என் மலர்
இந்தியா

கேரளா முழுவதும் புத்தாண்டு தினத்தையொட்டி ரூ.107 கோடிக்கு மது விற்பனை
- மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சராசரியாக ரூ.10 லட்சத்திற்கும் குறையாமல் மது விற்பனை நடைபெற்றுள்ளது.
- திருவனந்தபுரத்தில் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.1.12 கோடிக்கு மதுவிற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.
திருவனந்தபுரம்:
கேரளாவில் மது பிரியர்கள் அதிகம். பண்டிகை காலங்களில் இங்கு மது விற்பனை அமோகமாக இருக்கும்.
குறிப்பாக ஓணப்பண்டிகையின் போது இங்கு அதிக அளவில் மது விற்பனை நடைபெறும். தொடர்ந்து தீபாவளி, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களிலும் மது விற்பனை களை கட்டும். அந்த வகையில் இந்த புத்தாண்டு தினத்திலும் கேரளா முழுவதும் மது விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கேரளாவில் மதுபான விற்பனை அரசின் பெவ்கோ நிறுவனம் மூலம் நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் பெவ்கோ சார்பில் 266 கடைகள் உள்ளன.
இந்த கடைகள் மூலம் நேற்று முன்தினம் 31-ந்தேதி மட்டும் சுமார் ரூ.107 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கடைகளிலும் சராசரியாக ரூ.10 லட்சத்திற்கும் குறையாமல் மது விற்பனை நடைபெற்றுள்ளது. இதில் திருவனந்தபுரத்தில் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.1.12 கோடிக்கு மதுவிற்பனை ஆகி சாதனை படைத்துள்ளது.
இது பற்றி அதிகாரிகள் கூறும்போது, இந்த ஆண்டு கள்ளச்சந்தையில் மது விற்பனையை அரசு கண்காணித்து தடை செய்தது. இதன்காரணமாகவே அரசு கடைகளில் மதுவிற்பனை அதிகமாக நடைபெற்றது. இந்த ஆண்டு பண்டிகை காலங்களில் மட்டும் சுமார் ரூ.690 கோடிக்கு மது விற்பனை நடந்தது. இதன்மூலம் அரசுக்கு ரூ.600 கோடி அளவுக்கு வரிவருவாய் கிடைக்கும், என்றனர்.






