என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    மீனா மலரும் நினைவுகள்: கொதிக்கும் பாறையில் உருண்ட நினைவுகள்...
    X

    மீனா மலரும் நினைவுகள்: கொதிக்கும் பாறையில் உருண்ட நினைவுகள்...

    • உடனே ‘அடச் சீ..’ என்ன சார் நீங்கள்? நான் அர்த்தம் கேட்டால் நீங்கள் இப்படி..? என்று அப்பாவித் தனமாக கேட்பார்.
    • காட்சியில் கட்டிபிடித்தபடி பாறை மீதிருந்து உருண்டு கீழே ஓடும் ஆற்றில் வந்து விழ வேண்டும்.

    இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...

    இப்படி ஒரு மலையாள வார்த்தையை நான் ரஜினி சாரிடம் சொல்ல...

    அதன் அர்த்தத்தை அவர் ஒவ்வொருவரிடமும் போய் கேட்டு அடி வாங்குவார்.

    கடைசியில் கே.எஸ்.ரவிக்குமாரிடம் சென்று கேட்பார். அவர் சுற்றும், முற்றும் பார்த்து விட்டு ரஜினி சாரை கட்டிப்பிடித்து கன்னத்தில் ஒரு முத்தம் நச்சென்று கொடுப்பார்.

    உடனே 'அடச் சீ..' என்ன சார் நீங்கள்? நான் அர்த்தம் கேட்டால் நீங்கள் இப்படி..? என்று அப்பாவித் தனமாக கேட்பார்.

    அதற்கு ரவிக்குமார் சார் 'நீ கேட்டதற்கு அர்த்தம் இது தானே. நீ ஒரு ஆம்பளையா போயிட்டே. அதனால் தான் கன்னத்தில் கொடுத்தேன். இதுவே பொம்பளையா இருந்திருந்தா உதட்டில் கொடுத்திருப்பேன் என்பார்.

    நகைச்சுவையாக ரசிக்கப்பட்ட இந்த காட்சியில் நான் குதிரை வண்டியில் ராணி மாதிரியாக வேடம் போட்டுக்கொண்டு இருப்பேன்.

    இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோ...

    என்பதன் அர்த்தத்தை புரிந்து கொண்டு என்னை தேடி ரஜினி சார் ஓடி வருவார். அப்போது நான் குளிப்பதற்காக தலை, காது, கை, இடுப்பில் அணிந்து இருந்த நகைகளை ஒவ்வொன்றாக கழட்டி வைத்து கொண்டிருப்பேன்.


    தினமும் ஷுட்டிங் முடிந்து மாலையில் தான் அவ்வளவு பெரிய பாரத்தையும் இறக்கி வைக்க முடியும். அன்று பகலிலேயே மேக்கப்பை கலைக்க வாய்ப்பு கிடைத்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது.

    அதே நேரம் இன்னொரு சங்கடத்தையும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அதாவது கோபத்தில் வரும் ரஜினி சார் என்னை கட்டிப்பிடித்து முத்தம் தர வேண்டும். அந்த காட்சியில் கட்டிபிடித்தபடி பாறை மீதிருந்து உருண்டு கீழே ஓடும் ஆற்றில் வந்து விழ வேண்டும்.

    குறிப்பிட்ட படி காட்சிக்கு தயாராகி பாறை மீது சென்றோம். அப்போது கோடை காலம் போல் கேரளத்திலும் வெயில் சுட்டெரித்தது. ஷுட்டிங் வேறு மதிய நேரத்தில் நடந்ததால் வெயிலில் பாறை கொதித்தது.

