என் மலர்tooltip icon

    சிறப்புக் கட்டுரைகள்

    முதுமையில் தலைவலியும், தீர்வுகளும்...
    X

    முதுமையில் தலைவலியும், தீர்வுகளும்...

    • காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் எடுப்பது என்றும் இளமையாய் இருக்க சித்த மருத்துவம் காட்டும் எளிய வழி.
    • எண்ணெய் குளியல் எடுப்பது ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு தர உதவும்.

    தினம் தினம் புதுப்புது ஆரோக்கிய சவால்களை சந்திக்கும் முதுமைக்கு தலைவலி சார்ந்த உடல் உபாதை என்பது இன்னும் கூடுதல் சவால் தான். ஏனெனில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் தலைவலியால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அத்தகைய தலைவலிக்கு பல்வேறு நோய்நிலைகள் காரணமாக இருப்பினும், முதன்மைக் காரணமாக இருப்பது ஒற்றைத் தலைவலி.

    ஒற்றைத் தலைவலியானது 6 சதவீதம் ஆண்களுக்கும், 15 சதவீதம் பெண்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது. பல்வேறு நோய்நிலைகளோடு முதுமை போராடும் வேளையில் இந்த தலைவலி தொந்தரவும் நீங்காத வேதனையைத் தந்து முதுமையை வருத்தும். இதனால் இயல்பான மனநிலை மாறி தூக்கமின்மை, கவனச்சிதறல் ஆகிய தொந்தரவுகளும் உண்டாகும். ஏனெனில் ஒற்றைத் தலைவலியானது சில நிமிடங்கள் என்று இல்லாமல், 4 முதல் 72 மணிநேரம் வரை நீடித்து துன்புறுத்தக்கூடியது.

    ஒற்றைத் தலைவலியானது வாந்தி, வாந்தி வரும் உணர்வு, ஒளியைக் கொண்டு பயம், தலையின் ஒரு பக்கமோ அல்லது இரண்டு பக்கங்களிலோ சில சமயங்களில் குத்தல் வலி என்று அடுக்கடுக்காய் துன்பங்களை உண்டாக்கி முதுமைக்கு கூடுதல் பாரத்தை கொடுக்கும். இந்த நாட்பட்ட தலைவலிக்கு வலி மாத்திரைகளை தொடர்ந்து எடுப்பதும் பின்னாளில் ஆரோக்கியச் சிக்கல் என்பதால், வலியுடனே முதுமையைக் கழிக்கும் பலரின் துன்பங்களை வெறும் வார்த்தைகளால் விளக்கி விட முடியாது.

    முதலில் வயோதிகத்தில் உண்டாகும் தலைவலியை, வெறும் தலைவலி தானே என்று எளிதாக கடக்காமல் அத்தகைய தலைவலியின் நோய்க்காரணத்தை கண்டறிவது அவசியம். இல்லையெனில் அது உடலுக்கு தீங்காய் முடியும். மிக அதிகமான ரத்த அழுத்தம், மூளைப் பகுதிக்குள் உண்டாகும் கட்டிகள், பக்கவாதம் நோயின் ஆரம்ப கட்டம், மூளையினுள் ரத்தக் கசிவு போன்ற பல்வேறு நோய்நிலைகளிலும் தலைவலி உண்டாகக்கூடும். இதனைக் கருத்தில் கொண்டு முதுமையில் தலைவலிக்கு தகுந்த சிகிச்சை மேற்கொள்வது நல்லது.

    சித்த மருத்துவக் கூற்றுப்படி நமது உடலின் தலை என்பது கபத்தின் இருப்பிடமாகும். அத்தகைய கபத்தின் இருப்பிடத்தில் அதிகமாகும் வாதமும், பித்தமும் (வாயுவும், சூடும்) ஒன்று கூடி ஒற்றைத் தலைவலியை உண்டாக்குவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. ஆக வாதம், பித்தம் இரண்டையும் குறைக்கும் மருந்துகள் ஒற்றைத் தலைவலியை தீர்ப்பதில் பயனளிக்கும் விதமாக உள்ளன.

    சித்த மருத்துவ மூலிகைகளான அரத்தை, இஞ்சி அல்லது சுக்கு, அதிமதுரம், கொத்துமல்லி விதை (தனியா), நிலவேம்பு, வசம்பு, பூண்டு, கோரைக்கிழங்கு, வல்லாரை, மஞ்சள், கஸ்தூரிமஞ்சள் போன்ற எளிய மூலிகைகள் ஒற்றைத் தலைவலிக்கு பயன் தருவதாக உள்ளன. அடிக்கடி வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துவதில் சிக்கல் உள்ளதால், சித்த மருத்துவ மூலிகை மருந்து கலப்புகளை பயன்படுத்துவது நல்லது.

