search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    குஜராத் கேபிள் பால விபத்து-  நூற்றுக்கும் மேற்பட்டோர்   உயிரிழந்தனர்
    X

    கேபிள் பாலம் இடிந்து விபத்து 

    குஜராத் கேபிள் பால விபத்து- நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து குஜராத் முதலமைச்சர் ஆறுதல்
    • விபத்து தொடர்பாக தனியார் குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு

    மோர்பி:

    குஜராத் மாவட்டம் மோர்பி மாவட்டத்தில் உள்ள மச்சு ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த கேபிள் தொங்கு பாலம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. இதனை புதுப்பிக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் நிறைவு பெற்று கடந்த 26-ந்தேதி மீண்டும் பாலம் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் அந்த பாலத்தில் நேற்று மாலை ஒரே நேரத்தில் 500-க்கும் மேற்பட்டோர் நின்றிருந்த நிலையில் திடீரென பாலம் இடிந்து ஆற்றுக்குள் விழுந்தது. உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக 60 உடல்கள் மீட்கப்பட்டன. இதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 40 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.


    இந்த பணியில் தேசிய பேரீடர் மீட்பு குழு, ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை வீரர்களும் களம் இறக்கப்பட்டனர். இரவு முழுவதும் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.


    ஆற்றுத் தண்ணீரை வெளியேற்ற இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. விபத்து நடைபெற்ற பகுதியில் ஆய்வு செய்த அம்மாநில முதலமைச்சர் பூபேந்திர படேல், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.


    இந்த நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகாலைவரை நூறை தாண்டி விட்டதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இதுவரை 177 பேர் மீட்கப்பட்டுள்ளனர், 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே மீட்புப் பணிகளை ஆய்வு செய்த குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணிக்காக சம்பவ இடத்திற்கே ராணுவ டாக்டர்கள் குழு மற்றும் மருத்துவ ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.


    இந்த சம்பவம் தொடர்பாக அந்த பாலத்தை நிர்வகித்து வந்த தனியார் நிர்வாக குழுவுக்கு எதிராக மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×