    காலில் செருப்பும் போடாததால் ஆ... ஊ... என்றபடி தான் சென்றேன். ஷாட் ரெடி என்றதும் பாறையில் உருள தொடங்கினோம். அவ்வளவு தான்... உடலில் நெருப்பு பட்டதுபோல் ஆங்காங்கே சூடு போட்டு தாக்கியது. கால், கை, இடுப்பில் சூடு தாங்க முடியவில்லை. அதே நேரம் ஆற்றுக்குள் விழும் முன்பே குளித்தது போல் வியர்வையில் உடல் நனைந்தது. அந்த காட்சியில் நடித்து முடித்ததே ஒரு போராட்டம் போல் இருந்தது.

    படம் முழுக்க ஹெவியான அதே டிரெஸ் தான். கழுத்தில், காதில், கைகளில், தலையில் நிறைய நகைகளெல்லாம் அணிந்த படி இருப்பேன். அதுவே மிகப்பெரிய பாரமாக இருக்கும். காலையில் இருந்து மாலை வரை ஒரே டிரெஸ்... நகைகளை சுமந்து கொண்டிருப்பதே ஒரு மாதிரி இருக்கும். அதுவும் வெயில் நேரத்தில் ஷுட்டிங் நடந்ததால் வியர்த்து கொட்டும். கை, கால்களில் நனைந்து அது ஒரு தனி டிசைனாக தெரியும்.

    மேக்அப்பும் ரொம்ப அதிகமாக இருக்கும். இப்போதைய சாதாரண 'மேக்கப்'களை பார்த்துவிட்டு அந்த காலத்தில் இவ்வளவு அரிதாரம் பூசியிருக்கிறோமே என்று என்னை நினைத்து நானே ஆச்சரியப்பட்டேன்.

    மேக்அப் மட்டும் ஓவர் பில்ட் அப் கிடையாது. பல காட்சிகளும் அப்படித்தான்.


    குதிரை வண்டியில் நானும், ராஜினி சாரும் பாடிக்கொண்டும், ஆடிக்கொண்டும் அதே நேரம் வண்டி யையும் ஓட்டியபடி செல்வோம்.

    வண்டியையும் ஓட்டியபடி பாடலுக்கு ஏற்றபடி முகபாவனையுடன் நடிப்பது அவ்வளவு ஈசி கிடையாது.

    ரஜினி சார் அதிலும் கச்சிதமாக நடித்தார். எனக்கு தான் அந்த வண்டி பயணம் பல நேரங்களில் பயத்தை ஏற்படுத்தியது.

    கிளைமேக்ஸ் காட்சியில் ஜெயபாரதி அம்மா என்னை கோவிலுக்கு அழைத்து வருவார். சாமி கும்பிட்டு விட்டு வெளியே வரும் போது ரஜினி சார் இல்லாமல் குதிரை வண்டி மட்டும் வரும்.

    அதை பார்த்ததும் முத்துவுக்கு என்ன ஆச்சு..? என்று நானும், ஜெயபாரதி அம்மாவும் பதற்றத்துடன் வண்டியில் ஏறியதும் குதிரைகள் எங்களை வீட்டுக்கு கொண்டு சேர்க்கும். கடைசி வரை வண்டியை யாரும் ஓட்டவில்லை.

    இந்த காட்சி தான் முதலில் படமாக்கப்பட்டது. எனக்கோ பயம். வண்டி சரியான பாதையில் தான் செல்கிறதா? எங்காவது குடை சாயுமா? என்ற பயத்துடனேயே இருந்தேன்.

    உண்மையி்ல் நடந்தது வேறு. வண்டிக்காரர் வண்டிக்குள் மறைந்து இருந்தபடி வண்டியை ஓட்டி செல்வார். அந்த அளவுக்கு சிரமப்பட்டு காட்சிகளை படமாக்கினார்கள். ஒரு கட்டத்தில் ரஜினி சார் கையில் ஒரு பாம்பை பிடித்து வைத்திருப்பார். அவரோடு வண்டியில் இருக்கும் நான் பாம்பை பார்த்ததும் பயந்து பா.. பா... பாம்பு என்பேன்.

    அவரும் பாம்பா.. என்றபடி என்னிடம் நீட்டுவார். அதை நான் வாங்கிவெளியே போட வேண்டும்.

