என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

'ஆறிலும் சாவு நூறிலும் சாவு'
- சூரியனை வழிபடும் நேரத்தில் இல்லையென்று சொல்லாமல் யார் எதைக் கேட்டாலும் தானமாக தருவதால் வள்ளல் என்று பெயர் கொள்கிறான்.
- ஒரு விரக்தியான மனநிலையில், தள்ளப்படும் அவனின் மனப்போராட்டத்தில் விழுந்த வார்த்தையாக இந்தப் பழமொழியைக் கொள்ளலாம்.
கண்டா வரச்சொல்லுங்க..
யாரை?
ஆறிலும் சாவு நூறிலும் சாவு இந்த பழமொழிக்கான விளக்கத்தை...
இனிமேல்தானே எழுதவே போறோம் அப்போ எப்படி முன்னாடியே கண்டுக்கிறது.
சரிதான், ஒரு டிரண்டிற்காக அந்த வரியில் ஆரம்பித்தேன்.. உடனே கேள்வி கேட்க எங்கிருந்துதான் வர்றீங்களோ?
ஏம்பா போனவாரம்தான் சொர்க்கம் போறதைப் பற்றி குறிப்பிட்டு இப்போ சாவைப் பற்றியா? செத்ததுக்குப் பிறகுதானே சொர்க்கமா நரகமான்னு முடிவு செய்ய முடியும்.
பழமொழிக்கு விளக்கம் சொல்றதை விடவும், உனக்கு விளக்கம் சொல்லித்தான் மூச்சு வாங்குது.
அலுத்துக்காதே ஆறிலும் சாவு நூறிலும் சாவு எத்தனை பேமஸ் டயலாக்...
டயலாக் இல்லை பழமொழி.
சரி பழமொழிக்கு என்ன விளக்கம் வைச்சிருக்கே?
எங்கே சொல்ல விடறே ?
அட சொல்லித்தான் பாரேன். யாருகிட்டே ஆறிலேயும் சாவு நூறிலேயும் சாவு வா... வா... வந்து சொல்லிப்பாரு...
அந்த குரலை சற்று நேரம் அன் மியூட் செய்துவிட்டு...
மனிதன் இறுதிநிலை மரணம். அந்த மரணத்தை நோக்கித்தான் நாட்காட்டியின் ஒவ்வொரு தாளும் கிழிக்கப்பட்டு வருகிறது. வரலாறு அம்மனிதர்களின் வாழ்வியலை தன் செப்பேடுகளில் எழுதி வருகிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் எத்தனையோ உணர்வுகளை நம்மில் கடத்துகிறது வாழ்க்கை.
டபுள் ஆக்ட் படங்களின் வரிசையில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே ஒருவர் வீரனாகவும், இன்னொருவர் கோழையாகவும் வருவார்கள். இடம் மாறுவார்கள். பகையை வீழ்த்துவார்கள். ஏதாவது ஒரு காட்சியில் எப்படியும் சாவப்போகிறோம், அது ஆறிலேனாலும் சரி நூறினாலும் சரி என்று வசனம் வராத ஒரு திரைப்படமே இருக்க முடியாது.
ஆக்ஷன் காட்சிகளுக்கு மட்டுமல்ல காமெடிக் காட்சிகளுக்கும் பொருந்தும். வாடா நீ சண்டைக்கு வாடா... அமைதிப்படுத்திட ஆளிருக்கும் போது எம்பிக் குதிக்கும் சில தைரிய ஆசாமிகளின் பாதுகாப்பு கவசமாக இவ்வார்த்தைகளைக் கேட்டிருக்கிறோம்.
இந்த வீராவேசமான வார்த்தைகளுக்கும் இந்த பழமொழிக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்றால் நம்மால் நம்ம முடிகிறதா?
ஆறு என்பதற்கு இங்கு அமைதி என்று பொருள். ஆர்ப்பரிக்கும் கடலும், அலைபாயும் மனதையும் சேர்த்து தணிப்பதும் ஒரு வகையான அமைதிதான். பெரும் சப்தத்தின் பிறகு, ஆழமான ஒரு அமைதி பிறக்கும் அது ஆறுபோல் தெளிந்திருக்கும்.
நூறு என்பது எண்ணிக்கையை மட்டுமல்ல, அழி, வெட்டு, பொடி என்ற சில அர்த்தங்களும் அதில் உள்ளது. இதன் ஒட்டுமொத்த சாரம்சம் வீரம் என்பதாகும்.
அமைதியாக இருப்பவனுக்கும், வீரமாக இருப்பவனுக்கும் சாவு என்பது பொதுவானது. எனவே இடம், பொருள், சூழ்நிலை இவற்றை மனதில் கொண்டு நம் உணர்வுகளைக் கையாண்டு நாம், நம் வாழ்வை இனிதாக நிறைவு செய்ய வேண்டும் என்பதைத்தான் இப்பழமொழி வாயிலாக விளக்கப்படுகிறது.
