என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    தோஷங்களை விரட்டும் பிரதோஷம்
    X

    தோஷங்களை விரட்டும் பிரதோஷம்

    • ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதி காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்று சொல்கிறார்கள்.
    • வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்து கொண்டால் செல்வ செழிப்புக்கு தடையாக இருக்கும் அனைத்து தோஷங்களையும் போக்கி கொள்ள முடியும்.

    தோஷங்கள் வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் வரக்கூடும். தெரிந்து செய்த தவறுகள், தெரியாமல் செய்த தவறுகள் எல்லாமே நிச்சயமாக தோஷமாக மாறும். அதை அனுபவித்தே தீர வேண்டும் என்பது விதி. பரிகாரங்கள், பிரார்த்தனைகள் செய்தால் தோஷத்தால் ஏற்படும் கஷ்டங்களை குறைத்துக் கொள்ள முடியும் அல்லது கட்டுப்படுத்த முடியும்.

    அந்த வகையில் எந்த தோஷமாக இருந்தாலும் அதை விரட்டும் ஆற்றல் பிரதோஷ வழிபாட்டுக்கு உண்டு. சிவபெருமானை போற்றி விரதம் இருந்து வழிபடும் வழிபாடுகளில் சிவராத்திரிக்கு தனி இடம் உண்டு. அதற்கு அடுத்த இடத்தில் பிரதோஷ வழிபாடு இருக்கிறது.

    ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதி காலத்தைத்தான் பிரதோஷ காலம் என்று சொல்கிறார்கள். அந்த திதி தினத்தன்று மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையிலான ஒன்றரைமணி நேரம்தான் பிரதோஷ நேர காலமாகும்.

    இந்த காலத்தில்தான் சிவபெருமான் ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காப்பாற்றினார். அந்த சமயத்தில் அவர் நீலகண்டனாக உலக மக்களுக்கு காட்சி அளித்தார். அதை பிரதிபலிக்கும் வகையில்தான் சிவா லயங்களில் பிரதோஷ கால வழிபாடு நடத்தப்படுகிறது.

    அந்த பிரதோஷ கால பூஜையில் பங்கேற்று நந்தியின் இரு கொம்பு களுக்கு இடையே சிவ பெருமானை வழிபட்டில் எவ்வளவு பெரிய தோஷ மாக இருந்தாலும் விலகி சென்று விடும் என்று முன்னோர்கள் குறிப் பிட்டு உள்ளனர். ஒரு பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்றால் ஒரு வருடம் முழுவதும் சிவாலய வழிபாடு செய்த பலனை பெற முடியும். மகா பிர தோஷம் என்று அழைக் கப்படும் சனி பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் 120 ஆண்டு கள் சிவாலயத்தில் ஈசனை தரிசித்த பலனை பெற முடியும் என்பார்கள்.

    அதுபோல ஒவ்வொரு கிழமையிலும் வரும் பிரதோஷத்துக்கு ஒவ்வொரு வகையான தோஷங்களை நிவர்த்தி செய்யும் ஆற்றல் உண்டு. திங்கட்கிழமை வரும் பிரதோஷத்தில் பங்கேற்றால் மன அமைதியை இழக்க செய்வதற்கு காரணமான தோஷங்களை விரட்ட முடியும். செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் பங்கேற்றால் செவ்வாய் தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

    புதன்கிழமை வரும் பிரதோஷத்தில் பங்கேற்றால் புதன் பகவானால் ஏற்படும் தோஷங்களை வெற்றி கொள்ள முடியும். வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் பங்கேற்றால் கிரக தோஷங்களால் அவதிப்படு வதில் இருந்து மீள முடியும். வெள்ளிக்கிழமை வரும் பிரதோஷத்தில் கலந்து கொண்டால் செல்வ செழிப்புக்கு தடையாக இருக்கும் அனைத்து தோஷங்களையும் போக்கி கொள்ள முடியும்.

    சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் கலந்து கொண்டால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும். பஞ்சமா பாவங்களும் விலகும். தோஷங்கள் அனைத்தும் நீங்குவதால் ஈசனின் அருளும் கிடைக்கும். அதனால்தான் சனி பிரதோஷத்தை மிக சிறப்பாக மகாபிரதோஷம் என்று சொல்கிறார்கள்.

    ஒரு ஆண்டில் 24 பிரதோஷங்கள் வரும். அனைத்திலும் கலந்து கொள்ள இயலாதவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வரும் 8 பிரதோஷங்களிலாவது கலந்து கொள்ள வேண்டும். இந்த 8 பிரதோஷங்களும் மனிதர்களுக்கு ஏற்படும் எல்லா வகையான தோஷங்களையும் விரட்டி அடிக்கும் ஆற்றல் பெற்றவை.

    தோஷங்களில் பித்ரு தோஷம், கோ தோஷம், கன்னி தோஷம், நாக தோஷம், பிரம்மகத்தி தோஷம் ஆகியவை அதிக பாதிப்புகளை ஏற்படுத்துபவை. பிரதோஷத்தில் வழிபட்டால் இந்த கடுமையான தோஷங்களை மிக எளிதாக எதிர்கொண்டு கடந்து செல்ல முடியும்.

    ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் 3 சனி பிரதோஷமாவது வரும். அப்படி சனி பிரதோஷம் வரும்போது நந்தி பூஜைகளுக்குரிய பொருட்களை வாங்கி கொடுக்க வேண்டும். பிரதோஷ பூஜை முடிந்ததும் 5 நெய் தீபங்களை ஏற்றி காப்பரிசி, எள் உருண்டை நைவேத்தியமாக படைத்து வழிபட வேண்டும். அந்த நைவேத்தியத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க வேண்டும்.

    பின்னர் கோபுர பகுதியில் 3 தீபங்களை ஏற்றி முன்னோர்களை நினைத்துக் கொள்ள வேண்டும். சனி பிரதோஷத்தில் இப்படி செய்தால் எவ்வளவு வலிமையான பித்ரு தோஷமும் விலகி சென்று விடும்.

    அதுபோல வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் தினத்தன்று காலையில் இருந்தே விரதம் இருக்க வேண்டும். அன்று மாலை 3 மணிக்கே பிரதோஷ பூஜைக்குரிய பொருட்களுடன் சிவாலயத்துக்கு செல்ல வேண்டும். குறிப்பாக நந்தி பகவானுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு தேவையான அளவுக்கு பால் கொண்டு செல்ல வேண்டும். நந்திக்கு பாலாபிஷேகம் நடக்கும் போது மனமுருக வழிபட வேண்டும்.

    பெரும்பாலான சிவாலயங்களில் நந்திக்கு பால் அபிஷேகம் செய்யும்போது வழிந்தோடும் பாலை பக்தர்கள் சேகரித்துக் கொள்ள அனுமதிப்பார்கள். எனவே பால் அபிஷேகம் செய்யும் போது ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் பாலை சேகரித்துக் கொள்ள வேண்டும். மறுநாள் அந்த பாலை அகத்தி கீரை மற்றும் வாழைப்பழத்தில் கலந்து பசு மாடுகளுக்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும்.

    பசு மாடு சாப்பிட்டதும் அதை 9 தடவை சுற்றி வந்து வழிபட வேண்டும். இந்த வழிபாட்டால் கோ தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் 5 வெள்ளிக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று இந்த பரிகாரத்தை அவசியம் செய்ய வேண்டும்.

    சிலர் கன்னி தோஷத்தால் மிகவும் கஷ்டப்படுவார்கள். கிராமங்களில் கன்னி தெய்வ வழிபாடு என்பதை மிகவும் கவனமாக செய்வார்கள். ஒரு குடும்பத்தில் திருமணம் ஆகாமல் 7 வயது முதல் 12 வயதுக்குள் உள்ள சிறுமி இறந்துவிட்டால் அவளை கன்னி தெய்வமாக கருதி வழிபடுவது மரபாக உள்ளது.

