என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

தருவது தாராளம்! பெறுவது ஏராளம்!
- சக மனிதர்களுக்கும் தந்து மகிழ்வதும், அவர்களிடம் பெற்றுக் கொள்வதுமாகவும் இருக்கிறது.
- நமது வாழ்வியலில் ஆணும் பெண்ணும் இணைவதால் ஏற்படும் குடும்ப அமைப்பு என்பதே தருதலையும் பெறுதலையும் அடிப்படையாகக் கொண்டதுதான்.
தருவதிலும் பெறுவதிலும் அன்பின் நம்பிக்கை வைத்திருக்கும் அருமை வாசகர்களே! வணக்கம்!
மனித வாழ்க்கை தருவதற்கும் பெறுவதற்குமாகவே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஆதிமனிதன் இயற்கையில் இருந்தும் விலங்குகள் உயிரினங்களிடம் இருந்தும் கற்றுக் கொண்டதையும் பெற்றுக்கொண்டதையும் மீண்டும் அவற்றுக்கே அளித்து, மீண்டும் மீண்டும் தருவதும் பெறுவதுமாக வாழ்க்கையைப் பண்படுத்திக் கொண்டிருக்கிறான்.. வாழ்க்கை என்பது இயற்கை மற்றும் உயிரினங்களோடு கொடுக்கல் வாங்கல் செய்வது மட்டுமல்ல, சக மனிதர்களுக்கும் தந்து மகிழ்வதும், அவர்களிடம் பெற்றுக் கொள்வதுமாகவும் இருக்கிறது.
வாழ்க்கையில் சிலவற்றை நாம் எதிர் எதிர் குணம் கொண்டவையாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். "சரி!-தவறு!", "நல்லது!- கெட்டது"!, "வலது!- இடது!", "பள்ளம்!- மேடு!" போன்றவற்றைக் கூர்ந்து கவனித்தால் அவை உண்மையில் எதிர் எதிர் குணமானவை அல்ல! என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எது கெட்டது என்பதை உண்ர்ந்து கொண்டால்தான் எது நல்லது என்கிற முடிவுக்கே வர முடியும்.. தவற்றைத் தெரிந்து திருத்திக் கொண்டால்தான் சரியாகச் செயல்பட முடியும். இதுபோன்றது தான் "தருவதும்!- பெறுவதும்!"; இவை எதிர்ச் சொற்கள் இல்லை!; உடன்சொற்கள்.
பெறுபவர் இல்லையென்றால் தருவதற்கே வேலையில்லாமல் போய்விடும். அதைப்போலத் தருபவர் இல்லையென்றால் பெறுபவரே இருக்கமாட்டார். அன்றாட வாழ்வியலில் தருபவர்கள் எல்லோரும் பெறுபவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சூழ்நிலையில் தருகிறார்கள்; எந்தச் சூழ்நிலையில் பெறுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இவர்களைப்பற்றிய முடிவுக்கு நாம் வர வேண்டியிருக்கிறது.
ஒன்றைக்கொடுத்து அதற்கு நிகரான அல்லது அதே மதிப்புடைய ஒன்றைப் பெறுவது என்பது கொடுக்கல்-வாங்கல் முறைகளில் ஒன்றாக இருக்கிறது. அலுலகத்தில் சேவையை வழங்குகிற மனிதனோ அல்லது வயல்களில், தொழிற்சாலைகளில் உழைப்பை வழங்குகிற மனிதனோ அதற்கேற்ற கூலியைச் சம்பளமாகப் பெற்றுக் கொள்ளும் முறை; இது ஒன்றைக்கொடுத்து ஒன்றைப் பெறுகிற நல்ல முறை.
இங்கே உழைப்பாளி உழைப்பைக் கொடுத்துக் கூலியைப் பெற்றுக் கொள்கிறார்; முதலாளி உழைப்பைப் பெற்றுக்கொண்டுக் கூலியைக் கொடுக்கிறார். இது ஒருவகையில் வணிகமுறை சார்ந்த தருதல் பெறுதல்தான். வணிக நிறுவனங்களுக்குச் சென்று பணத்தைக் கொடுத்து, நமக்குத் தேவையான நுகர் பொருட்களைப் பெற்றுக்கொள்வதும் வணிகச் சார்புடைய 'தருதல் பெறுதல்' தான். அந்தத் 'தருதல் பெறுதல்' நடுவுநிலை தவறாமல் நிகழவேண்டும் என்கிறார் திருவள்ளுவர். கொடுப்பதைக் குறைவில்லாமலும் கொள்வதை மிகைப்படாமலும் செய்யவேண்டும்; நடப்பது வணிகமாக இருந்தாலும் நீதி வழங்குகிற முறையாக இருந்தாலும், பெறுபவர் இடத்தில் வழங்குபவர் தாம் இருப்பதாகப் பாவித்துக்கொண்டு வழங்க வேண்டும்.