அன்றைய கால சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் தங்கள் வீரர்களை போருக்கு அனுப்பும் முன்னர், அவர்களின் மனம் அதைரியப்படாமல், வீரத்தை விதைக்கவும், வீரன் ஒருமுறை இறக்கிறான், கோழை பலமுறை இறக்கிறான் என்று இந்த பழமொழியைச் சொல்வார்கள் என்றும் ஒரு கருத்து உள்ளது.
தங்கள் அனுபவத்தை பகிரும் பெரியவர்களின் கூற்றுப்படி, மன்னரும், மக்களும் ஏற்றத்தாழ்வுகளை சுமந்திருந்தாலும் எல்லாரும் ஒரு நாள் ஒரு பிடி சாம்பலாகத்தான் போகிறார்கள் என்பதையும் ஒரு விளக்கமாக கொள்ளலாம்.
கர்ணன் தேர்த்தட்டில் சாய்ந்திருக்க அந்தணனாய் கையேந்தி... புண்ணியத்தைப் பெறும் கண்ணனின் செய்கையையும், கர்ணனின் தானத்தையும் வெகு அழகாக... 1964ல் வெளிவந்த கர்ணன் படத்தில் சிவாஜி கர்ணனாகவே வாழ்ந்திருப்பார்.
உள்ளத்தில் நல்ல உள்ளம் .... பாடல் கேட்டு, கலங்காதவர்களே இருக்க முடியாது.
பெற்றவர் பிள்ளையை வீதியில் விட்டெறிந்தால்
குற்றம் உடையோர் குழந்தைகளா? பெற்ற மக்கள்
சுற்றமும் அற்றுச் சுயமதிப்பும் விட்டனரே!
அர்ப்பணம் செய்தோம் அவர்க்கு
என்ற வெண்பாவுடன் ஆரம்பிக்கும் படம்.
தான சூர வீர கர்ணனின் பிறப்பு பற்றி நாம் அனைவரும் அறிந்திருக்கிறோம்.
பிருதையின் மகளான குந்தி தேவி, துர்வாச முனிவருக்கு பணிவிடை செய்ய அந்த பணிவிடையில் மகிழ்ந்த அவர் ஒரு வரம் தருகிறார். குந்திதேவி எந்த தேவதையை நினைத்து துருவாசர் சொன்ன மந்திரத்தை சொல்கிறாரோ, அந்த தேவதையின் அம்சமாக ஒரு குழந்தை பிறக்கும் என்பது அந்த வரம்.
அவர் விளையாட்டாக மந்திரத்தை சூரியனைப் பார்த்து உச்சரிக்க, கவச குண்டலத்துடன் கர்ணன் உருவாகிறான். திருமணமாகாத பெண்ணுக்கு குழந்தையா என்று அஞ்சி, கர்ணனை ஆற்றில் அனுப்பி வைக்கிறாள். அதிரதன், ராதை தம்பதிகளுக்கு மகனாக சூதப் பரம்பரையில், வளர்கிறான். சூரியனை வழிபடும் நேரத்தில் இல்லையென்று சொல்லாமல் யார் எதைக் கேட்டாலும் தானமாக தருவதால் வள்ளல் என்று பெயர் கொள்கிறான்.
கர்ணன் மகாபாரத்தில் இராதேயன், வசுசேனன் என்று பெயர்களாலும் கூப்பிடப்படுகிறான்.
பெரும் புறந்தள்ளுதலுக்குப் பிறகு துரியோதனனின் நண்பனாக வாழ்கிறான். குந்திதேவி தன் பாண்டவர்களுக்கு எதிராக நீ போரிட வேண்டாம் என்று குருசேத்திர போருக்கு முன்னதாக தனது மூத்தப்பிள்ளையான கர்ணனிடம் கேட்கிறார்.
தாய் பாசத்தில் மனம் குளிர்ந்தாலும், அம்மா இதுநாள் வரையில் என்னை காத்து என்னை நண்பனாக நேசித்து வாழ்ந்து வரும் துரியோதனனுக்கு நான் தீங்கு இழைக்க முடியாது.. அதே நேரம் என் சகோதரர்களுக்கு என்னால் எந்த தீங்கும் நேராது என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன்.
இது தவிர, நான் பாண்டவர்களின் பக்கம் சேர்ந்தாலும் சரி, கவுரவர்களுடன் இணைந்தாலும் சரி என் இறப்பு என்பது உறுதியாகிப் போகிறது.
எனவே ஐந்துபேருடன் சேர்ந்து ஆறாக மாறினாலும் எனக்கு சாவு உறுதி, நூறு பேரான கவுரவர்களுடன் சேர்ந்தாலும் எனக்கு சாவு உறுதி.
ஆகவே ஆறிலும் சாவுதான், அப்படி இல்லாவிட்டாலும் நூறிலும் சாவுதான். எப்படி செத்தால் என்ன ? அதற்கு செஞ்சோற்றுக் கடன் கழிக்க என்னை வளர்த்து ஆளாக்கிய துரியோதனனிடமே இருந்து உயிரை விடுகிறேன் என்று சொல்கிறான்.
ஒரு விரக்தியான மனநிலையில், தள்ளப்படும் அவனின் மனப்போராட்டத்தில் விழுந்த வார்த்தையாக இந்தப் பழமொழியைக் கொள்ளலாம்.






