என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    நாளை மாலை வீட்டில் அவசியம் லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்: குடும்பத்தில் செல்வ வளம் பெருகும்
    X

    நாளை மாலை வீட்டில் அவசியம் லட்சுமி குபேர பூஜை செய்யுங்கள்: குடும்பத்தில் செல்வ வளம் பெருகும்

    • குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார்.
    • அமாவாசை விரதம் இருப்பவர்கள் நாளை மறுநாள் திங்கட் கிழமை காலையிலேயே தொடங்க வேண்டும்

    நம்முடைய வீட்டில் செல்வ வளம் பெருக நாம் மகாலட்சுமியை வேண்டி பூஜை செய்ய வேண்டும். தீபாவளி நாளில் நாம் பூஜை அறையில் விளக்கேற்றி செய்யும் பூஜைக்கு தனி மகத்துவம் உள்ளது.

    லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடும் முறையாகும். தொடக்கத்தில் குபேரர் செல்வ வளத்தை பெற்றிருக்கவில்லை. செல்வ வளத்தை பெற தான் என்ன செய்ய வேண்டும் என குபேரர், தனது நண்பரான சிவ பெருமானிடம் சென்று ஆலோசனை கேட்டிருக்கிறார்.

    அதற்கு சிவ பெருமான், செல்வத்திற்கு உரியவர் மகாலட்சுமி. அவருடைய அனுகிரகம் இருந்தால் மட்டுமே உன்னால் செல்வத்திற்கு அதிபதியாக முடியும். எனவே ஐப்பசி மாதம் அமாவாசை திதியில், மாலை நேரத்தில் மகாலட்சுமியை பூஜை செய்தால் உன்னால் மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற முடியும் எனக் கூறுகிறார்.

    சிவ பெருமானின் யோசனையை ஏற்றுக்கொண்டு குபேரனும் மகாலட்சுமியை பூஜை செய்து செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்ற நாள் தான் தீபாவளி. இத்தனை சிறப்பு வாய்ந்த நாளில் செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய மகாலட்சுமியையும் பூஜை செய்தால் நம்முடைய இல்லங்களிலும் செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

    சிவபெருமான், குபேரன் மீது கருணை கொண்டு, வடக்கு திசைக்கு அதிபதியாக்கி, சங்கநிதி, பத்ம நிதியை காக்கும் பொறுப்பை இவரிடம் ஒப்படைத்துள்ளதாக புராணங்கள் கூறுகிறது. எனவேதான் வாழப்பிறந்தவனுக்கு வடக்கு என்ற பழமொழி உருவானது. குபேரன் நீங்காத செல்வத்தை அள்ளித் தருபவர். ஆனால் செல்வத்துக்கு கடவுள் மகாலட்சுமி. செல்வத்தை பக்தர்களுக்கு முறையாக பகிர்ந்து அளிக்க அவர் பணித்தார். எனவே தான் குபேரன் லட்சுமி குபேரன் என்று அழைக்கப்படுகிறார்.

    குபேரனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் நாடு, நகரம், பொன், பொருள் அனைத்தையும் இழந்து நின்ற போது, லட்சுமி தேவியை வணங்கி அவரிடம் இருந்து யந்திரத்தை பெற்று அந்த யந்திரத்தை பயன்படுத்தி எளிய பூஜையை செய்ததால் நல்லது நடந்தது. சிவபெருமான் உலகத்து செல்வம் முழுவதையும் அவனிடம் ஒப்படைத்து, உழைக்கின்ற மக்களுக்கு அவரவர் விதிப்பயனுக்கு ஏற்ப கொடுத்து வர கட்டளையிட்டார்.

    மகாவிஷ்ணுவின் மனைவியான மகாலட்சுமி எட்டு விதமான சக்திகளை கொண்டவர். தனம், தான்யம், சந்தானம் உள்ளிட்ட எட்டு வித சக்தி பெற்ற இவரது சக்திகள் அனைத்தையும் சங்க நிதி, பதும நிதி என்பவர்களிடம் ஒப்படைத்தாள். இவர்களை தன் கணக்குப்பிள்ளையாக நியமித்துக் கொண்டார் குபேரன். அவர்கள் குபேரனின் இருபுறமும் அமர்ந்தனர்.

    குபேரன் அருளாட்சி நடத்த, அழகாபுரி என்ற பட்டினத்தை விஸ்வகர்மா உருவாக்கி கொடுத்தார். அங்கு அரண்மனையில் ஒரு ஆசனத்தில் தாமரை மலர் ஏந்தி, மீன் ஆசனத்தில் போடப்பட்ட, பட்டு மெத்தை மீது அமர்ந்து குபேரன் ஆட்சி செலுத்தி வந்தான்.

    இவரது வலதுபுறத்தில் சங்க நிதியும், இடது புறத்தில் பத்ம நிதியும் அமர்ந்து இருப்பார்கள். சங்க நிதி கையில் சங்கு வைத்திருப்பார். இவர் தான் குபேரனிடம் செல்வம் பெற அனுமதி கொடுப்பார். இவரது கை வரத முத்திரை தாங்கி இருக்கும். தாமரையும், சங்கும் செல்வத்தின் அடையாளங்கள் ஆகும்.

    தீபாவளி நாளில் குபேரனை நாம் வணங்கினால் வற்றாத செல்வம் நமக்கு கிடைக்கும் என்பது நம்பிக்கை. செல்வ வளம் தரும் ஸ்ரீலட்சுமி குபேரரை வெள்ளிக்கிழமை, வியாழக்கிழமை பூசம் நட்சத்திரம் நாளில் பூஜை செய்து வணங்கினால் வற்றாத செல்வ வளம் பெறலாம். தீபாவளி நாளில் நாம் லட்சுமி குபேர பூஜை செய்வதன் மூலம் மகாலட்சுமியின் அருளினால் நமக்கு செல்வ வளம் பெருகும்.

    லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை:

    பூஜை அறையில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இரண்டு பக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். லட்சுமி குபேரர் படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைக்க வேண்டும். அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும்.

    அதன் பிறகு மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை தொடங்கிட வேண்டியது தான். பின்னர் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். குபேர மந்திரங்களான 'குபேராய நமஹ' 'தனபதியே நமஹ' என 108 முறை சொல்லி தாமரை பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.

    நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜையை முடித்திட வேண்டும். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார் என்பது ஐதீகம்.

    நாளை பிற்பகல் 3.10 மணிக்கு அமாவாசை திதி தொடங்கி விடுகிறது. அமாவாசை விரதம் இருப்பவர்கள் நாளை மறுநாள் திங்கட் கிழமை காலையிலேயே தொடங்க வேண்டும். நாளை காலை 5.40 மணி முதல் இரவு 7.36 வரை லட்சுமி பூஜை செய்வதற்கு ஏற்ற சிறந்த நேரமாக சொல்லப்படுகிறது.

    தீபாவளி நாளான ஞாயிற்றுகிழமை மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரம் ராகு காலமும், பகல் 12 முதல் 1.30 வரை எமகண்டம் நேரமும் உள்ளது. அந்த நேரங்களை தவிர்த்து மற்ற நேரங்களில் லட்சுமி பூஜை செய்வது சிறப்பானதாகும். இந்த நேரத்தில் லட்சுமி தேவியையும், விநாயகர் மற்றும் குபேரரை வழிபடுவதால் வற்றாத செல்வம் வீட்டில் நிறைந்திருக்கும். மகா லட்சுமியின் அருளினால் செல்வம் மழையாக பொழியும். குபேர பூஜையை விரதமிருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது.

    வட இந்தியாவில், தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.

    Next Story
    ×