என்னதான் தருதலும் பெறுதலும் நேர்செய்யும் தன்மையுடையதாக இருந்தாலும் அவற்றை முழு ஈடுபாட்டோடு மனமுவந்து செய்யும்போது அவற்றின் பலன்கள் பன்மடங்காகப் பல்கிப் பெருகி நலமளிக்கின்றன.
அலுவலகத்திலோ, உழைப்பிடத்திலோ பணிபுரியும் உழைப்பாளிகள் கடனுக்கென்றோ, வாங்குகிற சம்பளத்திற்கென்றோ உழைப்பை நல்கினால், அது உரிய பயன்விளைச்சலைத் தராது. கடமைக்காகத் தருதலின் பலன் நேர்த்தியானதாக இருக்காது. அதேபோல, உழைப்புக்காகப் பெறுகிற கூலியையும் ஒப்புக்காகப் பெற்றுக்கொள்ளும்போதும் அதனால் மகிழ்ச்சி நிறைவதில்லை. இந்த வகையில், தருகிற உழைப்போ, பெறுகிற கூலியோ முழுமன ஈடுபாட்டோடு நிகழ்ந்தால் மட்டுமே அது அளவில் பன்மடங்கு பெருகிய வளர்ச்சியை உருவாக்கும்.
தருவதும் பெறுவதும் கணக்குப்படி பார்த்தால் வணிகத்தைப் போன்றதுதான் என்றாலும், அவற்றில் மனிதம் சார்ந்த அக்கறையும் சமூகம் சார்ந்த தொலைநோக்கும் சேர்ந்தால் அவை மதிப்பிற்குரியதாக மாறிவிடுகின்றன.
மனிதனின் வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்து வளங்களையும் இயற்கையே தன்னிடத்தில் வைத்திருக்கின்றது. மனிதனது வசதியான வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் தன்னிடமிருந்து வழங்க இயற்கை எப்போதும் காத்திருக்கிறது. மழை தருகிறது; மரம் தருகிறது; மண் தருகிறது; வெயில் தருகிறது; காற்றுத் தருகிறது; உலோகங்கள் தருகிறது; உணவு தருகிறது. இப்படிப் பலவற்றைத் தருகிற இயற்கைக்கு மனிதன் திருப்பித் தரவேண்டியதெல்லாம் மூலவளம் குறையாது இயற்கையின் சமத்தன்மையைப் போற்றிப் பாதுகாப்பது மட்டுமே.
இயற்கை நமது உணவுத் தேவைக்காகப் பலவிதைகளைத் தந்தால், அவற்றில் சிலவற்றை உணவாக்கிச், சிலவற்றை மீண்டும் விதையாக்கி மண்ணில் ஊன்றும்போது இயற்கையும் செழிக்கிறது; தருவதும் பெறுவதும் பன்மடங்காகிப் பொலிகின்றன. மழைவளமும் வனவளமும் நம்மை வளப்படுத்திச் செம்மைப் படுத்துகின்றன. "தக்கார்க்கு வேளாண்மை" எனும் பதத்தில் திருவள்ளுவர், 'வேளாண்மை' என்றால் உதவிசெய்தல் என்று அர்த்தப் படுத்துகிறார். இயற்கையோடு மனிதன் நிகழ்த்தும் 'தருதலும் பெறுதலுமே' உலகின் தலைசிறந்த அறச்செயலாகப் போற்றப்பட வேண்டியது ஆகும்.
நமது வாழ்வியலில் ஆணும் பெண்ணும் இணைவதால் ஏற்படும் குடும்ப அமைப்பு என்பதே தருதலையும் பெறுதலையும் அடிப் படையாகக் கொண்டதுதான். தனித்தனியே வாழும் தனியர் வாழ்வு, ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உணர்வு சார்ந்த அன்பின் சார்பு நிலையையும், மனத்தளவிலும் உடலளவிலும் பாதுகாப்பு உறுதியையும் அளிப்பதில்லை.
