என் மலர்
சிறப்புக் கட்டுரைகள்

2024ல் திருமணம் யாருக்கு?
- வசீகரமான ரிஷப ராசியினரே. உங்களைப் போல் உங்கள் வாழ்க்கைத் துணையும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள்.
- திருமணத்திற்கு கோட்சார கிரகங்கள் சாதகமாக இருப்பவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ஒரு ஜாதகத்தின் யோகத்தை நிர்ணயம் செய்வதில் கோட்சார கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. கிரகங்களில் வருட கிரகங்களான குரு,ராகு/கேது, சனி இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால் அவற்றால் ஏற்படும் சுப/அசுப பலன்கள் அதிகம். ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால் கோட்சார கிரகங்கள் அதன் தசா புக்தி காலத்தில் சம்பவத்தை நடத்தி வைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது. ஒருவரின் ஆசை மற்றும் விருப்பம் எதுவாக இருந்தாலும் அதை அடையும் பாக்கிய பலன் ஜனன கால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே கோச்சார கிரகங்களும் தசா புத்தியும் உதவும். ஒரு தனிநபரின் ஜாதகத்தினை கொண்டு நிர்ணயம் செய்யப்படும் கோட்சார பலனே துல்லியமாக இருக்கும் தசா புக்திகளுடன், சம்பந்தம் பெறும் கோச்சாரம் சம்பவத்தை 100 சதவீதம் கச்சிதமாக நடத்தி தரும். இந்த கட்டுரையில் கோட்சார கிரகங்களால் 2024ல் யாருக்கு திருமண வாய்ப்பு உள்ளது எனப் பார்க்கலாம்.
மேஷம்
தூய உள்ளம் நிறைந்த மேஷ ராசியினர். தனக்கு அமையும் வாழ்க்கைத் துணை தன்னைப் போல் எதிலும் நேர்மையும் நியாயமும் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த ஆங்கிலப் புத்தாண்டின் துவக்கத்தில் ஜென்ம குருவாக ராசியில் நின்று 5, 7, 9-ம்மிடங்களை பார்வையி டுகிறார். ஏப்ரல் 21, 2024-க்குப் பிறகு தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்திற்குச் சென்று 6,8,10ம் இடங்களைப் பார்க்கிறார். ஆண்டு முழுவதும் தொழில் ஸ்தான அதிபதி சனி பகவான் லாபஸ்தானத்தில் ஆட்சி பலம் பெற்று 1, 5, 8-ம் இடங்களை பார்வையிடுகிறார். ராகு பகவான் விரய ஸ்தானத்திலும் கேது பகவான் ருண ரோக சத்ரு ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார். ராசியில் ராகுவும் 7ல் கேதுவும் இருந்த போது திருமணத் தடையை சந்தித்தவர்களுக்கு கோட்சார குரு மிகச் சாதகமாக இருப்பதால் திருமணத் தடை அகலும். மேலும் மாங்கல்ய தோஷம், ஆயுள் தோஷம் விலகும். திருமணத்திற்காக வரன் தேடுபவர்களுக்கு விரும்பிய மண வாழ்க்கை அமையும்.
ரிஷபம்
வசீகரமான ரிஷப ராசியினரே. உங்களைப் போல் உங்கள் வாழ்க்கைத் துணையும் அழகாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். ஆண்டின் துவக்தத்தில் விரய ஸ்தானத்தில் நின்று குருபகவான் 4, 6, 8-ம் இடங்களைப் பார்வையிடுகிறார். ஏப்ரல் 21-ல் ஜென்ம ராசிக்குள் நுழையும் குரு பகவான் 5, 7, 9-ம் இடங்களைப் பார்வையிடுகிறார்.ஆண்டு முழுவதும் 10-ல் நிற்கும் சனி பகவான் 12,4,7-ம் மிடங்களைப் பார்வையிடுகிறார். லாப ஸ்தானத்தில் ராகுவும் பஞ்சம ஸ்தான கேதுவும் நிற்கிறார்கள்.
குரு பார்வையால் மாங்கல்ய தோஷம் களத்திர தோஷம் விலகுகிறது. இதனால் திருமணத் தடை அகலும். நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்கும். ராகு கேதுக்கள் ரிஷப ராசிக்கு காதல், கலப்பு திருமணத்தை அதிகம் நடத்தி தருவார்கள். ஏப்ரல் 2024-ல் ராசிக்குள் வரும் குருபகவான் காதல் திருமணத்திற்கு பெற்றோர் சம்மதத்தை பெற்றுத்தருவார்.
