என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    கண் திருஷ்டியும் தோஷம்தான்
    X

    கண் திருஷ்டியும் தோஷம்தான்

    • வீட்டு வாசலில் கருட கொடி கிழங்கு கட்டுவது மிக மிக நல்லது.
    • 9 கலசங்கள் கொண்ட ஆலய கோபுரங்களை தரிசனம் செய்தால் திருஷ்டி விலகும்.

    கல் அடிபட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். அதாவது கண் திருஷ்டி பட்டு விடக்கூடாது என்பதனைத்தான் இப்படி சொல்வார்கள். பொறாமைக்காரர்களின் ஏக்கப் பார்வைதான் அல்லது எரிச்சல் பார்வைதான் தோஷமாக மாறி தாக்கி விடுவது உண்டு.

    பொதுவாக பார்வையை சுப பார்வை, அசுப பார்வை என்று இரண்டு வகையாக குறிப்பிடுவார்கள். பாசத்தோடு பார்ப்பது சுப பார்வை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அல்லது உறவுகள் மீது அந்த பார்வை பார்ப்பார்கள். சித்தர்கள், ஞானிகள் பார்வையும் சுப பார்வை தான். சில சித்தர்களின் பார்வை பட்டாலே தோஷம் விலகி ஓடி விடும் என்று சொல்வது இதனால்தான்.

    ஆனால் சிலரது பார்வை ஒருவரை அல்லது அவரது குடும்பத்தினரை படாதபாடு படுத்தி விடும். பார்வைக்கு அந்த அளவுக்கு தீய சக்தியை ஏற்படுத்தும் ஆற்றல் உண்டு. பொறாமைக்காரர்களாலும், கெட்ட எண்ணத்துடன் இருப்பவர்களாலும் இந்த தீய சக்தி ஏற்படுவது உண்டு.

    கண் திருஷ்டியினால் ஏற்படும் தோஷம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மாதிரி பாதிக்கும். சிலருக்கு பாதிப்பு குறைவாக இருக்கலாம். சிலருக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். எப்படி இருந்தாலும் தொடர்ந்து காணப்படும் சில அறிகுறிகளால் கண் திருஷ்டி தோஷத்தை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

    குறிப்பாக கண் திருஷ்டி தோஷம் அதிகமாக இருந்தால் குடும்பத்துக்குள் அமைதி இருக்காது. நன்றாக இருந்த கணவன்-மனைவிக்கு இடையே கூட பிரச்சினை வந்து விடும். சொந்த தொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கண் திருஷ்டி தோஷத்தால் அடுத்தடுத்து தடைகள் ஏற்படலாம், லாபங்கள் குறையலாம். சிலருக்கு மிகப்பெரிய பொருள் இழப்பு கூட ஏற்படும்.

    சில வகை கண் திருஷ்டி தோஷங்கள் மிக மோசமானவை. சோகத்தை கூட ஏற்படுத்தி விடக்கூடும். எனவேதான் கிராமங்களில் திருஷ்டி கழிப்பதை பெரும்பாலானவர்கள் ஒரு சடங்காகவே வைத்திருப்பது உண்டு. பெண்கள் தங்களுக்கு மன சோர்வோ, அல்லது விரக்தியோ ஏற்பட்டுவிட்டால் உடனே திருஷ்டி கழிப்பதை தான் முதன்மையாக மேற்கொள்வார்கள்.

    சிலர் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்கும் திருமண விழா, கோவில் விழா போன்றவற்றுக்கு சென்று விட்டு வந்தாலே திருஷ்டி கழித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார்கள். இதையெல்லாம் செய்யாவிட்டால் கண் திருஷ்டி தோஷம் தீவிரமாகி கடும் விளைவுகளை ஏற்படுத்தி விடக்கூடும்.

    இத்தகைய சூழ்நிலையில் ஒருவரது ஜாதக அமைப்பு கை கொடுக்காவிட்டால் கண் திருஷ்டி தோஷங்கள் நீண்ட நாட்களாக நீடிக்கும் நிலைக்கு வந்து விடும். குறிப்பாக ஒருவரது ஜாதகத்தில் 1, 5, 9-ம் இடங்களில் மாற்றி இருந்தால் அவர்களை கண் திருஷ்டி தோஷம் எளிதில் தாக்கும் என்பார்கள்.

    சனி, ராகு, கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டாலும் கண் திருஷ்டி தோஷத்தால் பாதிப்பை சந்திக்க நேரிடும். எப்படி இருந்தாலும் கண் திருஷ்டி தோஷத்தை உடனுக்குடன் நீக்கி விடுவது நல்லது. இந்த தோஷத்தை நிவர்த்தி செய்ய ஆதிகாலத்தில் இருந்தே தமிழர்களிடம் எத்தனையோ பழக்கவழக்கங்கள் வாழ்க்கையின் ஒரு மரபு போலவே மாறி இருக்கிறது.

