாரைக் கூடையால் மூடியபோது அவர் எங்கிருந்தும் திரும்பி வரவேயில்லை.

    சிறுவர்கள் திகைத்துப் போய்க் கூடையைத் திறந்து பார்த்தால், பட்டினத்தாருக்குப் பதிலாக அங்கே ஒரு சிவலிங்கம் காட்சி தந்தது. பட்டினத்தார் சிவத்தில் கலந்து, சவமாக மாறாமல் சிவமாக மாறிவிட்டார்.

    யோகி பரமஹம்ச யோகானந்தர் சித்தி அடைந்தபோது, அவர்முன் எழுநூறு பேர் அமர்ந்திருந்தனர். வெளிதேசத்தில் அமெரிக்காவில், பாஸ்டன் நகரில், அவர் மகாசமாதி அடைந்தார்.

    தான் உடலை விடும் முன்பே, 'நான் உடலை விடப்போகிறேன்' என்பதை அவர் தெளிவாக அறிவித்திருந்ததால், பற்பல விஞ்ஞானிகளும் பல மருத்துவர்களும் அந்தக் காட்சியைப் பார்க்கவென்றே வந்து அமர்ந்திருந்தனர்.

    வந்தவர்களுக்கு அருளுரை வழங்கினார் யோகானந்தர். பின்னர், 'இப்போது என் உடலை நான் விடப்போகிறேன்' என்று அறிவித்தார். பத்மாசனத்தில் அமர்ந்துகொண்டு விழிகளை மூடிப் பலர் முன்னிலையில் நிஷ்டையில் ஆழ்ந்தார். அப்படியே தன் உடலை நீத்தார்.

    மருத்துவர்கள் அந்தக் காட்சியைப் பார்த்துத் திகைத்தார்கள். இப்படியும் ஒருவர் தாமே விரும்பி உடலை உகுக்க முடியும் என்பதை அவர்களால் நம்ப முடியவில்லை.

    மருத்துவ விஞ்ஞானத்தைப் பொறுத்தவரை, உடலில் நலிவு ஏற்பட்டு, உடல் இயங்க முடியாத சூழ்நிலையில் மட்டுமே உயிர் பிரியும் என்று கருதப்படுகிறது.

    ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் சிரித்துக்கொண்டே, 'இப்போது நான் உடலைத் துறக்கப் போகிறேன்' என்று சொல்லிவிட்டு, உடலைத் துறப்பதை மருத்துவர்கள் எங்கும் அதுவரை பார்த்திருக்கவில்லை.

    சித்தி அடைந்த பரமஹம்ச யோகானந்தரின் உடல் நூற்றுப் பதினோரு மணிநேரம் எந்தச் சிதைவும் இல்லாமல் பூப்போல அப்படியே இருந்தது. ஏராளமான அன்பர்கள் அந்த அதிசயத்தைத் தரிசித்துப் பரவசம் அடைந்தார்கள்.

    பரமஹம்ச யோகானந்தரின் குருவான யுக்தேஸ்வர கிரியும் தன் உடலைத் துறக்கப் போவதை முன்கூட்டியே தெரிவித்தார். அதுமட்டுமல்ல, அவர் தம் உடலைத் துறந்த மறுநாளே தமது சீடரான பரமஹம்ச யோகானந்தருக்கு மறுபடி தன் உடலோடு ஒருமுறை காட்சி கொடுத்தார் என்று சொல்லப்படுகிறது.

    ஒவ்வொரு யோகியும் ஒவ்வொரு சித்தரும் தன் உடம்பைத் துறந்துவிடும் நிலை ஒவ்வொரு வகையில் தனித்துவமானது. மகா சமாதி என அந்நிகழ்வு அழைக்கப்படுகிறது.

    திருப்பூர் கிருஷ்ணன்

    தன் உடலை ஒரு சட்டையைக் கழற்றுவதுபோல மிக எளிதாக நீக்கிவிட்டு அவர்கள் தங்கள் உடலை விட்டுப் புறப்பட்டு விடுகிறார்கள்.

    மகாசமாதி நிலையை மரணமடைதல் என்று சொல்ல முடியாது. சொல்லக்கூடாது. அது சாகாநிலை எனப்படுகிற மரணமிலாப் பெருவாழ்வு. அவர்கள் செயல்படுவதற்கு இனி இந்த தேகம் தேவையில்லை என்பதாலும் தேகமில்லாமலே ஆன்மாவாகவே அவர்களால் செயல்பட முடியும் என்பதாலுமே அவர்கள் மகாசமாதி அடைகிறார்கள்.

    ஸ்ரீஅரவிந்தர் புதுச்சேரியில் தம் உடலைத் துறந்தபோதும் இத்தகைய அதிசயம் நடந்தது. நூற்றுப் பதினோரு மணி நேரம் அவர் உடலைச் சுற்றி வசீகரமான ஒரு பொன்னொளி பரவியிருந்தது.