மிதுனம்
அறிவாற்றல் நிறைந்த மிதுன ராசியினர் தங்களைப் வாழ்க்கைத் துணையும் புத்தி சாதுர்யத்துடன் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த புதிய வருடத்தில் வருட கிரகமான குரு பகவான் ஆண்டின் துவக்கத்தில் லாப ஸ்தானத்தில் நின்று 3 , 5, 7-ம் இடங்களுக்கு சுபிட்சம் வழங்குகிறார். ஏப்ரல் 21, 2024-ல் விரய ஸ்தானம் செல்லும் குருபகவான் 4, 6, 8-ம் இடங்களைப் பார்க்கிறார். பாக்கிய ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் 11, 3, 6-ம் இடங்களை இயக்குகிறார். ராகு தொழில் ஸ்தானத்திலும் கேது சுக ஸ்தானத்திலும் நிற்கிறார்கள். குரு பார்வையால் சனி பலத்தால் குல தெய்வ அருளால், முன்னோர்கள் நல்லாசியால் களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் விலகும்.திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். திருமணத்திற்கான நாளை எண்ண வேண்டிய நேரம் வந்துவிட்டது. மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமான திருப்பம் ஏற்படும். மறு விவாக முயற்சி வெற்றி தரும்.
கடகம்
தாயன்பு நிறைந்த கடக ராசியினரே தாயைப் போல் அன்பான வாழ்க்கைத் துணை வேண்டும் என்று விரும்புவார்கள். இந்த புத்தாண்டில் குருபகவான் எப்ரல் 21 வரை 10-ம்மிடத்தில் நின்று 2,4,6-ம்மிடங்களை பார்வையிடுகிறார். ஏப்ரலில் குருப்பெயர்ச்சிக்கு பின் லாப ஸ்தானம் சென்று 3,5,7-ம் இடங்களை பார்வையிடுகிறார். சனி பகவான் அஷ்டம ஸ்தானத்தில் நின்று 2,5,10-ம் மிடங்களை பார்க்கிறார். ராசிக்கு 3ல் கேதுவும் 9-ல் ராகுவும் அமர்ந்து இருக்கிறார்கள். அஷ்டமச் சனியின் காலம் என்பதால் சுய ஜாதக பரிசீலனைக்குப் பிறகு திருமணம் தொடர்பான முடிவு எடுப்பது நல்லது. ஏப்ரல் 21-க்குப் பிறகு குரு பார்வை களத்திர ஸ்தானத்தில் பதிவதால் திருமணம் நடந்தாலும் குடும்பத்தினரின் விருப்பத்திற்காகவோ, மனதிற்கு பிடிக்காத தகுதி குறைந்த திருமணமாகவோ இருக்கும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.
சிம்மம்
ஆளுமைத் திறன் நிறைந்த சிம்ம ராசியினர் தங்களைப் போன்று நிர்வாகத் திறன் நிறைந்த வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். ஏப்ரல் 21 வரை பாக்கிய ஸ்தானத்தில் நின்று 1, 3, 5-ம் இடங்களை பார்வையிடுகிறார். குருப் பெயர்ச்சிக்கிப் பின் தொழில் ஸ்தானம் சென்று 2,4,6-ம் இடங்களை புனிதப்படுத்துகிறார். சம சப்தம ஸ்தானத்தில் நிற்கும் சனி பகவான் 1, 4, 9-ம் இடங்களுக்கு தனது பார்வையை பதிக்கிறார். ராகு பகவான் அஷ்ட ஸ்தானத்திலும் கேது பகவான் தனம், வாக்கு ஸ்தானத்திலும் சஞ்சாரம் செய்கிறார்கள். கண்டகச் சனிக்கும் திருமணத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஆனால் குடும்ப ஸ்தானமான இரண்டாமிடத்தில் கேதுவும் அவமானம், வம்பு, வழக்கு, விபத்து, கண்டம், சர்ஜரி பற்றிக் கூறும் எட்டாமிடத்தில் ராகுவும் நிற்பதால் சுய ஜாதக ரீதியாக ராகு புத்தி, கேது புத்தி சனி புத்தி நடப்பவர்கள் சுய ஜாதகத்தை சரிபார்த்து திருமணம் நடத்த வேண்டும்.
கன்னி
இளமைப் பொழிவு நிறைந்த கன்னி ராசியினர் புதுமையான எண்ணம் கொண்ட வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். ஆண்டின் துவக்கத்தில் அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் 2, 4, 12-ம் இடங்கள் விருத்தியடையும். ஏப்ரலுக்குப் பிறகு பாக்கிய ஸ்தானம் செல்லும் குருபகவான் 1, 3, 5-ம்மிடங்களை புனிதமாக்குவார். ஆண்டு முழுவதும் 6-ல் நிற்கும் சனி பகவான் 8, 12, 3-ம் இடங்களை பார்க்கிறார். ராசியில் கேது 7-ல் ராகு. கோட்சார ரீதியான சர்ப்ப தோஷம் ஏற்பட்டு இருப்பதால் ஜனன ஜாதகத்தில் மீனத்தில் உள்ள கிரகங்களின் வலிமையை பொருத்தே திருமண வாய்ப்பு கூடி வரும். திருமணத்திற்கு சாதகமான தசை புத்தி நடப்பில் இருந்தால் திருமணத் தடை அகலும். சிலருக்கு காதல் கலப்புத் திருமணம் நடைபெறும். ஏழாமிடமான மீனம் இரட்டை ராசி என்பதால் முதல் திருமணத்தில் தோல்வியடைந்தவர்களுக்கு மறு விவாகம் நடைபெறும்.