ஓர் ஆணும் ஒரு பெண்ணும் சேர்த்துவைக்கப்பட்டு அவர்கள் குடும்பமாக்கப்படும்போது, உனக்கான அன்பையும், உனக்கான பாதுகாப் பையும், உனக்கான உணவு உடை செல்வம் முதலான வாழ்வியல் தேவைகளையும் நானும் தருவேன்! நானும் கைம்மாறாக எனக்கானதைப் பெறுவேன்! என்று ஆணும் பெண்ணும் உறுதியெடுத்துக் கொண்டு வாழ்வதே குடும்பம். குடும்பத்தில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே உள்ள உறவை மேலோட்டமாகப் பார்த்தால் அதுவும் ஒருவகை 'தருதல் பெறுதல்' முறைமைதான். ஆனாலும் அவ்வுணர்வின் மேன்மையை அடியாழம்வரை புகுந்து பார்த்தாலும் யார் அதிகம் தந்தார்கள்? யார் அதிகம் பெற்றார்கள்? என்பதைப் புரிந்துகொள்ளவே முடியாது.
குடும்ப வாழ்வியலில் பிள்ளைகள் பெற்று வளர்ப்பதும்கூட ஒருவகை 'தருதல் பெறுதல்' முறை சார்ந்ததுதான். "தம்மின் தம்மக்கள் அறிவுடைமை" என்றும், "அவையத்து முந்தியிருப்பச் செயல்" என்றும் "சான்றோன் எனக் கேட்ட தாய்" என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதெல்லாம் பிள்ளைகளைப் பெறுகிற பெற்றோர்க்கான கடமைகள் ஆகும். தாம் கற்கத் தவறிய கல்வியையும், ஏற்கத் தவறிய வேலைவாய்ப்பையும் தன் மகளையோ மகனையோ தயார்ப்படுத்தி அவர்கள் மூலம் அடைந்து விட வேண்டும் என்று கருதுகிற பெற்றோர்கள்தான் பெரும்பான்மையானோராக இன்று உள்ளனர்.
பிள்ளைகளின் கல்விக்காகவும் எதிர்காலத்திற்காகவும் செய்கிற செலவுகள், பெற்றோர்களின் பிற்கால வாழ்க்கைக்கான வைப்புநிதி என்று கருதுகிற பெற்றோர்களும் உண்டு. வளர்ந்து பெரிய நிலைகளுக்கு வந்த பின்னர் நமது பிள்ளைகள் நம்மை நல்லபடியாகக் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்ப்பதுகூட ஒருவகை 'தருதல் பெறுதல்' தான். இப்படி எதிர்பார்த்திருந்து ஏமாந்துபோகும் பெற்றோர்கள்தான் நிலை பரிதாபத்திற்குரியது.
தற்காலக் குடும்ப விழாக்களில் பெறப்படுகிற மொய் எனப்படும் அன்பளிப்புப் பணமும், பரிசுப் பொருள்களும் கூடத், 'தருதல் பெறுதல்' வகையினதே!. அவர் வீட்டு விசேஷத்திற்கு ஐந்நூறு செய்தால், நம்வீட்டு விசேஷத்திற்கு அவர் அறுநூறாகவோ ஆயிரமாகவோ திரும்பச் செய்யவேண்டும் என எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள். இது ஒருமடங்கு விதைத்துப் பன்மடங்கு விளைச்சலை எதிர்பார்க்கும் மொய் முறை.
தற்காலத்தில்,பிறந்தநாள் விழா போன்ற குடும்ப நிகழ்வுகளில் 'தருதல் பெறுதல்' முறை உடனுக்குடன் நிகழ்வாக நிகழ்கிறது. விழாவிற்குச் செல்வோர் பரிசுப் பொருள்களோடு செல்வர்; விசேஷ வீட்டார் அவற்றைப் பெற்றுக்கொண்டு, கைம்மாறுப் பரிசாக அவர்களும் ஒவ்வொன்றைத் தந்தனுப்புவார்கள். இது உடனுக்குடன் நிகழ்ந்து விடுகிற 'தருதல் பெறுதல்'. இம்முறை பழங்காலந்தொட்டே செட்டிநாட்டுப் பகுதிகளில் வழக்கத்தில் உள்ளது.
