என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்
    X

    அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்

    • வாழ்க்கையை பயத்தோட அணுகும் மனிதர்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும்.
    • பற்றுக என்பதன் அடிநாதம் நம்பிக்கை. உலகம் சுழல்வதே இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தானே.

    என்னப்பா பூனை நாய், கழுதைன்னு போய் இப்போ கடைசியில் அடிதடியிலே இறங்கிட்டீங்களான்னு கேட்கறீங்க?

    பிரச்சினைன்னு வந்தா உடனே வாடா பாத்துக்கலான்னு சொல்றதுதானே நம்ம ஸ்டைல். இல்லைன்னா பத்துபேரை அடிச்சி பறக்கவிடறதையும், பிரட்டில பிளட் தடவி சாப்பிடறதையும் ரசித்து பார்ப்போமா. ஒரே வன்முறையா இருக்கேன்னுதானே நினைக்கிறீங்க. எடுத்துக்கிட்ட தலைப்பு அந்த மாதிரி.

    மிஸ்டர் எக்ஸ்: அந்த பிரச்சினையை எப்படி சமாளிச்சேன்னு..? கேட்டா..

    மிஸ்டர் ஒய்-இன் பதில், அடி உதவுறாமாதிரி அண்ணன்தம்பி உதவமாட்டான்னு நீ கேள்விப்பட்டது இல்லையா ? இரண்டு அறை வச்சேன்.

    அப்பறம்...

    அப்பறம் என்ன? சரின்னுட்டான்னு கூலா சொல்றார்.

    நாங்கலெல்லாம் அந்தக் காலத்திலே வாத்தியாருகிட்டே பையன் முழியை மட்டும் விட்டுடுங்க, மத்தபடி தோலை உரிச்சிடுங்கன்னு சொல்லுவோம். இப்போ யென்னடான்னா முறைச்சிப் பார்த்தாகூட கம்ப்ளைண்ட் பண்ணிடறீங்க. அப்போ எப்படி பயம் வரும்ன்னு.. இதே பழமொழியை நம்ம தாத்தா பாட்டியோ அப்பா அம்மாவோ சொல்லக் கேட்டு இருப்போம்.

    அப்போ சொல்பேச்சை கேட்கலைன்னா, இடக்கு மடக்கா பேசினா அடிக்கலாமா? பழமொழி மட்டும் இல்லை, முன்னோர்கள் உருவாக்கி வைச்ச நிறைய விஷயங்களுக்கு ஒரு உள்ளார்த்தம் இருக்கு. அப்படியிருக்கும்போது அடிக்கிறது சரின்னு எப்படி சொல்வாங்க..

    நண்பர் ஒருத்தர் வீட்டுலே சின்ன கெட் டூ கெதர். அவரோட பையன் லேசா அடிபட்டு சட்டை கிழிஞ்சிபோய் வந்தான். என்னடா ஆச்சுன்னு பதறினார் நண்பர். பிரண்ட்ஸ் கூட ஒரு சின்ன பிரச்சினைப்பான்னு சொல்ல, நம்ம பரம்பரையில யாரும் அடிவாங்கிட்டு வரலை.. அடிகொடுத்துட்டுதான் வந்திருக்கோம்ன்னு ஏத்திவிடறார். இப்படி சொல்வதற்குப் பதில், என்ன சூழ்நிலையில் அந்த பிரச்சினை நடந்ததுன்னு விசாரிச்சு புத்திமதி சொல்லலாமே?ன்னு எனக்கு தோணுச்சி. அடிதடிக்குப் போறது வீரம் இல்லை.

    அப்போ என்ன நடந்தாலும், இயேசு சொன்னதைப் போல இன்னொரு கன்னத்தையும் காட்டணுமா ?ன்னு கேட்டா அதுவும் தப்புதான். நம்மோட ரியாக்ஷன் சரியான நேரத்திலே சரியான இடத்திலே தெரிவிக்கப்படும்போது அதுக்கு மதிப்பிருக்கும்.

    பழிவாங்கும் முயற்சிங்கிறது நம்ம பிறப்பிலேயே ஊறிக்கிடக்கு. எனக்கு நீ ஒரு கெடுதல் செய்தியா? அதை நூறுமடங்கா திருப்பித் தர்றேன்னு சபதம் போட்டு கிளம்பறவங்கதான் அதிகம். வெளிப்படையா சிரிச்சிகிட்டு உள்ளே வஞ்சம் வெச்சி தாக்கறவங்களும் அதிகம். எல்லாத்தையும் பார்த்து மனசில புழுங்கிகிட்டுப் ஒதுங்கிப் போறவங்க அதிகம், அதற்காக அவங்க பயந்தவங்கன்னு சொல்லமுடியாது.

    வாழ்க்கையை பயத்தோட அணுகும் மனிதர்களிடம் ஒரு எச்சரிக்கை உணர்வு இருக்கும். அந்த எச்சரிக்கை உணர்வு என்னதான் நடக்கும் பார்த்திடலான்னு நம்மை வழி நடத்திசெல்லும்.

    வன்முறை என்பது பயத்தை தருவதைக் காட்டிலும் தற்போது ரசிக்கக்கூடியதாக மாறிவருகிறது என்பது அபாயத்தின் அறிகுறியாகத்தான் பார்க்க முடிகிறது. சமீபத்திய படங்கள், பத்திரிக்கை செய்திகள், மொபைல் கேம்ஸ் என அனைத்திலும் இதைக் காணலாம்.