    கன்னி தெய்வ வழிபாட்டை எந்த குடும்பத்தினர் சிறப்பாக ஆண்டு தோறும் நடத்தி வருகிறார்களோ அந்த குடும்பத்தினருக்கு தோஷங்கள் என்பது வராது. சில குடும்பத்தினர் கன்னி தெய்வத்தை மறந்து விடுவார்கள். அது கன்னி தோஷம் என்ற பெயரில் ஒரு தோஷமாகவே மாறிவிடும்.

    அதன் பிறகும்கூட சில குடும்பத்தினர் கன்னி தெய்வத்தை வணங்காமல் இருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் கன்னி தோஷம் அந்த குடும்பத்தில் 3 தலைமுறைக்கு நீடிக்கும் என்று நம்பிக்கை உள்ளது. எனவே கன்னி தோஷம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை கன்னி தோஷம் ஏற்பட்டு இருந்தால் பிரதோஷ வழிபாடு மூலம் அந்த தோஷத்தில் இருந்து மீள முடியும்.


    அதாவது செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று தவறாமல் சிவால யங்களுக்கு சென்று நந்தியை வழிபட வேண்டும். பிரதோஷ நேரத்தில் நந்திக்கு விதவிதமாக அபிஷேகம் செய்வார்கள். கன்னி தோஷ பாதிப்பு இருப்பவர்கள் நந்தி அபிஷேகத்துக்காக மஞ்சள் பொடியும், எலுமிச்ச பழமும் வாங்கி கொடுக்க வேண்டும். மஞ்சள் பொடியை நந்திக்கு அபிஷேகம் செய்யும்போது நந்தி மீது பட்டு வழிந்தோடி வரும் மஞ்சள் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக் கொள்ள வேண்டும்.

    பிரதோஷ வழிபாடு முடிந்து வீட்டுக்கு வந்ததும் அந்த மஞ்சள் தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து வழிபட வேண்டும். முடிந்தால் கன்னி பெண்களுக்கு தாம்பழம் கொடுத்து வணங்கலாம். இந்த வழிபாடு மூலம் கன்னி தோஷம் நிவர்த்தி ஆகி விடும்.

    சிலருக்கு திருமண தடைகள் நீடித்து கொண்டே இருக்கும். 30 வயதை கடந்த பிறகும் கூட சில பெண்கள் அல்லது ஆண்களுக்கு திருமணம் கைகூடாமல் இருக்கும். இதற்கு பெரும்பாலும் நாக தோஷத்தை காரணமாக சொல்வார்கள். இத்தகைய தோஷத்தில் இருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் நாக தோஷத்தில் இருந்து விடுபட முடியும்.

    முடிந்தவர்கள் நந்தி அபிஷேகத்துக்கு சந்தனம், பஞ்சாமிர்தம் போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் 3 நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

    பிரம்மகத்தி தோஷம் இருந்தால் வியாழக்கிழமைகளில் வரும் பிரதோஷ தினத்தன்று வழிபட்டால் பலன் கிடைக்கும். இவை தவிர 16 பிரதோஷங்கள் தொடர்நது வழிபாடுகள் செய்தால் செல்வாக்கும், சொல்வாக்கும், பெயரும், புகழும் தேடி வரும். 12 பிரதோஷங்கள் தொடர்ந்து வழிபட்டால் மாங்கல்ய தோஷம் தீரும்.

    பிரதோஷ வழிபாட்டுக்கு இப்படி பல்வேறு ஆற்றல்கள் உள்ளன. தோஷத்தை விரட்ட பிரதோஷத்தை நாடுங்கள்.

    Next Story
    ×