    "சுக்கிற்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வம் இல்லை" என்பது சொலவடை. காலையில் இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய் எடுப்பது என்றும் இளமையாய் இருக்க சித்த மருத்துவம் காட்டும் எளிய வழி.

    சுக்கு பெரும்பாலான சித்த மருந்துகளில் சேரும் கடைச்சரக்கு. காரணம் சுக்கு சித்த மருத்துவம் கூறும் நோய்க்காரணியான வாதத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து, நோய் விரட்ட உதவுவதாக உள்ளது. அத்தகைய சிறப்பு மிக்க சுக்கு ஒற்றைத் தலைவலிக்கு சிறந்த நிவாரணி.

    ஒற்றைத் தலைவலிக்கு சுக்கினை பொடித்து தேனில் கலந்தோ அல்லது பாலில் கொதிக்க வைத்தும் குடித்து வரலாம். இது மூளைக்குள் சுருங்கிய ரத்தக்குழாய்களை விரிவடையச் செய்வதுடன் தலைவலியை போக்க உதவும். இது ஒற்றைத் தலைவலிக்கு காரணமாகும் பல்வேறு வீக்க காரணிகளை தடுக்கும் வல்லமை உடையது.

    சித்த மருந்துகளான 'இஞ்சி லேகியம்' அல்லது 'திரிகடுகு சூரணம்' ஆகிய மருந்துகளை நாடுவதும் நற்பலன் தரும். சுக்கினை பயன்படுத்துவதன் மூலம் முதுமையில் வலி மாத்திரைகளின் பயன்பாட்டை குறைத்து வலியில்லாத தரமான வாழ்க்கைக்கு வழித்தடம் அமைக்க முடியும்.

    அதே போல் அதிமதுரம் பொடியுடன் சோம்பு மற்றும் நாட்டு சர்க்கரை சேர்த்து பாலில் காய்ச்சி எடுத்துக்கொள்வதும் தலைவலிக்கு நற்பலன் தரும். நிலவேம்பு குடிநீர், அரத்தை குடிநீர் ஆகியன மேற்கூறிய தலைவலியில் பலனளிக்கக்கூடியன. திரிகடுகு சூரணத்துடன் சில பற்ப, செந்தூர மருந்துகளை சேர்த்து மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வதும் மைக்ரேன் தலைவலியில் பயன் தரும்.

    எண்ணெய் குளியல் எடுப்பது ஒற்றைத் தலைவலிக்கு தீர்வு தர உதவும். சுக்கு தைலம், கீழாநெல்லி தைலம் ஆகிய மருந்துகளை எண்ணெய் குளியலுக்கு பயன்படுத்தலாம். ஒற்றைத் தலைவலிக்கு சுக்கினை அரைத்து பாலில் பற்று போடுவதும் பாரம்பரியமாக இருந்து வரும் மரபு.

    வெளிப்புற மருத்துவமாக புதினா தைலம் கொண்டு வலியுள்ள இடங்களில் தடவி வரலாம். அதே போல் தைல மர இலைகளை கொண்டு வேது பிடித்தலும், நொச்சி இலையுடன் மஞ்சள் சேர்த்து வேது பிடிப்பதும் வலி குறைய வழி வகை செய்யும். வல்லாரைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வதும் நல்லது.

    பெரும்பாலானவர்களுக்கு ஒற்றைத் தலைவலியானது வாந்தி, வாய்க்குமட்டல், அசீரணம், மலச்சிக்கல் போன்ற பல்வேறு சீரண மண்டல குறிகுணங்களுடன் உண்டாவது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய பல ஆய்வுகள் குடலுக்கும், மூளைக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்று குறிப்பிடுகின்றன.

    அத்தகைய ஆய்வுகளில் செரிமான மண்டலத்தில் தொந்தரவு உள்ள பலருக்கு தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவலி வருவதாக இருப்பது தெரிய வந்துள்ளது. ஆக முதலில் சீரண மண்டலம் சார்ந்த உபாதைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது முதுமையில் ஒற்றைத் தலைவலி வராமல் தடுக்கும்.

    பித்தத்தைக் குறைக்கும் பொருட்டு பாலில் கொத்துமல்லி விதை (தனியா), ஏலக்காய், சுக்கு சேர்த்து கொதிக்க வைத்து எடுத்துக்கொள்வதும் தலைவலிக்கு நன்மை தரும். தனியா, ஏலக்காயில் உள்ள மருத்துவ குணமுள்ள நறுமண எண்ணெய் வேதிக்கூறுகள் செரிமான மண்டல உபாதைகளை தீர்ப்பதுடன், தலைவலியைக் குறைக்க உதவும்.