    உண்மையில் அடிக்கு அடி என்பதுதான் பழமொழியின் அர்த்தமா? அதுக்கு ஏன் அண்ணனையும் தம்பியையும் கூட்டி வராங்க. இப்போதைய காலகட்டத்தில் இந்த வன்முறைக்கு அதிகம் பலியாவது குழந்தைகள்தான். பொருளாதாரம், வாழ்க்கை முறை, மன அழுத்தம்னு நிறைய விஷயங்கள் பெற்ற பிள்ளைகள் மீது வன்மம் கலந்த ஒரு அன்பை காட்டுவதற்கு காரணமாகிப் போகிறது. அதென்ன வன்மம் கலந்த அன்பு. நீ எனக்கு பிடித்ததைத்தான் செய்ய வேண்டும் என்பதுதான் அது. ஒரு டாமினேஷன் கதாபாத்திரம் எல்லார் குடும்பத்திலும் இருக்கும். அப்படிப்பட்ட பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகளின் நிலைதான் ரொம்பவே மோசம்.

    மன அழுத்தம் அதிகமா இருக்கும் நேரங்களில் உங்களுக்கு கண்ணுக்குத் தெரியாத ஏதாவது ஒரு நட்பை பிடிச்சிக்கோங்க. அது இறையாகவும் இருக்கலாம். நாம தினமும் அமரும் இருக்கையாகக் கூட இருக்கலாம். நாம அதோட பேசும் போது, அதுக்கு உயிர் வர்றதை உணர முடியும்.

    சமீபத்திலே ஒரு நீண்ட பயணத்தின் போது, சாலையோரத்தில் ஆக்ரோஷமான ஒரு தெய்வத்தின் உருவம். பார்த்தாலே பயம் வரும்படியான உருவத்திடம் கொஞ்சநேரம் அமைதியா பேசிகிட்டு இருந்தேன். மனசில உள்ள பாரம் குறைஞ்சிப் போச்சு. தன்னால் முடியும் என்கிற நம்பிக்கை ஒரு கட்டத்திற்கு மேல் தலைக்கணமா மாறிடுது. சில விஷயங்கள், முழு சரணாகதிங்கிறது மோட்சத்தையே கொடுக்கும் என்பதுதான் இந்த அடி உதவுவதைப் போல அண்ணன் தம்பி உதவ மாட்டான் என்ற பழமொழியின் உண்மையான அர்த்தம். சில உதாரணங்களோடு பார்க்கலாம்..

    பற்றுக பற்றற்றான் பாதந்தனை என்கிறது குறள்.

    இறைவனின் திருவடியைப் பற்றுதல் என்பது நமக்கு உண்டாகும் நன்மையை குறிக்கும் சொல். கவுரவர்கள் சபையில் தன் கரங்களை நம்பிய திரவுபதி கண்ணனின் மேல் கொண்ட பக்தியில் முழு சரணாகதி அடைந்த பிறகே, பலன் பெற்றாள். பற்றுக என்பதன் அடிநாதம் நம்பிக்கை. உலகம் சுழல்வதே இந்த நம்பிக்கையின் அடிப்படையில்தானே.

    இன்னமும் ஒரு உதாரணம் சொல்கிறேன்.

    பரதன் தன் அன்னையின் தவறால் ராமன் காட்டிற்கு சென்றுவிட்டான். அவனை அழைத்துக்கொண்டு வர முயன்று தோற்றுப் போய் அவரின் பாதுகைகளை, அதாவது ராமனின் திருவடிகளை சுமந்த பாதுகைகளை எடுத்து வந்து ஆட்சிப் புரிகிறான். இவ்விடத்தில் ராமரின் திரு அடிகள் பரதனின் நேர்மையை, தமையனை காட்டிற்கு அனுப்பி ஆட்சியைக் கைப்பற்றினான் என்ற கெட்ட பெயரை அவனுக்குத் தராமல் காத்தது. அந்த நற்பயனை ராமனின் திருவடிதான் கொடுத்தது. அங்கே அண்ணனோ தம்பியோ உதவவில்லை என்பதையும் இப்பழமொழி குறிக்கும்.

    எனக்கு இன்னொரு பெயருண்டு என்ற பாட்ஷா படத்தில் ரஜினியின் வசனத்திற்கு கைதட்டல் அள்ளும். அய்யா பாலகுமாரனின் வசனம். அதே போல்தான் அனுமனுக்கு சிறியதிருவடி என்றும், கருடனுக்கு பெரிய திருவடி என்றும் மற்றொரு பெயர் உண்டு.

    ராமனுக்காக சீதாவிடம் தூது சென்றதில் இருந்து, மூர்ச்சையான லட்சுமணனைக் காப்பாற்ற சஞ்சீவிமலையைக் கொண்டு வந்ததிலும், பதினான்கு ஆண்டுகள் கழிந்து அண்ணன் திரும்பி வரவில்லை என்று உயிர் துறக்க முயன்ற பரதனை காக்க விரைந்து வந்ததிலும் அனுமனுக்கு முக்கிய பங்கு உண்டு. அதேபோல், லட்சுமணன் நாக அஸ்திரத்தில் கட்டுண்டு கிடந்த போது தன் பெரிய சிறகால் அவரை விடுவித்தும், சீதாவிற்காக ராவணணிடம் போராடியும், தங்கள் பணியை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

    ராமா என்றழைத்தால், அனுமனும், நாராயணா என்றழைத்தால் கருடனும் முதல் ஆளாய் உதவிக்கு வருவார்கள் என்பதையே, பெரியவர்கள் பகவானைப் பற்றாதீர்கள் அவர்களின் திருவடிகளைப் பற்றுங்கள் என்பார்கள். இறைவனின் திரு அடி என்பது உதவுவதைப் போல அண்ணன் தம்பி கூட உதவமாட்டான் என்பதுதான் உண்மையான அர்த்தமாகும் இப்பழமொழிக்கு.

    Next Story
    ×