என் மலர்tooltip icon

    இந்தியா

    திருப்பதி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்
    X

    திருப்பதி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் நாளை தொடக்கம்

    • நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.
    • பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது.

    திருமலை:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவ விழா நடக்கிறது. அதில் முதலில் வருவது (இந்த மாதம்) வருடாந்திர பிரம்மோற்சவ விழா, அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதியில் இருந்து 23-ந்தேதி வரை நடப்பது நவராத்திரி பிரம்மோற்சவ விழா ஆகும். நவராத்திரி பிரம்மோற்சவ விழா 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும்.

    நாளை (திங்கட்கிழமை) முதல் 26-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. பிரம்மோற்சவத்தை முன்னிட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து 8 மணி வரை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடக்கிறது.

    நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணியில் இருந்து 5.30 மணி வரை தங்கத் திருச்சி உற்சவம், மாலை 6.15 மணியில் இருந்து 6.30 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது. இரவு 9 மணியில் இருந்து 11 மணிவரை பெரியசேஷ வாகன வீதிஉலா நடக்கிறது.

    19-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சின்ன சேஷ வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை ஹம்ச வாகன வீதி உலா.

    20-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சிம்ம வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா.

    21-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை கல்ப விருட்ச வாகன வீதிஉலா, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சர்வ பூபால வாகன வீதிஉலா.

    22-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை பல்லக்கு உற்சவத்தில் எழுந்தருளும் உற்சவர் மலையப்பசாமி மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில் உலா வருகிறார். இரவு 7 மணிக்கு பிரம்மோற்சவ விழாவின் 'சிகர' நிகழ்ச்சியாக கருட சேவை தொடங்குகிறது.

    23-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியில் இருந்து 5 மணி வரை தங்கத்தேரோட்டம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை யானை வாகன வீதிஉலா.

    24-ந்தேதி காலை 8 மணியில் இருந்து 10 மணி வரை சூரிய பிரபை வாகன வீதி உலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை திருமஞ்சனம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை சந்திர பிரபை வாகன வீதிஉலா.

    25-ந்தேதி காலை 6.55 மணியளவில் தேர்த்திருவிழா, இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை குதிரை வாகன வீதிஉலா.

    26-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து காலை 6 மணி வரை பல்லக்கு உற்சவம் மற்றும் திருச்சி உற்சவம், காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை திருமஞ்சனம் மற்றும் சக்கர ஸ்நானம், இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    மேற்கண்ட வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் இணைந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள்.

    Next Story
    ×