    இந்த மரபு பழக்கவழக்கங்களை எதற்காக செய்கிறோம் என்பது தெரியாமல்கூட தற்போதைய தலைமுறையினர் உள்ளனர். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் கற்பூரத்தை உடல் முழுக்க சுற்றி வீட்டு வாசல் படியில் ஏற்றுவதை மிகச் சிறந்த கண் திருஷ்டி தோஷ நிவர்த்தி என்று சொல்வது உண்டு. ஆனால் தற்போதைய டிஜிட்டல் உலக தலைமுறையினர் இதை கிண்டல் செய்கிறார்கள். கற்பூரத்தை கொளுத்தினால் எப்படி தோஷம் நீங்கும் என்று கேட்கிறார்கள்.

    இது போல நம்மிடையே பின்னிப்பிணைந்து இருக்கும் தோஷ நிவர்த்திகள் ஏராளம் உள்ளன. தேங்காயை தலையை சுற்றி எடுத்து சிதறு காய் உடைப்பது தோஷ நிவர்த்திதான். கல் உப்பை தண்ணீரில் கலந்து குளிப்பது மிக சிறந்த தோஷ நிவர்த்தி ஆகும்.

    குலை தள்ளிய வாழை மரத்துக்கு தோஷத்தை ஈர்த்து வைத்துக் கொள்ளும் ஆற்றல் உண்டு. பொறாமைக்காரர்கள், எரிச்சல்காரர்கள் ஒரு விழாவுக்கு வரும்போது மோசமான பார்வை பார்த்தால் அதனால் ஏற்படும் தோஷத்தை வாழை மரங்கள் தங்களுக்குள் ஈர்த்து வைத்துக் கொள்வதாக ஆதிகாலத்தில் இருந்தே நம்பிக்கையாக உள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் திருமண விழாக்களில் வீட்டு வாசலில் குலை தள்ளிய வாழை மரங்களை கட்டுவதை பார்த்து இருக்கலாம்.

    வாழையை போன்று பூசணிக்காய்க்கும் கண் திருஷ்டி தோஷத்தை விரட்டும் ஆற்றல் உண்டு. ஒரு வீட்டில் ஒரு சுப நிகழ்ச்சி முடிந்ததும் குடும்பத்தி னர் அனைவரையும் ஒன்றாக நிற்க வைத்து பூசணிக்காயை சுற்றி உடைப்பதை பார்த்து இருப்பீர்கள். ஒரு குடும்பத்தில் புதிதாக குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு 2 வயது ஆகும் வரை கன்னத்தில் அவசியம் திருஷ்டி பொட்டு வைக்க வேண்டும். எல்லா பெண்களுக்கும் இந்த தோஷ நிவர்த்தி நிச்சயம் தெரிந்திருக்கும். அதுபோல குழந்தையின் கால் கட்டை விரலில் கறுப்பு மை வைக்கும் பழக்கமும் உண்டு. சில இடங்களில் குழந்தைகளின் கையில் செம்பு வளையல் கட்டி விடுவார்கள்.

    வீட்டுக்குள் கண் திருஷ்டி தோஷம் வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தால் கண் திருஷ்டி விநாயகர், முகம் பார்க்கும் கண்ணாடி, மீன் தொட்டி, கற்றாழை, சப்பாத்தி கள்ளி, மஞ்சள், ரோஜா செடி ஆகியவற்றை வைக்கலாம். வியாபாரம், தொழில் செய்யும் இடம் என்றால் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்ச பழத்தை வெட்டி ஒரு பகுதியில் குங்குமத்தையும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியையும் தடவி வீட்டு வாசலில் வைக்கலாம்.

    வீட்டு வாசலில் கருட கொடி கிழங்கு கட்டுவது மிக மிக நல்லது. இதை ஆகாய கருடன் கிழங்கு என்று சொல்வார்கள். நாட்டுமருந்து கடைகளில் இது கிடைக்கும். இதன் மீது மஞ்சள், குங்குமம் தடவி வீட்டு வாசலில் கட்டி விட்டால் கண் திருஷ்டி நீங்கும். அது போல படிகாரம், சோத்து கற்றாழை, விநாயகர் படம், மிளகாய், எலுமிச்சம் பழம் கட்டி தொங்க விடுவதும் திருஷ்டியை தடுக்கும் என்கிறார்கள். வீட்டுக்கு வருபவர்கள் பார்வையில் படும்படி பெரிய பாத்திரத்தில் தண்ணீர் விட்டு பூக்களை மிதக்க வைத்தால் அவை திருஷ்டியை தடுக்கும் என்கிறார்கள்.

