என் மலர்
இந்தியா

ரூ.700 கோடி கொள்ளை குற்றத்தை நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்- மோடிக்கு சித்தராமையா பதிலடி
- எங்கு சென்றாலும் கர்நாடகத்தை பற்றி பிரதமர் மோடி தவறாக பேசுகிறார்.
- நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவீர்களா என்று சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
பெங்களூரு:
மராட்டிய மாநில சட்டசபை தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோடி பேசும்போது, மராட்டிய தேர்தல் செலவுக்காக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி மது வணிகர்களிடம் ரூ.700 கோடி வசூலித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மராட்டிய மாநில தேர்தல் செலவுக்காக கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.700 கோடி வசூலித்துள்ளதாக பிரதமர் மோடி பிரசாரத்தில் கூறியுள்ளார். இது, கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அடைந்த தோல்வியில் இருந்து இன்னும் அவர் மீண்டு வெளிவரவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது. எங்கு சென்றாலும் கர்நாடகத்தை பற்றி பிரதமர் மோடி தவறாக பேசுகிறார்.
கர்நாடக மதுக்கடை உரிமையாளர்கள் சங்கத்தினர் அரசியல் நோக்கத்துடன் வழங்கிய புகார் அதிவேகமாக பிரதமர் மோடியிடம் போய் சேர்ந்துள்ளது. ரூ.700 கோடி மிரட்டி பணம் பறித்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன். நிரூபிக்காவிட்டால் அரசியலில் இருந்து நீங்கள் ஓய்வு பெறுவீர்களா என்று சித்தராமையா சவால் விடுத்துள்ளார்.
இதேபோல் துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமாரும் குற்றசாட்டுகளை நிரூபித்தால் எந்த தண்டணையும் சந்திப்பேன் என்று பிரதமருக்கு சவால் விடுத்து உள்ளார். இதுகுறித்த கர்நாடக எதிர்கட்சி தலைவர் அசோகா கூறும்போது, பிரதமர் கூறியதுபோல் காங்கிரஸ் கலால் துறையில் ரூ.700 கோடி கொள்ளையடிக்கவில்லை. 900 கோடி கொள்ளையடித்துள்ளனர். இந்த பணம் மகாராஷ்டிரா தேர்தலுக்கும், கர்நாடகாவில் நடைபெறும் 3 சட்டமன்ற இடைத்தேர்தல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.






