என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் 3 பேர் கொலையில் 6 பேர் சிக்கினர்
    X

    கொலை செய்யப்பட்ட ரிஷி, தேவா, ஆதி.


    புதுச்சேரியில் 3 பேர் கொலையில் 6 பேர் சிக்கினர்

    • 3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவின் இறுதியில் டி.வி. நகர், தங்கூர் தோட்டம் உள்ள பகுதியில் பாழடைந்த வீடும், கட்டிடமும் உள்ளது.

    இங்கு அரிவாளால் வெட்டப்பட்டு பிரபல தாதா தெஸ்தான் மகன் ரஷி, தேவா ஆகியோர் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களுக்கு அருகில் வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ஆதி என்பவரை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    3 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் அந்த பாழடைந்த வீடு, ரவுடி சத்யா என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. அவரை தேடிய போது அவரும் கூட்டாளிகள் சிலரும் தலைமறைவானது கண்டு பிடிக்கப்பட்டது.


    இதையடுத்து அவர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று நள்ளிரவில் சத்யா மற்றும் 6 பேரையும் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விசாரணையில், கொலை செய்யப்பட்டவர்களை கத்தி முனையில் கடத்தி சித்ரவதை செய்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

    ரவுடி சத்யாவுக்கு எதிர் கோஷ்டியான அஸ்வின், விக்கி கோஷ்டியில் தெஸ்தான் மகன் ரஷி செயல்பட்டு வந்துள்ளார். இந்த 2 ரவுடி கோஷ்டிகளும் ஒருவரை ஒருவர் பழி தீர்க்க காத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு சத்யா தனது நண்பர்கள் சிலருடன் கடற்கரை சாலையில் நடைபயிற்சி சென்றார்.

    அப்போது ரஷி, தேவா, ஆதி ஆகியோர் ஒரே மோட்டார் சைக்கிளில் அங்கு வந்துள்ளனர். அவர்களை பார்த்த சத்யா மோட்டார் சைக்கிளை நிறுத்தி என்னை கண்காணிக்கிறீர்களா? என கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


    இதனிடையே ஆட்டுப் பட்டியை சேர்ந்த சிலரை பொருட்களுடன் வரும்படி சத்யா அழைத்தார். அவர்களும் மோட்டார் சைக்கிளில் அரிவாள், கத்தியுடன் அங்கு வந்தனர். அவர்கள் ரஷி உட்பட 3 பேரையும் கத்தி முனையில் மிரட்டி மோட்டார் சைக்கிளில் நடுவில் அமர வைத்து கடத்தி சென்றனர்.

    நேராக ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடத்துக்கு அவர்களை கொண்டு சென்றனர். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக அவர்களை சித்ரவதை செய்து அரிவாளால் முகத்தை சிதைத்து வெட்டி கொலை செய்துள்ளனர் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    நள்ளிரவில் டி.வி. நகர், ரெயின்போநகர் பகுதியில் அங்கும் இங்கும் மோட்டார் சைக்கிளில் வாலிபர்கள் செல்வது சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்கள், அரிவாள் ஆகியவற்றை கைப்பற்றும் வேலையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×