என் மலர்
இந்தியா

துணை ஜனாதிபதி ஆன மூன்றாவது தமிழர்
- காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற்றது.
- தேர்தலில் பதிவான வாக்குகள் உடனே எண்ணப்பட்டன. இதில், 767 வாக்குகள் பதிவாகின.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதி தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 781 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். காலை 10 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிவரை நடைபெற்றது.
தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், 767 வாக்குகள் பதிவாகின. 14 உறுப்பினர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. அதேவேளை, பதிவான 767 வாக்குகளில் 15 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது.
எஞ்சிய 752 வாக்குகளில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு 452 வாக்குகளையும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி 300 வாக்குகளையும் பெற்றனர்.
இதன்மூலம் 152 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் அபார வெற்றி பெற்றார். அவர் துணை ஜனாதிபதியாக விரைவில் பதவியேற்க உள்ளார்.
துணை ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள சி.பி.ராதாகிருஷ்ணன் மூன்றாவது தமிழர் ஆவார். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் ஏற்கனவே துணை ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது






