search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    துறைமுகத்தில் தீவிபத்து.. இது தான் காரணம்? களத்திற்கு விரைந்த அமைச்சர்..
    X

    துறைமுகத்தில் தீவிபத்து.. இது தான் காரணம்? களத்திற்கு விரைந்த அமைச்சர்..

    • பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
    • துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன.

    விசாகப்பட்டினம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 25-க்கும் மேற்பட்ட படகுகள் தீயில் கருகி சாம்பல் ஆகின. இந்த தீ விபத்திற்கு இளம் யூடியூபர் தான் காரணம் என்றும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    சம்பவத்திற்கு சில நாட்களுக்கு முன்பு சிலருடன் பண விஷயம் தொடர்பாக யூடியூபர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்த வகையில், யூடியூபருக்கு எதிரான சிலர் அவருக்கு சொந்தமான படகு ஒன்றில் தீ வைத்திருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படகு தீப்பிடித்து எரிவதை பார்த்த உள்ளூர் வாசிகள், அதன் நங்கூர கயிறை அறுத்து நீரில் தள்ளினர்.

    எனினும், பலத்து காற்று வீசியதால் தீப்பிடித்த படகு மற்ற படகுகளுடன் உரசியதால் கிட்டத்தட்ட 40-க்கும் அதிக படகுகள் சேதமடைந்தன. தீ விபத்தில் பாதிக்கப்பட்ட படகுகள் அனைத்திலும் டீசல் முழுமையாக நிரப்பப்பட்டும், கடலில் சமைக்க பயன்படுத்துவதற்காக கியாஸ் சிலிண்டர்களும் வைக்கப்பட்டு இருந்தன. இதன் காரணமாக தீ மளமளவென பரவியது.

    தீ விபத்தை தொடர்ந்து தீயணைப்பு துறை சம்பவ இடத்திற்கு விரைந்து, தீயை அணைத்தது. இந்த நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தின் மீன்வளத்துறை அமைச்சர் சீதிரி அபல்ராஜூ தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வுக்கு பிறகு பேசிய அமைச்சர், "துரதிர்ஷ்டவசமாக 36 படகுகள் முழுமையாக எரிந்துவிட்டன. 9 படகுகள் சேதமடைந்துள்ளன. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் குடும்பத்துக்கு படகுக்கான முழு தொகையில் இருந்து 80 சதவீதம் வரை இழப்பீடாக படகுகளின் உரிமையாளருக்கு வழங்கப்பட்டு விடும். இது முதலமைச்சரின் முடிவு."

    "இந்த துறைமுகத்தை அதிநவீன வசதிகளுடன் மேம்படுத்த ரூ. 150 கோடியை ஒதுக்கீடு செய்தோம், இது தொடர்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த துறைமுகம் உருவாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது வரை எந்த அரசாங்கமும் இந்த துறைமுகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களது அரசாங்கம் தான் இதனை நவீன வசதிகளுடன் மேம்படுத்த நிதி ஒதுக்கி இருக்கிறது," என்று தெரிவித்தார்.

    Next Story
    ×