    ஒற்றைத் தலைவலி மட்டுமல்லாது முதுமையில் அதிகம் காணப்படும் மற்றொரு நிலை ஐந்தாவது நரம்பு பாதிப்பினால் உண்டாகும் வலி. இது 'ட்ரைஜெமினல் நரம்பு வலி' எனப்படும். இந்நிலையில் முகத்தில் மின்னல் போன்ற வலியுடன், முகத்தில் கை வைத்தாலே எரிச்சல் வலி காணும்.

    முதுமையின் மிகப்பெரும் சவாலான சர்க்கரை நோய் உள்ள பலருக்கு இந்த வலி உண்டாகும். இந்த நாட்பட்ட வலிக்கு நரம்பினை வன்மைப்படுத்தும் பல சித்த மருத்துவ மூலிகைகள் பலன் அளிப்பதாக உள்ளன. அமுக்கரா சூரணம், கிராம்பு சூரணம், தசமூல குடிநீர், திரிகடுகு சூரணம், பூண்டு லேகியம் ஆகிய நரம்பினை வலுவாக்கும் மருந்துகள் இந்நோயில் நற்பலன் தரும்.

    போலிக் அமிலம் எனும் வைட்டமின் சத்து ஒற்றைத் தலைவலிக்கு பயன்தருவதாக பல்வேறு நவீன ஆய்வுகள் உறுதி செய்கின்றன. சித்த மருந்தான மாதுளை மணப்பாகு போலிக் அமிலத்தின் இயற்கை ஆதாரமாக உள்ளது. இதனை எடுத்துக்கொள்வதும் ஒற்றைத் தலைவலியில் நற்பலன் தரும். அடிக்கடி மாதுளையை உட்கொள்வதும் பித்தத்தைக் குறைத்து நன்மை பயக்கும்.

    நார்ச்சத்துள்ள, தாவர வகை உணவுப்பொருட்களையும், குறைந்த சர்க்கரை சத்துள்ள (கிளைசெமிக்) உணவுப் பொருட்களை உண்பதும், குளுட்டன் நிறைந்த கோதுமை போன்ற உணவுகளை குறைப்பதும், நன்மை பயக்கும் குடல் கிருமிகளை பாதிக்கும் பதப்படுத்தப்பட்ட நொறுக்குத் தீனி வகைகளை தவிர்ப்பதும், ஒற்றைத் தலைவலி உண்டாவதை தடுப்பதாக உள்ளன.

    இத்தகைய உணவுப்பொருட்கள் பல்வேறு வேதிக் காரணிகளை உடலில் தூண்டுவிப்பதன் மூலம் மைக்ரேன் தலைவலிக்கு பாதை அமைப்பதாக நவீன அறிவியல் சுட்டிக்காட்டுகின்றது. ஆக பாரம்பரிய உணவு வகைகளை நாடுவது முதுமையில் பல்வேறு நோய்நிலைகளை தடுப்பது என்பது உறுதியாகின்றது.

    ஒற்றைத் தலைவலியில் சித்த மருத்துவத்தின் ஒரு பகுதியான வர்ம சிகிச்சை முறையினை மேற்கொள்வதும் சிறப்பு மிக்கது. இதனால் வலி குறைந்து, மருந்து மாத்திரைகள் உபயோகத்தை குறைக்க முடியும். வர்ம சிகிச்சை என்பது உடலில் ஆற்றல் தொடர்புடையது. முதுமையில் உடல் ஆற்றல் பெரிதும் குறைந்து விடுவது இயல்பு. இந்நிலையில் வர்ம சிகிச்சை ஆற்றலை மீட்டுத் தந்து, பல்வேறு வலி சார்ந்த நோய்நிலைகளில் பலன் தரக்கூடியது.

    வழக்கத்திற்கு மாறான தலைவலியின் தன்மை, கழுத்து தசை இறுக்கம், வாந்தி, இதுவரை அனுபவிக்காத தீராத தலைவலி, அத்துடன் மயக்கம், மிகுந்த சோம்பல், இருமும் போதும் தும்மும் போதும் தலைவலி அதிகமாதல், தலைவலியுடன் கண் பார்வைக் கோளாறுகள் போன்றவை சிவப்பு கொடி குறியீடுகள் (Red flag sign) என்பதால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்வது முதுமைக்கு நல்லது.

    நல்ல தூக்கம், நல்ல உடல் பயிற்சி, நல்ல பழக்கவழக்கங்கள் ஆகியவற்றைப் போல சத்தான நன்மை பயக்கும் உணவும் சிறந்த வாழ்வியல் முறையில் ஒரு பகுதி. முதுமையில் மருந்து மாத்திரைகளுக்கு மெனக்கெடும் பலர் நல்ல உணவு முறைக்கும், உடற்பயிற்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மெனக்கெடுவதில்லை. இதனை உணர்ந்து செயல்பட்டால் முதுமையும் இனிமையாகும். ஆரோக்கியத்தின் வாசல் திறக்கும்.

    தொடர்புக்கு:

    drthillai.mdsiddha@gmail.com

    Next Story
    ×