துலாம்
நியாயமும், நேர்மையும் நிறைந்த துலாம் ராசியினர் தங்களைப் போன்று நியாயமான வாழ்க்கைத் துணை அமைய வேண்டும் என்று விரும்புவார்கள். ஆண்டின் துவக்கத்தில் சம சப்தம ஸ்தானத்தில் நின்று 11,1,3-ம் இடங்களை பார்க்கிறார். ஏப்ரல் 21-ல் குரு பகவான் அஷ்டம ஸ்தானம் சென்று 12,2,4-ம் இடங்களைப் பார்க்கிறார். பஞ்சம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி பகவான் 7,11, 2-ம் மிடங்களை பார்க்கிறார். 6-ல் ராகுவும் 12-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார். குரு மற்றும் சனியின் பார்வை பலத்தால் களத்திர ஸ்தானம், குடும்ப ஸ்தானம் இயங்குகிறது. நீண்ட வருடங்களாக தடைபட்ட திருமண முயற்சியில் சாதகமாக திருப்பம் ஏற்படும். நல்ல மாப்பிள்ளை, நல்ல பெண்ணும் அமையும். சிலருக்கு கலப்புத் திருமணம் நடைபெறும். ஏப்ரல் வரை ராசியை குரு பார்ப்பதால் வசதியான நல்ல வாழ்க்கைத் துணை. அமையும். மறுமண யோகம் உள்ளது.
விருச்சிகம்
உதவி செய்வதில் உயர்ந்த விருச்சிக ராசியினர் விரும்பியதை மன பலத்தால் அடையும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புவார்கள்.ஆண்டின் துவக்கத்தில் ஏப்ரல் 21 வரை குருபகவான் 6-ம்மிடத்தில் நின்று 10, 12,2-ம் இடங்களையும் ஏப்ரலுக்குப் பிறகு 7ம்மிடம் சென்று 11, 1,3-ம் இடங்களை பார்வையிடுகிறார். ஆண்டு முழுவதும் அர்த்தாஷ்டமச் சனியாக பலன் தந்தாலும் 6,10,1-ம் இடங்களை பார்க்கிறார். 5-ல் ராகுவும் 11-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். தடைபட்ட திருமணம் நடக்கும். 5-ம்மிட ராகு வால் சுய விருப்ப விவாகம் அதிகரிக்கும். முதல் திருமணம் தோல்வியடைந்து இரண்டாம் திருமணத்திற்கு வரன் பார்பவர்களுக்கு வரன் அமைந்து திருமணம் நடைபெறும். வாலிப வயதைக் கடந்தும் திருமணமாகாத பல ஆண்கள், பெண்களுக்கும் திருமணம் நடக்கும்.
தனுசு
ஆன்மீக நாட்டம் நிறைந்த தனுசு ராசியினர் எந்த சந்தர்ப்பத்திலும் வில்லை போல் வளைந்து கொடுக்கும் வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். 2024 ஆங்கிலப் புத்தாண்டு துவக்கத்தில் குரு பஞ்சம ஸ்தானத்தில் நின்று 1,9,11-ம் இடங்களைப் பார்க்கிறார். ஏப்ரல் 21-ல் குருப்பெயர்ச்சிக்குப் பிறகு 6-ம்மிடத்திற்குச் சென்று 10, 12,2-ம் இடங்களைப் பார்க்கிறார். முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ஆட்சி பலம் பெற்ற சனி பகவான் 5,9,12-ம் இடங்களை பார்க்கிறார். நவகிரகங்களில் நிழல் கிரகமான ராகு பகவான் சுக ஸ்தானத்திலும் கேது பகவான் தொழில் ஸ்தா னத்திலும் சஞ்சாரம் செய்கிறார். சுய ஜாதக தோஷத்தாலும் கோட்சார கிரகங்களாலும் தடை பட்ட திருமணம் குருவருளாலும் பெரியோர்களின் நல்லாசியாலும் இனிதே நடைபெறும்.