    சில ஊர்களில் 4 மூலை சந்திக்கும் இடத்தில் இருக்கும் மண்ணை எடுத்து வந்து வீட்டில் உள்ளவர்களுக்கு சுற்றி போட்டால் கண் திருஷ்டி விலகி விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    கடல் தீர்த்தம், புண்ணிய நதி தீர்த்தங்கள் கோமியம் போன்றவற்றைவீடு, கடைகளில் தெளித்தால் கண் திருஷ்டி நீங்கி செல்வ செழிப்பு உண்டாகும் என்பது ஐதீகம். யாருடைய வீட்டில் தினமும் விஷ்ணு சகஸ்ர நாமம், காயத்ரி மந்திரம், கோளறு பதிகம் ஒலிக்கிறதோ அந்த வீட்டில் தோஷம் நுழையவே நுழையாது.

    அது போல வீட்டில் குல தெய்வத்துக்கு நெய் தீபம் ஏற்றி மல்லிகை பூ அலங்காரம் செய்து வழிபட்டால் கண் திருஷ்டிகள் வந்த வழியே திரும்பி சென்று விடும். திருஷ்டி மிக கடுமையாக இருப்பதாக கருதினால் கணபதி ஹோமம் அல்லது மகாசுதர்சன ஹோமம் செய்து வழிபட லாம். பெண்கள் தினமும் முகத்துக்கு மஞ்சள் தேய்த்து குளித்தால் அவர்களை கண் திருஷ்டி தோஷங்கள் நெருங்கவே நெருங்காது.

    ஆலய வழிபாடு செய்து கண் திருஷ்டி தோஷத்தை விலக்க வேண்டும் என்று நினைப்ப வர்கள் மலைகளில் உள்ள முருகன் தலங்களுக்கு சென்று வழிபட்டால் பலன் கிடைக்கும். மருதாணி விதை போட்டு தூபம் காட்டினால் மகாலட்சுமி மூலம் திருஷ்டிகள் விலகும். செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாடு செய்து கழிக்கும் திருஷ்டிகள் உடனடியாக கழிந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசித்து குங்கும அர்ச்சனை செய்து அங்குள்ள கண்ணாடியில் உங்கள் உருவத்தை பார்த்தால் திருஷ்டி தீரும் என்பார்கள். சென்னையில் மகாபலிபுரம் சாலையில் உள்ள திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் உற்சவ மூர்த்திகளுக்கு இயற்கையாகவே திருஷ்டி பொட்டு உள்ளது. அங்கு வழிபடுவதன் மூலம் திருஷ்டி நீங்கும் என்கிறார்கள்.

    வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழ மைகளில் புனித தீர்த்தங்களில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து வீட்டில் தெளித்தால் எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் விலகி குடும்பத்தில் அமைதி உண்டாகும். அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி நாட்களில் வீட்டில் சாம்பிராணி பொடி தூபம் போட்டு வழிபட்டால் தீய சக்திகள் வீட்டை விட்டு வெளியேறி விடும்.

    வீட்டில் முக்கிய விசேஷம் அல்லது விருந்து நடத்தினால் உறவுகளால் கூட திருஷ்டி ஏற்படுவது உண்டு. இதை போக்குவதற்கு குடும்ப தலைவருக்கும், தலைவிக்கும் ஆரத்தி எடுத்து திலகமிடுவார்கள். திருமண விழாக்களில் மணமகன், மணமகளுக்கு ஆரத்தி எடுப்பது என்பது சங்க காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது. குங்குமம், சுண்ணாம்பு கலந்த தண்ணீரில் வெற்றிலை மீது கற்பூரம் ஏற்றி ஆரத்தி எடுத்தால் தீய சக்திகள் உடனே விலகும் என்பது ஐதீகமாகும். இதனால் இன்றளவும் முக்கிய விழாக்களில் இந்த நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது.

    9 கலசங்கள் கொண்ட ஆலய கோபுரங்களை தரிசனம் செய்தால் திருஷ்டி விலகும். விநாயகர், ஆஞ்சநேயர் வழிபாடு மிக சிறந்த திருஷ்டி தோஷ வழிபாடாக கருதப்படுகிறது. ஆஞ்சநேயர் கையில் லிங்கம் ஏந்தி வரும் படத்தை வீட்டில் வைத்து வழிபட்டாலும் திருஷ்டி வராது. கண் திருஷ்டி தோஷத்தை போக்க இப்படி ஏராளமான வழிகள் உள்ளன. உங்களுக்கு எது எளிதாக உள்ளதோ அதை அவ சியம் பயன்படுத்துங்கள்.

    Next Story
    ×