    பொதுமக்கள் சாரைசாரையாக வந்து அந்தப் பொன்னொளி சூழ்ந்த புனித உடலை தரிசித்து வணங்கிவிட்டுச் சென்றார்கள். அவர் உடலில் அவர் இறந்துவிட்டதற்கான அறிகுறி எதுவுமே தென்படவில்லை என்று மருத்துவர்கள் வியப்போடு சான்றுரைத்தார்கள்.

    அவர் உடலின் அருகே சலனமின்றி அமர்ந்திருந்தார் ஸ்ரீஅன்னை. அவரின் ஆழ்மனத்தில் ஸ்ரீஅரவிந்தர் உடலைச் சமாதியில் வைக்க ஸ்ரீஅரவிந்தரிடமிருந்து உத்தரவு கிடைத்த பின்னரே அவர் அவ்விதம் செய்வதற்கு அனுமதி அளித்தார்.

    பிரசண்ட விகடன் பத்திரிகை ஆசிரியரும் தரங்கிணி என்ற புகழ்பெற்ற நாவலை எழுதிய பிரபல எழுத்தாளருமான அமரர் நாரண துரைக்கண்ணன், அரவிந்தரைப் பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார்.

    அதில் அரவிந்தர் மேனி தங்க விக்கிரகம்போல் ஜொலிப்பதாகவும் அவரது வலதுகாலில் ஒரு நரம்பு மட்டும் சற்றே மாநிறத்தில் தென்படுவதாகவும் தியானத்தின் மூலம் அதுவும் தங்கநிறம் பெற்றால் அவர் மேனி தங்கத்தால் ஆன உற்சவ மூர்த்திபோல் ஆகிவிடும் என்றும் ஸ்ரீஅரவிந்தர் உடலுடன் வாழ்ந்த காலத்திலேயே அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

    ஸ்ரீஅரவிந்தர் உயிர் நீத்தபின் அவர் உடல் பொன்னுடலாகத் தென்பட்டதிலும் அவர் உடலைச் சுற்றிப் பொன்னொளி பரவியதிலும் ஆச்சரியமென்ன? இன்றும் பொன்னுடல் நீத்துப் புகழுடல் எய்திய மகான் ஸ்ரீஅரவிந்தர் தன் அடியவர்களுக்குப் பாதுகாவலாக இருந்து அருளாசி வழங்கி வருகிறார்.

    கபீர்தாசர் சித்தி அடைந்தபோது, அவர் உடல் ஒரு துணியால் போர்த்தப்பட்டிருந்தது. சிறிது நேரம் கழித்து அந்தப் போர்த்தப்பட்ட துணிக்கு உள்ளிருந்து மலர்களின் நறுமணம் பரவுவதை உணர்ந்தார்கள் அடியவர்கள்.

    ஆச்சரியத்துடன் துணியை அவர்கள் விலக்கிப் பார்த்தபோது, கபீர்தாசர் உடல் இருந்த இடத்தில் அந்த உடலைக் காணோம். ஒரு ரோஜா மலர்க்குவியல்தான் தென்பட்டது.

    பகவான் ரமணர் மறைந்த பொழுது ஒரு ஒளி தோன்றி திருவண்ணாமலையில் கலந்து மறைந்தது. நாவலாசிரியர் கல்கி கிருஷ்ண மூர்த்தி, இந்த அதிசய சம்பவத்தைப் பற்றி ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.

    சதாசிவப் பிரம்மேந்திரர் ஒரே நேரத்தில் இரண்டு இடங்களில் சித்தி அடைந்ததாகக் கூறுகிறார்கள். இன்றும் திருச்சி, கரூர் அருகே உள்ள நெரூரில் சதாசிவப் பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் அவர் அருளாட்சி செய்வதை அவரது அடியவர்கள் உணர்ந்து நெகிழ்கிறார்கள்.

    சித்தர்களும் ஞானிகளும் என்றும் இறப்பதில்லை. அவர்கள் தங்கள் உடலை மட்டுமே துறக்கிறார்கள். தங்கள் அடியவர்களின் மனத்தில் தோன்றி அவர்கள் வாழ்வில் பற்பல அற்புதங்களை நிகழ்த்துகிறார்கள்.

    அற்புதங்களில் எல்லாம் மேலான அற்புதம் மனத்துக்கண் மாசில்லாது இருப்பதே. சித்தர்களை வழிபடுகிறவர்களின் ஆழ்மனத்தில் அந்தச் சித்தரின் அருள் செயல்பட்டு அடியவர்களின் மன மாசுகளை அழிக்கிறது.

    தொடர்புக்கு:

    thiruppurkrishnan@gmail.com

    Next Story
    ×