மகரம்
விடாமுயற்சி நிறைந்த மகர ராசியினருக்கு உழைப்பில் ஆர்வம் நிறைந்த வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். குருப் பெயர்ச்சிக்கு முன் 4-ம்மி டமான சுக ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்யும் குருபகவான் 8,10,12-ம் இடங்களைப் பார்க்கி றார். ஏப்ரல் 21 குருப்பெயர்ச்சிக்குப் பின் 5-ம் மிடம் சென்று 9, 11, 1-ம் இடங்களை பார்வையிடுகிறார். ஏழரைச் சனியின் மூன்றாம் பாகம். தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி 4, 8,11-ம் இடங்களை பார்க்கிறார். ராகு பகவான் 3-ம்மிடமான முயற்சி ஸ்தானத்திலும் கேது பகவான் 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்திலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்கிறார்கள்.திருமண வயதில் உள்ளவர்களின் திருமணம் நடக்கும். சுய ஜாதகத்தில் எவ்வளவு கடுமையான தோஷம் இருந்தாலும் ஏழரைச் சனியின் காலத்தில் திருமணம் நடந்துவிடும். மிக பிரம்மாண்டமாக சிறப்பாக திருமணம் நடைபெறும். கல்யாணம் எப்படி நடக்கும் என்று கவலையோடு இருந்தவர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதப்பார்கள்.
கும்பம்
உழைப்பில் ஆர்வம் மிகுந்த கும்ப ராசியினர் கவுரவமான குடும்பத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள்.குரு பகவான் ஏப்ரல் 21 வரை 3-ம்மிடத்தில் நின்று 7,9,11-ம் இடங்களை பார்க்கிறார். ஏப்ரல் 21-க்குப் பிறகு 4-ம்மிடம் செல்லும் குருபகவான் 8,10,12-ம் இடங்களைப் பார்க்கிறார். ஜென்ம ராசியில் நிற்கும் சனிபகவான் 3,7,10-ம் இடங்களை பார்க்கிறார். ராசிக்கு 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். ஜென்மத்தில் சனி புனர்பூ தோஷம். குடும்ப ஸ்தானத்தில் ராகு எட்டில் கேது என்பதால் கோட்சார ரீதியான சர்ப்ப தோஷத்தால் திருமணம் தடைபட வாய்ப்பு உள்ளது. எட்டாமிடம் என்பது பெண்ணிற்கு மாங்கல்ய ஸ்தானம் என்பதால் சுய ஜாதக வலிமைக்கு ஏற்ப திருமணத்தை நடத்துவது நல்லது.
மீனம்
சாந்த குணம் நிறைந்த மீன ராசியினர் அமை தியான வாழ்க்கைத் துணையை விரும்புவார்கள். ஆண்டின் துவக்கத்தில் ராசி அதிபதி குரு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் நின்று 6, 8, 10-ம் இடங்களை பார்க்கிறார். ஏப்ரலுக்குப் பிறகு 3-ம் இடம் சென்று 7, 9, 11-ம் இடங்களை பார்க்கிறார். விரய ஸ்தானத்தில் நின்று 2,6,9-ம் இடங்களை பார்க்கிறார். ராசியில் ராகுவும் 7-ல் கேதுவும் நிற்கிறார்கள். ராசியில் ராகு ஏழில் கேது சர்ப்ப தோஷம். திருமணம் நடைபெறும் வாய்ப்பு மிக மிக குறைவு . அப்படி நடந்தாலும் குடும்ப மரபிற்கு ஒத்து வராத கலப்பு திருமணமாகவே இருக்கும். கோச்சார கிரகங்கள் சாதகமாக இல்லாத போது எந்த சுப நிகழ்வு நடக்கும் பொழுது மகிழ்வாகவும் நடந்து முடிந்த பிறகு அனுபவிக்கும் வேதனை காலத்திற்கும் தீராத மன வேதனையையும் தரும் என்பதால் மிகுந்த எச்சரிக்கையுடன் திரு மணத்தை நடத்துங்கள். மிகக் குறிப்பாக காத லர்கள் இந்த 1½ வருடம் தவறான முடிவெடுத்து வாழ்க்கையை நரகமாக்கி கொள்ளாமல் இருப்பது சிறப்பு.
பூமியில் பிறக்கும் அனைவருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி ஜாதக கட்டத்தில் அமர்ந்து வினைகளுக்கு ஏற்ப தசைகளை அமைத்து பலன் கொடுக்கும். கோட்சார கிரக சஞ்சாரம் வினைகளில் இருந்து மீளும் சந்தர்ப்பம் ஏற்படும். கோட்சாரம் சாதகமாக இருக்கும் காலங்களில் செய்யப்படும் முயற்சிகள் நல்ல பலன் தரும். திருமணத்திற்கு கோட்சார கிரகங்கள் சாதகமாக இருப்பவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற வாழ்த்துக்கள்.