தருவது ஒன்று பெறுவது ஒன்று; இது இயல்பானது. ஆயினும் பிரதிபலன் கருதாமல் தருவதில்தான் உண்மையான அறம் அடங்கியிருக்கிறது'
ஒரு கடுமையான பாலைவனம். வழி தெரியாமல் மாட்டிக்கொண்ட ஒருவர். எப்படிப் பாலைவனத்திலிருந்து வெளியேறுவது என்பது தெரியவில்லை. கடும் வெயில் காரணமாக தண்ணீர்த் தாகம் வேறு அவர் உயிரைத் தின்னத் தொடங்கியிருந்தது. வெளியேறித் தப்பிப்பதற்குமுன் ஒருவாய் தண்ணீர் கிடைத்தால் போதும் என்கிற நிலை அவருக்கு.
தொலைதூரத்தில் ஒரு பாழடைந்த வீடு இருப்பதைப் பார்த்தார். அங்கு சென்றால் தண்ணீருக்கு ஏதாவது வழி கிடைக்கும் என்று முயன்று நடந்து சென்றார். அவரது நம்பிக்கை வீணாகவில்லை. அந்தப் பாழடைந்த வீட்டு வாசலுக்கு முன் ஒரு துருப்பிடித்துப் போன பழைய அடிகுழாய் தென்பட்டது.
ஆவலோடு அடிகுழாய்ப் பக்கம் சென்றபோது, அதனருகில் இருந்த கைப்பிடிச் சுவற்றில் ஒரு பழைய அலுமினியக் குவளை, நிறைந்த தண்ணீரோடு இருந்தது. அவருக்கிருந்த தாகத்திற்கு அந்த ஒரு குவளைத் தண்ணீர் போதவே போதாது. இருந்தாலும் தொண்டையை நனைத்துக்கொள்வோம் என்று ஆவலோடு குவளைநீரைத் தூக்கப் போனார்.
ஆனால் குவளையின் கீழே ஓர் அறிவிப்போடு கூடிய தாள் ஒன்று இருந்தது." வருக! உங்கள் தாகம் தீரத் தண்ணீர் பருக வேண்டுமென்றால், குவளையில் உள்ள தண்ணீரை அடிகுழாய்க்குள் ஊற்றிக் குழாயை அடிக்கவும். தண்ணீர் வரும்; தாகம் தீரும் வரை குடித்துவிட்டு, மீண்டும் ஒரு குவளைத் தண்ணீரைப் பிடித்து, இந்தச் சுவற்றில் வைத்துவிட்டுச் செல்லவும்!".
பொதுவாகக் காற்றுவாங்கிக் கிடக்கும் அடிகுழாயிலிருந்து தண்ணீரை அடிக்க வேண்டுமென்றால், முதலில் மேலிருந்து நாம் கொஞ்சம் தண்ணீரை ஊற்றினால்தான் அடிக்க அடிக்கத் தண்ணீர் வெளியேறும். கொடுத்துப் பெறுகிற தத்துவம்.
இப்போது பாலைவனத்திலிருக்கும் அந்த நபருக்கு அடிகுழாய்த் தத்துவம் தெரியும். என்றாலும், கண்ணுக்குத் தெரிகிற அந்த ஒரு குவளை நீரையும் குழாய்க்குள் ஊற்றி, அதிலிருந்து தண்ணீர் வராமல் போய்விட்டால்? இருக்கிற நீரையும் இழக்க வேண்டியதாகிப் போய்விடுமே?.
துணிந்து முடிவெடுத்தார். குவளைநீரைக் குழாய்க்குள் ஊற்றி அடித்தார். தண்ணீர் குபுகுபுவென்று வரத் தொடங்கிவிட்டது. தாகம் தீரும்வரை குடித்தார். தாளில் எழுதியிருந்தது போலவே மீண்டும் குவளையை நிரப்பிச் சுவற்றில் வைத்தார். அந்தத் தாளில் இவர் கூடுதலாக ஒரு வார்த்தை எழுதினார். "நிச்சயம் தண்ணீர் வருகிறது! இது உண்மை!".
தருவதால் தான் பெற முடியும் என்பது உலகறிந்த உண்மை என்றாலும் அதிலும் நம்பிக்கை அவசியமல்லவா?.
சிலர் தருகிறார்கள்! பெறமாட்டார்கள்!
சிலர் பெறுவார்கள்! தர மாட்டார்கள்!
சிலர் தரவும் மாட்டார்கள்! பெறவும் மாட்டார்கள்!
சிலர் தரவும் பெறவும் செய்வார்கள்!
தன்னலமற்ற சிலராலேயே உலகில் தருதலும் பெறுதலும்
தரமுயர்ந்து விளங்குகிறது!
தொடர்புக்கு 9443190098