    அந்த காட்சியில் ரஜினி சார் கையில் வைத்திருந்தது நிஜபாம்பு. அவருக்கு பயம் இருந்தது? அதை வெளிக்காட்டாமல் இருந்தாரா? என்பது எனக்கு தெரியாது.

    ஆனால் பாம்பை பார்த்ததும் எனக்கு பயத்தில் உடலே நடுங்கியது. அவர் தான் அது ஒன்றும் செய்யாதும்மா என்றார்.

    ஆனாலும் எனக்கு தைரியம் இல்லை. வாங்குவது போல் கையை அருகில் கொண்டு செல்வேன். அவ்வளவு தான் பாம்பை தூக்கி வீசிவிடுவார். இப்படித்தான் அந்த காட்சி படமாக்கப்பட்டது.

    ஷுட்டிங் நடப்பதை பார்க்க பெரும் கூட்டம் வேறு கூடியிருந்தது. அவர்களை சமாளிக்க மொத்த யூனிட்டும் படாத பாடுபட்டது.

    கூட்டம் உள்ளே வந்தால் காமிராவுக்குள் வந்து விடுவார்கள். கோபப்பட்டாலும், கூட்டத்தின் கோபம் எங்கள் மீது திரும்பிவிடும். அப்புறம் படப்பிடிப்பே நடத்த முடியாத சூழ்நிலை வந்துவிடும் என்பதால் மிகவும் அமைதியாக அவர்களை சமாளிக்கப் பார்த்தார்கள்.

    ஒரு கட்டத்தில் ஒட்டு மொத்தமாக அவர்கள் மொய்த்ததால் கூட்டத்தில் சிக்கி சிரமப்பட்டேன். அன்று அந்த யூனிட்டில் நான் மட்டும் தான் பெண். ரொம்பவே பயந்துவிட்டேன்.

    கூட்டத்தில் இருந்து ரஜினி சாரை பத்திரமாக மீட்டு அழைத்து சென்றார்கள். ஒரு வழியாக நானும் தப்பித்தேன்.


    சற்று தூரத்தில் தான் எங்களுக்கு மதிய உணவு தயாரிக்கும் இடம் இருந்தது. மதிய உணவுக்காக சென்றோம். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தோம்.

    என்னை பார்த்த ரஜினி சார் 'ஏம்மா... ஒரு மாதிரி பேசாமல் இருக்கிறே...' என்றார். அதை கேட்டதும் மனதுக்குள் பொங்கிய கோபத்தில்..

    என்ன சார் நீங்கள்லாம் இப்படி இருக்கீங்க. எவ்வளவு பெரிய கூட்டம்..? ரஜினி சாரை மட்டும் பாதுகாப்பதில் குறியாக இருந்தீர்கள். என்னை அம்போன்னு விட்டுட்டீங்கள்ல? என்று குமுறினேன்.

    அதை கேட்டதும் ரஜினி சார் 'அதனால் தான் இப்படி இருக்கியா? இனி நாங்கள் பார்த்து கொள்கிறோம் கவலைப்படாதே' என்றார்.

    மதிய உணவு முடிந்து ஷுட்டிங் புறப்பட்டோம். இப்போது எனக்கு முன்னால் ரஜினி சார். பின்னால் கே.எஸ்.ரவிக்குமார் சார். அவர்களுக்கு நடுவில் நடந்து சென்ற போது ஜாலியாக இருந்தது. பரவாயில்லை. நமக்கு இரண்டு ஜாம்பவான்கள் பாதுகாப்பாக வருகிறார்கள் என்ற நினைப்புடன் படப்பிடிப்பு நடைபெற்ற இடத்துக்கு சென்றேன்.

    மேலும் முக்கிய நிகழ்வுகளை அடுத்த வாரம் உங்களோடு பகிர்ந்து கொள்ள வருகிறேன்.

    (தொடரும்...)

    Next Story
    ×